Sunday 24 September 2017

பயிர்களை சேதமாக்கும் மயில்கள்... விரட்ட ஓர் எளிய வழி!


விவசாயிகளின் பயிர்களுக்கு பூமிக்கு கீழே எலிகளால் அழிவு என்றால், தற்போது பூமிக்கு மேலே மயில்களாலும் அழிவு. நிலத்தடி நீரைக்கொண்டு விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைவிக்கும் பயிர்களை மயில்கள் கூட்டமாக புகுந்து சேதப்படுத்திவிடுகின்றன. விளைந்த கதிர்களை உடைத்து உண்ணுகின்றன. இதைக் கண்டு விவசாயிகள் செய்வதறியாது வேதனையில் இருக்கிறார்கள்.

ஒருகாலத்தில் மயில்களை மலைப்பகுதிகளில் அல்லது வனவிலங்குகள், பறவைகள் சரணாலயத்தில்தான் காணமுடியும். எங்காவது கோயில்களில் அரிதாகக் காணலாம். ஆனால், தற்போது கிராமப்புற வயல்வெளிகளில் வெட்டுகிளிகள்போல் மயில்கள் கூட்டம், கூட்டமாய் காணப்படுகின்றன. கடும் வறட்சி நிலவும் இந்நேரத்தில் குடிநீர் மற்றும் உணவுத் தேவைக்காக யானைகள், மான்கள் குடியிருப்புப் பகுதிகளை நோக்கி வருவதைப் போல மயில்களும் வரத்தொடங்கிவிட்டன.

விவசாயிகள் சிலர் மயில்களை கட்டுப்படுத்த முடியாமல் அவைகளை விஷம் வைத்து கொல்லும் சம்பவங்களும் அதிகரித்திருக்கின்றன

சரி, மயில் தேசிய பறவைதான், முருகக்கடவுளின் வாகனம்தான், பயிருக்கு அழிவைத்தரும் மயில் பிரச்சனைத் தீர்க்க என்ன வழி?

தீர்வு சொல்கிறார் பெயர் குறிப்பிடவிரும்பாத வனக்காப்பாளர் ஒருவர், “மயில்களை காப்பது நமது கடமை. மீறி மயில்களை அழித்தால் வனத்துறையின் கடும் நடவடிக்கைக்கு ஆளாகவேண்டிவரும். விளைநிலங்களுக்கு மயில் வருவதைத் தடுக்க விளைநிலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நமக்கு தேவையற்ற பயிர்களை விதைக்கலாம். அதன்மீது சாணத்தை கரைத்துத் தெளிக்கலாம் அல்லது மீன் கழிவுகள், வேப்பஎண்ணை, புகையிலை கரைசல் போன்றவற்றை விலை நிலத்தை சுற்றி தெளித்தால் அந்த வாடைக்கு மயில்கள் அருகில் வராது. இப்படியான எளிய வழிகளில் மயில்களை விரட்ட விவசாயிகள் முன்வரவேண்டும்” என்றார்.

முன்பெல்லாம் பாம்பு, நரி, உடும்பு, கீரி போன்றவை கிராமங்களில் உள்ள ஆறு, குளம், ஓடை, புதர்காடு போன்ற அடர்ந்த காட்டுப்பகுதிகளில் வசித்து வந்தன. இவையாவுமே மயில்களுக்கு எதிரிகளாகும். மயில்கள் இடும் முட்டைகளையும், குஞ்சுகளையும் இந்த விலங்குகள் உணவாக உட்கொண்டுவிடும். இதன் விளைவாக மயில் பெருக்கம் குறைந்திருந்தது. ஆனால், நாளடைவில் மனிதன் மருந்துவகை உணவுக்காக, உடும்பு, கீரியையும், பல், வாலுக்காக நரிகளையும், பரமஎதிரியான பாம்புகளையும் அழித்துவிட்டான். இதன் காரணமாக மயில்கள் பெருகிவிட்டன.

வறட்சி காரணமாகவும் விலங்குகளும், பறவைகளும் காட்டை விட்டு வெளியேறத் தொடங்கியிருக்கின்றன. இந்த ஆண்டு மட்டும் வறட்சி காரணமாக இந்தியாவில் இறந்த விலங்குகளின் எண்ணிக்கை பல ஆயிரங்கள். இன்னும் அடுத்த சில மாதங்கள் வறட்சியின் அளவு அதிகரிக்கும் என்பதால் கூடுதலான எண்ணிக்கையில் விலங்குகள் பாதிக்கப்படும். அவை நேரிடையாக மனித இனத்தையும் பாதிக்கும்.

இயற்கை சுழற்சியில் எங்கு கைவைத்தாலும் அது கடைசியில் மனிதர்களையும் பாதிக்கும் என்பதுதான் உண்மை.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

1 comment:

  1. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238

    ReplyDelete