Thursday 31 May 2018

செல்லப்பிராணிகள் மூலம் மனிதர்களுக்குப் பரவும் நோய்கள் :

1. வெறிநாய்க் கடி
2. எலிக் காய்ச்சல் (மஞ்சள் காமாலை)
3. டாக்சோபிளாஸ்மோசிஸ்
4. தோல் நோய்
5. குழந்தைகள் உடலில் புழு
6. (ஸ்கேபிஸ்) சொறி சிரங்கு

நாம் செல்லப்பிராணிகளை வீட்டைக் காக்கும் காவலர்களாக வளர்த்த காலம் மாறிக் குடும்பத்தில் ஒருவராகத் தற்பொழுது வளர்த்து வருகிறோம். இதுபோன்ற சூழலில், நாம் செல்லப்பிராணிகளுடன் நெருக்கமாகப் பழகும் பொழுது வெறிநாய்க்கடி, எலிக் காய்ச்சல் (மஞ்சள் காமாலை) போன்ற நச்சுயிரி நோய்களும் அக மற்றும் புற ஒட்டுண்ணி நோய்களான டாக்சோபிளாஸ்மோசிஸ், குட்டேனியஸ் லார்வல் மைகிரன்ஸ் (தோலில் லார்வா புழுக்கள் ஊடுருவல்), விசரல் லார்வல் மைகிரன்ஸ் (உடலில் புழு ஊறுதல்), மற்றும் ஸ்கேபிஸ் போன்ற நோய்கள் சுகாதாரமற்ற நிலையில் மனிதர்களுக்குப் பரவுகின்றன.

வெறிநாய்க் கடி :

நாம் காலை மற்றும் மாலையில் நடந்து செல்ல உடன் துணையாகச் செல்லப்பிராணிகளைத் தான் அழைத்துச் செல்கிறோம். இவ்வாறு செல்லும் பொழுது திடீரென எதிர்பராமல் வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்ட தெரு நாய்கள் செல்லப்பிராணிகளைக் கடிக்கும் பொழுது இந்நோய் பரவுகிறது. இந்த நோய் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தைப் பாதிப்பதால் திடீரென அமைதியாக இருக்கும் நாய் கோபமாக மாறி எதை வேண்டுமானாலும் எஜமானி முதற்கொண்டு கடிக்கும். உமிழ்நீர் அதிகமாகச் சுரத்தல், தொடர்ச்சியாக கத்தி கொண்டிருத்தல் போன்ற அறிகுறிகளைக் காணலாம்.

திடீரெனப் பயம், காய்ச்சல், தலைவலி, கடிபட்ட இடத்தில் அரிப்பு, உணர்ச்சி மிகுந்து காணப்படுதல், உணவு உட்கொள்ளாமை, தண்ணீரைப் பார்த்தால் வெறுப்பு போன்ற அறிகுறிகளை மனிதர்களில் காணலாம்.

இந்த நோயைக் கட்டுப்படுத்த மூன்று மாதத்திற்கு மேற்பட்ட அனைத்து நாய் மற்றும் பூனைகளுக்கு வெறிநாய்க்கடித் தடுப்பூசி போட வேண்டும். அதன் பிறகு ஆண்டுதோறும் பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும். இதுமட்டுமல்லாமல் தெரு நாய்கள் கடித்தால் உடனடியாக வெறிநாய்க்கடி நோய் வராமல் தடுக்க முன்கூட்டியாக 0,3,7,14 மற்றும் 28 ஆவது நாளில் கால்நடை உதவி மருத்துவரை அணுகித் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.

எலிக் காய்ச்சல் (மஞ்சள் காமாலை) :

பொதுவாக இந்த நோய் செல்லப்பிராணிகள் பெருச்சாளியைப் பிடித்துச் சாப்பிடும் பொழுதும், மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட நாயின் சிறுநீரின் மூலமும் செல்லப்பிராணிகளுக்குப் பரவுகிறது. மனிதர்களுக்கு இந்நோய், நோயால் பாதிக்கப்பட்ட நாயின் சிறுநீரின் மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பரவுகிறது. இந்த எலிக் காய்ச்சல் நோயில் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்படுவதால் காய்ச்சல், உணவு உட்கொள்ளாமை, வாந்தி மற்றும் மஞ்சள் காமாலை போன்ற அறிகுறிகள் காணப்படும். கடைசியாகச் சிறுநீரகம் பழுதடைந்து செல்லப்பிராணிகள் இறந்து விடும்.

மனிதர்களில் தலைவலி, காய்ச்சல், கண் இமைகள் சிவந்து காணப்படுதல், வாந்தி, பேதி, வயிற்று வலி, இடுப்பு மற்றும் கால் வலி போன்ற அறிகுறிகள் காணப்படும்.

இந்த நோய் மனிதர்களுக்குப் பரவாமல் தடுக்க 45 நாள்களுக்கு மேற்பட்ட குட்டிகளுக்கு ஒருங்கிணைந்த தடுப்பூசியும் 21 நாள்கள் கழித்து பூஸ்டர் தடுப்பூசியும் மற்றும் ஆண்டுதோறும் மறுதடுப்பூசியும் போட வேண்டும். மேலும், நோயால் பாதிக்கப்பட்ட நாயைக் கை உறைகள் அணிந்து தொட வேண்டும்.

டாக்சோபிளாஸ்மோசிஸ் :

இந்த நோய் டாக்சோபிளாஸ்மா கான்டி என்கிற ஓரணு ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது. பூனைகள் எலி மற்றும் அசைபோடும் கால்நடைகளின் இறைச்சியை உட்கொள்ளும் பொழுது இவற்றிற்குப் பரவுகிறது.

பூனையின் மலத்தின் வழியாக வெளியேறுகின்ற கூட்டுப்பருவ முட்டைகள் மறைமுகமாகப் பூனையின் உரோமத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும். நாம் பூனையைத் தொட்டுவிட்டு மறந்து கை கழுவாமல் சாப்பிடும் பொழுது நமக்குப் பரவுகிறது. இந்நோயில் காய்ச்சல், நிணநீர் முடிச்சி அழற்சி, நுரையீரல் அழற்சி, சதை வலி மற்றும் நரம்பு சம்பந்தமான பிரச்சினைகளைக் காணலாம். முக்கியமாகப் பெண்கள் கர்ப்பக் காலத்தில் இந்நோயால் பாதிக்கப்பட்டால் கருச்சிதைவு மற்றும் குழந்தைகள் பிறவி ஊனத்துடன் பிறக்கும்.

பூனைகளுக்குப் பூச்சி மருந்து கொடுத்து, செல்லப் பிராணிகளைத் தொட்ட பிறகு நன்றாகக் கை கழுவிட்டுச் சாப்பிட்டால் மனிதர்களுக்கு இந்நோய் பரவுவதை தடுக்கலாம்.

தோல் நோய் :

குட்டேனியஸ் லார்வல் மைகிரன்ஸ் எனப்படும் தோலில் இளம் புழுக்கள் ஊடுருவல் எனப்படும் தோல் நோய். நாய் மற்றும் பூனைகளில் காணப்படும் அக ஒட்டுண்ணிகளான அன்கைலோஸ்டோமா கெனைனம், அன்னைலோஸ்டோமா பிரேசிலென்சி மற்றும் அன்சினோஜீயா ஸ்டெப்பனோசெப்பாலா போன்றவற்றின் லார்வாக்கள் மலம் வழியாக வெளியேறி மண்ணை அசுத்தப்படுத்துகின்றன. இந்த மண்ணில் குழந்தைகள் விளையாடிவிட்டுக் கை கழுவாமல் சாப்பிடும்பொழுது குழந்தைகளுக்குப் பரவுகிறது. தோலில் இளம் புழுக்கள் நகருவதால் தோல் சிவந்து பரு போன்ற புண்கள் ஏற்பட்டு அரிப்பு காணப்படும். செல்லப்பிராணிகளில் இரத்தச்சோகை, கழிச்சல் மற்றும் உடல் மெலிந்து காணப்படுதல் போன்ற அறிகுறிகளைக் காணலாம்.

நாய் மற்றும் பூனைகளுக்கு முறையாகப் பூச்சி மருந்து கொடுத்து, விளையாட்டு மைதானம், கடற்கரை போன்ற பகுதிகளில் மலம் கழிப்பதைத் தடுப்பதின் மூலம் இந்நோயைத் தடுக்கலாம்.

குழந்தைகள் உடலில் புழு :

லார்வல் மைகிரன்ஸ் (உடலில் புழு ஊறுதல்) செல்லப்பிராணிகளில் காணப்படும் உருண்டைப் புழுக்களான டாக்சோகாரா கேனிஸ், டாக்சோகாரா கேட்டை, நத்தோஸ்டோமா ஸ்பைனிஜெரம் போன்றவற்றின் இளம் புழுக்கள் (லார்வாக்கள்) மலத்திலிருந்து வெளியேறி மண்ணில் காணப்படுகின்றன. குழந்தைகள் மண்ணில் விளையாடிவிட்டுச் சுகாதாரமில்லாமல் உணவு சாப்பிடும்பொழுது குழந்தைகளுக்குப் பரவுகிறது. இந்த நோயால் 1-5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இந்த இளம் புழுக்கள் உடலில் ஊர்ந்து செல்வதால் காய்ச்சல், இருமல், கண் தெரியாமை மற்றும் தோல் சிவந்து காணப்படுதல் போன்ற அறிகுறிகளை மனிதர்களில் காணலாம்.

செல்லப்பிராணிகளில் கழிச்சல், வாந்தி, மற்றும் நுரையீரல் அழற்சி போன்ற அறிகுறிகளைக் காணலாம். செல்லப்பிராணிகளுக்கு முறையாகப் பூச்சி மருந்து கொடுத்து, மண் மாசுபடுவதைத் தடுத்துச் சுகாதார வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதின் மூலம் இந்நோயைத் தடுக்கலாம்.

(ஸ்கேபிஸ்) சொறி சிரங்கு :

இது சார்காப்டிஸ் ஸ்கேபி என்ற புற ஒட்டுண்ணியால் ஏற்படுகிற நோய் ஆகும். செல்லப்பிராணிகளில் இந்நோய் 10 நாள் முதல் 8 வாரத்திற்குட்பட்ட குட்டிகளில் பரவலாகக் காணப்படுகிறது. இந்நோயினால் பாதிக்ப்பட்ட குட்டிகளில் காது, வயிற்றின் அடிப்பகுதி, நெஞ்சு, முன்னங்கால், பின்னங்கால் மூட்டுகளில் உள்ள தோல் சிவந்து மஞ்சள் நிறத் தடிப்புடன் முடி உதிர்ந்து, அதிக அரிப்பு ஏற்படுவதால் செல்லப்பிராணிகள் சொரிந்து கொண்டே இருக்கும்.

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், இந்நோயினால் பாதிக்கப்பட்ட குட்டிகளைத் தருணத்தில் நெருக்கமாக அணைத்துக் கொஞ்சம் பொழுது பரவுகிறது. இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் கை, மார்பகப் பகுதி, வயிறு மற்றும் தொடைப் பகுதியில் வேர்க்குரு போன்ற பருக்கள் ஏற்பட்டு அரிப்பு காணப்படும்.

செல்லப்பிராணிகளுக்கு முறையாகப் பூச்சி மருந்து கொடுத்து. ஆரோக்கியமான உணவு அளித்து நோய் எதிர்ப்புத்தன்மையை அதிகரிப்பதன் மூலம் செல்லப்பிராணிகளில் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.

நாம் செல்லப்பிராணிகளுடன் பழகும்பொழுது சுகாதார முறைகளை மேற்கொண்டால் இந்நோய் நமக்குப் பரவுவதைத் தடுக்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் நாம் செல்லப் பிராணிகளை எந்த அளவு இன்றியமையாததாக வளர்க்கிறோமோ அந்த அளவு நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வது அவசியம். செல்லப் பிராணிகளுக்குச் சரியான நேரத்தில் பூச்சி மருந்து கொடுத்து, தடுப்பூசி அளிப்பதன் மூலம் மேற்கூறிய நோய்களைச் செல்லப்பிராணிகளில் கட்டுப்படுத்தலாம்.

மேற்கூறிய சுகாதார வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் “நாம் விலங்குவழிப் பரவும் நோயிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்”.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Wednesday 30 May 2018


செல்லப் பிராணிகளின் நோய்த் தடுப்பு முறைகள் :


1.பாதிக்கும் நோய்கள்
2. தாய்ப்பாலும் நோய் எதிர்ப்பாற்றலும்
3. தடுப்பூசியின் அவசியம்
4. வெறிநோய் பற்றி விழிப்புணர்வு

நம்மில் பலருக்கும் செல்லப்பிராணிகளை எவ்வாறு வளர்ப்பது மற்றும் எவ்விதமான நோய்த்தடுப்பு முறைகளைக் கையாள வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு இல்லை. இதனால் செல்லப் பிராணிகள் எளிதாக நோய்வாய்ப்பட்டு இறக்க நேரிடுகிறது. இவற்றிற்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில் செல்லப்பிராணிகளில் பல்வேறு விதமான நோய்த் தடுப்பு முறைகள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கமாகக் காணலாம்.

பாதிக்கும் நோய்கள் :

செல்லப்பிராணிகள் சில நோய்கள் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்து விடுகின்றன. குறிப்பாகப் பார்வோ எனப்படும் இரத்தக்கழிச்சல் நோய் ( 6 மாத வயதிற்குட்பட்ட நாய்க்குட்டிகளை அதிகம் தாக்கும் பண்புடையது), நொடிப்பு நோய், வெறிநோய், எலிக்காய்ச்சல் நோய், கல்லீரலைப் பாதிக்கும் நோய், கனல் ஃகாப் எனும் சுவாச நோய், பூஞ்சைக் காளான்களால் ஏற்படும் தோல் சம்பந்தப்பட்ட நோய், புறஓட்டுண்ணிகளால் ஏற்படும் காய்ச்சல் நோய் மற்றும் குடற்புழுக்களால் ஏற்படும் இரத்தச் சோகை எனப் பல்வேறு வகையான நோய்கள் உள்ளன.

பூனைகளில் வயிற்றுப் போக்கு, இரத்தக்கழிச்சல், சுவாச அழற்சி, பூஞ்சைக்காளான் மற்றும் புறஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய்களும், பறவைகளில் கழிச்சல் நோய் மற்றும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களும், முயல்களில் சொறி மற்றும் சுவாச நோய்களும் காணப்படுகின்றன. அவற்றில் சிலவற்றிற்கு முறையான தடுப்பூசி போடுவதன் மூலமாகவும் மற்ற நோய்களைச் சிறப்பான பராமரிப்பு முறைகளைக் கையாளுவதன் மூலமாகவும் நோய்கள் வருமுன் தடுக்கலாம்.

தாய்ப்பாலும் நோய் எதிர்ப்பாற்றலும் :

வியாபார ரீதியாக வளர்க்கப்படும் நாய்களில், பிறந்த 20 முதல் 25 நாள்களில் நாய்க்குட்டிகளை அதன் தாயிடமிருந்து பிரித்து விற்று வருகிறார்கள், இவ்வாறு செய்வதால் நாய்க்குட்டிகளுக்குத் தனது தாயின் பாலிலிருந்து கிடைக்ககூடிய நோய் எதிர்ப்புத்திறன் முற்றிலும் கிடைக்காமல் பல்வேறு வகையான நோய்களுக்கு ஆளாகின்றன. எனவே நாய்க்குட்டிகளுக்குக் குறைந்தது 35 – 40 நாள்களுக்குப் போதுமான அளவு தாய்ப்பால் அளித்தப் பிறகு தாயிடமிருந்து பிரிக்க வேண்டும்.

தடுப்பூசியின் அவசியம் :

நாளுக்கு நாள் மாறிக்கொண்டு வரும் பருவ கால மாற்றங்களுக்கு ஏற்ப மனிதர்கள் மற்றும் விலங்குகளைத் தாக்ககூடிய நுண்ணுயிரிகள் வளர்சிதை மாற்றத்திற்கு உட்பட்டு நோயின் சீற்றத்தை அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது. இது போன்ற ஒரு தருணத்தில் நமது செல்லப்பிராணிகளுக்குத் தடுப்பூசி போடாமல் இருந்தால் எளிதாக நோய்ப் பாதிப்பிற்கு உள்ளாக்கலாம். ஆகவே செல்லப்பிராணிகளுக்குக் குறித்த காலகட்டத்தில் தடுப்பூசி போடுவதன் மூலம் பல முக்கிய நோய்களிலிருந்து அவற்றைக் காப்பாற்றலாம்.

நாய்களைத் தாக்கும் பார்வோ எனப்படும் இரத்தக் கழிச்சல் நோய், நொடிப்பு நோய், கல்லீரல் பாதிப்பு நோய், சுவாச நோய் மற்றும் எலிக்காய்ச்சல் போன்றவை வராமல் தடுக்க இதற்கென்று பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியினைக் குட்டி பிறந்த ஆறாவது வாரத்தில் முதல் தடுப்பூசியினையும் பின் மூன்று வார இடைவெளியில் அதே தடுப்பூசியினை இருமுறைகள் கொடுத்து மீண்டும் வருடத்திற்கு ஒருமுறை கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி போட வேண்டும். முதல் மூன்று தடுப்பூசிகளைப் போடுவதற்கு முன் நாய்க்குட்டிகளை வீட்டை விட்டு வெளியே எடுத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். மேற்கூறிய நோய்கள் பாதிக்கப்பட்ட நாய்களின் மலம், சிறுநீர், கண்ணீர் மற்றும் சளி வழியாக நோய்க் கிருமிகள் வெளியேறி ஆரோக்கியமான நாய்களைத் தொடக்கூடாது. பீளிச்சிங்க் பவுடர் போன்ற கிருமிநாசினிகளைக் கொண்டு பாதிக்கப்பட்ட நாய்கள் இருக்கும் இடத்தைச் சுத்தம் செய்வதன் மூலம் இந்நோய்களை மற்ற நாய்களுக்குப் பரவாமல் தடுக்கலாம்.

நகரங்களில் நாய்களுக்கென்று தங்கும் விடுதிகள் மற்றும் அழகு நிலையங்களுடன் கூடிய நவீன மருத்துவமனைகள் உருவாகி வருகின்றன. நாய்களை விட்டுச் செல்லும்போது கெனல் ஃகாப் எனும் சுவாச நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நோய்க்கென்று உருவாக்கப்பட்ட தடுப்பூசியினை 3 முதல் 4 வார வயதில் உள்ள குட்டிகளுக்கு மூக்கு வழியே செலுத்தி நோய் வராமல் தடுக்கலாம்.

பூனைகளில், வயிற்றுப் போக்கு இரத்தக் கழிச்சல் மற்றும் சுவாச அழற்சி போன்ற நோய்கள் வராமல் இருக்க ‘சி’ ஆப் பி” எனும் தடுப்பூசியினைக் குட்டிகளுக்கு 8 முதல் 9 வார வயதில் முதல் தடுப்பூசியினையும் பின் மூன்று வார இடைவெளியிலும் அதே தடுப்பூசியினை மீண்டும் வருடத்திற்கு ஒருமுறையும் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி போட வேண்டும்.

வெறிநோய் பற்றி விழிப்புணர்வு :

வெறிநோய் என்பது நச்சுயிரியால் ஏற்படக்கூடிய கொடிய நோயாகும். இந்நோய் மனிதர்கள் மற்றும் விலங்குகளைப் பாதிக்கும் வல்லமை உடையது. வெறிநோயால் பாதிக்கப்பட்ட நாய்கள் மற்ற நாய்களையோ அல்லது மனிதர்களையோ கடிக்கும் பொழுது அதன் எச்சில் மூலமாக வெறிநோய் பரவுகிறது. நாய்களுக்கு வெறிநோய்த் தடுப்பூசியினை மூன்று மாத வயதிலும் அதன் பிறகு ஆண்டுக்கு ஒரு முறையும் போட்டுக் கொள்ள வேண்டும். இந்நோய்த் தாக்கத்திற்கு உட்பட்ட நாய்கள் மற்ற நாய்களை கடித்துவிட்டால் கடித்த இடத்தை வேகமாக வரும் குழாய்த் தண்ணீரில் காண்பித்துக் கழுவியபின் கார்பாலிக் சோப்பு கொண்டு கழுவ வேண்டும். கடிபட்ட இடத்தில் டிஞ்சர் அயோடின் அல்லது போவிடோன் அயோடின் போன்ற கிருமிநாசினியைத் தடவ வேண்டும். பிறகு கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி வெறிநோய்க்கான தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். நாய்களைப் போன்றே பூனைகளுக்கும் முதல் தடுப்பூசி மூன்று மாத வயதிலும் பின் வருடந்தோறும் போட வேண்டும். வெறிநோய்த் தடுப்பூசி முறையாகப் போட்டு வீட்டுக்குள்ளேயே வளர்க்கும் நாய்கள் கடித்தால் வெறிநோய்த் தடுப்பூசி போட வேண்டியதைப் பற்றி மருத்துவரை அணுகித் தெரிந்து கொள்ள வேண்டும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Tuesday 29 May 2018

வாழையில் ஒருங்கிணைந்த பயிர் சாகுபடி முறை :

ஒருங்கிணைந்த பயிர் சாகுபடி முறையை பின்பற்றினால், வாழை சாகுபடியில், நல்ல மகசூல் பெறலாம் என, தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உடுமலை சுற்றுவட்டாரத்தில் தண்ணீர் வசதி அதிகமுள்ள பகுதிகளில், பரவலாக வாழை சாகுபடி செய்யப்படுகிறது. நேரடி பாசனத்தை தவிர்த்து, சொட்டு நீர் பாசனம் அமைப்பதால், நீர் விரயம் தவிர்க்கப்படுகிறது.

எனவே, பெரும்பாலான விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அமைத்து, வாழை சாகுபடி மேற்கொள்கின்றனர். இதில், ஒருங்கிணைந்த பயிர் சாகுபடி முறையை கடைபிடித்தால் வாழையில் எக்டேருக்கு, 42 டன் வரை மகசூல் பெற முடியும் என, தோட்டக்கலைத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தோட்டக்கலைத்துறையினர் அறிக்கை :

* வாழை சாகுபடியில், சீரான வளர்ச்சி, சிறப்பான மகசூலுக்கு தரமான கன்றுகளே ஆதாரமாகும்.
தாய்மரத்துக்கு அருகிலுள்ள கிழங்கிலிருந்து, 2 முதல் 3 அடி உயரம் வளர்ந்த கன்றுகளை தேர்வு செய்ய வேண்டும். கன்றுகளின் எடை சீராக இருத்தல் வேண்டும்.

* குறைந்தபட்சம், 3 மாத கன்றுகளாக இருக்க வேண்டும்.தேர்வு செய்யப்பட்ட கன்றுகளின் வெளிப்புறத்திலுள்ள வேர்கள் மற்றும் அழுகிய பகுதிகளை அகற்றிவிட்டு, 100 லிட்டர் தண்ணீரில், 1 லிட்டர் பஞ்சகவ்யம் மற்றும் 1 கிலோ சூடோமோனாஸ் கலந்து, கன்றுகளை நேர்த்தி செய்து பின் நடவு செய்ய வேண்டும்.

* வகைகள் பூவன், ரஸ்தாளி, மொந்தன், கற்பூரவல்லி, ரொபஸ்டா, மோரிஸ், நேந்திரன், செவ்வாழை மற்றும் கிராண்ட்நைன் உள்ளிட்ட பல்வேறு வகைகள் உள்ளன.

* நேந்திரன் மற்றும் பூவன் வகைகள் நம் பகுதியில் சிறப்பாக வளரக்கூடிய தன்மையுடையவையாகும்.

* தாய்மரத்தின் அருகில் முளைக்கும் பக்க கன்றுகளை, 15 நாட்களுக்கு ஒருமுறை அகற்ற வேண்டும்.

* தாய்மரம் குலையிட்ட பிறகு அதன் அருகில் மறுதாம்பிற்கு ஒரு கன்றை விட வேண்டும். அவ்வப்போது இலைகளையும் கழித்துவிட வேண்டும்.

* மரங்கள் பூப்பதற்கு முன்போ அல்லது பூக்கும் சமயத்திலோ கம்புகளை கொண்டு முட்டுக்கொடுக்க வேண்டும்.காற்றிலிருந்து மரங்களை காப்பாற்ற வரப்பில், அகத்தி போன்ற பல்வேறு வேலிப்பயிர்களை நடவு செய்ய வேண்டும்.

* வாழையில் ஊடுபயிராக வெங்காயம், முள்ளங்கி, தக்காளி, கொடி வகை காய்கறிகள் உட்பட குறுகியகால பயிர்களை சாகுபடி செய்யலாம்.

* இத்தகைய தொழில்நுட்பங்களை பின்பற்றினால், வாழை சாகுபடியில், சிறந்த மகசூல், லாபம் பெறலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm
நாய் வளர்ப்பு பாகம் - 11

நாய்கள் - பேரிடர் கால ஆபத்து உதவிகள் :

1. முன்னெச்சரிக்கை அறிகுறிகள்
2. பேரிடர்க் காலங்களில் நாய்கள்

நமக்கு வாழ்வளித்து அரவணைக்கும் இயற்கை, சில சமயங்களில் மனிதர்களின் செயல்பாடுகளினால் மற்றும் இயற்கைச் சீற்றங்களினால் கொந்தளித்து ஏற்படுத்தும் நிலநடுக்கம், சுனாமி, பஞ்சம், வறட்சி, காட்டுத்தீ, நிலச்சரிவு, மழை, வெள்ளம் போன்ற இயற்கை மாறுபாடுகளைப் பேரிடர் என்று கூறலாம். பேரிடர் சமயங்களில் மனிதர்களின் வாழ்வாதாரமே ஆட்டங்கண்டு அபாயத்துக்குள்ளாகும். மனிதர்கள் மட்டுமின்றி மற்ற ஜீவராசிகளும் பேரிடரால் பாதிப்புக்குள்ளாகின்றன. பேரிடர் சமயங்களில் விலங்குகளின் பங்கு மற்றும் விலங்குகளைக் காப்பாற்றும் முறைகள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே குறைவாக உள்ளது. பேரிடர் கால ஆபத்து உதவிகளில் விலங்குகளின் பங்கு அளப்பரிய முடியாதது ஆகும். பேரிடர் காலத்தில் நாய்களின் பங்களிப்பு மற்றும் உதவிகள் குறித்து விரிவாகக் காணலாம்.

முன்னெச்சரிக்கை அறிகுறிகள் :

பேரிடர் நிகழ்வை முன்கூட்டியே உணரும் தன்மை விலங்குகளுக்கு இயற்கை கொடுத்த வரம். பேரிடர் நிகழ்வதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பே, செல்லப்பிராணிகள் சில விசித்திரமான குணாதிசயங்களை வெளிப்படுத்தும் உதாரணமாக அமைதியின்றி இருத்தல், மனிதர்களைத் துரத்துதல், கடித்தல், பதுங்குதல், மிரட்சியுடன் காணப்படுதல் போன்ற செயல்பாடுகளை வெளிப்படுத்தும். இதனைப்பற்றிய ஆராய்ச்சிகள் ஆரம்ப கால நிலையில் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பற்றிக் காண்போம்.

1. நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்னர், நாய்கள் விசித்திரமாகக் கத்துவது ஊளையிடுவது மற்றவர்களைக் கடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக அறிந்து பதிவு செய்துள்ளார்கள். மேலும், நிலநடுக்கத்தின் பொழுது, பூமிக்கு அடியில் மனிதர்களால் உணரமுடியாத அலைகள் ஏற்படுகின்றன. எனினும் அத்தகைய அலைகளால் ஏற்படும் ஓசைகளை நாய்களால் உணர முடிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

2. 2004 ஆம் ஆண்டு சுனாமியின் பொழுது, நாள்தோறும தன்னுடன் நடைப்பயிற்சிக்குத் துள்ளிக் குளித்து வரும் தன் வீட்டின் வளர்க்கும் நாய், ஏனோ அன்று நடைப்பயிற்சிக்கு வர முரண்டு பிடித்ததாகவும், அக்காரணத்தால் தான் நடைப்பயிற்சிக்கு அன்று கடற்கரைக்குச் செல்லவில்லையென்றும், அவ்வாறு சென்றிருந்தால் தானும் சுனாமியின் பேரலையில் சிக்கி உயிர்துறந்திருப்பேன் என்று சென்னையைச் சேர்ந்த ஒருவர் தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். சுனாமியின் நிகழ்வை முன்கூட்டியே தன் செல்லப்பிராணியால் உணர முடிந்ததால் தான் இன்று அவர் உயிரோடு இருப்பதாகவும், அதற்காகத் தன் நாய்க்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் சென்னை கால்நடை மருத்தவ கல்லூரியில் நடைபெற்றக் கூட்டம் ஒன்றில் அவர் நெகிழ்வுடன் கூறினார்.

3. 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட 9 நிலநடுக்கப் பகுதிகளில் அந்நாட்டுப் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில், பூனைகள் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பே விசித்திரமான குணாதிசயங்களை வெளிப்படுத்தியதாகக் குறிப்பிடப்பட்டது. மனிதர்களை விட பூனைகளுக்குப் பல தரப்பட்ட ஓசைகளைக் கேட்கும் திறன் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

4. விலங்குகள் மட்டும் அல்லாது பறவைகளும் பேரிடர் நிகழ்வுகளை முன்கூட்டியே உணரும் சிறப்பு பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் 2004 ஆம் ஆண்டு சுனாமி நிகழ்வதற்கு சில நாள்களுக்கு முன்பே, பாய்ண்ட் கேலிமியர் வன விலங்குகள் சரணாலாயத்தில் வளர்க்கப்பட்ட பிளம்மிங்கோ ரகப் பறவைகள், தாழ்வான பகுதிகளில் இருந்து உயர்மட்ட இடங்களுக்கு பறந்து விட்டதாகச் செய்திகள் பதிவாகிவுள்ளன.

பேரிடர்க் காலங்களில் நாய்கள் :

• பேரிடர்க் காலங்களில் இடிபாடுகளில் சிக்குண்ட மனிதர்களை மீட்கும் முயற்சியில் நாய்கள் அளப்பரிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, இதற்காக பிரத்தியேகமாக வளர்க்கப்படும் மோப்ப நாய்கள் இடிபாடுகளில் சிக்குண்ட மனிதர்களை மீட்க உதவுகின்றன.

• ஆமெரிக்காவின் இரட்டைக்கோபுர வர்த்தகமையத் தாக்குதலின் போது ஓர் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியின் வளர்ப்பு நாய், இந்த கட்டிட இடிபாட்டில் சிக்கி உயிர்தப்பிய கடைசி நபரைக் காப்பாற்ற கட்டிட இடிபாடுகளிடையே 30 அடிகள் குழிதோண்டிச் சென்று தன் உயிரைப் பணையம் வைத்துக் காப்பாற்றிய விதம் உலகளவில் மிகவும் பாராட்டப்பட்டது.

• பேரிடர் சமயங்களில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்படும் நிலையில் தகவல் தொடர்பிற்கு நாய்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.

• மேலும் பேரிடர் நிகழ்வின்போது தன் எஜமானருக்குத் தேவையான உணவு மற்றும் தண்ணீர் கொண்டுவர நாய்கள் உதவுகின்றன.

• பேரிடர் காலங்களில் சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்து நோய் கிருமிகள் பரவாமல் தடுப்பதற்கு நாய்கள் மிகவும் பயன்படுகின்றன. தேவையற்ற கெட்டுப் போன உணவு பண்டங்களையும், மற்ற விலங்குகளின் உடல்களையும் உண்டு மக்களுக்கு பேருதவி செய்கின்றன.

• பேரிடர் காலங்களில் தன் எஜமானரை விஷ ஐந்துக்களின் தாக்குதலிலிருந்து நாய்கள் காப்பாற்றி பேருதவி செய்கின்றன.

• சில நேரங்களில் பேரிடரில் சிக்கித் தவிக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்கு, அவர்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகள் ஊன்றுகோலாக நின்று உதவி செய்த நிகழ்வுகளும் பதிவாகி உள்ளன. அமெரிக்காவில் இரட்டை கோபுரக் கட்டிடம் தீவிரவாதத் தாக்குதலுக்குட்பட்டபொழுது, கண் பார்வையற்ற ஒரு முதியவரைப் பல மாடிகள் உயரத்திலிருந்து பத்திரமாகக் காப்பாற்றி வெளியேற்ற உதவியது அவர் வளர்த்த செல்ல நாய் என்ற செய்தி நம்மை நெகிழ வைக்கிறது என்பது உண்மையாகும்.

பேரிடர் காலங்களில் நாய்களின் பங்கு பொது மக்களுக்குப் பேருதவியாக திகழ்வதை நாம் இதன்மூலம் வாயிலாக உணர்ந்தோம். ஆபத்துக் காலத்தில் நமக்கு உதவி செய்யும் செல்லப்பிராணிகளை நாம் பேணிக் காப்பதன் மூலம் பேரிடர் காலத்தில் விலங்குகளின் முன்னெச்சரிக்கைகளையும் மற்றும் உதவிகளையும் நாம் உறுதியாய்ப் பெற இயலும் என்பது திண்ணம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Monday 28 May 2018

செலவில்லாத இயற்கை விவசாயம் !!

* இயற்கை விவசாயம் செய்து கொண்டிருக்கும் நண்பர்களுக்காகவும், செய்ய ஆவலுடன் இருக்கும் நண்பர்களுக்காகவும் ஒரு சின்ன அறிவுரை.

* பல நாட்களாக விவசாயிகளின் மனதில் இருக்கும் விஷயங்களில் ஒன்று இயற்கை விவசாயமாகும். பலரும் விவசாயம் செய்ய ஆசைப்பட்டு பொருளாதார நெருக்கடி காரணமாக விவசாயம் செய்வதை விட்டு விட்டு வெளி ஊர்களுக்கு செல்கின்றனர்.

* மேலும் சிலர் என்னதான் நஷ்டம் வந்தாலும், விவசாயம் செய்து கொண்டு தான் இருக்கின்றனர்.

* இவை அனைத்தும் நடக்க ஒரே காரணம் என்னவென்றால் இயற்கை விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிகள் அதிகமாக செலவு செய்வதால் தான். அதற்கு மாற்றாக அதிகமான செலவு செய்யக் கூடாது என முடிவு எடுக்க வேண்டும்.

* இயற்கை விவசாயத்திற்கு ஆகும் செலவை எப்படி எல்லாம் குறைக்கலாம் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

* இயற்கை விவசாயம் செய்யப் போகும் விவசாயிகள் முதலில் மானவாரி பயிர்களை சாகுபடி செய்யலாம். மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்யும் நிலத்தை இரண்டு முறை உழவு செய்ய வேண்டும்.

* முதலில் நிலத்தில் வெற்று உழவாகவும், இரண்டாவது முறை விதைப்பு உழவும் மேற்கொள்ள வேண்டும்.

* உழவு மேற்கொண்ட நிலத்தில் தரமான நாட்டு விதைகளை விதைக்க வேண்டும். மேலும் இந்த சாகுபடியில் கிடைத்த விதைகளை அடுத்த சாகுபடிக்கு சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* நிலத்தில் உழவு மேற்கொள்ளும் போது அடிவுரமாக ஆடு மற்றும் மாடு எரு போன்றவற்றை வெளியில் வாங்க கூடாது. அதற்கு நாமே ஒரு ஏக்கருக்கு ஒரு நாட்டு மாடு வீதம் வளர்த்து வந்தால் போதுமானது ஆகும்.

* மேலும் அந்த நாட்டு மாட்டில் இருந்து கிடைக்கும் எருவை பயன்படுத்துவதால் விவசாய நிலமானது பொன் விளையும் பு மியாகும்.

* அதுமட்டுமல்லாமல் பஞ்சகாவியம், அமிர்த கரைசல், மூலிகைப் பு ச்சி விரட்டி மற்றும் மீன் அமிலங்கள் போன்றவற்றை பயன்படுத்துவதால் நிலத்திற்கு மட்டுமல்லாமல் பயிர்களுக்கு நன்மைபயக்கும் பூச்சிகளையும் பாதுகாக்க முடியும்.

* விதைகளை விதைத்த பிறகு பயிர்கள் வளரும் போது இடையில் களைகளும் வளரும். இந்த சமயங்களில் களை எடுக்க வேண்டும்.

* மேலும் நிலத்தில் உள்ள மண்ணை அடிக்கடி கிளறிவிடுவதால் வேர்களுக்குள் காற்று சுலபமாக செல்லும். இதனால் களைகள் வளராமல் தடுக்க முடியும்.

* கூலிக்கு ஆட்களை வைத்து களைகளை எடுக்க தேவையில்லை. நம் குடும்பத்தை சேர்ந்தவர்களே களை எடுக்கலாம். பயிர் சாகுபடியின் போது ஒரு முறை களை எடுத்தால் போதுமானது ஆகும்.

* கடைசியாக அறுவடை செய்த பிறகு நமக்கு விதை மற்றும் உழவுக்கான செலவு மட்டும் தான், மீதி அனைத்துமே நமக்கு லாபம் தான்.

* இந்த புரிதலோடு பயிர்களை சாகுபடி செய்தால் இயற்கை விவசாயத்தில் நஷ்டமே கிடையாது, எல்லாமே லாபம் தான்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

நாய் வளர்ப்பு பாகம் - 10


உண்ணிகளின் தாக்கம் மற்றும் தடுக்கும் முறைகள் :

கேள்வி : உண்ணிகளால் செல்லப்பிராணிக்குப் பாதிப்பு ஏற்படுமா?

பதில் : கண்டிப்பாகப் பாதிப்பு ஏற்படும். மேலும் உண்ணிகள் நாயின் உடம்பிலுள்ள இரத்தத்தைக் குடித்து இரத்த இழப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உண்ணிக் காய்ச்சல் நோய்களான பேபிசியா கேனிஸ், எரிலிகியா கேனிஸ மற்றும் ஹெபடசோவன் கேனிஸ போன்ற ஓரணு ஒட்டுண்ணிகளைப் பரப்பி இரத்தச் சிவப்பணுக்களில் பெருகி அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும். ஒரணு ஒட்டுண்ணிகளால் பாதிக்கப்பட்ட செல்லப்பிராணிகள் அதிகக் காய்ச்சலாலும், உணவு எடுக்காமலும், சில நேரங்களில் விழி வெண்படல ஒளிர்வு ஏற்படும்.

உண்ணிகள் பலவிதமான நோய்கள் பரவக் காரணமாக இருப்பதாலும் மேலும் நாய்களின் இரத்தச்சோகை, உடல் எடைக்குறைவு ஏற்படுவதாலும் உண்ணிகளை அழிக்க வேண்டும்.

கேள்வி : உண்ணிகளைக் கட்டுப்படுத்த தவறாமல் அடிக்கடி உண்ணி ஊசி போடுவதாலும் உண்ணிகளை நீக்க உண்ணி நீக்க பவுடர் அல்லது மருந்துகளை செல்லப்பிராணி மேல் போடுவதாலும் உண்ணிகளைத் தடுக்க முடியவில்லை என்றால் என்ன செய்வது?

பதில் : கீழ்கண்ட அறிவுரைகளைப் பயன்படுத்தினால் உண்ணிகளை முழுமையாக அழிக்கலாம்.

1. உண்ணி ஊசியை அடிக்கடி செல்லப் பிராணிகளுக்குப் போடக்கூடாது. அவ்வாறு போடுவதால் உண்ணிகளுக்கு எதிரான மருந்தின் எதிர்ப்புதிறன் ஏற்படும்.

2. உண்ணி நீக்க மருந்துகளைச் செல்லப்பிராணிகளில் மேல் தெளிப்பதை விட உண்ணி நீக்க மருந்தான டெல்டாமெத்ரின் மருந்தைத் தண்ணீரில் (1 லிட்டர் தண்ணீரில் இரண்டு மி.லி. மருந்து) தேவையான அளவில் கலந்து நாய்களுக்கு மருந்துக் குளியல் (கண், காது, மூக்கு, வாய்ப் பகுதிகளில் மருந்து கலந்த நீர் படாதவாறு) கொடுக்க வேண்டும்.

3. மருந்துக் குளியல் கொடுக்கும் அந்த நாளிலேயே மருந்து கலந்து தண்ணீரைச் செல்லப்பிராணிகள் இருக்கும் (தங்கும்) இடங்களில் தெளிக்கவேண்டும்.

குறிப்பாக செல்லப்பிராணிகள் தங்கும் குடில், உலாவும் இடங்கள், மெத்தைகள், கால் மிதியடிகள், தரைக் கம்பளங்கள் மற்றும் உட்காரும் இடங்கள் போன்றவற்றில் தெளிக்க வேண்டும். ஏனென்றால் நாய் உண்ணிகள் (பழுப்புநிற உண்ணிகள்) எப்பொழும் செல்லப்பிராணிகள் மேல் இருப்பது இல்லை. இந்த உண்ணிகள் இரத்தத்தைக் குடித்த உடன் கீழே தரையில் விழுந்து முட்டைகளை (சுமார் 20,000 முட்டைகள்) இட்டு இறந்துவிடும். முட்டைகள் பொரித்து இளம் பருவ உண்ணிகள் நாய்களின் மேல் ஏறி இரத்தத்தைக் குடித்து விட்டுக் கீழே தரையில் விழுந்து விடும். பின்பு இவை நிம்ப் என்ற இளம் பருவ நிலைகளாக நாய்களின் மேல் ஏறி இரத்தத்தைக் குடித்துக் கீழே விழுந்து விடும். எனவே உண்ணிகளால் பாதிக்கப்பட்ட நாய்களுக்கு மருந்துக் குளியல் செய்த பிறகு நாய் தங்கும் இடம் மற்றும் உலாவும் இடங்களில் தெளிக்க வேண்டும்.

பெரும்பாலும் உண்ணிகள் நாய்களின் காதுகள், பின்புறம், முகம், ஆசனவாய், பிறப்புறுப்பு, குறிப்பாக முடிகள் அதிகமான பிடரி மற்றும் கால் விரல் இடுக்குகளில் காணப்படும். மேலும் முடிகள் அதிகமாகக் காணப்படும் ஸ்பிட்ஸ், லாப்ரேடார், ஜெர்மன் ஷெப்பர்டு, கோல்டன் ரேட்ரீவர் மற்றும் பொமேரேனியன் நாய்களில் உண்ணிகள் அதிகமாகக் காணப்படும். இந்த வகை செல்லப்பிராணிகளில் உண்ணிகளை நீக்கக் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.

கேள்வி : செல்லப்பிராணி மனிதர்களுடன் படுக்கை மெத்தையில் படுத்துக் கொள்வதால் உண்ணிகளால் ஏற்படும் பாதிப்பு பரவக்கூடுமா?

பதில் : செல்லப்பிராணிகளை உடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் நாய்களுக்கு உண்ணிகளை நீக்க மருந்துக் குளியல் செய்தபிறகே தங்களுடன் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், சிறிய மற்றும் பெரிய உண்ணிகள் பெரும்பாலும் நாய்களின் மேல் இருப்பதை விடத் தரை, மெத்தை, உட்காரும் இடங்களில் (சோபா) ஊர்ந்து கொண்டிருக்கும். சில நேரங்களில் இந்த உண்ணிகள் மனிதர்களைக் கடித்து மனிதர்களின் தோலில் சிவப்புநிறப் பருக்கள் போன்ற தடிப்பை ஏற்படுத்தி அரிப்பை ஏற்படுத்தும். எனவே உண்ணிகளைத் தடுக்கச் சரியான முறைகளைக் கால்நடை மருத்துவரின் உதவியுடன் செய்யவேண்டும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm