Wednesday, 7 November 2018

கலக்கலான வருமானம் தரும் கலப்புப் பயிர்கள்!

நெல், காய்கறிகள், மா, தென்னை... ஆண்டுக்கு ரூ 6 லட்சம்

“நல்ல நிலத்தைத் திருத்தி, பண்படுத்தி அதில் ஒரு விதையை விதைத்தால், அந்த விதை முப்பதாகவும், அறுபதாகவும், நூறாகவும் பெருகிப் பலன் கொடுக்கும். அதேபோன்று நல்லதை இருதயத்தில் விதைத்தால், அது பலருக்கும் பலனளிப்பதோடு இறைவனுடைய ஆசீர்வாதமும் கிடைக்கும் என்று பைபிள் சொல்கிறது. நல்ல மனங்களை உருவாக்கும் இறைப்பணியோடு, நல்ல நிலத்தைச் செப்பனிட்டுப் பயிர் செய்யும் வேலையை ஆத்மார்த்தமாகச் செய்து வருகிறேன்” என்கிறார் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ‘பாஸ்டர்’ ஸ்டீபன் ஜெபக்குமார்.

சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சோழவரம் அருகேயுள்ள டோல்கேட்டிலிருந்து வலதுபுறம் திரும்பும் சாலையில் சென்று, ப்யூலா கார்டன் என்று கேட்டால் அனைவரும் கைகாட்டுகிறார்கள். நாற்பது ஏக்கர் பரப்பளவில் உள்ள கார்டனுக்குள் சர்ச், பைபிள் கல்லூரி, தங்கும் விடுதி என்று கடந்து சென்றால், தென்னந்தோப்பும், காய்கறித் தோட்டமும், நெல் வயலும் நம்மை வரவேற்கிறது. விவசாயப் பணிகளை மேற்பார்வை செய்து கொண்டிருந்த ஸ்டீபன் ஜெபகுமாரிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும், உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.

“எனக்குச் சொந்த ஊரு தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த தம்பிக்கோட்டை. விவசாயக் குடும்பம்தான் எங்களுடையது. பிறப்பால் இந்துவாக இருந்தாலும், வாழ்க்கையில் ஏற்பட்ட பல பிரச்னைகளால் அலைகழிக்கப்பட்டவன். இறுதியாக ஆறுதல் கொடுத்தது ஏசு கிறிஸ்து. ஆறுதல் கிடைத்த இடத்திலேயே அடைக்கலம் ஆகலாம் என்று ஏசுவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இறைப்பணிக்கு மாறினேன். ‘இலேமென்ஸ் இவான்ஜலிக்கல் பெல்லோஷிப் ’ என்ற கிறிஸ்துவ அமைப்பில் பாஸ்டரானேன். பாஸ்டர் (இறை மற்றும் சமூகப் பணியாளர்) என்றால் பாதிரியார் கிடையாது. எனக்கு மனைவி, குழந்தைகளும் உண்டு. வாழ்க்கையோடு இந்தப் பணிகளையும் மேற்கொள்கிறேன்.

இந்த அமைப்பின் நிறுவனர் யோசுவா டானியல். சென்னை நுங்கம்பாக்கத்தில்தான் எங்கள் அலுவலகம் இருந்தது. 1997-ம் ஆண்டு இங்கிருக்கும் 40 ஏக்கர் நிலத்தை வாங்கி, அந்த வருஷமே இங்கு வந்தோம். இங்கிருந்துகொண்டே அமைப்போட சமூகப் பணிகளைச் செஞ்சுகிட்டு, விவசாயத்தையும் கவனிக்கத் தொடங்கினேன். எனது டிப்ளமோ வேளாண்மை படிப்பும், சின்ன வயதில் கிடைத்த விவசாய அனுபவத்தையும் வைத்து தொடர்ந்து விவசாயம் செஞ்சிட்டு வந்தேன்” என்று முன்கதை சொன்னவர் தொடர்ந்தார்...

“பசுமை விகடன் வெளிவந்த 2007-ம் வருஷத்திலிருந்து படிச்சிட்டு இருக்கேன். இதைப் படிக்கும்போதுதான் ரசாயனம், பூச்சிக்கொல்லிகளோட தீங்கு என்னான்னு புரிஞ்சது. என் மனைவியோட தங்கச்சிக்கு கேன்சர் வந்து 38 வயசிலேயே இறந்துபோயிட்டாங்க. அந்தப் பாதிப்புக்கு ரசாயனங்கள்தான் காரணம்னு புரிஞ்சது. இனிமேலும் தாமதிக்கக் கூடாதுனு 2013-ம் வருஷம் இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கினோம்.

முதல்ல 5 ஏக்கர் நிலத்துல நெல் பயிரிட்டோம். ஏக்கருக்கு 7 மூட்டைங்கிற கணக்குல 35 மூட்டைகள்தான் கிடைச்சது. என்னடா... தப்பா முடிவு எடுத்துட்டோமோன்னு தோணுச்சு. சரி... என்னான்னு பார்ப்போம்னு அடுத்தமுறை ஏக்கருக்கு 7 லோடு டிராக்டர் எரு என்ற கணக்குல 8 ஏக்கருக்கு 35 லோடு டிராக்டர் எரு அடிச்சு, திருவள்ளூர் மாவட்டத்துல பிரபலமா இருக்கிற டி.கே.எம்-13 ரக நெல்லைப் பயிரிட்டேன். அந்த முறை ஏக்கருக்கு 25 மூட்டைனு 8 ஏக்கருக்கு 200 மூட்டை நெல் கிடைச்சது. இந்த நெல்லோட தரத்தைப் பார்த்த வேளாண் துறை அதிகாரிகள், சான்று விதையா பாதியை வாங்கிக்கிட்டாங்க. அதன்பிறகுதான் இயற்கை விவசாயத்த தொடரலாம்னு முடிவு பண்ணினேன்” என்ற ஸ்டீபன் நிலத்திலிருக்கும் பயிர்கள் பற்றிப் பேசினார்.

“இப்போ 8 ஏக்கர்ல நெல், 6 ஏக்கர்ல தென்னை, 4 ஏக்கர்ல காய்கறிகள், கோடைக்காலப் பழங்கள், 4 ஏக்கர்ல மாமரங்கள், 2 ஏக்கர்ல கொய்யா, அரை ஏக்கர்ல எலுமிச்சை, சாத்துக்குடி, 2 மீன் குளங்கள், 10 மாடுகள், 80 செம்மறியாடுகள் இருக்கு. மீதி நிலத்துல அமைப்புக்கான கட்டடங்கள் இருக்கு. இது களி கலந்த சரளை மண் பூமி. அதனால, விளைச்சல் நல்லாவே கிடைச்சிட்டு வருது. எருதான் முக்கிய இடுபொருள். இதோடு பொன்னீம் பூச்சிவிரட்டி, மீன் அமினோ அமிலம், பஞ்சகவ்யா, அசோஸ் ஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியானு கொடுத்துட்டு வர்றோம். நெல்லுல டி.கே.எம்-13 என்கிற ரகத்தைப் போடுறோம். காய்கறிகள்ல கத்திரி, வெண்டை, தக்காளி, புடலை, பீர்க்கன், பாகல், கோவைக்காய், தர்பூசணி, முலாம்பழம், கிர்ணி பழம், பாம்பு வெள்ளரினு பயிர் செய்றோம்.

பண்ணை வேலைகளை மனோகரன், சேவியர்னு 2 பேர் பாத்துகிறாங்க. இரண்டு பேரும் குடி பழக்கத்தால பாதிக்கப்பட்டவங்க. திருந்தணும்னு வந்தவங்க மதுப்பழக்கத்தை மறந்து, ஆர்வத்தோடு விவசாயத்தைச் செய்துகிட்டு வர்றாங்க. மனோகரன் பாசனம், பராமரிப்பு வேலைகளைப் பார்த்துகிறாரு. சேவியர்ங்கிறவரு திண்டுக்கல்லைச் சேர்ந்தவர். பந்தல் காய்கறிகளுக்குப் பந்தல் அமைக்கிறதுல கில்லாடி. அவரோட முயற்சியாலதான் பந்தல் காய்கறிகளையே போட்டோம். நிறைய பேருக்குப் பந்தல் அமைச்சும் கொடுத்துட்டு வர்றாரு” என்றவர் நிறைவாக, விற்பனை குறித்துப் பேசினார்.

“விளையுறதை எங்களுடைய பயன்பாட்டுக்குப் போக மீதியை ஜெப கூட்டத்துக்கு வர்றவங்களுக்கு விற்பனை செய்றோம். அவங்க இயற்கையில விளையுறதால, நாம சொல்ற நியாயமான விலைக்கு வாங்கிட்டுப் போறாங்க. இதுதவிரக் காய்கறிகள், பழங்களைச் சுற்றுவட்டாரத்துல விதவைகள், வயசானவங்கனு காய்கறி விக்கிறங்களுக்கு, குறைவான விலைக்குக் கொடுக்கிறோம். அதேமாதிரி சான்று விதையாகவும் வேளாண்துறைக்குக் கொடுக்கிறோம். விளைபொருள்களுக்கு வருமான கணக்குப் போட்டால், வருஷத்துக்கு 8 ஏக்கர் நெல்லுல இருந்து 2,40,000 ரூபாய் கிடைக்குது. அதுல செலவுபோக 1,80,000 ரூபாய் நிக்கும். காய்கறிகள்ல 2,25,000 ரூபாய் வருமானம் வருது. இதுல செலவுபோக 1,50,000 ரூபாய் கிடைக்குது.

இதுதவிர மா, தென்னை, கோடைக்காலப் பழங்கள், மீன்குளங்கள்ல இருந்து செலவுபோக 3,10,000 ரூபாய் கிடைக்குது. கொய்யா மகசூலுக்கு வரலை. செம்மறியாடுகளை இங்கே உணவுக்குப் பயன்படுத்திக்கிறோம். மொத்தமாக நெல், காய்கறிகள், மா, தென்னை மூலமா வருஷத்துக்கு 6,40,000 ரூபாய் லாபமாகக் கிடைக்குது. இந்தப் தொகையை நிலத்தோட அபிவிருத்திப் பணிகளுக்காகப் பயன்படுத்திக்கிறோம். எங்களுக்குத் தங்க இடமும், சாப்பிட உணவும், குழந்தைகளைப் படிக்க வைக்கிற செலவுகளை அமைப்பு ஏத்துகுது. இதை ஒரு சேவை அடிப்படையிலேயே நடத்திட்டு வர்றதால, நிலத்தோட அளவை ஒப்பிடும்போது லாபம் குறைவுதான். இதையே அதிகக் கவனம் எடுத்து வணிக நோக்கில் நடத்தினால், லாபம் அதிகரிக்கும்.

இங்கே யார் வேண்டுமானாலும் வந்து பண்ணையைப் பார்வையிடலாம். இயற்கை விவசாயம் சம்பந்தமாகப் பயிற்சியும் எடுத்துக்கலாம். மண்ணுக்கும், சூழலுக்கும் எந்தத் தீங்கும் செய்யாமல், மத்தவங்களுக்கு உதவும் வகையில் மனிதனால் இயற்கை விவசாயம் செய்ய முடியும் நிரூபிக்கிறதுக் காகத்தான் இயற்கை விவசாயம் செய்றேன்” என்று சொல்லி இன்முகத்தோடு விடைகொடுத்தார் ஸ்டீபன் ஜெபகுமார்.

“ஒரு லிட்டர் பொன்னீம், இரண்டரை ஏக்கருக்குப் போதும்!”

பொன்னீம் பூச்சிவிரட்டியைக் கண்டுபிடித்துப் பரவலாக்கியது சென்னை, லயோலா கல்லூரியில் உள்ள பூச்சியியல் ஆய்வு நிறுவனம். இதன் இயக்குநர் முனைவர் இன்னாசிமுத்து சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். “ஒரு லிட்டர் பொன்னீம் பூச்சிவிரட்டியை ஒரு பக்கெட்டில் ஊற்றி அதோடு 350-400 லிட்டர் தண்ணீரை (குறைவாகத் தேவைப்படுபவர்கள் 100 மில்லிக்கு 35 லிட்டர் தண்ணீரைச் சேர்த்துத் தயாரிக்கலாம்) சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். பிறகு மோர் போன்ற ஒரு கரைசல் தயாராகும். இதை ஸ்பிரேயரில் ஊற்றி வழக்கமான முறையிலேயே தெளிக்கலாம். எந்த நெடியும் அடிக்காது. நெல், காய்கறிப் பயிர்களின்மீது தெளித்தால், திரவமானது பசை போன்று செடிகளில் ஒட்டிக்கொள்ளும். இதன் வாசனை பூச்சி மற்றும் புழுக்களுக்குப் பிடிக்காது. இதனால், இலை, பூ, காய்களைத் தாக்கும் பூச்சிகள், அதை விட்டுவிட்டு அப்படியே ஓடிவிடும். பயிர்களும் பாதுகாக்கப்படும். 1 லிட்டர் பொன்னீம் வாங்கினால் இரண்டரை ஏக்கருக்குத் தெளிக்கலாம். பூச்சிகளின் தாக்குதலைப் பொறுத்து அதிகபட்சமாக 3 முறை தெளிக்கலாம். ஒரு லிட்டர் 500-600 ரூபாய் விலையில் கிடைக்கிறது. இதன் மூலம் ஒரு போகத்துக்கு இரண்டாயிரம் ரூபாய் செலவில் விவசாயிகள் தங்களுடைய நிலத்தைப் பூச்சிகளின் பாதிப்பிலிருந்து எளிதாகக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.”

பொன்னீம் பூச்சிவிரட்டி தெளிப்பது எப்படி?

“பொன்னீம் பூச்சிவிரட்டி புங்கன் எண்ணெய், வேப்ப எண்ணெய் போன்ற எண்ணெய் வகைகள் கலந்த கலவை. இதை லிட்டருக்கு 2-4 மில்லி என்ற கணக்கில் கலந்து பூச்சிகளோட தாக்குதலுக்கு ஏற்ப தெளிக்கிறோம். 15 நாள்களுக்கு ஒருமுறை தெளிக்கிறோம். ஒரு லிட்டர் பொன்னீம் பூச்சிவிரட்டி 500 ரூபாய் விலையில் லயோலா கல்லூரியில் வாங்கினேன்” என்றார் ஸ்டீபன்.

ஒரு ஏக்கரில் டி.கே.எம்-13 ரக நெல்லைச் சாகுபடி செய்வது குறித்து ஸ்டீபன் ஜெபகுமார் சொல்லிய தகவல்கள், இங்கே இடம் பிடிக்கின்றன.

இந்த நெல் சாகுபடிக்கு ஆடிப்பட்டம் ஏற்றது. பயிரிடப் போகும் நிலத்தில் 7 லோடு டிராக்டர் எருவை (ஒரு லோடுக்கு ஒன்றரை டன் எரு) கொட்டிக் கலைத்துவிட வேண்டும். சணப்பை விதைகளை விதைத்து, பூவெடுத்ததும் மடக்கி 2 சால் உழவு ஓட்டிவிட வேண்டும். மீண்டும் 2 சால் உழவு ஓட்டி, ஏற்கெனவே தயாராக இருக்கும் நாற்றுகளைப் பறித்து நடவு செய்ய வேண்டும். 3-வது நாள் உயிர்த்தண்ணீர் கொடுக்க வேண்டும். பிறகு காய்ச்சலும் பாய்ச்சலுமாகத் தண்ணீர் கொடுத்துவந்தால் போதும்.

10-வது நாள் ஏக்கருக்கு 5 கிலோ அசோலாவைத் தூவ வேண்டும். 15-வது நாள் அசோஸ் ஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா கலந்த 5 கிலோ நுண்ணுயிர் உரத்தைத் தூவ வேண்டும். 15-ம் நாள் மற்றும் 30-ம் நாளில் பஞ்சகவ்யாவை ஒரு டேங்குக்கு 300 மில்லி என்ற கணக்கில் 5 டேங்க் தெளிக்க வேண்டும். இதைப் பாசனநீரிலும் கலந்துவிடலாம். 20 மற்றும் 40-ம் நாள்களில் களையெடுக்க வேண்டும். மீன் அமினோ அமிலத்தை ஒரு லிட்டருக்கு 2 மில்லி என்ற கணக்கில் மாலைவேளையில் 20 மற்றும் 45-ம் நாளில் தெளிக்க வேண்டும். பூச்சித்தாக்குதலுக்குப் பொன்னீம் பூச்சிவிரட்டியைத் தெளிக்க வேண்டும். 120-லிருந்து 135-வது நாளுக்குள் அறுவடைக்கு வந்துவிடும். நெல்லானது பொன்னிறத்துக்கு மாறும்போது, நெல்லின் உமியை நீக்கி பார்த்தால், அரிசியானது கெட்டியாக மாறி இருந்தால், அறுவடை செய்யலாம். டி.கே.எம்-13 ரக அரிசி, பொன்னி அரிசி போன்றே சாப்பிட நன்றாக இருக்கும்.

காய்கறிகள் :

மேற்கண்ட முறையில் பயன்படுத்திய பசுந்தாள் விதைப்பு, எரு, இயற்கை இடுபொருள்களைத்தான் காய்கறிகளுக்கும் பயன்படுத்துகிறோம். காய்கறிகளுக்கு இங்கிருக்கும் நர்சரியிலேயே நாற்றுகளைத் தயார் செய்து கொள்கிறோம். மல்ச்சீங் ஷீட் போட்டு, சொட்டுநீர்க் குழாய் மூலம் பாசனம் செய்கிறோம். காய்கறிகளில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த சோலார் விளக்குப் பொறி, இனக்கவர்ச்சிப் பொறி, மஞ்சள் அட்டை, டின் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம்.

தொடர்புக்கு :
ஸ்டீபன் ஜெபகுமார்,
செல்போன்: 94444 60445.

தொடர்புக்கு :
முனைவர் இன்னாசிமுத்து,
செல்போன்: 98403 37667.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm
அரசுப் பணிக்கு மட்டுமல்ல... இயற்கை விவசாயத்துக்கும் பயிற்சி! - அசத்தும் பயிற்சி மையம்!

போட்டித்தேர்வுகளுக்குப் பயிற்சி கொடுக்கும் பெரும்பாலான மையங்கள், நகர்ப்பகுதிகளில்தான் அமைந்திருக்கின்றன.இதனால், கிராமப்புற இளைஞர்கள், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவதில், பல சிக்கல்களைச் சந்திக்கின்றனர். இந்நிலையில் கிராமப்புறத்திலேயே பயிற்சி மையம் அமைத்துப் போட்டித்தேர்வுகளுக்குப் பயிற்சி கொடுப்பதோடு, இயற்கை விவசாயத்தையும் சொல்லித்தருகிறது, சபர்மதி குருகுலம்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பஸ் டிப்போவுக்கு எதிரில் பெரிய வேளியநல்லூர் பகுதியில் இருக்கிறது, ‘சபர்மதி ஆஃப் சவுத்’ பயிற்சி மையம். இம்மையத்தில் தங்கும் இடம் மற்றும் உணவுக்காக ஒரு மாணவருக்கு 2,000 ரூபாய் எனக் கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. பயிற்சிக் கட்டணம் கிடையாது. பயிற்சிக் கட்டணம் செலுத்த விரும்பும் மாணவர்கள் தங்களால் செலுத்த முடிந்த தொகையை உண்டியலில் போட்டால் போதுமானது. உணவு மற்றும் தங்குவதற்கான கட்டணத்தைச் செலுத்த இயலாதவர்கள், மடத்துக்குச் சொந்தமான நிலத்தில், இயற்கை விவசாயத்துக்கான வேலைகளைச் செய்தால் போதுமானது.

இம்மையத்தின் பொறுப்பாளர் ராஜவேந்தனைச் சந்தித்துப் பேசினோம். “இந்தக் குருகுல மையத்தை ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆச்சு. என் அண்ணன் குணசேகரன்தான் இதை ஆரம்பிச்சார். மொத்தமா 5 ஏக்கர் நிலம் இருக்கு. பின்தங்கின சூழல்ல இருந்து வர்ற மாணவர்கள் தங்கிப் படிக்கிறதுக்கான அடிப்படை வசதிகளைச் செய்திருக்கிறோம். யூ.பி.எஸ்.சி தேர்வு, டி.என்.பி.எஸ்.சி தேர்வு, வங்கித் தேர்வு, நீட் தேர்வுனு பல போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளைக் கொடுக்குறோம்.

மாணவர்கள் சாப்பாட்டுக்கும், தங்கும் இடத்துக்கும் பணம் கொடுத்தால் போதுமானது. எல்லாப் பயிற்சிகளையும் இலவசமாத்தான் கொடுக்குறோம். ஆயிரக்கணக்கான புத்தகங்கள் கொண்ட நூலகமும் இங்கே இருக்கு. இங்கே தங்குற குடில்களைச் செம்மண்ல கட்டி, பனை ஓலைலதான் வேய்ஞ்சுருக்கோம். மொத்தம் 60 மாணவர்கள் தங்கியிருக்காங்க. சாப்பாட்டுக்கும், தங்குற இடத்துக்கும் கட்டணம் செலுத்த வசதி இல்லாதவங்களுக்கு மாற்று வழியும் வெச்சிருக்கோம். இங்கே இயற்கை விவசாயம் செய்து கட்டணத்தைக் கழிச்சுக்கலாம். இல்லையென்றால், சுற்றுப்புறக் கிராமங்களுக்குப் போய் குழந்தைகளுக்குச் சிறப்பு வகுப்புகள் எடுக்கலாம்.

மாணவர்களுக்கு ரெண்டு மணி நேரம்தான் இங்கே பயிற்சி கொடுக்குறோம். மீதி நேரம் மாணவர்கள் விருப்பப்பட்டா நிலத்துல இறங்கி விவசாய வேலைகளைச் செய்யலாம். இயற்கை விவசாயத்தை முழுமையாகக் கத்துக்கலாம். விவசாய வேலைகளைச் செய்யச்சொல்லி நாங்க கட்டாயப்படுத்தமாட்டோம். ஆனா, எல்லோருமே விரும்பி விவசாயம் செய்றாங்க. இயற்கை விவசாயத்தைக் கத்துக்கிறாங்க. பண்ணைக்குத் தேவையான இடுபொருள்களை மாணவர்களே தயாரிக்கிறாங்க” என்ற ராஜவேந்தன் குடில்கள், விவசாய நிலம் போன்றவற்றைச் சுற்றிக் காட்டிக்கொண்டே பேசினார்.

“இங்கே கஞ்சிதான் எல்லோருக்கும் காலை உணவு. மதியம், இரவு ரெண்டு வேளைகளும் அரிசி சாதம். மூணு வேளை மூலிகைத் தேநீர் கொடுப்போம். எல்லாமே இயற்கையில விளைஞ்ச பொருள்களை வெச்சுதான் தயார் செய்றோம். எண்ணெய்க்காக மரச்செக்கு அமைச்சுருக்கோம். தேவைப்படுற மாணவர்கள் மரச்செக்குல எண்ணெய் ஆட்டுறதுக்கும் பயிற்சி எடுத்துக்கலாம். இங்கே இருக்குற ஒவ்வொரு மாணவரும், ஒவ்வொரு மரத்தைப் பராமரிக்கிறாங்க. பண்ணையில் உம்பளச்சேரி உள்ளிட்ட நாட்டு வகைகள்ல 12 மாடுகள் இருக்கு. அதில்லாம வாத்துகள், கோழிகள் எல்லாமே இருக்கு. இது எல்லாத்தையுமே பயிற்சி மாணவர்கள் தான் பராமரிக்கிறாங்க. நான் வானகம் பண்ணையில எட்டு மாசம் தங்கி பயிற்சி எடுத்துட்டு, கிராமத்துல விவசாயம் பார்த்துக்கிட்டு இருந்தேன். எங்க அண்ணன் இந்த மையம் ஆரம்பிச்சதும், இங்கே வந்து மாணவர்களுக்கு விவசாயப் பயிற்சி கொடுத்திட்டிருக்கேன். அரசு வேலைக்காகத் தயாரானாலும், பல மாணவர்களுக்கு விவசாயம் செய்யணுங்கிற ஆசையும் இருக்கு. படிப்போடு இயற்கை விவசாயத்தையும் கத்துக்கிறது, ஒரு கைத்தொழிலைக் கத்துக்குறது மாதிரிதான்” என்றார்.

நிறைவாகப் பேசிய மையத்தின் நிறுவனர் குணசேகரன், “காலையில ரெண்டு மணிநேரம் மட்டும்தான் மாணவர்கள் விவசாயம் செய்றாங்க.

மாலை நேரத்தில் குழந்தைகளுக்குச் சிறப்பு வகுப்புகள் எடுக்குறாங்க. அதிகமாகப் பணம் வசூலிக்கும் ‘கோச்சிங் சென்டர்’களை நம்பி பணத்தை வீணாக்காமல் தடுப்பதுதான் எங்கள் முக்கிய நோக்கம்.

இதோடு இயற்கை வாழ்வியலையும் சொல்லித் தர்றோம். இங்கே பயிற்சி எடுக்குற மாணவர்கள் கட்டாயம் சிறந்த அதிகாரிகளா செயல் படுவாங்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கு” என்று சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு :
செல்போன்: 70108 36885

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Tuesday, 6 November 2018

முத்தான வருமானம் தரும் முருங்கை இலை! - மாதம் ரூ 1,30,000 திருநெல்வேலியிலிருந்து துபாய்க்கு...

பூ, இலை, காய் என அனைத்துப் பகுதிகளும் பயனளிக்கக்கூடிய தாவரங்களில் முருங்கையும் ஒன்று. உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துக்கள் முருங்கையில் கொட்டிக் கிடப்பதால், முருங்கைக்கு உலகம் முழுவதும் தேவை இருந்து வருகிறது.

முருங்கை அதிகம் விளையும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதால், நம் நாட்டிலிருந்து அதிகளவில் முருங்கை இலை, காய்கள், விதைகள் ஆகியவை ஏற்றுமதியாகின்றன. அந்தவகையில் முருங்கைக் கீரைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த டெல்சன்.

திசையன்விளையில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடகுளம் கிராமத்தில்தான் டெல்சனின் முருங்கைத் தோட்டம் இருக்கிறது. ஒரு காலைவேளையில் இலை பறிப்புப் பணிகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த டெல்சனைச் சந்தித்தோம்.

“எனக்குச் சொந்த ஊர் இதுதான். அப்பா காலத்துல வாழை, முருங்கைனு விவசாயம் செஞ்சாங்க. நான் 8-ம் வகுப்பு வரை படிச்சுட்டு அப்பாவுடன் விவசாயத்துக்கு வந்துட்டேன். இடையில தூத்துக்குடியில் காய்கறிகள் எக்ஸ்போர்ட் பண்ற ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். அந்த கம்பெனியில ஆள்குறைப்பு செஞ்சப்போ எனக்கும் வேலை போயிடுச்சு. அதுக்கப்புறம்தான் எனக்கு எக்ஸ்போர்ட் செய்ற யோசனை வந்தது. அந்த கம்பெனியில் வேலை செஞ்சப்போ கிடைச்ச தொடர்புகளை வெச்சு வாழை, நெல்லி, சின்ன வெங்காயம், முருங்கைக்காய், இளநீர், காய்கறிகள்னு ஏற்றுமதி செய்ய ஆரம்பிச்சேன். அந்தச் சமயத்துல லண்டன்ல இருந்து முருங்கைக்கீரைக்கு ஆர்டர் கிடைச்சது. முதல் தடவையா 5 கிலோ முருங்கைக்கீரையை சாம்பிள் அனுப்பினேன். தொடர்ந்து முருங்கைக்கீரையைக் கேட்க ஆரம்பிச்சாங்க. அதுக்கான தேவை அதிகரிச்சுட்டே இருந்ததால, மற்ற விளைபொருள்கள் ஏற்றுமதியைக் குறைச்சுட்டு முருங்கைக்கீரையில கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். ரெண்டு வருஷமா மாசத்துல 25 நாள் முருங்கைக்கீரையை ஏற்றுமதி செஞ்சுட்டுருக்கேன்” என்ற டெல்சன் தொடர்ந்தார்...

“நான் 5 ஏக்கர் நிலத்துல இயற்கை முறையில முருங்கை போட்டுருக்கேன். போன வருஷம் 30 ஏக்கர் அளவுக்கு முருங்கைத் தோட்டங்களைக் குத்தகைக்கு எடுத்துக் கீரை பறிச்சோம். இந்த வருஷம் குத்தகைக்கு எடுக்கலை. அதே தோட்டங்கள்ல இருந்து ஒரு கிலோ கீரை 15 ரூபாய்னு வாங்கிக்கிறேன். இயற்கை விவசாயம் செய்ற தோட்டங்கள்ல மட்டும்தான் கீரை பறிப்பேன். ஒரு ஈர்க்கு முருங்கை இலைகளைப் பறிச்சு, ஒரு மணி நேரம் வெச்சிருந்து, வேகமாக ஆட்டிப் பார்த்தால் இலைகள் உதிரக் கூடாது. பறிச்ச இலைகளைத் தண்ணீர் தெளிச்சு பாலித்தீன் கவர்ல வெச்சு ஐஸ் பாக்ஸில் 24 மணி நேரம் வெச்சுப் பார்ப்போம். அப்பவும் இலைகள் வாடாமல், உதிராமல் இருக்கணும். இந்தச் சோதனைகளுக்குப் பிறகுதான் சம்பந்தப்பட்ட தோட்டங்கள்ல கீரைகளைப் பறிப்போம்.

கீரைகளைப் பறிக்கிறதுக்காக 35 பெண்களை வேலைக்கு வெச்சுருக்கேன். தினமும் காலையில் 5 மணிக்கு அவங்க வந்துடுவாங்க. அவங்களை வேன்ல கூட்டிட்டுத் தோட்டங்களுக்குப் போவோம். ஏழு மணிக்குள்ள பறிப்பு வேலைகள் முடிஞ்சுடும். வெளிர் நிறம் இல்லாமல், கரும்பச்சை நிறத்துல இருக்குற கீரைகளை மட்டும்தான் பறிப்போம். செடி முருங்கைக்கீரைகள் ஏற்றுமதிக்கு ஏற்றதல்ல. மர முருங்கைகள்ல மட்டும்தான் கீரைகள் பறிப்போம். பறிச்ச கீரைகளைப் பருத்தித் துணியில் கட்டி, சேதாரம் இல்லாம பேக்கிங் கூடத்துக்கு எடுத்துட்டு வருவோம்.

‘தார்பாலின் ஷீட்’டை விரிச்சு அதுல தண்ணீர் தெளிச்சு கீரைகளை அரை அடி உயரத்துக்கு வரிசையாக அடுக்கி, லேசாகத் தண்ணீர் தெளிப்போம். அதுக்கப்புறம் காய்ந்த இலை, பழுப்பு இலை, பூக்களை நீக்கிட்டு 150 கிராம் எடை இருக்கிறமாதிரி பாலித்தீன் கவருக்குள் வெச்சு, ரப்பர் பேண்டு போட்டுக் கட்டிடுவோம். அடுத்து 65 லிட்டர் கொள்ளளவு கொண்ட தெர்மாகோல் பெட்டிகள்ல 3 ஐஸ் கட்டிகளை வெச்சு, அதுக்கு மேல தண்ணீர் உறிஞ்சாத பேப்பரை விரிச்சு 25 கீரை பாக்கெட்டுகளை அடுக்குவோம். அதுக்கு மேல ஐஸ் கட்டிகள் வெச்சு 25 கீரைக்கட்டுகள் வெப்போம். அதுக்கு மேல மூன்றாவது அடுக்கா 10 கீரைக்கட்டுகளை வெச்சு மேலயும் ஐஸ் கட்டிகளை வெச்சு பேக்கிங் செஞ்சுடுவோம். ஒரு பெட்டியில் 60 கட்டுக் கீரைகள் பிடிக்கும். அதுல 11 ஐஸ் கட்டிகள், 5 அடுக்கு பேப்பர் வைக்கணும். தினமும் 400 கிலோ அளவுக்கு முருங்கைக்கீரையை ஏற்றுமதி செஞ்சுட்டுருக்கேன்” என்ற டெல்சன், வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“இப்போ துபாய், லண்டன், கத்தார், ஓமன் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செஞ்சுட்டுருக்கேன். மாசத்துல 25 நாள்கள் கீரைகளை அனுப்பிட்டுருக்கேன். எங்க ஊர்ல இருந்து திருவனந்தபுரம் அல்லது திருச்சி ஏர்போர்ட்டுக்குக் கொண்டு போய்தான் பார்சல் புக் பண்றேன். அங்கிருந்து விமானம் மூலமா சம்பந்தப்பட்ட நாடுகளுக்குப் போயிடும். மாதத்தில் 10 நாள்கள் துபாய்க்கு அனுப்புறேன். 8 நாள்கள் கத்தாருக்கு அனுப்புறேன். 5 நாள்கள் ஓமனுக்கு அனுப்புறேன். 2 நாள்கள் லண்டனுக்கு அனுப்புறேன்.

400 கிலோ வீதம், 25 நாள்கள்ல மொத்தம் 10,000 கிலோ அளவுக்கு முருங்கைக்கீரை ஏற்றுமதியாகுது. இது மூலமா 4,00,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. கீரை கொள்முதல் விலை, பறிப்புக்கூலி, பேக்கிங் கூலி, வேன் வாடகை, விமானக் கட்டணம், தெர்மாகோல் பெட்டி, ஐஸ் கட்டிகள், மின்சாரக்கட்டணம்னு எல்லாம் சேர்த்து 2,70,000 ரூபாய்ச் செலவாகும். அதுபோக, மாசம் 1,30,000 ரூபாய் வரை லாபமாகக் கிடைச்சுட்டு இருக்கு” என்ற டெல்சன் நிறைவாக,

“ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, கொச்சின்ல இருக்குற பேக் ஹவுஸுக்குக் கொண்டுபோய்தான் சுங்கத்துறைகிட்ட அனுமதி வாங்க வேண்டியிருக்கு. இதனால, போக்குவரத்து நேரம் அதிகமாகுது. செலவுகளும் கூடுது. தமிழ்நாட்டுலயும் விமான நிலையப் பகுதிகளில் பேக் ஹவுஸைக் கொண்டுவந்தா, எங்களை மாதிரி ஏற்றுமதியாளர்களுக்கு வசதியாக இருக்கும். ஏற்றுமதியையும் அதிகப்படுத்த முடியும். அந்த வசதி கிடைச்சா நானே 100 பேருக்கு வேலை கொடுக்க முடியும். அந்தளவுக்கு முருங்கைக்கீரைக்குத் தேவையிருக்கு” என்றார்.

ஏக்கருக்கு ரூ.84 ஆயிரம்... காய்களோடு இலைகளிலும் வருமானம்!

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி அடுத்த மோளையனூரில் முருங்கைச் சாகுபடி செய்து வருகிறார் சாமிக்கண்ணு, முருங்கை இலை ஏற்றுமதி குறித்து அவரிடம் பேசினோம். “எனக்கு நாலரை ஏக்கர் நிலமிருக்கு. அதுல இரண்டரை ஏக்கர்ல தொடர்ந்து முருங்கைச் சாகுபடி செஞ்சிட்டு வர்றேன். காய்க்காக வளர்க்கும் முருங்கை மரங்கள்ல செப்டம்பர்ல இருந்து டிசம்பர் மாசம் வரை கவாத்து செய்வோம். அப்போ ஏக்கருக்கு 10-12 டன் வரை இலை கிடைக்கும். அதை ஏற்றுமதிக்காரங்க ஒரு கிலோ 7 ரூபாய்னு எடுத்துக்கிறாங்க. இதுமூலமா, வருஷத்துக்கு 84 ஆயிரம் உபரி வருமானமாகக் கிடைக்குது. அதனால, இலையும், காயும் கிடைக்கிற மாதிரி தோட்டத்த பராமரிச்சிட்டு வர்றேன்.

நல்ல கிராக்கி இருக்கிறதால, அடுத்து இலைகளுக்காகவே முருங்கை நடலாம்னு இருக்கேன். இதே இலையை காயவெச்சு வித்தா இன்னும் கூடுதல் வருமானம் கிடைக்கும். அதுக்காக விவசாயிகள் கூட்டாக இணைஞ்சு, இலைகள காய வைக்கிறதுக்கு உலர்கலனைத் போடும் முயற்சியில் இருக்கோம். எங்ககிட்ட வாங்குற ஏற்றுமதியாளர், சிங்கப்பூர், மலேசியா, துபாய்னு அனுப்பிட்டிருக்கார். நான் செடி முருங்கையும், மர முருங்கையும் சாகுபடி செஞ்சிட்டு வர்றேன். இந்த ரெண்டு வகையில செடி முருங்கை இலையைத்தான், எங்க பகுதியில ஏற்றுமதிக்கு அதிகமா கேட்குறாங்க” என்றார்.

தொடர்புக்கு :
சாமிக்கண்ணு,
செல்போன் : 97883 18950

தொடர்புக்கு :
டெல்சன்,
செல்போன் : 90806 60084.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Monday, 5 November 2018

மொட்டை மாடியில் ஒரு வனம் :

“மாடித்தோட்டம் என்றாலே காய்கறிகளையும், கீரைகளையும் மட்டும்தான் வளர்க்க முடியும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், கொஞ்சம் முயற்சி செய்தால் மாடித்தோட்டத்தில் மரங்களையும் வளர்க்க முடியும்” என்று சொல்வதோடு அதை நிரூபித்தும் காட்டியிருக்கிறார், சென்னையைச் சேர்ந்த லட்சுமி.

சென்னை, ஜாபர்கான்பேட்டை, வேதாச்சலம் தெருவில் கடந்த 18 ஆண்டுகளாக மாடித்தோட்டம் அமைத்துப் பராமரித்து வருகிறார் லட்சுமி. ஒரு காலைப்பொழுதில் அவரது வீட்டை அடைந்தோம். எங்கு பார்த்தாலும் செடி, கொடிகள்... எனப் பசுமையாகக் காட்சியளித்தது, அந்த வீடு. நம்மை மகிழ்ச்சியுடன் வரவேற்ற லட்சுமி மாடித்தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார்.

“நான் சின்ன வயசுல இருக்குறப்பவே எங்க வீட்டுல தோட்டம் போட்டு அப்பாவும், அம்மாவும் காய்கறிச்செடிகளை வளர்த்தாங்க. அதைப் பார்த்தே வளர்ந்ததால, எனக்கு வீட்டுத்தோட்டம் மேல ஆசை அதிகமா இருந்துச்சு. நான், 2001-ம் வருஷம் 10 தொட்டிகளை மட்டும் வெச்சு மாடித்தோட்டம் அமைச்சேன். இப்போ 200 செடிகளுக்கு மேல இருக்கு. பெரும்பாலும் மர வகைகளும், மலர் வகைகளும்தான் வெச்சிருக்கேன். காய்கறி வகைகளைச் சீசனுக்கு ஏத்த மாதிரி விதைப்பேன். இப்போ கோடைக்காலம்கிறதால காய்கறிச் செடிகள் குறைவா இருக்கு. தற்சமயம் கத்திரி, மிளகாய் மட்டும்தான் இருக்கு. ஜூன் மாசத்துக்குப் பிறகுதான் காய்கறிப் பயிர்களைப் போடுவேன். அதேபோல அக்டோபர் மாசத்துக்கு மேல குளிர்காலத்தில பீன்ஸ், கேரட், பீட்ரூட், காலிஃபிளவர்னு பயிர் செய்வேன். இந்த ஏரியாவுல மாடித்தோட்டம் அமைச்ச முதல் ஆள் நான்தான். இப்போ எல்லோரும் என்கிட்ட வந்து ஆலோசனை கேட்டுட்டுப் போறாங்க” என்று முன்னுரை கொடுத்த லட்சுமி தொடர்ந்தார். “இங்க காய்கறிகளையும், கீரைகளையும்தான் ஆரம்பத்துல வளர்த்தேன். அப்புறமா புளியமரம், மாதுளை, கொய்யா, வாட்டர் ஆப்பிள்னு மரங்களையும் மாடியில் வளர்க்க ஆரம்பிச்சேன். இந்த மரங்கள், நான் நினைச்சதைவிட வேகமா வளர ஆரம்பிச்சது. வாரத்துக்கு ஒரு தடவை கொய்யா, மாதுளைனு பறிச்சிக்கிட்டிருக்கோம்.

இதுபோக செர்ரி, சப்போட்டா, மாமரம், வாழை மரம், எலுமிச்சைனு பல பழமரங்கள் இருக்கு. மூலிகைச் செடிகளும், கீரைகளும் இருக்கு. வீட்டைச் சுத்தி பசுமையான செடிகளையும், கொடி வகைகளையும் வெச்சிருக்கேன். வெளிநாட்டுச் செடிகளா இருந்தாலும் வீட்டைச்சுத்தி இருக்குறப்போ, சுத்தமான காத்து கிடைக்குது.

“தினமும் காலையில ஆறு மணிக்கு மாடித்தோட்டத்துக்குப் போயிடுவேன். கோடைக்காலத்துல தினமும் 2 தடவை செடிகளுக்குத் தண்ணீர் கொடுப்பேன். சில நேரங்கள்ல பூவாளியில தண்ணீர் தெளிப்பேன். செடிகளை ஒவ்வொண்ணா கவனிச்சுப் பூச்சித் தாக்குதல் ஏதும் இருக்கானு பார்ப்பேன். அதேபோலப் பழுத்த இலைகளைப் பறிச்சிடுவேன். வாரத்துக்கு ஒருமுறை இயற்கைப் பூச்சிவிரட்டி, தேமோர்க் கரைசல், பெருங்காயக் கரைசல்னு தெளிப்பேன்.

கடந்த மூணு வருஷத்துக்கு முன்னாலதான் ‘ஆர்கானிக் கார்டன் பவுண்டேஷன்’ பத்தித் தெரிஞ்சுக்கிட்டேன். அந்தக் குழு மூலமாத்தான் எனக்கு இயற்கை இடுபொருள்களைப் பத்தி அதிகமாகத் தெரிஞ்சது. யூடியூப்ல நம்மாழ்வார் வீடியோக்களைப் பார்த்து இயற்கை முறையில இடுபொருள்களைப் பயன்படுத்த ஆரம்பிச்ச பிறகு, நல்ல பலன் கிடைச்சுருக்கு. வீட்டுல தயாரிக்க முடிஞ்ச இடுபொருள்கள் எல்லாத்தையும் நானேதான் தயாரிச்சுக்குறேன். தினமும் வீட்டுல மிச்சமாகுற காய்கறி, பழக்கழிவுகளையும் அப்படியே செடி வளர்க்குற தொட்டிகள்ல போட்டுடுவேன். அதெல்லாம் மட்கி உரமாகிடும். வேர்ப்பூச்சித் தாக்குதலைத் தவிர்க்க வேப்பம் பிண்ணாக்கு பயன்படுத்துறேன்” என்ற லட்சுமி நிறைவாக,

“ஆரம்பத்துல மாடித்தோட்டம் அமைக்கிறப்போ செலவு அதிகமா இருக்குற மாதிரித்தான் தெரியும். ஆனால், நாள்கள் போகப்போகத்தான் அதோட பலன் நமக்குத் தெரிய ஆரம்பிக்கும். வீட்டுல இருக்குற உடைந்த வாளிகள், பாத்திரங்கள்லயே செடிகள் வளர்க்கலாம். மாடித்தோட்டம், உடலையும், மனசையும் ஆரோக்கியமா வைக்குது. சிறந்த மாடித்தோட்டத்துக்காக 2 விருதுகள் எனக்குக் கிடைச்சுருக்கு.

இந்தளவுக்கு நான் மாடித்தோட்டத்துல சாதிச்சதுக்குக் காரணம் என் கணவர்தான். அவர் என்னை உற்சாகப்படுத்தினதோடுமாடித்தோட்டத்துக்கான பல வேலைகளைச் செய்து கொடுத்தார். இப்போ நிறைய பேர் என்கிட்ட ஆலோசனை கேட்டுத் தோட்டம் அமைக்கிறதைப் பார்க்கும்போது மனசுக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கு” என்று சொல்லி விடைகொடுத்தார்.

வளர்ச்சி ஊக்கியான வாழைப்பழத்தோல்!

வாழைப்பழத்தோலைப் பத்து நாள்கள் தண்ணீரில் ஊறவைத்து அக்கரைசலைப் பயிர்களுக்குத் தெளித்துவந்தால் பயிர்களின் வளர்ச்சி அதிகமாவதுடன், பூச்சித் தாக்குதலும் குறைகிறது. வாழைப்பழத்தோலை அரைத்துத் தண்ணீரில் கரைத்தும் தெளிக்கலாம். வாழைப்பழம் மிகச்சிறந்த வளர்ச்சி ஊக்கியாகச் செயல்படுகிறது. அதேபோலச் செடிகளில் நல்ல பச்சை நிறத்துடன் உள்ள இலைகளைப் பறித்து, அவற்றைப் பதினைந்து நாள்கள் தண்ணீரில் ஊறவைத்து, செடிகளின் வேர்பகுதியில் ஊற்றினால் வேர்கள் பலம்பெறுகின்றன.

தொடர்புக்கு :
செல்போன்: 98402 97383

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm
நெல், கரும்பு,தக்காளி,கத்திரி,ஆடு, மாடு,கோழி... மழைக்கால பராமரிப்பு!


மழை, விவசாயத்துக்கு அடிப்படையானது. அதேநேரத்தில் அது, ஆபத்தையும் உருவாக்கும். ‘மழை வரும் முன்னே நோய்கள் வரும் பின்னே’ என்றும் சொல்வார்கள். வைரஸ் போன்ற கிருமிகளின் பெருக்கத்துக்கு பருவ மழைக்காலம் ஏற்றதாக இருப்பதால், விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது, அவசியமாகிறது. அவர்களுக்காகவே தட்பவெப்ப நிலை மாற்றத்தால், பயிர்கள் மற்றும் கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும், அதற்குரிய ‘வரும் முன் காக்கும் நடவடிக்கைகள்’ பற்றியும் துறை சார்ந்த வல்லுநர்கள் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் இங்கே...

நாற்று உற்பத்தி மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் நடவு செய்வதில் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விளக்குகிறார், சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் செந்தூர்குமரன்.

“மழைக்காலத்தில் நாற்றங்கால் தயாரிப்பு, காய்கறி மற்றும் பழக்கன்றுகள் நடவுப்பணிகளில் விவசாயிகள் ஈடுபடுவர். இக்காலத்தில் பயிர்களுக்கு வரக்கூடிய முக்கிய நோய், வேர் அழுகல். இதைச் சுலபமாகத் தடுக்கலாம். காய்கறிப் பயிர்களான கத்திரி, தக்காளி, வெண்டை நாற்றங்கால்களை அதிக தண்ணீர் தேங்காத அளவுக்குச் சற்று உயரமாக அமைக்க வேண்டும். அதிக தண்ணீர் நாற்றங்காலில் தேங்கினால், நாற்றுகளின் தண்டுப் பகுதிகளில் குறிப்பாக தரையை ஒட்டியுள்ள தண்டுப் பகுதிகளில் அழுகல் நோய் வரும். அதிக மழை பெய்யும்போது, தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்க முடியாது. அதனால், நாற்றங்கால் படுக்கை தயாரிக்கும்போதே தொழுவுரத்துடன் சூடோமோனஸ் அல்லது டிரைக்கோடெர்மா விரிடியைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். 10 அடி நீளம், 3 அடி அகலம் உள்ள படுக்கைக்கு 200 கிராம் போதுமானது.

நாற்று நடவு!

நெல் வயலில் நாற்று நடவுக்கு முன்னதாக, ஒரு ஏக்கருக்கு 50 கிலோ என்ற அளவில் வேப்பம் பிண்ணாக்கு இட்டு பார் அமைக்க வேண்டும். நாற்றுகளை நடவு செய்த பிறகு, ஏக்கருக்கு 2 கிலோ சூடோமோனஸ், 6 கிலோ மணல் இரண்டையும் கலந்து ஒவ்வொரு நாற்றின் தூரிலும் சிறிதளவு வைக்க வேண்டும்.

பழக்கன்றுகள் நடவு!

பழக்கன்றுகள் மற்றும் மரக்கன்றுகளை நடவு செய்பவர்கள்... நடவுக் குழியில் 250 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, 25 கிராம் டிரைக்கோடெர்மா விரிடியை இட்டு, நடவு செய்ய வேண்டும். இவற்றைக் கடைபிடித்தாலே வேர் அழுகலிலிருந்து செடிகளைப் பாதுகாக்கலாம்” என்றார், செந்தூர்குமரன்.

பூச்சிகள், நோய்கள்... உஷார், உஷார்!

பயிர்களைத் தாக்கும் பூச்சிகள், நோய்கள் மற்றும் அவற்றுக்கான தடுப்பு முறைகள் குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும், பயிர் பாதுகாப்பு மையத்தின் இயக்குநர் முனைவர் ராமராஜு விளக்கிச் சொன்னார். “தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பகுதிகளில், தற்போது நிலவும் தொடர் மழை, பனி மூட்டமான சூழ்நிலை காரணமாக சில பயிர்களில் ஒரு சில பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்க வாய்ப்புகள் உள்ளன.

நெல்லில் இலைச்சுருட்டுப்புழு!

நெல்லில் இலைச்சுருட்டுப்புழு தாக்க வாய்ப்புள்ளது. இத்தாக்குதலுக்கு உள்ளான பயிர்களின் இலைகள் வெள்ளை நிறத்தில் சுரண்டல்களுடன் காணப்படும். தாக்குதல் அதிகமானால் செடிகள் காய்ந்துவிடும். இப்பூச்சியின் தாக்குதல் இருந்தால், தழைச்சத்து உரங்கள் இடுவதைக் குறைக்க வேண்டும். மேலும், மாலை நேரங்களில் விளக்குப்பொறி வைத்து, தாய் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்க வேண்டும். தவிர, ‘அசாடிரக்டீன்’ என்ற தாவர (பயோ) பூச்சிவிரட்டியை, ஏக்கருக்கு 400 மில்லி என்ற அளவில் தண்ணீரில் கலந்து தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.

நெல் வயலில் அதிகமாகத் தண்ணீர் தேங்கி வெளியேற்ற முடியாமல் உள்ள இடங்களில், புகையான் தாக்க வாய்ப்புண்டு. பயிர்கள் காய்ந்து, எரிந்த தோற்றத்தில் இருந்தால் இத்தாக்குதல் என்று உறுதிப்படுத்தலாம். இத்தாக்குதல் தென்பட்டால், தழைச்சத்து உரங்களை 3 முதல் 4 முறைகளாகப் பிரித்து இட வேண்டும். (ரசாயனம்) பைரித்திராய்டுகள், பூச்சிகளின் மறு உற்பத்தியைத் தூண்டும். அதனால், பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். 3 சதவிகித வேப்பெண்ணெய்க் கரைசலை, ஒட்டும்திரவத்துடன் கலந்து தெளிக்கலாம். ஒரு ஏக்கருக்கு 6 லிட்டர் வேப்பெண்ணெய் தேவைப்படும்.

கடலோர மாவட்டங்களில் காற்றழுத்தத் தாழ்வு நிலை, மேகமூட்டத்துடன் கூடிய வானிலை மற்றும் அதிக ஈரப்பதம் ஆகியவை 3 முதல் 4 நாட்கள் வரை நீடித்தால், நெல்லில் குலை நோய், பாக்டீரியா இலைக்கருகல் நோய் ஆகியவை வர அதிக வாய்ப்பு உண்டு. இதனைக் கட்டுப்படுத்த, தழைச்சத்து உரங்களை மூன்று முறைகளாகப் பிரித்து இட வேண்டும். அருகில் உள்ள வேளாண்மை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு... அவர்கள் பரிந்துரைக்கும் பயிர் பாதுகாப்பு முறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.

பருத்தியில் காய்ப்புழு ஜாக்கிரதை!

மழை குறைவான பகுதிகளில், பருத்திச்செடிகளில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் தென்பட வாய்ப்புள்ளது. ஒரு ஏக்கருக்கு ஐந்து இடங்களில் மஞ்சள் ஒட்டுப்பொறி மற்றும் இனக்கவர்ச்சிப் பொறி வைத்து தாய்ப்பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தலாம். நிலக்கடலையில் சிகப்புக் கம்பளிப்புழுவின் தாக்குதல் காணப்படலாம். ஏக்கருக்கு ஒரு விளக்குப்பொறி வைத்து, தாய் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிப்பதுடன், 5 சதவிகித வேப்பங்கொட்டைச்சாறும் தெளித்துக் கட்டுப்படுத்த வேண்டும்.

கரும்புக்கு முட்டை ஒட்டுண்ணி!

கரும்பில் இடைக்கணுப்புழுத் தாக்குதல் பரவலாகத் தென்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த ‘டிரைக்கோகிரம்மா கைலோனிஸ்’ என்ற முட்டை ஒட்டுண்ணியை நான்காவது மாதத்தில் இருந்து 15 நாட்கள் இடைவெளியில் ஏக்கருக்கு 1 சி.சி என்ற அளவில் 6 முறை கட்டிவிட வேண்டும்.

தக்காளிச் செடிகளில் இலைக்கருகல் நோய், காய்ப்புழுத் தாக்குதலும்; கத்திரியில் காய்ப்புழுத் தாக்குதலும் தென்பட வாய்ப்புள்ளது. இவற்றைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 5 இடங்களில் இனக்கவர்ச்சிப் பொறி வைத்து தாய் அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்க வேண்டும். கத்திரியில், ‘டிரைக்கோகிரம்மா பிரோட்டியோசம்’ என்ற முட்டை ஒட்டுண்ணியை 15 நாட்கள் இடைவெளியில் ஒரு ஏக்கருக்கு ஒரு சி.சி. என தொடர்ந்துத் கட்டிவிடுவதன் மூலம் காய்ப்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

மாடுகளைத் தாக்கும் கோமாரி!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் திருவண்ணாமலைப் பயிற்சி மையத்தின் தலைவர் மற்றும் உதவிப் பேராசிரியர் ராஜ்குமார், கால்நடைக்கு ஏற்படும் நோய்கள், தடுப்பு முறைகள் குறித்தும் சொன்னார்.

“வெயில் காலத்தில் இருந்து, மழைக்காலத்துக்கு மாறும்போது தட்பவெட்ப நிலையிலும் மாற்றம் ஏற்படுகிறது. இந்த மாற்றத்தால் கால்நடைகளைத் தாக்கும் நச்சுயிரிகளின் எண்ணிக்கையும், சுற்றுப்புறச்சூழலில் கொசு மாதிரியான நோய்களைப் பரப்பும் பூச்சிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இதனால், கால்நடைகளைப் பலவிதமான நோய்கள் தாக்கி பொருளாதார இழப்புகளை ஏற்படுத்துகின்றன. மாடுகளைப் பொறுத்தவரை, வைரஸ் மற்றும் பாக்டீரியா தாக்குதலால் சப்பை நோய், கோமாரி, தொண்டை அடைப்பான், அடைப்பான், மடிவீக்கம் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

சப்பை நோய் தாக்கப்பட்ட மாட்டின் தொடைப்பகுதி வீங்கி காணப்படும். தொண்டை அடைப்பான் பாதிக்கப்பட்ட மாட்டின் கழுத்துப் பகுதி வீங்கி காணப்படும். மேலும், மாடுகள் சுவாசிக்கச் சிரமப்படும். அடைப்பான் நோயால் தாக்கப்பட்ட மாடுகள் திடீர் என இறந்து விடும்.

தீவனத்தில் கவனம்!

மழைக்காலங்களில் அடர்தீவனம் நனையும்போது, ‘அஃப்லாடாக்ஸின்’ என்ற நச்சுப்பொருள் உற்பத்தியாகும். அப்படி நச்சுப்பொருள் உற்பத்தியான தீவனத்தைச் சாப்பிடும் மாடுகளுக்கு செரிமானப் பிரச்னை உண்டாகும். தவிர, கல்லீரல் பாதிக்கப்பட்டும் இறக்க நேரிடும். மழையில் மட்கிப்போன வைக்கோலை மாடுகளுக்குக் கொடுக்கும் போதும் செரிமானப் பிரச்னையால் வயிற்றுப் போக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இழப்பைத் தடுக்கும் தடுப்பூசிகள்!

மழைக்காலங்களில் மாடுகளை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். சப்பை நோய், தொண்டை அடைப்பான், அடைப்பான் போன்ற தொற்று நோய்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6 மாதங்களுக்கு ஒரு முறை தடுப்பூசி போட வேண்டும். சப்பை நோய்க்கு செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் ஒரு முறையும், அடைப்பான் நோய்க்கு ஏப்ரல்-மே மாதங்களிலும் தடுப்பூசி போட வேண்டும்.

மடிநோய் மாதிரியான நோய்களைத் தடுக்க, கொட்டகை ஈரமாக இல்லாமல், பார்த்துக் கொள்ள வேண்டும். மட்கிப்போன வைக்கோலை மாடுகளுக்குக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பசுந்தீவனம் கொடுக்கும்போது தேவையற்ற செடிகள் கலந்து இருந்தால் அவற்றை நீக்க வேண்டும். கொட்டகையின் சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்கி நிற்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது, கொட்டகையின் சுற்றுப்புறத்தில் சுண்ணாம்புத் தூளை தூவி கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.

வெள்ளைக்கழிச்சலுக்கு தடுப்பு மருந்து!

ஆடுகளில்... அடைப்பான் நோயும், ஆட்டுக்கொள்ளை நோயும் அதிகளவில் தாக்க வாய்ப்புண்டு. கூட்டமாக வளர்க்கும் ஆடுகளில் அதிகமாகத் தாக்குதல் இருக்கும். தினம் ஒன்று, இரண்டு என இறந்து போகும். இதைத் தடுக்க மழைக்காலத்துக்கு முன்பு முறையாக ஆடுகளுக்குத் தடுப்பூசி போட வேண்டும். ஆட்டுக்கொள்ளை நோயால் தாக்கப்பட்ட ஆடுகளுக்கு 6 முதல் 8 நாட்களுக்கு கழிச்சல் இருக்கும். கால்புண், வாய்ப்புண், கண் மற்றும் மூக்கில் இருந்து நீர் வடியும். இந்நோய்க்கும் தடுப்பூசி உண்டு. மூலிகை மருந்துவ முறைகளையும் ஆடுகளுக்குக் கடைப்பிடிக்கலாம்.

மழைக்காலத்தில், கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய் வர வாய்ப்புண்டு. அதனால், மழைக்காலத்துக்கு முன்பு கோழிகளை மருத்துவமனை கொண்டு சென்று தடுப்பூசிகள் போட வேண்டும். உருண்டை வடிவ தடுப்பு மருந்தையும் தண்ணீரில் கலந்து கொடுக்கலாம். தவிர, மூலிகை மருத்துவ முறைகளைக் கையாண்டும் நோய்களை விரட்டலாம்” என்றார்.

தொடர்புக்கு :
செந்தூர்குமரன், செல்போன்: 94438-69408,
ராமராஜு, தொலைபேசி: 0422-6611237.
ராஜ்குமார், தொலைபேசி: 04175-206577.

கால்நடை நோய்களை விரட்டும் மூலிகை மருந்துகள்!

தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் மரபுசார் மூலிகை ஆய்வு மையத்தில் கால்நடைகளுக்கு பரிந்துரைக்கும் மூலிகை மருந்துகள் சில இங்கே.. (ஒரு மாடு, ஒரு ஆடு, 10 கோழிகளுக்கான அளவுகள்)

மடிவீக்க நோய்!

சோற்றுக்கற்றாழை-200 கிராம், மஞ்சள் பொடி-50 கிராம், சுண்ணாம்பு-5 கிராம் (ஒரு புளியங்கொட்டை அளவு) ஆகியவற்றை கல் உரலில் இட்டுக் கெட்டியாக அரைத்து... ஒரு கை அளவுக்கு எடுத்து நீர் சேர்த்து, நீர்த்த நிலையில் கால்நடையின் மடிப்பகுதியில் தடவ வேண்டும். நாள் ஒன்றுக்கு 10 முறை என்ற அளவில் நோய் குறையும் வரை இக்கலவையைப் பூச வேண்டும்.

கோமாரி வாய்ப்புண்!

தேங்காய் (முழுவதும் துருவிக் கொள்ளவும்) ஒன்று, சீரகம்-50 கிராம், வெந்தயம்-30 கிராம், மஞ்சள் பொடி-10 கிராம், கருப்பட்டி (பனை வெல்லம்)-20 கிராம் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். சீரகம், வெந்தயம், மஞ்சள், கருப்பட்டி ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து, அதில் தேங்காய் துருவலைச் சேர்த்து தினம் இரண்டுவேளை வீதம் மூன்று நாட்களுக்குக் சாப்பிட கொடுக்க வேண்டும். ஐந்து நாட்கள் கொடுத்தால், மாடு முழுமையாகக் குணமடைந்து விடும்.

கோமாரி கால்புண்!

குப்பைமேனி-100 கிராம், பூண்டு-10 பல், மஞ்சள்-100 கிராம், இலுப்பை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்-250 மில்லி. முதல் மூன்று பொருட்களை இடித்து, இலுப்பை எண்ணெயுடன் கலந்து காய்ச்சி பதப்படுத்திக்கொள்ள வேண்டும். அடுத்து, கால்நடையின் காலில் புண் இருக்கும் பகுதியை உப்பு, மஞ்சள் கலந்த தண்ணீரில் கழுவி ஈரத்தை சுத்தமான காய்ந்த துணியால் துடைத்துவிட்டு, புண் ஆறும் வரை காய்ச்சிய மருந்தைத் தடவ வேண்டும்.

ஆட்டுக்கொள்ளை நோய் (பி.பி.ஆர்)!

சீரகம்-15 கிராம், வெந்தயம்-15 கிராம், மஞ்சள்-5 கிராம், பிரண்டை-5 கொழுந்து, மிளகு- 5 எண்ணிக்கை, பூண்டு-5 பல், முருங்கை இலை-50 கிராம், கருப்பட்டி (பனை வெல்லம்)-500 கிராம் ஆகிய பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றில் சீரகம், வெந்தயம் ஆகிய இரண்டையும் இடித்து, மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ள வேண்டும். அந்த உருண்டைகளை உப்பில் (15 கிராம் உப்பு) தோய்த்து, ஆட்டினுடைய நாக்கின் மேல் பகுதியில் தேய்த்து ஒரே வேளையில் அனைத்து உருண்டைகளையும் உண்ணக் கொடுக்க வேண்டும்.

வெள்ளைக்கழிச்சல்!
கீழாநெல்லி-50 கிராம், சின்ன வெங்காயம்-5, பூண்டு-2 பல், மஞ்சள்-5 கிராம், சீரகம்-20 கிராம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து அரிசிக்குருணை அல்லது நொய்யில் கலந்து... 3 முதல் 5 நாட்களுக்குக் கொடுத்தால், வெள்ளைக்கழிச்சல் பாதித்த கோழிகள் குணமாகி விடும்.

துளசி-20 இலை, தும்பை-10 இலை, கற்பூரவள்ளி-ஒரு இலை, தூதுவளை-ஒரு இலை, சீரகம்-5 கிராம், மஞ்சள்-5 கிராம், மிளகு-5 கிராம், பூண்டு-5 பல் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து, தீவனம் அல்லது தண்ணீரில் கலந்து தொடர்ச்சியாக மூன்று நாட்கள் கொடுத்தால், கோழிகளுக்கு வரும் சுவாச நோய் சரியாகி விடும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm