Monday 30 October 2017


வெள்ளாடுகளுக்கான நோய் பராமரிப்பு :


தடுப்பூசி அட்டவணை :

ஆண்டுக்கு 4 முறை தடுப்பூசிகள் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி அளிக்க வேண்டும்.

1. மார்ச் ஏப்ரல் மாதங்களில் கால் வாய் நோய்க்கான தடுப்பூசி

2. ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் பி பி ஆர் தடுப்பூசி

3. ஆகஸ்ட் மாதத்தில் கால் வாய் நோய் தடுப்பூசி

4. அக்டோபர் மாதத்தில் துள்ளுமாரி தடுப்பூசி ஆகியவற்றை போட வேண்டும்.

5. குடற்புழு மருந்துகளை பிறந்த 30 வது நாள், 2, 3, 4, 6, 9வது மாதங்களில் போட வேண்டும்.
வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு மூலம் நோய் தாக்கும் வாய்ப்பு குறைவு.
இனப்பெருக்கத்தில் குட்டிகளின் இறப்பு விகிதம் குறைவு.

குடற்புழு நீக்க அட்டவணை :

ஆடுகளின் வயது - பரிந்துரைகள் :

2வது மாதம் - நாடாப்புழுக்களுக்கான மருந்து

3வது மாதம் - நாடாப்புழுக்களுக்கான மருந்து

4வது மாதம் - நாடாப்புழுக்களுக்கான மருந்து

5வது மாதம் - உருண்டைப்புழுக்களுக்கான மருந்து

6வது மாதம் - உருண்டைப்புழுக்களுக்கான மருந்து

9வது மாதம் - உருண்டை / நாடாப்புழுக்களுக்கான மருந்து

12வது மாதம் - தட்டைப் புழுக்களுக்கான மருந்து

ஆறு மாதம் வரை ஆட்டுக்குட்டிகளுக்கு மாதம் ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்யவேண்டும். ஆறு மாதத்திற்கு பிறகு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அதாவது பருவமழைத் தொடங்குவதற்கு முன்பு ஒரு முறையும், பருவ மழையின் போது ஒரு முறையும், பருவ மழைக்குப்பின் இருமுறையும் கொடுக்கவேண்டும்.

மாதம் - பரிந்துரைகள் :

ஜனவரி - மார்ச் - தட்டைப்புழுவிற்கான மருந்து

ஏப்ரல் - ஜீன் - உருளை / நாடாப்புழுக்களுக்கான மருந்து

ஜீலை - செப்டம்பர் - தட்டைப் புழுவிற்கான மருந்து

அக்டோபர் - டிசம்பர் - உருளை / நாடாப்புழுக்களுக்கான மருந்து

ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை :

1. ஆடுகளுக்கு தகுந்த குடற்புழு மருந்தைத் தேர்வு செய்யவேண்டும்.

2. தூள் மருந்தைப் பயன்படுத்தும் பொழுது வெதுவெதுப்பான நீரில் கலந்து, சிறிது கரையாத மருந்துத் துகள்களும் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.

3. அதிகாலையில், வெறும் வயிற்றுடன் உள்ள ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யவேண்டும்.

4.மருந்துக் கலவையை வாயின் வழியாக ஊற்றும் பொழுது புரையேறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

5. குடிநீரில் குடற்புழுநீக்க மருந்தும் நோய் எதிர்ப்பு மருந்தும் ஒன்றாக கலந்துக் கொடுக்கக்கூடாது.

6. குடற்புழுக்களின் வகைகளையும் முட்டைகளையும் அறிந்து மருந்து கொடுப்பது சிறந்தது.

7. தொடர்ந்து ஒரே மருந்தைக் கொடுக்காமல் மாற்றித் தருவது அவசியம்.

வெள்ளாடுகளுக்கான தடுப்பூசி அட்டவணை :

1. நோய் மற்றும் தடுப்பூசியின் பெயர் :

பிபிஆர் நோய் (பெஸ்ட்டெஸ்பெட்டிட்ஸ் ரூமினென்ட்ஸ்)

முதல் தடுப்பூசி :

3-4 மாதம்

தொடர் தடுப்பூசிகள் :

ஆண்டுக்கு ஒரு முறை

சிறப்புக் கவனம் :

தகுந்த நோய்ப் பாதுகாப்பு நோய் கட்டுப்பாட்டு முறைகளைக் கையாள வேண்டும்.

2. நோய் மற்றும் தடுப்பூசியின் பெயர் :

கோமாரி நோய் தடுப்பூசி (திசு வளர் கோமாரித் தடுப்பூசி)

முதல் தடுப்பூசி :

2 மாத வயதில்

தொடர் தடுப்பூசிகள் :

ஆண்டுக்கு ஒரு முறை

சிறப்புக் கவனம் :

நோய்க்கிளர்ச்சியின் போது பாதிக்கப்படாத ஆடுகளுக்கும் அண்டைக் கிராமகால்நடைகளுக்கும் தடுப்பூசி அளித்தல் அவசியம்.

3. நோய் மற்றும் தடுப்பூசியின் பெயர் :

துள்ளுமாரி நோய் தடுப்பூசி (துள்ளுமாரி நோய் தடுப்பூசி : துள்ளுமாரி டாக்சாய்டு ஊசி)

முதல் தடுப்பூசி :

6 வார வயதில்

தொடர் தடுப்பூசிகள் :

ஆண்டுக்கு ஒரு முறை

சிறப்புக் கவனம் :

மழைக்காலத்திற்கு முன்னரும், குட்டி ஈனும் பருவங்களில் தாய் ஆடுகளுக்கும் தடுப்பூசி அளித்தல் அவசியம்.

4. நோய் மற்றும் தடுப்பூசியின் பெயர் :

ஆட்டம்மை தடுப்பூசி (வீரியம் குறைக்கப்பட்ட ஆட்டம்மை உயிர்த் தடுப்பூசி)

முதல் தடுப்பூசி :

3-6 மாத வயதில் (நோய் காணும் பகுதிகளில்)

தொடர் தடுப்பூசிகள் :

ஆண்டுக்கு ஒரு முறை (நோய்க் காணும் பகுதிகளில் மட்டும்)

சிறப்புக் கவனம் :

கோடைக்காலத்திற்கு முன்னர் நோய் காணும் பகுதிகளில் ஒரு தடுப்பூசி அவசியம்.

5. நோய் மற்றும் தடுப்பூசியின் பெயர் :

அடைப்பான் நோய் தடுப்பூசி
(அடைப்பான் ஸ்டோர் தடுப்பூசி)

முதல் தடுப்பூசி :

நோய்க் கிளர்ச்சியின் போது மட்டும் 6 மாத வயதில்

தொடர் தடுப்பூசிகள் :

நோய் அடிக்கடி தோன்றும் பகுதிகளில் வருடம் ஒரு முறை, மற்ற பகுதிகளில் தேவையில்லை.

சிறப்புக் கவனம் :

நோய்க்காணும் பகுதிகளில் மழைக்காலத்திற்கு முன்னர் தடுப்பூசி போடவேண்டும்.

6. நோய் மற்றும் தடுப்பூசியின் பெயர் :

டெட்டனஸ் ஜன்னி
தடுப்பூசி (டெட்டனஸ் டாக்சாய்டு தடுப்பூசி)

முதல் தடுப்பூசி :

குட்டி ஈன 6-8 வாரத்திற்கு ஒரு முறை

சிறப்புக் கவனம் :

குட்டிகள் பிறந்து 48 மணி நேரத்திற்கு பின்.

7. நோய் மற்றும் தடுப்பூசியின் பெயர் :

தொண்டை அடைப்பான் தடுப்பூசி (பார்மலின் வழி செயலிழக்கப்பட்ட தொண்டை அடைப்பான் தடுப்பூசி)

முதல் தடுப்பூசி :

6 மாத வயதில் நோய் காணும் பகுதிகளில் மட்டும்)

தொடர் தடுப்பூசிகள் :

ஆண்டுக்கு ஒரு முறை

சிறப்புக் கவனம் :

மழைக்காலத்திற்கு முன்னர் ஒரு தடுப்பூசி அளித்தல் அவசியம்.

கேள்வி பதில் :

1. எந்தெந்த ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் அவசியம் என்பதை எப்படி அறிவது?

கண்ணின் உட்சவ்வு வெளிறி போயிருக்கும், மூக்கில் சளி, ஆட்டின் பின் பகுதியில் கழிச்சலினால் சாணம் ஒட்டிக் கொண்டிருக்கும். தாடையில் வீக்கம், உடல் மெலிந்து காணப்படும். இது போன்ற ஆடுகளுக்கு மட்டும் குடற்புழு நீக்கம் செய்தல் அவசியமானதாகும்.

2. ஏன் எல்லா ஆடுகளுக்கும் குடற்புழு நீக்கம் செய்தல் கூடாது?

தேவையில்லாமல் எல்லா ஆடுகளுக்கும் அடிக்கடி குடற்புழு நீக்கம் செய்தால் குடற்புழுக்களுக்கு எதிரான மருந்தின் எதிர்ப்புத்திறன் குறைகிறது. குடற்புழுக்களின் எண்ணிக்கை அதிகமாகி மற்ற ஆடுகளுக்கும் பரவுகிறது. ஆகையால், தேவையான ஆடுகளுக்கு மட்டும் குடற்புழு நீக்கம் செய்தால் போதுமானது.

3. பாமாச்சா அட்டை எதற்கு பயன்படுகிறது?

பாமாச்சா அட்டையை பயன்படுத்தி ஆட்டின் கண்ணின் உள்சவ்வைப் பார்த்து இரத்தசோகை அறியலாம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Sunday 29 October 2017

வெற்றி கொடுக்கும் வெற்றிலை!

ஒரு ஏக்கர்... ஆண்டுக்கு ரூ 5 லட்சம் வருமானம்!

கடவுளுக்குப் படையல் படைக்கும்போதும் சரி, மங்களகரமான நிகழ்ச்சிகளிலும் சரி... அதில் வெற்றிலை கட்டாயம் இடம் பெற்றிருக்கும். திருமண நிச்சயதார்த்தத்தின் போது வெற்றிலை-பாக்கு மாற்றிக் கொள்வது ஒரு சம்பிரதாயமாகத் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. பொங்கல் திருநாளன்றும் படையலில் வெற்றிலைக்கு முக்கியத்துவம் உண்டு.

‘கும்பகோணம் வெற்றிலை’, ‘சோழவந்தான் வெற்றிலை’ என ஒவ்வொரு பகுதியிலும் பிரத்யேக சுவையுடன் விளைகிறது, வெற்றிலை. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் வெற்றிலைக்கும் தனி கிராக்கி உண்டு. அதற்கு அந்தப் பகுதியின் நீர் வளமே காரணம்.

ஆத்தூர் பகுதியிலிருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் தினமும் 2 ஆயிரம் கிலோ அளவில் வெற்றிலை அனுப்பப்படுகிறது. சீசன் சமயங்களில் 5 ஆயிரம் கிலோ அளவு கூட வெற்றிலை அனுப்பப்படுகிறது. இப்பகுதியில் பெரும்பாலும் ரசாயனங்களைப் பயன்படுத்தித்தான் வெற்றிலை சாகுபடி செய்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில் இயற்கை முறையில் வெற்றிலை சாகுபடி செய்து வருகிறார், வெள்ளாளன்விளை கிராமத்தைச் சேர்ந்த ஆம்ஸ்ட்ராங்.

திருச்செந்தூரிலிருந்து நாகர்கோவில் செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது, பரமன்குறிச்சி. அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது, வெள்ளாளன்விளை. வெற்றிலைக் கொடிகளுக்குத், தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங்கிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளவும், உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.

“பரம்பரையாவே விவசாயம்தான் தொழில். தாத்தா காலத்துல இருந்தே வெற்றிலை விவசாயம் செய்றோம். நான் பி.ஏ படிச்சிட்டு அப்பாவுடன் சேர்ந்து வெற்றிலை விவசாயத்துல இறங்கிட்டேன். ஆரம்பத்துல ரசாயன உரம் பயன்படுத்தித்தான் விவசாயம் செஞ்சோம். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, காயாமொழியில் இயற்கை முறையில் பப்பாளி சாகுபடி செய்ற சக்திகுமார்ங்கிற விவசாயியைச் சந்திச்சேன். அவர்தான் இயற்கை விவசாயத்தைப் பற்றி முழுமையாகச் சொல்லி ‘பசுமை விகட’னையும் அறிமுகப்படுத்தினார். உடனே தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். முழுமையா இயற்கை விவசாயத்துக்கும் மாறிட்டேன். முன்னெல்லாம் இந்தப் பகுதியில நிறைய பேர் வெற்றிலை போட்டிருந்தாங்க. ஆனா, தண்ணீர்த் தட்டுப்பாட்டால பலர் விவசாயத்தையே விட்டுட்டாங்க. ஆனாலும், நான் தாக்குப்பிடிச்சு நிக்கிறதுக்குக் காரணம், பசுமைவிகடன் சொல்லிக் கொடுத்த இயற்கை விவசாயப் பாடம்தான்” என்று முன்னுரை சொன்ன ஆம்ஸ்ட்ராங், தொடர்ந்தார்.

“பொதுவாகவே வெற்றிலைக்கு கரிசல் மண் ரொம்ப ஏற்றது. எனது நிலமும் கரிசல் நிலம்தான். அதனால மகசூலுக்கு பஞ்சம் இல்லை. இறவைப் பாசனத்துலதான் வெற்றிலை சாகுபடி செய்துக்கிட்டிருக்கேன். 2 ஏக்கர்ல வெற்றிலை போட்டிருந்தேன். போன மாசம் பெய்த மழையால வயல்ல தண்ணி தேங்கினதுல... ஒரு ஏக்கர் அளவுக்கு பயிர் வீணாயிடுச்சு. இப்போ ஒரு ஏக்கர்ல மட்டும்தான் வெற்றிலை இருக்கு. இன்னொரு ஏக்கர்ல வெற்றிலை நடவுக்கான வேலைகளைச் செய்துக்கிட்டிருக்கேன்.

முழுக்க முழுக்க தொழுவுரம், ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, வேப்பங்கொட்டைக் கரைசல் மாதிரியான இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்தித்தான் சாகுபடி செய்றேன். இயற்கை முறைங்கிறதால அதிகமா தண்ணீர் தேவைப்படுறதில்லை. அதில்லாம ரசாயன உரம் பயன்படுத்தினா மூணு வருஷம்தான் வெற்றிலை மகசூல் கிடைக்கும். ஆனா, இயற்கை முறையில அதை விட அதிக வருஷங்கள் மகசூல் இருக்கும்” என்ற ஆம்ஸ்ட்ராங், மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

‘’நடவு செய்த 90-ம் நாளுக்கு மேல தொடர்ந்து வெற்றிலை பறிக்கலாம். பொதுவா, 20 நாளுக்கு ஒரு முறைதான் பறிப்பாங்க. நான் தினசரி வருமானத்துக்காக சுழற்சி முறையில பறிக்கிறேன். ஒரு ஏக்கர்லயும் மொத்தமா ஒரே நாள்ல பறிச்சுக்கிட்டுப் போறப்போ... சில சமயம் குறைவாதான் விலை கிடைக்கும். அதே நேரத்துல தினமும் கொஞ்சம் கொஞ்சம் பாத்திகளா பிரிச்சுக்கிட்டு சுழற்சி முறையில பறிக்கிறப்போ... எப்பவாவது விலை குறைஞ்சாலும் பிரச்னை இருக்காது. ஆத்தூர், உடன்குடி ரெண்டு ஊர்லயுமே வெற்றிலைச் சந்தை இருக்கு. இங்கதான் வெற்றிலையை விற்பனை செய்றேன். வெற்றிலை படர்வதற்காக நட்டிருக்கிற அகத்தியிலும் தினமும் கீரை பறிக்கிறேன். இதை உள்ளூர்லயே விற்பனை செய்துடுவேன்.

பறித்த வெற்றிலையைக் கட்டாகக் கட்டி தண்ணீர் தெளித்து ஈரத்துணியால மூடிடணும். சராசரியா ஒரு கட்டுக்கு 300 வெற்றிலை இருக்கும். காற்று, வெயில் பட்டு வெற்றிலை காய்ந்தால் எடை குறைஞ்சிடும். தோட்டத்தில் எடைபோடும்போது 1,100 கிராம் இருந்தா, சந்தைக்குக் கொண்டுபோகும்போது ஒரு கிலோதான் இருக்கும்.

நான் தினமும் பத்து பாத்திகள்ல அறுவடை செய்றேன். தினமும் சராசரியா 20 கிலோ வெற்றிலையும், 15 கட்டு அகத்தியும் கிடைக்குது. ஒரு மாசத்துக்கு 600 கிலோ வெற்றிலையும், 450 கட்டு அகத்தியும் கிடைக்குது. முகூர்த்த நாட்கள், விசேஷ நாட்கள், மழை நாட்கள்ல வெற்றிலை விலை கூடும். மற்ற நாட்கள்ல விலை குறைவா இருக்கும். ஒரு கிலோ வெற்றிலை 60 ரூபாய்ல இருந்து 120 ரூபாய் வரை விற்பனையாகும். கணக்குப் பாக்கிறப்போ சராசரியா கிலோவுக்கு 70 ரூபாய் கிடைச்சிடும். அந்த வகையில ஒரு ஏக்கர் வெற்றிலை மூலமா மாசத்துக்கு 42 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.

ஒரு கட்டு அகத்தி 10 ரூபாய்னு விற்பனையாகுது. அந்த வகையில மாசத்துக்கு 4 ஆயிரத்து 500 ரூபாய் கிடைச்சுடும். வருஷத்துக்குனு பார்த்தா ஒரு ஏக்கர்ல இருக்கிற வெற்றிலை, அகத்தி ரெண்டுலயும் சேர்த்து... 5 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அதுல எல்லா செலவும் போக, 3 லட்ச ரூபாய் வரை லாபமா நிக்கும்” என்றார், சந்தோஷமாக.

தொடர்புக்கு,
ஆம்ஸ்ட்ராங்,
செல்போன்: 94429-48672

வெற்றிலை சாகுபடி செய்யும் முறை:

வெற்றிலை சாகுபடி குறித்து, ஆம்ஸ்ட்ராங்

சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...

ஏக்கருக்கு 300 பாத்திகள்!

தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் ஆடி மாதத் தொடக்கத்தில் ஒரு சால் உழவு செய்ய வேண்டும். தொடர்ந்து 12, 18, 24, 30-ம் நாட்களில் உழவு செய்ய வேண்டும். இறுதி உழவின்போது ஏக்கருக்கு 5 டிராக்டர் மட்கிய குப்பையைக் கொட்டி உழ வேண்டும். பிறகு, 12 அடி நீளம் 10 அடி அகலத்தில் பாத்திகள் எடுக்க வேண்டும். பாத்திகளுக்கு இடையில் 2 அடி அகலத்தில் வாய்க்கால்கள் எடுக்க வேண்டும். ஒவ்வொரு ஆறு பாத்திகளுக்கும் இடையில் 2 அடி இடைவெளி இருக்க வேண்டும். இந்த வகையில் ஏக்கருக்கு சுமார் 300 பாத்திகள் வரை எடுக்கலாம்.

கொடி படர அகத்தி, ஆமணக்கு, முள்முருங்கை!

கடைசியாக உழவு செய்து 10 நாட்கள் கழிந்த பிறகு, பாத்திகளில்... வரிசைக்கு வரிசை 2 அடி இடைவெளி, செடிக்குச் செடி 1 அடி இடைவெளி என்ற கணக்கில்... ஆமணக்கு, அகத்தி, முள் முருங்கை ஆகிய பயிர்களின் விதைகளை நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இந்தப் பயிர்கள் வளர்ந்த பிறகு இவற்றில்தான் வெற்றிலைக் கொடிகளைப் படர விட வேண்டும். வழக்கமாக அகத்தியை மட்டும்தான் நடவு செய்வார்கள். ஆனால், ஆமணக்கு, முள்முருங்கை போன்றவற்றை கலந்து பயிரிடும்போது பூச்சிகளின் தாக்குதல் குறையும். இந்தப் பயிர்கள், 40 நாட்களுக்குள் இரண்டடி உயரத்துக்கு வளர்ந்து விடும். இதுதான் வெற்றிலை நடவுக்கு சரியான தருணம். இதற்குள் களைகள் முளைத்தால் அவற்றை அகற்றிவிட வேண்டும்.

ஏக்கருக்கு 18 ஆயிரம் கொடிகள்!

8 அடி உயரத்துக்கு மேல் வளர்ந்த வெற்றிலைக் கொடிகளில் உச்சியில் 3 அடி அளவுக்கு வெட்டி எடுத்து, அதை ஒரு அடி நீளமுள்ள மூன்று துண்டுகளாக்க வேண்டும். ஒரு துண்டில் மூன்று கணுக்கள் இருக்க வேண்டும். இவைதான் விதைக் கொடி. இவற்றை ஒரு கட்டுக்கு 50 விதைக் கொடிகள் எனக் கட்டி வைக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 380 கட்டுகள் (19,000 கொடிகள்) வரை தேவைப்படும். ஒரு பாத்தியில் 60 கொடிகள் நடவு செய்யலாம். அந்த வகையில் 18 ஆயிரம் கொடிகளே போதுமானவை. ஆனாலும், சில கொடிகள் நடவுக்குள் அழுகி விட வாய்ப்புண்டு. அதனால் 19 ஆயிரம் கொடிகளைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.

தண்ணீர்... கவனம்!

ஒன்றரை அடி ஆழம், ஐந்தடி சதுரத்தில் ஒரு குழி பறித்து அதில் விதைக் கொடிக் கட்டுகளைப் போட்டு இரண்டு கணுக்கள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு இரண்டு நாட்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். 3-ம் நாள் அவற்றை எடுத்து அகத்தி, ஆமணக்கு, முள் முருங்கைச் செடிகளின் அருகில்... ஒவ்வொரு செடியின் அருகிலும் கைகளால் குழி பறித்து தலா ஒரு வெற்றிலைக் கொடியை இரண்டு கணுக்கள் குழிக்குள் இருக்குமாறு நடவு செய்ய வேண்டும். நடவு செய்தவுடன் தண்ணீர் பாய்ச்சி, மீண்டும் மாலையில் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து பத்து நாட்களுக்கு தினமும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு, மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். தண்ணீர் நிலத்தில் தேங்கக் கூடாது. அதிக தண்ணீர் பாய்ச்சினால் கொடிகள் அழுகி விட வாய்ப்புண்டு.

ஊட்டத்துக்கு ஜீவாமிர்தம்!

வெற்றிலைக் கொடிகளை நடவு செய்த 5-ம் நாள், செடிகளைச் சுற்றி மண் அணைக்க வேண்டும். 22-ம் நாளுக்கு மேல் கொடிகள் ஓரளவுக்கு வளர்ந்து விடும். அந்த நேரத்தில் 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி ஜீவாமிர்தக் கரைசல் எனக் கலந்து வயல் முழுவதும் தெளிக்க வேண்டும். தொடர்ந்து, 20 நாட்களுக்கு ஒரு முறை கொடியின் தூரிலிருந்து மேற்பகுதி வரை நனையுமாறு இதேபோல ஜீவாமிர்தத்தைத் தெளித்து வர வேண்டும். 40-ம் நாள் வெற்றிலைக் கொடிகளை... அகத்தி, ஆமணக்கு, முள் முருங்கை செடிகளில் தென்னை ஓலை அல்லது பனை ஓலை கொண்டு கட்டி விட வேண்டும்.

நடவு செய்ததில் இருந்து 3 மாதங்களுக்கு ஒரு முறை... 100 கிலோ கடலைப்பிண்ணாக்கு, 100 கிலோ வேப்பம் பிண்ணாக்கு கலந்த கலவையில், ஒரு கைப்பிடி அளவை ஒவ்வொரு கொடியின் தூரிலும் வைக்க வேண்டும். 4 மாதங்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு கொடியின் தூரிலும் இரண்டு கைப்பிடி அளவு தொழுவுரம் வைக்க வேண்டும். இயற்கை முறையில் சாகுபடி செய்தால் நோய் எதிர்ப்புச் சக்தியும் கூடுதலாக இருக்கும்.

சில சமயங்களில் தூர் அழுகல் நோய் வரும். இந்நோய் தென்பட்டால், அந்தக் கொடியில் உள்ள வெற்றிலைகளைப் பறித்து விட்டு, அக்கொடியின் கீழ்ப் பகுதியை மண்ணுக்குள் பதியமிட்டு படர விட வேண்டும். அதிக வெயில் நேரங்களில் இலை வெளிறினால், கூடுதலாக தண்ணீர் பாய்ச்சினால் சரியாகி விடும்.

இலைச்சுருட்டுப் புழுக்கள் தாக்கினால்... வேப்பங்கொட்டைக் கரைசலைத் தெளிக்க வேண்டும். 5 கிலோ வேப்பங்கொட்டையை இடித்து 12 லிட்டர் பசு மாட்டுச் சிறுநீரில் 2 நாட்கள் ஊற வைத்தால் வேப்பங்கொட்டைக் கரைசல் தயார். இந்தக் கரைசலில் 300 மில்லியை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இதைத் தெளித்த மறுநாள் இதே அளவில் பஞ்சகவ்யா தெளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

நான்கு மாதங்களுக்கு ஒரு முறை உயரமாக வளர்ந்த கொடிகளின் தண்டையும் நுனியையும், இறுக்கமாகக் கட்ட வேண்டும். இதைதண்டயம் கட்டுதல்’(கொடிக்கட்டுதல்) என்பார்கள். அகத்தி, ஆமணக்கு, முள்முருங்கைச் செடிகளுக்கு குறுக்காக சவுக்குக் கம்பு கட்டி அவற்றிலும் கொடிகளைப் படர விடலாம்”.

வெற்றிலையில் ஆரோக்கியம்

வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச்சத்தும், 0.8% கொழுப்புச்சத்தும் உள்ளன. கால்சியம், கரோட்டின், தயாமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி ஆகியவையும் வெற்றிலையில் உள்ளன. வெற்றிலைக்கு ‘நாக இலை’ என்ற பெயரும் உண்டு. பாம்பின் விஷத்தையே முறிக்கும் அளவுக்கு வீரியம் கொண்டதால் சித்தர்கள் வெற்றிலையை நாக இலை என்று குறிப்பிட்டுள்ளனர். வெற்றிலையுடன் மிளகை தட்டிக் கொடுத்தால் பூச்சிக்கடிபட்டவர்களுக்கு விஷம் இறங்கும். இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் 9 மிளகை மடக்கி வாயில் போட்டு மென்று விழுங்கினால் தேள்கடி விஷம் இறங்கும்.

வெற்றிலை உமிழ்நீரைப் பெருக்கி பசியைத் தூண்டும் தன்மை கொண்டது. வெற்றிலைச்சாறுடன் நீர் கலந்த பாலைக் குடித்தால் சிறுநீர் பிரியும், சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குறையும். வெற்றிலையை கடுகு எண்ணையில் இளஞ்சூட்டில் வதக்கி மார்பில் கட்டினால் குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் அதிகம் சுரக்கும். குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணையில் தடவி ஆசன வாயினுள் செலுத்தினால் மலம் வெளியேறும்.

தேங்காய் எண்ணையில் வெற்றிலையை சேர்த்து சூடாக்கி வெற்றிலை சிவந்தவுடன் இறக்கி அந்த எண்ணையைத் தடவினால் தோல், சொறி , சிரங்கு நோய்கள் குணமாகும். வெற்றிலை வேரை சிறிதளவு எடுத்து மென்று வந்தால், குரல்வளம் பெருகும்.

வெற்றிலை விழா :

மதுரை மாவட்டம், மேலூர் அருகிலுள்ள வெள்ளூர் கிராமத்தில் ஊர் ஒற்றுமைக்காவும், விவசாயம் செழிக்கவும்... ஒவ்வொரு ஆண்டும் வெற்றிலைப் பிரி விழா கொண்டாடி வருகிறார்கள். வெள்ளூர் கிராமத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படக்கூடிய வெள்ளூரைச் சுற்றியுள்ள 58 கிராமங்கள் ஒன்றிணைந்து, ‘வெள்ளூர் நாடு’ என்றழைக்கப்படுகிறது. இந்த 58 கிராமங்களில் வசிக்கும் மக்கள் மூண்டவாசி, சலிப்புளி, நண்டன்... என 11 பிரிவுகளாக உள்ளனர்.

ஒரு பிரிவை நிர்வகிக்க இரண்டு அம்பலக்காரர், இரண்டு இளங்கச்சிகள் என 44 நபர்கள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் நாளன்று இந்த 44 பேரும் இடுப்பில் வெள்ளை வேட்டியும், தலையில் தலைப்பாகையும் கட்டிக்கொண்டு வெள்ளூரிலுள்ள கருங்கல் மந்தையில் ‘ப’ வடிவில் அமர்ந்து... 58 கிராமங்களுக்கும் வெற்றிலைகளைப் பிரித்துக் கொடுக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டினரும் அந்த வெற்றிலையைப் பெற்றுக் கொண்டு மாடுகளை நிலத்துக்கு ஓட்டிச் சென்று அந்த வெற்றிலையை வைத்து பூஜை செய்து பிறகு உழுகிறார்கள். இப்படி கோடை உழவு செய்தால், அந்த ஆண்டு நல்ல மழை பெய்து, விவசாயம் செழிக்கும் என்பது இவர்களது நம்பிக்கை.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

Saturday 28 October 2017

செம்மறி ஆட்டைத் தாக்கும் நோய்கள் :

1. கோமாரி நோய்
2. வெக்கை சார்பு நோய்
3. ஆட்டு அம்மை
4. நீலநாக்கு நோய்
5. அடைப்பான் நோய்
6. தொண்டை அடைப்பான்
7. துள்ளுமாரி நோய்
8. அக ஒட்டுண்ணிகள்
9. புற ஒட்டுண்ணிகள்
10. ஒரு செல் நுண்ணுயிரி நோய்கள்
11. குடற்புழு நீக்கம்
12. புருஸெல்லோசிஸ்
13. டெட்டானஸ் (அ) இரணஜன்னி
14. லிஸ்டிரியோசிஸ் (அ) சுழல் நோய்
15. விப்ரியோசிஸ் கருச்சிதைவு நோய்

1) கோமாரி நோய் அறிகுறிகள் :

நாக்கு, மடி மற்றும் குளம்புகளுக்கிடையில் கொப்புளமும் புண்ணும் காணப்படுதல், தீவனம் எடுக்க இயலாமை, காய்ச்சல், குட்டிகளில் இறப்பு, சினை ஆடுகளில் கருச்சிதைவு ஏற்படுதல்.

சிகிச்சை :

சமையல்சோடா உப்புக் கலந்த நீரில் கால் மற்றும் வாய்ப்புண்களை கழுவி மருந்திடுதல்.போரிக் பவுடருடன் கிளிசரின் கலந்து வாயில் தடவவேண்டும்.

2) வெக்கை சார்பு நோய் :

செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளைத் தாக்கும் மிகக்கொடிய தொற்றுநோய் ஆகும்.

அறிகுறிகள் :

வாய்ப்புண், மூச்சுத்திணறல், கழிச்சல், கண் மற்றும் மூக்கிலிருந்து நீர் வடிதல், காய்ச்சல்.

தடுப்பு முறை :

தடுப்பூசி போடுதல் அவசியம்.

3) ஆட்டு அம்மை :

வெள்ளாடுகளை விட செம்மறியாடுகளையே அதிகம் தாக்குகிறது.

அறிகுறிகள் :

உதடு, மூக்கு, கண் இமை, காது, காலின் அடிப்பகுதி, மடி, இனப்பெருக்க உறுப்பு போன்ற இடங்களில் முத்துப்போன்ற அம்மைக் கொப்புளங்கள் காணப்படுதல், காய்ச்சல், உணவு உட்கொள்ளாமை.

4) நீலநாக்கு நோய் அறிகுறிகள் :

காய்ச்சல், சளி, தும்மல், இருமல், சுவாசிப்பதில் சிரமம், சளி கெட்டியாவதால் மூக்கடைப்பு ஏற்படுதல், நான்கு நாட்களில் உதடு, மூக்கு, நாக்கு, குளம்பின் மேல் பகுதி மற்றும் கீழ்த்தாடை வீங்குதல், நாக்கு நீல நிறமாக மாறுதல், தீவனம் உட்கொள்ளாமை மற்றும் ஒரு வாரத்தில் இறந்து விடுதல்.

சிகிச்சை :

போரிக் பவுடரைத் தேங்காய் எண்ணெயில் கலந்து, புண்ணுக்கு தினம் இரு முறை போடவேண்டும்.நோய் எதிர்ப்பு மருந்துகள் 5 நாட்களுக்குள் கொடுக்கவேண்டும்.மென்மையான தீவனங்களை கொடுக்கவேண்டும்.

நுண்ணுயிரி நோய்கள் :

5) அடைப்பான் நோய் அறிகுறிகள் :

எந்தவித நோய் அறிகுறிகளும் இல்லாமல் திடீர் இறப்பு, இறந்தபின் ஆசனவாய், மூக்கு, காது போன்றவைகளிலிருந்து உறையாத கருஞ்சிவப்பு இரத்தம் வெளியேறுதல்.

தடுப்பு முறை :

இறந்த ஆடுகளை ஆழமாகக் குழிவெட்டி சுண்ணாம்புத் தூள் தெளித்து மூடிவிடவேண்டும். தடுப்பூசி போடுதல் அவசியம்.

6) தொண்டை அடைப்பான் :

அறிகுறிகள் :

பாதிக்கப்பட்ட ஆடுகளில் அதிகக் காய்ச்சல், மூச்சுவிட சிரமம், இருமல், கீழ்த்தாடையில் வீக்கம், திடீரென இறந்து விடுதல்.

சிகிச்சை :

ஆரம்பகால நோய்க்கு நோய் எதிர்ப்பு மருந்து கொடுத்தல் மற்றும் நோய் தீர்க்கும் முன் தடுப்பூசி போடுதல் அவசியம்.

7) துள்ளுமாரி நோய் :

எல்லா வயது ஆடுகளையும் பாதிக்கும். ஆனால் இளம் வயது ஆடுகளே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றன. மழைக்குப்பின் புதிதாக முளைத்த பசுமையான புல் வெளியில் மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடுகளுக்கு இந்நோய் ஏற்படும்.

அறிகுறிகள் :

ஆடுகள் மேயாமல் சோர்ந்து வயிற்று வலியால் பற்களைக் கடிக்கும்.சாணம் இளகி, இரத்தம் கலந்திருக்கும்.ஆடுகள் நடக்கும் போது கால்கள் பின்னி, கழுத்து விரைத்து, கண்கள் பிதுங்கி, மயங்கி தலை சாய்ந்து கீழே விழும்.இறப்பதற்கு முன் வலிப்பு ஏற்பட்டு துள்ளி விழும்.

தடுப்பு முறைகள் :

சூரிய உதயத்திற்குப் பின் ஆடுகளை 1 மணி நேரம் கழித்து மேய்ச்சலுக்கு அனுப்பவேண்டும்.பருவமழைக்கு முன் தடுப்பூசி போடுதல் அவசியம்.

ஒட்டுண்ணி நோய்கள் :

8) அக ஒட்டுண்ணிகள் :

ஈரல் புழு, இலைப்புழு, உருண்டைப் புழு வகையைச் சேர்ந்த வயிற்றுப்புழு மற்றும் பருப்புழுக்கல் ஆகும்.

பரவுதல் :

மேய்ச்சலின் போது ஆடுகளின் வயிற்றுக்குள் செல்கின்றன.

அறிகுறிகள் :

இரத்தசோகை, பசியின்மை, எடைக்குறைதல், தள்ளாடி நடத்தல், தாடை வீங்குதல், உரோமம் கொட்டுதல், வயிற்றுப்போக்கு.

தடுப்பு முறைகள் :

குடற்புழு நீக்கம் செய்தல்சாணத்தை அப்புறப்படுத்தி, தரையைக் கழுவுதல்கிருமி நாசினி மருந்தைப் பயன்படுத்தி சுத்தம் செய்தல்.

9) புற ஒட்டுண்ணிகள் :

உண்ணி, பேன், தெள்ளுப்பூச்சி மற்றும் சிற்றுண்ணிகள் (mite) ஆகும்.

பாதிப்புகள் :

தோல் தடித்தல், சொறி உண்டாகுதல், முடி உதிர்தல், இரத்த சோகை, இரத்த ஒட்டுண்ணிகள் பரவுதல், தேய்த்துக் கொள்ளுதல், கடித்துக் கொள்ளுதல், அஜீரணம், இளைத்து எடைக்குறைதல் போன்றவையாகும்.மருந்துக் குளியல், தெளித்தல் (அ) தூவுதல் முறை, இவற்றிற்கு கீழ்க்கண்ட மருந்துகளில் ஒன்றைப் பயன்படுத்தலாம்.

மாலத்தியான் 0.5 சதவிகிதம்,
சுமித்தியான் 1/100 (தெளிக்கும் முறை)
பியூட்டாக்ஸ் 0.02 சதவிகிதம்
லிண்டேன் 0.03 சதவிகிதம்
ஐவர்மெக்டின் 0.2 மி.கி / கி.கி உடல் எடைக்கு

10) ஒரு செல் நுண்ணுயிரி நோய்கள் :

இவற்றில் இரத்தக் கழிச்சல் நோய் முக்கியமானதாகும். ஆட்டுக் குட்டிகளை அதிகம் தாக்கும்.

அறிகுறிகள் :

காய்ச்சல்சளி மற்றும் இரத்தத்துடன் கழிச்சல்வாலைத் தூக்கி முக்குதல்

தடுப்பு முறை :

தரை ஈரமில்லாமல் உலர்ந்த நிலையில் இருக்கவேண்டும்.குட்டிகளுக்கு பாலில் ஆம்பரோலியம் கலந்துக் கொடுத்தல்குட்டிகள் சாணத்தை நக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அம்மோனியா 10 விழுக்காடு கொட்டிலில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.கன்று வீச்சு நோய்டெட்டானஸ் சுழல் நோய்

ஆடுகளின் எடை அதிகரிப்பதற்கும், குட்டிகளில் இறப்பை தவிர்க்கவும் குடற்புழு நீக்கம் செய்வது அவசியம்.

11) குடற்புழு நீக்க அட்டவணை :

ஆடுகளின் வயது :

பரிந்துரைகள் :

2வது மாதம் நாடாப்புழுக்களுக்கான மருந்து
3வது மாதம் நாடாப்புழுக்களுக்கான மருந்து
4வது மாதம் நாடாப்புழுக்களுக்கான மருந்து
5வது மாதம் உருண்டைப்புழுக்களுக்கான மருந்து
6வது மாதம் உருண்டைப்புழுக்களுக்கான மருந்து
9வது மாதம் உருண்டை / நாடாப்புழுக்களுக்கான மருந்து
12வது மாதம் தட்டைப் புழுக்களுக்கான மருந்து

ஆறு மாதம் வரை ஆட்டுக்குட்டிகளுக்கு மாதம் ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்யவேண்டும். ஆறு மாதத்திற்கு பிறகு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அதாவது பருவமழைத் தொடங்குவதற்கு முன்பு ஒரு முறையும், பருவ மழையின் போது ஒரு முறையும், பருவ மழைக்குப்பின் இருமுறையும் கொடுக்கவேண்டும்.

மாதம் :

பரிந்துரைகள் :

ஜனவரி - மார்ச் : தட்டைப்புழுவிற்கான மருந்து
ஏப்ரல் - ஜீன் : உருளை / நாடாப்புழுக்களுக்கான மருந்து
ஜீலை - செப்டம்பர் : தட்டைப் புழுவிற்கான மருந்து
அக்டோபர் - டிசம்பர் : உருளை / நாடாப்புழுக்களுக்கான மருந்து

ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை.

ஆடுகளுக்கு தகுந்த குடற்புழு மருந்தைத் தேர்வு செய்யவேண்டும்.தூள் மருந்தைப் பயன்படுத்தும் பொழுது வெதுவெதுப்பான நீரில் கலந்து, சிறிது கரையாத மருந்துத் துகள்களும் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.அதிகாலையில், வெறும் வயிற்றுடன் உள்ள ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யவேண்டும்.மருந்துக் கலவையை வாயின் வழியாக ஊற்றும் பொழுது புரையேறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.குடிநீரில் குடற்புழுநீக்க மருந்தும் நோய் எதிர்ப்பு மருந்தும் ஒன்றாக கலந்துக் கொடுக்கக்கூடாது.குடற்புழுக்களின் வகைகளையும் முட்டைகளையும் அறிந்து மருந்து கொடுப்பது சிறந்தது.தொடர்ந்து ஒரே மருந்தைக் கொடுக்காமல் மாற்றித் தருவது அவசியம்.

12) புருஸெல்லோசிஸ் :

இது நுண்ணுயிரிகளால் விழிச்சவ்வு, இமைப்படலம் வழியாகவும் உணவு மூலமாகவும் பரவுகிறது. பாதிக்கப்பட்ட ஆட்டின் பால் கீழே சிந்தினாலும் அதிலுள்ள ஆயிரக்கணக்கான கிருமிகளால் பரவும் இந்நோயினால் பாதிக்கப்பட்ட ஆட்டின் குட்டி இறந்து விடுவதால் அதிகப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

அறிகுறிகள் :

இந்நோய் பாதிக்கப்பட்டால் சினையாட்டின் கரு கலைந்து விடலாம் அல்லது இரண்டு மூன்று மாதங்களில் கருவானது இறந்து பிறந்துவிடும். இது எளிதில் பரவக்கூடிய நோய் ஆதலால் அடுத்தடுத்து சினை ஆடுகள் வீச்சுக் குட்டிகளை ஈனும், இந்நோய் தாக்கப்பட்ட ஆடுகள் அடுத்து இனக்கலப்பு செய்வது கடினம், செய்தாலும் குட்டிகள் இறந்துபோகலாம்.

கட்டுப்படுத்தும் வழிகள் :

இந்நோய் பாதித்துள்ளதை தனிப்பட்ட சோதனைகள் மூலம் மட்டுமே உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். நிலையற்ற காய்ச்சல் பாதித்த மனிதர்களாலும் இந்நோய் பரவ வாய்ப்புள்ளது, மடி வீக்கம் காணப்படுவதால் இனப்பெருக்க அளவு குறையும்.

இந்நோய்க்குச் சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை ஆதலால், நோய்த்திறன் வீரியம் குறைக்கப்பட்ட, கிருமிகள் நீக்கப்பட்ட தடுப்பூசிகளைச் சரியான சமயத்தில் போடுதல் நலம். முறையான பராமரிப்பு முறைகளை மேற்கொள்ளல் அவசியம்.

13) டெட்டானஸ் (அ) இரணஜன்னி :

இது மனிதனில் அல்லது விலங்குகளில் ஏற்படும் காய்ச்சல் போன்ற நோய்களால் எளிதில் பரவக்கூடிய நோய் ஆகும்.

பரவல் :

காயங்கள் மூலம் இந்நோய் எளிதில் பரவுகிறது. காயங்களில் உள்ளக் கிருமிகளின் ஸ்போர்கள் எளிதில் வளர்ச்சியடைந்த பெருகுகின்றன. இவை சில விஷப்பொருட்களை உற்பத்தி செய்கின்றன. அவற்றை ஆடுகளின் உடல் எளிதில் கிரகித்துக் கொள்கிறது. மண், ஆட்டின் கழிவுகளில் உள்ள நுண்ணுயிர்கள் காயங்களில் தொற்றிக் கொள்கின்றன. இவை ஆட்டின் குடல் பகுதிகளுக்குச் சென்று நோயைப் பரப்பத் தேவையான விஷப்பொருட்களை உற்பத்தி செய்கின்றன.

அறிகுறிகள் :

இந்நோய் தாக்கியுள்ளதை அறிய, 3 நாட்களிலிருந்து 2 வாரங்கள் வரை ஆகலாம். இது பொதுவாக எல்லா கால்நடைகளையும் தாக்கினாலும், குதிரைகளிலும் செம்மறி ஆட்டுக் குட்டிகளிலும் அதிகமாகத் தாக்குகிறது.

இந்நோய்த் தாக்கிய ஆடுகளின் கழுத்து, தலை, வால் ஆகியவை விறைத்துக் கொள்ளும். ஆடுகள் நகர முடியாமல் அவதிப்படும். தசைகள் இழுத்துப் பிடித்துக் கொள்வதால் வலி இருக்கும். இவ்வாறு உடல் பகுதிகள் விறைத்துக் கொள்வது நோய் தாக்கி 12 மணியிலிருந்து 24 மணி நேரத்திற்குள் தெரியும். குட்டி 4-5 மாதத்தில் ஆட்டின் குட்டி இறந்து பிறக்கும். முடிவில் காதுகள் நேராகவும், மூக்குப் பகுதிகள் விரிந்தும், சவ்வுகள் நீட்டிக்கொண்டிருக்கும். வாய்கள் விறைத்துக் கொள்வதால் தீவனங்களை மெல்ல முடியாது. எனவே தான் இது ‘வாய்ப்பூட்டு’ நோய் எனப்படும்.

நோய்க்கட்டுப்பாடு :

சரியான சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம். காயடிக்கும் போது எந்த நோய்த் தொற்றும் இன்றிப் பார்த்துக் கொள்ளுதல் நலம். 3 வார இடைவெளிகளில் 2 ஊசிகள் அளித்து எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம்.

முதலில் விஷம் எதிர்ப்பு ஊசி போட்டுப் பின்பு காங்களுக்குச் சரியான சிகிச்சையளிக்க வேண்டும். பென்சிலின் மருந்து அளிப்பதும் நன்மை பயக்கும். பாதிக்கப்பட்ட ஆட்டைத் தனி இருட்டறையில் வயிற்றில் குழாய் உணவளித்துப் பராமரிக்கலாம்.

14) லிஸ்டிரியோசிஸ் (அ) சுழல் நோய் :

பரவல் :

இந்நோய் பரப்பும் கிருமிகள் சிறுநீர், பால், கழிவுகள் போன்ற கழிக்கப்பட்ட விலங்குகளின் கழிவுகளின் மூலம் பரவுகிறது. இது மனிதன் மற்றும் விலங்குக் கழிவுகளில் பல மாதங்கள் வரை வாழக்கூடியது. கால்நடைகளில் காணப்படும் இரத்தம் உறிஞ்சும் உனி போன்ற ஒட்டுண்ணிகளின் இரத்தத்திலும் இந்நோய்க் கிருமிகள் காணப்படுகின்றன.

அறிகுறிகள் :

குளிர் காலத் தொடக்கத்திலிருந்து தான் இந்நோய் பரவ ஆரம்பிக்கும். மூளைத் தண்டுவட ஏற்பட்டு தண்டுவட நரம்புப் பிடிப்பு ஏற்படும். ஆடுகள் குரல் வளை, தாடை போன்றவற்றில் தசைகள் பிடித்துக் கொள்வதால் பக்கவாதம் போன்று இருக்கும். பாதிப்பு அதிகமாக இல்லாத ஆடுகள் மட்டுமே உயிர் பிழைக்க முடியும். இரத்தத்தில் நுண்ணுயிரிகள் பெருகி மூளைக் காய்ச்சலை அதிகரிக்கும். பாதிக்கப்பட்ட சினை ஆடுகளின் குட்டி 4-5 மாதத்தில் இறந்து விடும். கோழிகளில் இந்நோய் தாக்கியவுடன் கழுத்துப்பிடிப்பு, கால்கள் தடுமாற்றம் போன்ற அறிகுறிகளுடன் இறந்து விடும்.

சிகிச்சை :

டெட்ராசைக்ளின் மருந்து கால்நடைகளில் செம்மறி ஆடுகளை விட நல்ல பயன் தருகிறது. இம்மருந்தை எவ்வளவு விரைவில் தருகிறோமோ அவ்வளவுக்கு பலன் கிடைக்கும். பாதிக்கப்படாத ஆடுகளைக் கொன்று புதைத்து விடுதல் மற்ற ஆடுகளுக்குப் பரவாமல் தடுக்க உதவும்.

15) விப்ரியோசிஸ் கருச்சிதைவு நோய் :

இந்நோய் ஆண் ஆடுகளின் இனப்பெருக்க உறுப்புகள் மூலமாக பரவுகிறது. பாதிக்கப்பட்ட கிடாக்கிலிருந்து எடுக்கப்பட்ட விந்தணுக்களில் இந்நோய் பரப்பும் கிருமிகள் அதிகம் காணப்படுகின்றன. விந்தணுவை சேகரித்து வைக்கும். மிகக்குறைந்த வெப்பநிலைகளில் கூட இவ்வுயிரிகள் உயிர் வாழக்கூடியவை. பாதிக்கப்பட்ட பெண் கால்நடைகளிலும் இந்நோய் காணப்படுகிறது.

அறிகுறிகள் :

மந்தையில் கால்டைகள் சினையாவது குறையும் போது தான் மலட்டுத்தன்மை பாதிப்பு தெரியவரும். முதல் முறை சினைக்கு வரும் மாடுகள் அதிக அளவில் இந்நோயால் பாதிக்கப்படுகின்றன. கரு கலைதல் அல்லது கரு இறந்து பிறத்தல் அல்லது 6வது மாதத்தில் அதிகமாக இருக்கும். பாதிக்கப்பட்ட பொலிக் கிடாக்களோ அவற்றின் விந்தணுக்களிலோ எந்த ஒரு மாற்றமும் தெரிவதில்லை. பாதிக்கப்பட்ட ஆடுகள் இனக்கலப்பு செய்யும் போது ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குப் பரவுகிறது. செம்மறியாடுகளில் பாதித்தவுடன் சினைப்பையிலிருந்து திரவம் வழிந்து சினைக் கால முடிவில் வீச்சுக் குட்டியாக வெளிவந்துவிடும்.

கட்டுப்படுத்தும் முறைகள் :

குளோரடெட்ராசைக்ளின் போன்ற நோய்க்கிருமி கட்டுப்படுத்தியைப் பயன்படுத்துவதால் ஓரளவு எதிர்ப்புச் சக்தி கிடைக்கலாம். வீரியம் குறைந்த தடுப்பூசியைப் பயன்படுத்தி இதற்கு எதிர்ப்புச் சக்தியை பாதிக்கப்படாத ஆடுகளுக்குக் கொடுக்கலாம். எனினும் பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு சிகிச்சையளிப்பது கடினம்.ஆணினப்பெருக்க உறுப்பின உறையின் மீது நோய்க்கட்டுப்படுத்தும் மருந்துகளை அளிக்கலாம். பாதிக்கப்பட்ட பெட்டை ஆடுகளுக்கு சிகிச்கைகள் ஏதும் இல்லை.



Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm