Wednesday 28 June 2017

சொட்டு நீரிலும் ஜொலிக்கும் கத்திரி விவசாயம் :


கத்திரி முத்தினா கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகணுங்கிறது பழமொழி. ஆனால், நடைமுறையில் முத்தின கத்திரி கடைக்குப் போனா விலை கிடைக்காது. இதுதான் நிஜம்” என்கிறார் உடுமலை விவசாயி கனகராஜ்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது பொன்னாலம்மன்சோலை.

நகரத்து வாசனை இல்லாத இடம் :

எல்லாவற்றுக்கும் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள திருமூர்த்தி நகர் அல்லது தளி பேரூராட்சிக்குத்தான் போக வேண்டும். குடும்பத்துக்குத் தேவையான மளிகைப் பொருட்களை மாதம் ஒருமுறை 30 கி.மீ. தொலைவில் உள்ள உடுமலைப்பேட்டைக்கு வந்து வாங்கிச் செல்கின்றனர் அங்குள்ள விவசாயிகள். மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரம்தான் இவர்களுடைய வாழிடம்.

பேருந்து போக்குவரத்து இல்லை. வீட்டுக்கு ஒரு இருசக்கர வாகனம் வைத்துள்ளனர். திருமூர்த்தி அணையை ஒட்டிய பாலாறு புதுப் பாலத்திலிருந்து சுமார் 3 கி.மீ.க்குத் தார்ச் சாலை செல்கிறது. அதன் பிறகு ஒற்றையடி மண்பாதைதான் வழித்தடம். பரம்பிக்குளம் தொகுப்பு அணைகளிலிருந்து திருமூர்த்தி அணைக்குத் தண்ணீர் கொண்டுசெல்லும் காண்டூர் கால்வாய் உள்ளது.

பல்வேறு கத்திரி வகைகள் :

ஆனால், அதில் இருந்து அப்பகுதி விவசாயிகளுக்குத் தண்ணீர் வழங்கப்படுவதில்லை. மழையை நம்பியும், கிணறு மற்றும் சொட்டுநீர்ப் பாசனத்தை மட்டுமே நம்பி இங்கு விவசாயம் செய்யப்படுகிறது. தென்னை, பட்டுப்புழு வளர்ப்பு, அதற்கு அடுத்தபடியாகக் கத்திரிக்காய், வெண்டை அதிக அளவில் பயிர் செய்யப்படுகிறது.

எந்த மண்ணிலும் வளரும் பூனைத்தலை, கண்ணாடிக் கத்திரி, வெள்ளக் கத்திரி, பவானி நீளவரி, புளியம்பூ எனப் பல நாட்டுக் கத்திரி ரகங்கள் உள்ளன. கனகராஜ் பயிரிட்டிருப்பது புளியம்பூ ரகம். 6 மாதங்கள் வரைதான் காய்ப்பு இருக்கும். ஏக்கருக்குச் சுமார் 20 டன் வரை கிடைப்பதாகத் தெரிவிக்கிறார்.

கத்திரி சாகுபடி :

இது குறித்து விவசாயி கனகராஜ் பகிர்ந்துகொண்டது, “15 ஆண்டுகளாக விவசாயம் செய்கிறேன். 3 ஏக்கரில் சொட்டுநீர்ப் பாசன வசதியுடன் நாட்டுக் கத்திரி சாகுபடி செய்துள்ளேன். நல்ல ருசி இருக்கும். பொரியல், சாம்பார் வகைக்கு ஏற்றது. எல்லா வகை மண்ணிலும் வளரும்.

காய்களைப் பறிக்காமல் விட்டால் மஞ்சள் நிறத்தில் பழுக்கும், நீளவாக்கில் அறுத்து, வாளி தண்ணீரில் அமுக்கி, கசக்கி எடுத்து அடுப்புச் சாம்பல், மாட்டுச் சாணம் கலந்து, விதைகளை நிலத்தைக் கீறிவிட்டு லேசாக மூடிவிட வேண்டும்.

40 நாட்களில் முளைக்கும் நாற்றுகளைப் பறித்து நடவு செய்ய வேண்டும். 3- வது நாளில் உயிர் தண்ணீர் விட வேண்டும். செடி முளைத்தது முதல் காய்ப்பு முடியும்வரை, வாரம் இரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 15-வது நாளில் கை களை எடுக்க வேண்டும். 3 அடி இடைவெளியில் ஒரு குழிக்கு இரண்டு நாற்றுகள் நடவேண்டும். நான்கு அங்குல ஆழத்துக்குப் பதியன் போடவேண்டும்.

50-வது நாளிலிருந்து அறுவடை தொடங்கும். தொடர்ந்து 90 நாட்களுக்கு 100 சதவீத விளைச்சலும், அடுத்த 90 நாட்களுக்கு 50 சதவீத விளைச்சலும் கிடைக்கும். விலை குறைந்தாலும் கிடைக்கும் தொகை லாபகரமானதாக இருக்கிறது.

மூட்டைக்கு ரூ. 200 :

ஓர் ஏக்கருக்கு ஆட்கூலி, இடுபொருட்கள் செலவு என ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம்வரை செலவாகிறது. வாரம் 60 பைகள் (20 கிலோ எடை) வரை கிடைக்கும். உள்ளூர் சந்தையில் அப்போதைய நிலவரத்துக்கு ஏற்ப ஒரு பை ரூ. 200 முதல் ரூ. 400 வரை கிடைக்கும்.

ரசாயன மருந்துகளைக் குறைத்து, இயற்கை வேளாண் முறையை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளேன். நம் மனம் மட்டுமின்றி வயிறும் நலமாக இருந்தால்தான் மக்களோட ஆதரவு கிடைக்கும்".

கனகராஜைத் தொடர்புகொள்ள : 9488248353.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Saturday 24 June 2017

விளைச்சலை அள்ளிக் கொடுக்கும் ஜீவாமிர்தம்... பாசன முறையில் புதுமை! நீங்களும் செய்யலாம் ஜீரோ பட்ஜெட் விவசாயம்! ஜீவாமிர்த பாசனமுறை!!


ஜீரோ பட்ஜெட் வேளாண்மையில் முக்கியமான இடுபொருள் ஜீவாமிர்தம். பொதுவாக, 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட பேரலில் ஜீவாமிர்தத்தைத் தயார் செய்து பாசன தண்ணீருடன் கலந்து வயலுக்குப் பாய்ச்சுவார்கள். இதை வயலில் ஒவ்வோர் இடத்துக்கும் எடுத்துச் செல்வது சிரமமாக இருக்கும். பொதுவாக இடுபொருள் தயாரிப்புக்கு, அதிகாலையில் நாட்டு மாடுகள் கழிக்கும் முதல் சிறுநீர்தான் ஏற்றதாக இருக்கும். இப்படி அதிகாலையில், மாடுகளின் சிறுநீரைச் சேகரிப்பதும் சிரமமான விஷயம்தான். இந்தச் சிரமங்களைக் களையும் வகையில்... சிறுநீர்ச் சேகரிப்பு, ஜீவாமிர்தம் தயாரிப்பு, பாசனம் செய்தல் மூன்றையும் ஒருங்கிணைத்து எளிமையான முறையை வடிவமைத்திருக்கிறார்கள், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெ.எஸ்.மணி, தரணிவேந்தன் இருவரும்.

இவர்களது வயல், ஆரணி-ஆற்காடு சாலையில், நான்காவது கிலோ மீட்டரில் இரும்பேடு கிராமத்தில் உள்ளது. காலைப்பொழுதிலேயே சுள்ளென்று வெயில் அடித்தாலும், அதைப் பொருட்படுத்தாமல், வயலுக்குத் தண்ணீர்ப் பாய்ச்சி கொண்டிருந்தனர், மணியும் தரணிவேந்தனும்.

நம்மை இன்முகத்தோடு வரவேற்றுப் பேசிய மணி, “எனக்குச் சொந்த ஊரு பக்கத்துல இருக்கிற ஆதனூர். அங்கே எனக்கு நிலம் இருக்கு. கரும்பு, நெல்னு விவசாயம் செஞ்சிட்டிருந்தேன். ரசாயன உரம் பயன்படுத்திதான் விவசாயம் செஞ்சேன். ஒரு கட்டத்துல செலவு கட்டுபடியாகாம ரொம்ப நொடிச்சிப் போய் விவசாயமே வேணாம்னு முடிவு பண்ணி, ஸ்ரீபெரும்புதூர் பக்கத்துல ஒரு ஹோட்டலை ஆரம்பிச்சேன். அது நல்லபடியா போயிட்டுருக்கு.

எனக்குச் சின்ன வயசுல இருந்தே ஆனந்த விகடன் புத்தகம் படிக்கிற பழக்கம் உண்டு. அதுமூலமா ‘பசுமை விகடன்’ பத்தித் தெரிஞ்சு படிக்க ஆரம்பிச்சேன். அதுலதான், சுபாஷ் பாலேக்கர், நம்மாழ்வார் அய்யா பத்தியெல்லாம் தெரிஞ்சுகிட்டேன். ஈரோடுல, பசுமை விகடன் நடத்தின ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்புலயும் கலந்துகிட்டு, நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுகிட்டேன். தொடர்ந்து நம்மாழ்வார் அய்யா நடத்துன பயிற்சிகள்லயும் கலந்துகிட்டேன். பயிற்சிகள் மூலமா நிறைய விஷயங்களைத் தெரிஞ்சு கிட்டாலும் உடனடியா செயல் படுத்தறதுக்கான சூழல் அமையலை.

எனக்குச் சர்க்கரை வியாதி இருக்குறதால, என்னோட டாக்டர், ‘பாரம்பர்ய அரிசி, இயற்கை காய்கறிகளைச் சாப்பிடு. நேரம் கிடைக்கிறப்போ வயல்வெளிப் பக்கம் வாக்கிங் போனா, மனசு அமைதியாகும். அதுலயே பாதி நோய் குணமாயிடும்’னு சொன்னார். அதைப் பின்பற்ற ஆரம்பிச்சதும் எனக்குள்ள மாற்றத்தை நல்லா உணர முடிஞ்சது. அதனாலதான், திரும்பவும் விவசாயம் செய்ய வந்தேன். இயற்கை விவசாயம் செய்யலாம்னு 2014-ம் வருஷம், இந்த இடத்தைக் குத்தகைக்குப் பிடிச்சேன். என்னோட மாப்பிள்ளை, தரணிவேந்தனும் இணைஞ்சுக்கிட்டார்” என்று தன்னைப் பற்றி அறிமுகம் செய்துகொண்டார்.

தொடர்ந்து பேசிய, தரணிவேந்தன், “எனக்கு விண்ணமங்கலம்தான் சொந்த ஊரு. தொலைதூர கல்வியில இசை பத்தின படிப்புப் படிச்சுக்கிட்டிருக்கேன். எனக்கும் இயற்கை விவசாயத்துல அதிக ஆர்வங்கிறதால, மாமாவோடு சேர்ந்துக்கிட்டேன். மாமா கூட நானும் நிறைய பயிற்சிகளுக்குப் போயிருக்கேன். இது மொத்தம் 10 ஏக்கர். போன போகத்துல 2 ஏக்கர் நிலத்துல கத்திரி, 2 ஏக்கர் நிலத்துல கீரை போட்டிருந்தோம். இந்தப் போகம் நெல் போடலாம்னு முடிவு பண்ணி, 2 ஏக்கர் நிலத்துல மாப்பிள்ளைச் சம்பா நெல், 2 ஏக்கர் நிலத்துல அறுபதாம் குறுவை நெல், 6 ஏக்கர் நிலத்துல டீலக்ஸ் பொன்னி நெல்னு போட்டிருக்கோம். நடவு செஞ்சு 20 நாளுக்கு மேலாகுது” என்றார்.

தங்களது வேளாண்மை முறைகள் குறித்துச் சொல்ல ஆரம்பித்த மணி, “இங்க, ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், பசுந்தாள் மூடாக்குனு சுபாஷ் பாலேக்கர் சொன்ன விஷயங்களைச் செயல்படுத்திருக்கோம். இடுபொருள்கள் தயாரிப்புக்காக நாலு நாட்டு மாடுகள் வெச்சிருக்கோம். பொதுவா, ஜீவாமிர்தத்தை 15 நாளுக்கு ஒருமுறை கொடுக்கணும்னு சொல்வாங்க. ஆனா, நாங்க மண் நல்ல வளமாகட்டும்னு ரெண்டு, மூணு நாளைக்கு ஒரு தடவை கொடுத்துட்டு இருக்கோம். அதுக்காக ரெண்டு தொட்டிகள் அமைச்சுருக்கோம்.

கொட்டகையில மாடுகள் கழிக்கிற சிறுநீர் நேரடியா சேகரமாகுற மாதிரி, மண்ணுக்குள்ள 100 லிட்டர் கொள்ளவுள்ள ஒரு தொட்டி அமைச்சிருக்கோம். இதுல சேகரமாகுற சிறுநீரோட அளவுக்கு ஏத்த மாதிரி சாணம், உளுந்து மாவு, வெல்லம், நிலத்து மண்ணைக் கரைச்சு விட்டுடுவோம். அப்படியே ரெண்டு நாள் விட்டுடுவோம். அது அப்படியே பக்கத்துல இருக்குற இன்னொரு தொட்டிக்குப் போற மாதிரி குழாய் அமைச்சுருக்கோம். ரெண்டாவது தொட்டியோட கொள்ளளவு 500 லிட்டர். இந்தத் தொட்டிக்குத் தண்ணீர் வர்ற மாதிரி குழாய் அமைச்சிருக்கோம். தொட்டியில் சேகரமாகுற ஜீவாமிர்தத்துக்குத் தேவையான அளவு தண்ணீர் கலந்துடும். இந்தத் தொட்டியில் கையால் இயக்குற மாதிரி கயிற்றால் ஆன கலக்கியை அமைச்சுருக்கோம். அதை மேலும் கீழும் ஆட்டுறப்போ தண்ணியும் ஜீவாமிர்தமும் நல்லாக் கலந்து வெளியேறி, வாய்க்கால்ல பாசன தண்ணியோட கலந்துடும். இது மணல்சாரியான வெளுப்பான மண். அதிகளவு ஜீவாமிர்தம் கொடுத்துட்டு இருக்குறதால மண் வளமா மாறிட்டு வருது. அதிக ஜீவாமிர்தம் கொடுக்குறதுக்கு இந்த அமைப்பு கைகொடுக்குது” என்றார்.

நிறைவாகப் பேசிய மணி, “கீரை, காய்கறிகளுக்குக் கனஜீவாமிர்தம் பயன்படுத்துறோம். 5 கிலோ மாட்டுச் சாணத்தோடு 2 லிட்டர் மாட்டுச் சிறுநீர், ஒரு கிலோ உளுந்து மாவு, அரைக் கிலோ வெல்லம் கலந்து நல்லா பிசைஞ்சி... உருண்டைகளாக்கி நிழல்ல காய வெச்சு, எடுத்தா அதுதான் கன ஜீவாமிர்தம். இதை, நிலத்தை உழுது தயார் செய்றப்போ போடுற தொழுவுரம் மாதிரி பயன்படுத்துறோம். கனஜீவாமிர்தம் போடுறதால, மண்ணுக்கு உயிர் உரங்கள் தேவையில்லை. நாங்க ரைசோபியம், அசோஸ்பைரில்லம்னு எந்த உயிர் உரங்களயும் கொடுக்கிறதில்ல.

போன போகத்துலகூட ஜீரோபட்ஜெட் முறையிலதான் கீரை, காய்கறிகள் சாகுபடி செய்தோம். கீரை மூலமா 3 லட்சம் ரூபாயும் கத்திரிக்காய் மூலமா 2 லட்சம் ரூபாயும் சம்பாதிச்சிருக்கோம். இந்த அளவுக்கு வருமானம் கிடைக்குறதுக்கும், நல்ல விளைச்சல் கிடைக்குறதுக்கும் ஜீரோபட்ஜெட்தான் மூலக் காரணம். இந்த முறை 4 ஏக்கர்ல பாரம்பர்ய நெல் ரகங்களும், 6 ஏக்கர்ல டீலக்ஸ் பொன்னியும் இருக்கு. எப்படியும் ஏக்கருக்கு சராசரியா 25 மூட்டை(70 கிலோ) குறையாம கிடைக்கும்னு எதிர்பார்க்கிறோம்” என்றார் நம்பிக்கையுடன்.

தொடர்புக்கு :
ஜெ.எஸ்.மணி,
செல்போன்: 96298 98266, 88838 99935

பீஜாமிர்தம் :

தண்ணீர் 20 லிட்டர், பசு மாட்டுச் சாணம் 5 கிலோ, நாட்டு மாட்டுச் சிறுநீர் 5 லிட்டர், நல்ல நுண்ணுயிரிகள் இருக்கும் வளமான மண் ஒரு கைப்பிடி அளவு. இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நன்றாக ஊற விட வேண்டும். இதுதான் பீஜாமிர்தம். இதன் பிறகு, சுத்தமான சுண்ணாம்பு 50 கிராம் போட்டு அதைக் கலக்க வேண்டும். இதன்பிறகே விதையை இந்தக் கரைசலில் நனையவிட்டு, விதைக்க வேண்டும். கரைசலில் சுமார் 2 மணிநேரம் விதைகளை நனையவிட்டால் போதும். பயிர்களைத் தாக்கும் வேர் அழுகல், வேர்க்கறையான், வேர்ப்புழு நோய்கள் தடுக்கப்படுகின்றன.

ஜீவாமிர்தம் :

பசுஞ்சாணம் 10 கிலோ, மாட்டுச் சிறுநீர் 10 லிட்டர், வெல்லம் 2 கிலோ, பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) 2 கிலோ, தண்ணீர் 200 லிட்டர் இவற்றுடன் ஒரு கைப்பிடி வளமான நிலத்தின் மண் சேர்த்து பிளாஸ்டிக் கேனில் 48 மணி நேரம், அதாவது, இரண்டு நாள்கள் வைத்திருக்க வேண்டும். பிளாஸ்டிக் கேனை மரத்தின் நிழலில் வைப்பது முக்கியம். காலை, மதியம், மாலை என்று மூன்று முறை வலது புறமாகச் சுற்றும்படி குச்சி வைத்துக் கலக்கிவிட்டு வந்தால், ஜீவாமிர்தம் தயார். இது ஒரு ஏக்கருக்கான அளவு. இந்தப் பயிர் வளர்ச்சி ஊக்கியைப் பாசன நீரிலேயே கலந்துவிடலாம்.

கனஜீவாமிர்தம் :

பசுஞ்சாணம் 100 கிலோ, 2 கிலோ வெல்லம், 2 கிலோ பயறு மாவு போதும். இதை எல்லாம் ஒன்றாகக் கலந்துகொள்ளுங்கள். கூடவே உப்புமா பதம் வருவதற்கு எவ்வளவு தேவையோ அந்தளவுக்கு நாட்டு மாட்டுச் சிறுநீரைக் கலந்தால் போதும். பிறகு, உருட்டி நிழலில் காயவைத்து, தேவைப்படும்போது உதிர்த்துப் பயன்படுத்தலாம். இது மானாவாரி நிலங்களுக்கு ஏற்றது.

பிரம்மாஸ்திரம் :

மூன்று கிலோ அளவிலான வேப்பங்குச்சிகளை விழுதாக அரைக்க வேண்டும். இதனுடன் சீத்தா, புங்கன், ஆமணக்கு, பப்பாளி, கொய்யா, ஊமத்தை, கருவேலம், பாகல் ஆகியவற்றின் இலைகளைத் தலா இரண்டு கிலோ வீதம் சேர்த்து அரைக்க வேண்டும் (ஏதாவது ஐந்து விதவிதமான இலைகள் இருந்தால்கூட போதும். இலைகளை அப்படியே போட்டால், பிரம்மாஸ்திரம் தயாராவதற்கு நாள் பிடிக்கும்). இவற்றைப் பத்து லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் கலந்து அடுப்பில் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பிறகு 48 மணி நேரம் குளிரவைத்து, வடிகட்டி, பயிர்களுக்குத் தெளிக்கலாம். இந்தக் கரைசலை ஆறு மாதங்கள் வரை சேமித்து வைத்திருக்கலாம்.
அக்னி அஸ்திரம்

புகையிலை அரைக்கிலோ, பச்சைமிளகாய் அரைக்கிலோ, பூண்டு அரைக்கிலோ, வேம்பு இலை 5 கிலோ ஆகியவற்றை அரைத்து, 15 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் கரைக்க வேண்டும். இதை நான்கு முறை கொதிக்க வைத்து இறக்கிக்கொள்ளவும். 48 மணி நேரம் கழித்து சுத்தமான துணியால் வடிகட்டி பயிர்களுக்குத் தெளிக்கலாம். இக்கரைசலை 3 மாதங்கள் வரை பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.
சுக்கு அஸ்திரம்

சுக்குத் தூள் 200 கிராம் எடுத்து, 2 லிட்டர் நீரில் கலந்து பாதியாகச் சுண்டும் வரை காய்ச்சவும். பின்பு குளிர வைக்கவும். பசும்பால் அல்லது எருமைப் பால் 5 லிட்டர் எடுத்து, தாமிரம் தவிர்த்த பிற பாத்திரங்களில் கொதிக்க வைக்கவும். படிந்திருக்கும் ஆடையை எடுத்து விடவும். ஆறிய பிறகு, இதனுடன் 200 லிட்டர் நீர் மற்றும் சுக்கு கலந்த நீர் ஆகியவற்றைக் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம். இது சிறந்த பூஞ்சணக் கொல்லியாகும். இதை 21 நாள்கள் சேமித்து வைக்கலாம்.
நீம் அஸ்திரம்

நாட்டுமாட்டுச் சாணம் இரண்டு கிலோ, நாட்டுமாட்டுச் சிறுநீர் 10 லிட்டர், வேப்பங்குச்சிகள் மற்றும் இலை 10 கிலோ இவற்றை பெரிய பாத்திரத்தில் போட்டு, 200 லிட்டர் நீரையும் ஊற்றி 48 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். மூடி போட்டு வைக்கக் கூடாது. இதை இடதுபுறமாக மூன்று தடவை கலக்கிவிடவேண்டும். பின்பு வடிகட்டி, பயிர்களுக்குத் தெளிக்கலாம்.
நேரடி விற்பனை!

“இப்போ விவசாயம் செய்ற நிலம் ஆரணி-ஆற்காடு நெடுஞ்சாலையில் இருக்கு. அதனால நிலத்துக்குப் பக்கத்தில் கூரை ஷெட் போட்டு, இங்க விளைஞ்ச கீரை, கத்திரிக்காய் எல்லாத்தையும் நேரடியாவே விற்பனை செஞ்சோம். அதுபோக, சென்னையில இருக்கிற ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்க்கெட், ரீஸ்டோர், கிராமியம், கோ-ஆர்கானிக் மாதிரியான இயற்கை அங்காடிகளுக்கும் அனுப்பினோம். இயற்கை பொருள்களுக்குக் கிடைக்கிற வரவேற்பினால, எங்க சொந்த நிலத்திலயும் இயற்கை விவசாயத்தை ஆரம்பிச்சிட்டேன். போன தடவை 5 ஏக்கர்ல நிலக்கடலைச் சாகுபடி செஞ்சேன். அத எங்களோட மரச்செக்கு மூலமா எண்ணெயாக்கி விற்பனை செஞ்சேன். அதுல நல்ல லாபம் கிடைச்சது. இப்போ, பக்கத்து நிலங்களையும் குத்தகைக்குப் பிடிச்சு விவசாயம் ஆரம்பிச்சிருக்கோம்” என்றார், தரணிவேந்தன்.



Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Thursday 22 June 2017

ரூ 1 லட்சம் வருமானம்... வாழைக்கு இடையில் காய்கறிகள்... ஊடுபயிர்கள் கொடுக்கும் உன்னத லாபம்!


விவசாயத்தில் ஊடுபயிர், கலப்புப் பயிர் சாகுபடி மிகவும் அவசியம். அதுவும், ஓர் ஆண்டு கழித்துப் பலன் கொடுக்கும் வாழை போன்ற பயிர்களில் ஊடுபயிர் சாகுபடி செய்வதன் மூலம், பிரதான பயிர் மகசூல் கொடுக்கும் முன்னரே, ஊடுபயிர் மூலம் ஒரு வருமானம் பார்த்துவிட முடியும்.

ஜீரோ பட்ஜெட் வேளாண்மை முறையிலும், பிரதான பயிர்களுக்கு ஏற்ற பயிர்களை ஊடுபயிராகச் சாகுபடி செய்ய வேண்டும் என சுபாஷ் பாலேக்கர் வலியுறுத்தி வருகிறார். அதைக் கடைப்பிடிக்கும் வகையில், நாடன் ரக வாழைக்கு ஊடுபயிராக, காய்கறிகளை ஜீரோ பட்ஜெட் முறையில் சாகுபடி செய்து நல்ல வருமானம் ஈட்டி வருகிறார், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம்.

தூத்துக்குடி மாவட்டம், சோனகன் விளையிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மேலக்கானம் கிராமத்தில், ராஜமாணிக்கத்தின் வாழைத்தோட்டம் உள்ளது. காய்களை அறுவடை செய்து கொண்டிருந்த ராஜமாணிக்கத்தைச் சந்தித்தோம்.

“பூர்வீக விவசாயக் குடும்பம் எங்களோடது. சுற்றுவட்டாரப் பகுதியில் வாழைதான் முக்கிய விவசாயம். நான், அஞ்சாவதுக்கு மேல பள்ளிக்கூடம் போகல. அப்பா, அம்மா கூடச் சேர்ந்து, விவசாயம் செய்ய ஆரம்பிச்சிட்டேன். நான் சின்ன வயசுல இருக்குறப்போ... மட்கிய குப்பையையும் சாம்பலையும்தான் வயல்ல அடியுரமாகப் போடுவாங்க. முப்பது வருஷத்துக்கு முன்னால, ஊர்ல எல்லோருமே ரசாயன உரத்தையும் பூச்சிக்கொல்லியையும் பயன்படுத்த ஆரம்பிச்சாங்க. அப்படியே நாங்களும் ரசாயனத்துக்கு மாறிட்டோம். அதன்பிறகு, நானும் அதையேதான் கடைப்பிடிச்சேன். வாழையில் என்ன பிரச்னை வந்தாலும், உரக்கடையில போய்ச் சொல்வோம். அவங்க கொடுக்குற உரத்தையும் பூச்சிக்கொல்லியையும் வாங்கி, பயிர்களுக்குக் கொடுப்போம். ஆனாலும், நோய் சரியாகாது. குறிப்பா வெடிப்பு நோயைச் சரிபண்ணவே முடியல. ஐந்நூறு வாழை நட்டா 100 வாழை அடிவாங்கிடும். உரம் போட்டுப் போட்டு நிலமும் இறுகிப்போச்சு. அதனால தண்ணி அதிகமா பாய்ச்ச வேண்டியிருந்தது.

இப்படியே போயிட்டு இருந்தப்பதான், அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி காயாமொழியில் இயற்கை விவசாயம் செஞ்சுட்டு இருக்குற சக்திகுமார் பத்தி கேள்விப்பட்டேன். அவரைப் பார்க்கப் போயிருந்தப்போ, அவருடைய தோட்டத்துல நாடன் ரக வாழைகள் செழுமையா இருந்துச்சு. அவர்கிட்ட வாழையில வெடிப்பு நோய் வர்றத பத்தி சொன்னேன். ‘ஜீவாமிர்தம் பயன்படுத்துங்க. எல்லாம் சரியாகிடும்’னு சொல்லி, அதைத் தயாரிக்கிற விதத்தையும் கத்துக் கொடுத்தார்.

உடனடியா ஜீவாமிர்தம் தயாரிச்சு, நோய்த் தாக்கி வெடிப்பு விழுந்திருந்த வாழை மரங்கள்மேல ஊத்திவிட்டேன். பத்து நாள்கள்லயே வெடிப்பெல்லாம் மறைய ஆரம்பிச்சது. உடனே எல்லா மரங்களுக்கும் ஜீவாமிர்தத்தைத் தெளிச்சுவிட்டேன். அதன்பிறகு, எல்லா மரங்களும் பூ எடுத்துச்சு. அப்போதான், இத்தனை வருஷம் ரசாயனத்தைக் கொட்டி, காசையும் நிலத்தையும் பாழாக்கிட்டோமேனு எனக்கு உரைச்சது. அன்னையில இருந்தே முழு இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டேன்” என்று, தான் ஜீரோ பட்ஜெட் முறை விவசாயத்துக்கு மாறிய கதை சொன்ன ராஜமாணிக்கம் தொடர்ந்தார்.

“இயற்கை விவசாயத்துக்கு மாறின பிறகுதான் என்னோட நிலத்துல மண்புழுவையே கண்ணால பாத்தேன். எங்க பகுதியில வாழையில் ஊடுபயிரா தட்டை, உளுந்து, மொச்சைனுதான் போடுவாங்க. நான், வாழைக்கு ஊடுபயிரா காய்கறிகளைப் போட்டேன். எனக்குச் சொந்தமா 5 ஏக்கர் நிலம் இருக்கு. இங்க 2 ஏக்கர் நிலம் இருக்கு. இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்துல 3 ஏக்கர் நிலம் இருக்கு. அந்த 3 ஏக்கர் நிலத்துல நேந்திரன் வாழை இருக்கு.

இங்க இருக்குற 2 ஏக்கர் நிலத்துல, ஒன்றரை ஏக்கர் நிலத்துல 1,300 நாடன் ரக வாழை இருக்கு. ஊடுபயிரா கத்திரி, தக்காளி, வெண்டை, சீனி அவரைனு நட்டிருக்கேன். இதில்லாம, 30 சென்ட் நிலத்துல பாகல், பீர்க்கன் நட்டிருக்கேன். 20 சென்ட் நிலத்துல தனிப்பயிரா கத்திரி நட்டிருக்கேன். இது நட்டு பத்து நாள்தான் ஆகுது. பந்தல் காய்கறிகளும், ஊடுபயிரா இருக்குற எல்லாக் காய்கறிகளுமே இப்போ பறிப்புல இருக்கு.

நாடன் வாழையை நடவு செஞ்சு ஆறு மாசம் ஆகுது. இனிமேதான் குலை போட ஆரம்பிக்கும். அது குலை போட்டு முடியுறதுக்குள்ள, ஊடுபயிரா இருக்குற காய்கறிகள்ல அறுவடை முடிஞ்சிடும். காய்கறிகளை, வாழைக்கு இடையே ஊடுபயிரா போட்டிருக்குறதால உழவு, பராமரிப்புனு எந்தச் செலவும் கிடையாது. தண்ணீர்கூட வாழைக்குக் கொடுக்குறதுதான். அதுலயே ஊடுபயிர்களும் வளர்ந்து பலன் கொடுக்குது.

அதேமாதிரி பாகல், பீர்க்கன் போட்டிருக்கிற பந்தலுக்கும் பெரிய செலவில்லை. வாழைக்கு முட்டுக் கொடுக்க வெச்சிருந்த அகத்தி மரக் கம்புகளைக் கொண்டு, பந்தல் போட்டுட்டேன். இடுபொருள்கள்ல மட்டும் ஜீரோ பட்ஜெட் இல்லை. பராமரிப்புலயும் ஜீரோ பட்ஜெட்தான்” என்ற ராஜமாணிக்கம், மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“கத்திரி, சீனிஅவரை, பாகல், பீர்க்கன்னு நாலு காய்களையும் அஞ்சு நாள்களுக்கு ஒரு தடவை அறுவடை பண்றேன். தக்காளியை 3 நாள்களுக்கு ஒருமுறை அறுவடை பண்றேன். வெண்டையை ஒரு நாள் விட்டு ஒரு நாள் அறுவடை பண்ணிட்டு வர்றேன். போன வருஷம் வரை உள்ளூர் கடைகளுக்குதான் காய்களை விற்பனை செய்துட்டு இருந்தேன். இந்த வருஷம், சக்திகுமார் மூலமா சென்னை, கோயம்பேடுல இருக்குற ஒரு குடியிருப்புச் சங்கத்துக்காரங்களுக்கு அனுப்புறோம். அவங்க என் தோட்டத்தையும் வந்து பார்த்துட்டுப் போனாங்க. நாலு மாசமா அவங்களுக்குக் காய்களை அனுப்பிட்டிருக்கேன். வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்னிக்கு சென்னைக்குக் காய்கள அனுப்புறேன். அதுபோக இடையில பறிக்கிற காய்களை உள்ளூர்லயே விற்பனை செய்திடுவேன்.

காய்கறிகள் அறுவடைக்கு வந்ததுல இருந்து, இதுவரை620 கிலோ கத்திரி, 270 கிலோ சீனிஅவரை, 385 கிலோ பாகல், 225 கிலோ பீர்க்கன், 594 கிலோ தக்காளி, 996 கிலோ வெண்டை கிடைச்சிருக்கு. கத்திரி, தக்காளி, வெண்டை, சீனிஅவரை மாதிரியான காய்களுக்கு, ஒரு கிலோ 40 ரூபாய் விலை கிடைக்குது. பீர்க்கனுக்கும் பாகலுக்கும் ஒரு கிலோ 30 ரூபாய் விலை கிடைக்குது. உள்ளூர்லயும் இதே விலைக்குதான் கொடுக்கிறேன்.

அந்த வகையில இதுவரை பறிச்ச அத்தனை காய்கறிகளையும் விற்பனை செஞ்சதுல 1,17,500 ரூபாய் வருமானமாகக் கிடைச்சிருக்கு. இதுல நாற்று, விதை தொடங்கி அறுவடை, போக்குவரத்து வரை 15 ஆயிரம் ரூபாய் செலவாகியிருக்கு. ஆக 1,02,500 ரூபாய் இதுவரை லாபமா எடுத்திருக்கேன். இன்னும் ஒரு மாசத்துக்கு மேல காய் பறிக்கலாம். அதுமூலமா 16 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். அதுல அறுவடை, போக்குவரத்து போக எப்படியும் 14 ஆயிரம் ரூபாய் வரை லாபமா நிக்கும்னு எதிர்பார்க்கிறேன். வாழை மூலமாகக் கிடைக்கிற லாபம் தனி” என்ற ராஜமாணிக்கம் நிறைவாக, “ஒரே பயிரைச் சாகுபடி செய்துட்டு விளைச்சல் இல்லை, விலை இல்லைனு புலம்புறதைவிட, நிறைய பயிர்களைக் கலந்து சாகுபடி செஞ்சு லாபம் பார்க்கிறதுதான் புத்திசாலித்தனம். அதுவும் இயற்கை காய்கறிகளுக்கு இருக்குற வரவேற்பைப் பயன்படுத்திக்கிட்டு... ஜீவாமிர்தம் மாதிரியான செலவு குறைந்த இடுபொருள்களைப் பயன்படுத்திச் சாகுபடி செஞ்சா கண்டிப்பா லாபம் பார்க்க முடியும்” என்று சொல்லிவிட்டு, அறுவடை செய்த காய்கறிகளை மூட்டைப் பிடிக்கும் பணியில் மும்முரமானார்.

தொடர்புக்கு,
ராஜமாணிக்கம்,
செல்போன்: 94868 12747.

ஏழு அடியில் வாழை... மூன்றரை அடியில் காய்கறிகள்

வாழைக்கு ஊடுபயிராகக் காய்கறிகளைச் சாகுபடி செய்யும் முறை குறித்து ராஜமாணிக்கம் சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே...

நாடன் ரக வாழை நடவுக்குக் கார்த்திகைப் பட்டம் ஏற்றது. தேர்வு செய்த நிலத்தை நன்கு உழுது, ஒரு வாரம் காய விட வேண்டும். பிறகு, 7 அடி இடைவெளியில் குழிகள் எடுத்து, சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க வேண்டும். ஐந்து நாள்கள் குழிகளை ஆறவிட்டு, வாழைக்கிழங்குகளை நடவு செய்து தண்ணீர்ப் பாய்ச்ச வேண்டும். விதைத்து 15 நாள்கள் கழித்து, கிழங்கு நட்ட இடத்திலிருந்து அரை அடி தூரத்தில் குழியெடுத்து, அதில் 5 கிலோ மட்கிய சாணம் போட்டுக் குழியை மூட வேண்டும். ஒரு மாதம் கழித்து, மார்கழிப் பட்டத்தில் வாழைக் கன்றுகளுக்கு இடையில் காய்கறிகளை நடவு செய்யலாம்.

கத்திரி, தக்காளி ஆகியவற்றை ஒரு குத்துக்கு, இரண்டு நாற்றுகளாக நடவு செய்ய வேண்டும். வெண்டை, சீனிஅவரை ஆகியவற்றுக்கு ஒரு குழிக்கு இரண்டு விதைகள் என ஊன்றிவிட வேண்டும். கத்திரி, தக்காளி, வெண்டை, சீனிஅவரை என அடுத்தடுத்து மூன்றரை அடி இடைவெளியில் தொடர்ச்சியாக நட வேண்டும். இதனால், நோய்த் தாக்குதல்களைத் தவிர்க்கலாம். வாழைக்கு இட்ட மட்கிய சாணம் காய்கறிகளுக்கும் உரமாகிவிடும். வாழைக்குப் பாயும் தண்ணீரே காய்கறிகளுக்கும் போதுமானது.

நடவு செய்ததிலிருந்து 15 நாள்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் ஜீவாமிர்தம் (10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி ஜீவாமிர்தம்) மற்றும் மீன் அமினோ அமிலம் (10 லிட்டர் தண்ணீரில் 100 மில்லி மீன் அமினோ அமிலம் ஆகியவற்றைக் கலந்து கைத்தெளிப்பானால் தெளித்து வர வேண்டும். இருபது நாள்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும்.

35 நாள்களுக்கு மேல் காய்கறிச் செடிகளில் பூக்கள் பூக்கத் தொடங்கும். அந்த நேரத்தில் 10 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் மோர்க்கரைசலைக் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். 45-ம் நாளுக்கு மேல் பிஞ்சு பிடிக்கும். 55-ம் நாளுக்கு மேல் அறுவடை செய்யலாம்.

மார்கழிப் பட்டத்தில் பந்தல் காய்கறி..!

பந்தல் காய்கறிகளையும் மார்கழிப் பட்டத்தில் விதைக்கலாம். உழுது தயார் செய்த நிலத்தில் ஏழு அடி இடைவெளியில் 2 அடி சதுரம், 2 அடி ஆழத்துக்குக் குழியெடுத்து, ஒவ்வொரு குழியிலும் தலா 5 கிலோ மட்கிய சாணத்தைப் போட்டு நிரப்பி, மேல் மண் கொண்டு குழியை மூட வேண்டும். பத்து நாள்கள் கழித்து, ஒவ்வொரு குழியின் மையத்திலும் விரல்களால் பள்ளம் பறித்து, ஒரு குழிக்கு 5 விதைகள் என்ற கணக்கில் பாகல், பீர்க்கன் விதைகளை ஊன்றி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர்ப் பாய்ச்சினால் போதுமானது.

செடிகளுக்குத் தேவையான அளவில் பந்தல் அமைத்துக் கொள்ளலாம். ஐந்து நாள்களுக்குள் விதைகள் முளைத்து 20-ம் நாளில் ஓர் அடி உயரம் வரை வளர்ந்து, 30-ம் நாளுக்கு மேல் கொடி படரும். அந்த நேரத்தில் கயிறு கட்டி கொடியைப் பின்னி, பந்தலில் படர விட வேண்டும். ஊடுபயிராக விதைத்த காய்கறிகளுக்குச் செய்யும் பராமரிப்பு முறைகளையே பந்தல் காய்கறிகளுக்கும் பின்பற்றலாம்.

இலைகள் வெளுப்புக்குப் பெருங்காயக் கரைசல்

காய்கறிச் செடிகளில் இலைகள் வெளிறிக் காணப்பட்டால்... 10 லிட்டர் தண்ணீரில் 25 கிராம் பெருங்காயப்பொடியைப் போட்டுக் கலக்கி, ஒரு நாள் வைத்திருந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். ஐந்து நாள்கள் இடைவெளியில் மீண்டும் ஒருமுறை இதைத் தெளிக்கலாம். இப்படிச் செய்தால், இலைகள் பச்சை நிறத்துக்கு மாறிவிடும்.

மோர்க் கரைசல்

ஒரு லிட்டர் தயிரைக் கடைந்து, தண்ணீர் சேர்த்து 2 லிட்டர் மோராக மாற்றிக்கொள்ள வேண்டும். இதை ஒரு வாரம் புளிக்க வைத்து, அதில் 10 லிட்டர் தண்ணீர் கலந்தால் மோர்க்கரைசல் தயார்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Tuesday 20 June 2017

5 ஏக்கர்... மாதம் ரூ 1 லட்சம் வருமானம்... ஜெயிக்க வைத்த ஜீரோ பட்ஜெட் மல்பெரி :


திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் முக்கியமான விவசாய உபதொழில், பட்டுப்புழு வளர்ப்பு. இதற்கு முக்கிய ஆதாரமாக இருக்கும் தாவரம் மல்பெரி. இத்தாவரத்தின் இலைகள்தான் பட்டுப்புழுக்களுக்கான உணவு. மல்பெரி சாகுபடி செய்ய, பட்டு வளர்ப்புத்துறை பெரும்பாலும் ரசாயன உரங்களையே பரிந்துரைத்தாலும், அதை இயற்கை வேளாண்மை முறையில் சாகுபடி செய்பவர்களும் உண்டு. அந்த வகையில், ஜீரோ பட்ஜெட் வேளாண்மை முறையில் மல்பெரி சாகுபடி செய்து பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நித்தியானந்தம்-புஷ்பலதா தம்பதி.

உடுமலைப்பேட்டை வட்டம், சுங்காரமடக்கு கிராமத்தில் நித்தியானந்தம், புஷ்பலதா ஆகியோர் விவசாயம் மேற்கொண்டு வருகிறார்கள். ஒரு முற்பகலில் அவர்களின் வயலுக்குள் நுழைந்தோம். சொட்டுநீர்ப் பாசன உரத்தொட்டியில் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்துகொண்டிருந்த நித்தியானந்தம் நம்மை மகிழ்ச்சியாக வரவேற்றார். அவரின் மனைவி புஷ்பலதா நாட்டுப் பசும்பாலில் தயாரித்த தேநீர் கொடுத்து உபசரித்தார்.

இயற்கைக்கு மாற்றிய பயிற்சி :

தேநீர் அருந்திக்கொண்டே பேச ஆரம்பித்த நித்தியானந்தம், “எனக்கு இந்த ஊர்தான் பூர்வீகம். இங்க மொத்தம் 15 ஏக்கர் நெலம் இருக்கு. அதுல 13 ஏக்கர் நெலத்துல தென்னை போட்டிருக்கோம். இவையெல்லாம் 30 வருஷமா காய்ப்புல இருக்கிற மரங்கள். மீதமுள்ள 2 ஏக்கர்ல வெங்காயம், மக்காச்சோளம், தீவனப்பயிர்னு வெள்ளாமை வைப்போம்.

ஈரோடுல நடந்த ஜீரோ பட்ஜெட் பயிற்சியில் கலந்துக்குற வரைக்கும், நானும் அதிகளவுல ரசாயன உரங்களைத்தான் பயன்படுத்திட்டு இருந்தேன். ‘பசுமை விகடன்’ல வந்த அந்தப் பயிற்சி பத்தித் தெரிஞ்சு அதுல கலந்துகிட்டேன். அதுக்கப்புறம் என்னோட விவசாயமே தலைகீழா மாறிடுச்சு.

நிலத்தை வளமாக்கிய ஜீவாமிர்தம் :

பயிற்சி முடிச்சு வந்ததுமே மொத வேலையா ஒரு நாட்டு மாட்டை வாங்கிட்டு வந்தேன். அதோட சாணம், சிறுநீர்ல இருந்து ஜீவாமிர்தம் தயாரிச்சு மரங்களுக்குக் கொடுக்க ஆரம்பிச்சேன். மரங்கள்ல நல்ல மாற்றம் தெரிய ஆரம்பிச்சது. 2008-ம் வருஷத்துல இருந்து இப்போ வரைக்கும் ஜீரோ பட்ஜெட் விவசாயம்தான் செஞ்சுட்டு இருக்கேன். இந்த ஒன்பது வருஷத்துல, ஒரு கைப்பிடி அளவுகூட ரசாயன உரத்தை நிலத்துல போட்டதில்ல. பதினஞ்சு ஏக்கர்ல எந்த இடத்துல மண்ணைக் கிளறினாலும், அங்க கொத்துக்கொத்தா மண்புழு இருக்கும். அந்தளவுக்கு மண் வளமாயிடுச்சு” என்று ஜீரோ பட்ஜெட் முறைக்கு மாறிய கதை சொன்ன நித்தியானந்தம், பட்டுப்புழு வளர்ப்புக் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

தென்னையில் ஊடுபயிராக மல்பெரி :

“எங்க பகுதியில நெறைய பேர் பட்டுப்புழு வளர்ப்புல ஈடுபட்டிருக்காங்க. அதுல கணிசமான லாபம் கிடைக்குதுனு கேள்விப்பட்டு, நாங்களும் அதுல இறங்கலாம்னு முடிவு பண்ணினோம். ஏற்கெனவே பயிற்சி சமயத்துல பாலேக்கர்கிட்ட ‘தென்னைக்கு இடையில் மல்பெரி நடவு செய்யலாமா?’னு கேட்டிருந்தேன். அவர், ‘தாராளமா நடவு செய்யலாம். மல்பெரி தென்னைக்கு நட்புப்பயிர்தான்’னு சொல்லியிருந்தார். அதனால, தைரியமா தென்னைக்கு இடையில ஊடுபயிரா மல்பெரி பயிரை நடவு செய்ய முடிவெடுத்தேன். அடுத்ததா, பட்டு வளர்ச்சித்துறை கொடுக்குற பயிற்சி வகுப்புலயும் பயிற்சி எடுத்துக்கிட்டேன்.

வழக்கமா ஒரு ஏக்கர் நிலத்துல 5,600 மல்பெரி நாத்துகளை நடவு செய்யலாம். ஆனா, ஊடுபயிர்ங்கறதால அஞ்சு ஏக்கர்லயே 12 ஆயிரம் நாத்துகளதான் நடவு செய்ய முடிஞ்சது. தென்னை மரங்களுக்கு இடையில, நீளமா கிடங்கு (1 அடி ஆழம், 4 அடி ஆகலம் கொண்ட கால்வாய்) எடுத்து, அதுல பண்ணைக் கழிவுகளைக் கொட்டி, தென்னைக்குத் தண்ணீர்ப் பாய்ச்சிக்கிட்டு இருந்தேன். அந்தக் கிடங்குலேயே ரெண்டு அடி இடைவெளியில் மல்பெரி நாத்துகளை நடவு செஞ்சு சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சுட்டேன்.

இப்போ தென்னைக்குனு தனியா பாசனம் செய்றதில்ல. ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை, ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தம்ங்கிற கணக்குல பாசன தண்ணியோட சேர்த்துக் கொடுத்துடுவேன். ஜீவாமிர்தம் விடுறதால மல்பெரிச் செடிகள் நல்லா வளருது. மல்பெரியை ஒருமுறை நடவு செஞ்சிட்டா, 25 வருஷம் வரைக்கும் பலன் கொடுக்கும்” என்று நித்தியானந்தம் முடிக்க, அவரின் மனைவி புஷ்பலதா தொடர்ந்தார்... “இது ‘எம்.ஆர்-2’ங்கிற வீரிய ரக மல்பெரி. வறட்சிய தாங்கி வளரும். பட்டு வளர்ப்புக்கு மல்பெரி ரொம்ப முக்கியம். ஜீவாமிர்தம் கொடுக்கிறதோட, வருஷத்துக்கு ஒரு தடவை ஏக்கருக்கு 400 கிலோங்கிற அளவுல புங்கன் பிண்ணாக்கையும் வேப்பம் பிண்ணாக்கையும் கலந்து, செடிகளோட தூர்ல போட்டுடுவோம். அதனால, வேர் சம்பந்தமான நோய்கள் வர்றதில்லை. அப்பப்போ தேவையான உயிர் உரங்களையும் கொடுக்கிறதால, மண் வளமா இருக்கு. பயிரும் செழிப்பா வளருது.

ஊடுபயிரா மல்பெரி போட்டிருந்ததால குறைவான அளவுலதான் மகசூலாச்சு. அதனால, மாசம் 50 ஆயிரம் புழுக்கள்ங்கிற கணக்குலதான் வளர்க்க முடிஞ்சது. அதுமூலமா ஒரு மாசத்துக்கு 90 கிலோ பட்டுக்கூடு உற்பத்தி செஞ்சோம். இயற்கை விவசாய முறையில விளைஞ்ச இலைகளைச் சாப்பிட்டதால, புழுக்கள் எந்த பாதிப்பும் இல்லாம நல்லா வளந்தது. பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகள் எங்களைக் கூடுதலா புழுக்களை வளர்க்கச் சொன்னாங்க. அதனால, 2 ஏக்கர் நெலத்துல தனிப்பயிராவே மல்பெரி நடவு செஞ்சுருக்கோம். அதுக்கான நாத்துகளையும் நாங்களே உற்பத்தி செஞ்சு நட்டுட்டோம்” என்றார்.

நிறைவாகப் பேசிய நித்தியானந்தம், “நாங்க நடவு செஞ்சுருக்குற அளவு மல்பெரியை வெச்சு கிட்டத்தட்ட 300 முட்டைத் தொகுதிகளை வாங்கலாம். அதுல ஒன்றரை லட்சம் புழுக்கள் வரை வளர்க்க முடியும். தண்ணீர்ப் பற்றாக் குறையால இப்போதைக்கு 200 முட்டைத் தொகுதிகள் மூலமா, ஒரு லட்சம் புழுக்கள் அளவுக்குத்தான் வளர்த்துட்டு இருக்கோம். கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறையிலும் இவ்வளவு மல்பெரி உற்பத்தி செய்ய முடியுதுனா, அதுக்கு ஜீரோ பட்ஜெட் விவசாய முறைதான் காரணம்.

ஒரு லட்சம் புழுக்கள் வளர்ப்பது மூலமா மாசம் சரசாரியா 200 கிலோ பட்டுக்கூடு உற்பத்தி செய்ய முடியும். நாங்க 190 கிலோ அளவுக்கு உற்பத்தி செஞ்சுட்டு இருக்கோம். ஒரு கிலோ பட்டுக்கூடு, 400 ரூபாய்ல இருந்து 600 ரூபாய் வரை விற்பனையாகும். எப்படிப் பார்த்தாலும் மாசம் 1 லட்சம் ரூபாய்க்குக் குறையாம வருமானம் கிடைச்சுட்டு இருக்கு. அதுல, செலவெல்லாம் போக மாசம் 75 ஆயிரம் ரூபாய்க்கு மேல லாபம் கிடைச்சுடும்” என்றார், மகிழ்ச்சியுடன்.

தொடர்புக்கு :
நித்தியானந்தம்,
செல்போன்: 99654 18009

ஒரு ஏக்கரில் ரூ. 40 ஆயிரம் லாபம்!

“நாங்க நல்ல முறையில் பட்டுப்புழு வளர்ப்பைச் செஞ்சுட்டு வர்றதால, பட்டு வளர்ச்சித் துறை நடத்துற கூட்டங்கள்ல பேச வாய்ப்பு கொடுக்கிறாங்க. அதேமாதிரி திருச்சியில், பசுமை விகடன் நடத்தின வேளாண் கண்காட்சியிலயும், என்னை வல்லுநரா அழைச்சு... பட்டுப்புழு வளர்ப்புப் பத்தி கண்காட்சிக்கு வந்தவங்களுக்குச் சொல்லிக்கொடுக்க வெச்சாங்க.

இதைப் பெரிய அங்கீகாரமா நினைக்கிறேன். அதுக்குக் காரணம் ஜீரோ பட்ஜெட் விவசாயம்தான். போன அஞ்சு வருஷமாவே பட்டுக்கூடுக்கு நல்ல விலை கிடைச்சுட்டு இருக்கு. கிலோ 400 ரூபாய்க்கு குறையுறதில்ல. சில சமயங்கள்ல 650 ரூபாய்க்கெல்லாம் விற்பனையாச்சு. ஒரு ஏக்கர்ல மல்பெரி வளர்த்து பட்டுப்புழு வளர்ப்புல ஈடுபட்டா, மாசம் 40 ஆயிரம் ரூபாய் கண்டிப்பா லாபம் எடுக்கலாம்” என்கிறார், நித்தியானந்தம்.

மல்பெரி சாகுபடி :

மல்பெரியைச் சாகுபடி செய்வது குறித்து நித்தியானந்தம் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் இங்கே...

ஒன்பது மாத வயதுடைய செடிகளிலிருந்து விதைக்குச்சிகள் எடுத்து, நாற்று உற்பத்தி செய்யலாம். தாய்ச்செடிகளில் செதில் பூச்சி, பூஞ்சணம், வேரழுகல் உள்ளிட்ட நோய்கள் தாக்கப்படாதவையாக இருக்க வேண்டும். விதைக்குச்சிகள் 2 சென்டிமீட்டர் பருமனும் 6 அங்குல நீளமும் இருக்க வேண்டும். ஒவ்வொரு விதைக்குச்சியிலும் மூன்று கணுக்கள் இருக்க வேண்டும்.

3 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம், 10 சென்டிமீட்டர் உயரத்துக்கு நாற்றங்கால் படுக்கைகளை அமைக்க வேண்டும். படுக்கைகளில் தொழுவுரத்தைத் தூவிச் சமப்படுத்த வேண்டும். பிறகு, படுக்கைகளில் இட்டு இரண்டு கணுக்கள் மண்ணுக்குள் இருக்குமாறு விதைக்குச்சிகளை நடவு செய்ய வேண்டும். வரிசைக்கு வரிசை 20 சென்டிமீட்டர், செடிக்குச் செடி 10 சென்டிமீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். வாரம், இரண்டு முறை பாசனம் செய்ய வேண்டும். மாதம் ஒருமுறை ஜீவாமிர்தக் கரைசலைப் பாசன நீருடன் கலந்து விட வேண்டும். மூன்று மாதங்களில் நாற்றுகள் தயாராகிவிடும்.

செம்மண் நிலங்களில் மல்பெரி நன்றாக வளரும். செம்மண் நிலம் இல்லாதவர்கள் ஏக்கருக்கு 10 டன் செம்மண்ணைக் கொட்டி, அதில் மல்பெரி நடவு செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 8 டன் தொழுவுரத்தைக் கொட்டி உழவு செய்து பாத்திகள் அமைத்துக்கொள்ள வேண்டும். பாத்திகளில் 2 அடி இடைவெளியில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். நடவுக்கு முன் பீஜாமிர்தக் கரைசலில் நாற்றுகளை விதைநேர்த்தி செய்ய வேண்டியது அவசியம்.

மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்துப் பாசனம் செய்ய வேண்டும். மாதம் ஒருமுறை களை எடுக்க வேண்டும். மாதத்துக்கு இரண்டு முறை பாசன நீருடன் ஏக்கருக்கு 200 லிட்டர் என்ற அளவில் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து விட வேண்டும். நடவு செய்த நான்கு மாதங்கள் கழித்து மல்பெரி இலைகளை அறுவடை செய்யலாம். தொடர்ந்து 45 நாள்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யலாம்.

விதை நேர்த்தி :

தண்ணீர் 20 லிட்டர், பசுஞ்சாணம் 5 கிலோ, பசுமாட்டுச் சிறுநீர் 5 லிட்டர், சுத்தமான கல் சுண்ணாம்புத்தூள் 50 கிராம், வளமான நிலத்தின் மண் ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கி, 12 மணி நேரம் வைத்திருந்தால் பீஜாமிர்தம் தயார்.

மல்பெரி விதைக்குச்சிகளை 2 மணி நேரம் பீஜாமிர்தக் கரைசலில் ஊறவிட்டு நடவு செய்ய வேண்டும். அதேபோல, நாற்றுகளின் வேர்ப்பகுதியைப் பீஜாமிர்தக் கரைசலில் மூழ்க வைத்து எடுத்து நடவு செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் வேரழுகல், வேர்ப்புழு, வேர் கறையான் ஆகியவை தாக்குவதில்லை.

பயிற்சி இலவசம் :

தமிழ்நாடு அரசு, பட்டு வளர்ச்சித்துறையின் குடிமங்கலம் வட்டார இளநிலை ஆய்வாளர் ஷாநவாஸ், பட்டுப்புழு வளர்ப்புக் குறித்துச் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். “உடுமலைப்பேட்டை வட்டாரத்தில் வெண்பட்டுக்கூடு உற்பத்தி சிறப்பாக இருக்கிறது. சரியான நுட்பங்களைக் கடைப்பிடித்து 90 சதவிகிதத்துக்கு மேல் மகசூல் எடுக்கும் விவசாயிகள் இருக்கிறார்கள். ஆண்டுக்கு 5 ஆயிரம் டன் பட்டு நூல் தேவைப்படுகிறது. ஆனால், அந்தளவுக்கு உற்பத்தியில்லை. அதனால், இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.

மல்பெரி நடவு, புழு வளர்ப்பு மனை, தளவாடங்கள், உபகரணங்கள், சொட்டுநீர் கருவிகள் ஆகியவற்றை வாங்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. சிறு, குறு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாயும் பெரிய விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 22,500 ரூபாயும் மானியமாக வழங்கப்படுகிறது.

பட்டு வளர்ப்பில் ஈடுபட விரும்பும் விவசாயிகளுக்கு, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பட்டுவளர்ச்சித் துறை பயிற்சி மையத்தில் 5 நாள்கள் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. தங்குமிடம், உணவு, பயணப்படி ஆகியவற்றுடன் பட்டுப்புழு வளர்ப்புக்குத் தேவையான உபகரணங்களும் இலவசமாகக் கிடைக்கிறது” என்றார்.

தொடர்புக்கு, ஷாநவாஸ்,
தொலைபேசி: 04252 226943

புழு மனை :

நல்ல காற்றோட்ட வசதியுள்ள இடத்தில், 50 அடி நீளம் 20 அடி அகலத்தில் புழு வளர்ப்பு மனையை அமைத்துக்கொள்ள வேண்டும். அதில், பட்டு வளர்ப்புத்துறையின் பரிந்துரைப்படி 1,500 சதுர அடியில் புழு வளர் படுக்கைகளை அமைக்க வேண்டும். முட்டைகளை வாங்கி வந்து விவசாயிகளே பொரிக்க வைத்து வளர்க்க முடியும். இதில் இழப்பு அதிகமாக இருக்கும் என்பதால், ‘சாக்கி சென்டர்’ எனப்படும் இளம்புழு வளர்ப்பு மையங்களிலிருந்து 7 நாள்கள் வயதுடைய புழுக்களை வாங்கி வந்தும் வளர்க்கலாம். 100 முட்டைத்தொகுதி மூலம் 50 ஆயிரம் புழுக்களை உற்பத்தி செய்யலாம். 50 ஆயிரம் புழுக்களின் விலை 2,000 ரூபாய்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm