Thursday 30 March 2017

சிறிய குளத்தில் மீன் வளர்ப்பு :


மீன் வளர்ப்புக்கு ஏக்கர் கணக்கில் குளம் தேவையில்லை. குறைந்த பரப்பிலான குளத்தில் விரால் மீன்களை வளர்த்து பலனடைந்துள்ளதாக பசுமை விகடனில் ஒரு கட்டுரை வந்துள்ளது. வேலூர் மாவட்டம் அண்ணாத்துரை அவர்களின் அனுபவமாக வந்துள்ள இந்தக் கட்டுரை தனியே ஒரு குளம் வெட்டி அவர் செய்துள்ள பணிகளைக் காட்டுகிறது.

குளங்களைக் குத்தகைக்கு எடுத்து அதில் மீன் வளர்த்து அனுபவம் பெற்ற இவர், விரால் வளர்ப்பில் இலாபம் உண்டு என்று கேள்விப்பட்டு கிணறு மற்றும் ஏரிகளில் வளர்த்து அதை உண்மை என்றும் அறிந்த இவர் தனது நிலத்தில் குளம் வெட்டி மீன் வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்.

வளர்ப்பு முறை :

ஐந்து சென்ட் நிலத்தில், எட்டு அடி ஆழ குளம் வெட்டி, இரண்டு டிராக்டர் களிமண் கொண்டு நிரப்பி… 5 அடி உயரத்துக்கு தண்ணீரை நிரந்தரமாக நிறுத்த வேண்டும். தண்ணீர் அதிகமாக நிறுத்தும்போது, வெயிலின் தாக்கம் குறைவாகவும், திருட்டுப் போகாமலும் இருக்கும். தண்ணீர் நிரப்பிய பிறகு 2,000 விரால் மீன்குஞ்சுகளைக் குளத்தில் விடவேண்டும். ஒரு மாத வயதுடைய குஞ்சுகளாகப் பார்த்து வாங்கி விடுவதுதான் நல்லது. அதற்கும் குறைவான வயதுடைய குஞ்சுகளை விட்டால்… சேதாரம் அதிகமாக இருக்கும். ஒரே அளவுள்ள குஞ்சுகளாக விடுவதும் முக்கியம். இல்லாவிட்டால், பெரியக் குஞ்சுகள், சிறியக் குஞ்சுகளைத் தின்றுவிடும். மீன்குஞ்சு விட்ட மறுநாள், தாமரை அல்லது அல்லிக் கிழங்குகளில் நான்கை ஏரிகளில் இருந்து எடுத்து வந்து, குளத்தின் நான்கு பகுதிகளிலும், கரையில் இருந்து ஐந்து அடி இடைவெளிவிட்டு, குளத்துக்குள் ஊன்றிவிட வேண்டும். கிழங்கு வளர்ந்து படர்ந்து விடும். அவற்றின் நிழல் குளிர்ச்சியாக இருக்கும். வெயில் நேரங்களில் மீன்கள் வந்து தங்கிக்கொள்ளும்.

தீவனச் சேதத்தைக் குறைக்கும் தெர்மாக்கூல்!

மீன்குஞ்சுகளுக்கு, தீவனம் கொடுப்பதற்கு தெர்மாக்கூல் அட்டையை தண்ணீரோடு ஒட்டி இருப்பது போன்று நான்கு இடங்களில் வைக்க வேண்டும். குச்சிகளை நட்டு, அதன் மேல் தெர்மாக்கூல் அட்டையைக் குத்தி வைக்கலாம். தெர்மாக்கூல் மீது தீவனத்தைப் போட வேண்டும். மீன்கள் தெர்மாக்கூல் மீது ஏறி, தீவனத்தைச் சாப்பிடும். இதனால் தீவன சேதாரம் ஏற்படாது.

கடலைப் பிண்ணாக்குத் தூளை ஆரம்பத்திலிருந்து 20 நாட்கள் வரை 2 கிலோவும்; அடுத்த 10 நாட்களுக்கு 6 கிலோவும்; அடுத்த 15 நாட்களுக்கு 10 கிலோவும் இட வேண்டும். அதற்கு பிறகு, தீவனத்துக்காக 10 கிலோ ஜிலேபி மீனைக் குளத்துக்குள் விடவேண்டும். இவற்றிலிருந்து உற்பத்தியாகும் மீன்குஞ்சுகளை, விரால் மீன்கள் சாப்பிட்டுக் கொள்ளும்.

45-ம் நாளுக்கு மேல் 75-ம் நாள் வரை தினமும் 10 கிலோ கோழிக்குடல்களை வேகவைத்து ஒரு அங்குல நீளமுள்ளதாக வெட்டிப் போட வேண்டும். 75-ம் நாள் முதல் 100 நாட்கள் வரை தினமும் 25 கிலோ; 100-வது நாளில் இருந்து 240-வது நாள் வரை (எட்டாம் மாதம் வரை) தினமும் 35 கிலோ என்ற அளவுகளில் கோழிக்குடலை வெட்டி, காலை, மாலை என்று இரண்டாகப் பிரித்து தீவனமாக இடவேண்டும்.

60-ம் நாள் கட்லா, ரோகு, மிர்கால் போன்ற வகைகளில் இரண்டு மாத வயதுடைய 500 குஞ்சுகளைக் குளத்தில்விட வேண்டும். இப்படி செய்யும்போது, மேல் பகுதியில் இருக்கும் புழுக்கள் மற்றும் தீவனங்களை சாப்பிட்டே இந்த குஞ்சுகள் எளிதாக வளர்ந்துவிடும்.

எட்டு மாதத்தில் முக்கால் கிலோ!

விரால் மீனை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க… மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தண்ணீரை மாற்ற வேண்டும். விராலைப் பொறுத்தவரை அம்மை நோய்தான் தாக்கும். அம்மைத் தாக்குதல் தென்பட்டால், 5 கிலோ மஞ்சள் தூளில், ஒரு கிலோ கல் உப்பைக் கலந்து, குளத்து நீரில் கலந்துவிட்டால் இரண்டு, மூன்று நாட்களில் சரியாகி விடும்.

இந்தப் பராமரிப்பு மட்டும் செய்தாலே… நான்கு மாதத்தில் 400 முதல் 500 கிராம் எடையும்; எட்டு மாதத்தில் முக்கால் கிலோ முதல் ஒரு கிலோ எடையும் வந்துவிடும்.’

ஐந்து சென்டில்… 1,25,000!

நிறைவாக விற்பனை, வருமானம் பற்றி விளக்க ஆரம்பித்த அண்ணாதுரை, ”5 சென்ட் குளத்துல விடப்பட்ட 2,000 மீன்குஞ்சுகள்ல பாதிக்குப் பாதி சேதாரமா போனாலும், 1,000 மீன் கிடைக்கும்.
எட்டு மாசத்துல சராசரியாக முக்கால் கிலோ அளவுக்கு வளர்ந்துடும்னு வெச்சுக்கிட்டா… மொத்தம் 750 கிலோ மீன்கள் கிடைக்கும். மொத்தமா விற்பனை செய்தா கிலோ 150 ரூபாய் விலையிலயும், நேரடியா விற்பனை செய்தா கிலோ 200 ரூபாய் விலையிலயும் விற்க முடியும். நான் நேரடியாத்தான் விற்கிறேன். கிலோ 200 ரூபாய் வீதம் 750 கிலோவுக்கு 1 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.

60-ம் நாள் குளத்துல விட்ட ரோகு, கட்லா வகைகள்ல பாதிக்குப் பாதி சேதாரமா போனாலும், 250 மீன்கள் கிடைக்கும். இதுவும் சராசரியா முக்கால் கிலோ எடைனு வெச்சுக்கிட்டாலும்… மொத்தம் 187 கிலோ மீன் கிடைக்கும். கிலோ 100 ரூபாய் வீதம் விற்பனை செய்தா 18 ஆயிரத்து 700 ரூபாய் கிடைக்கும். ஆகமொத்தம் 5 சென்ட் நிலத்துல இருந்து 8 மாசத்துல 1 லட்சத்தி 68 ஆயிரத்தி 700 ரூபாய் கிடைக்கும். செலவெல்லாம் போக… 1 லட்சத்தி 25 ஆயிரம் ரூபாய் லாபமா கையில நிக்கும்’



Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm
செம்மரம் வளர்ப்பில் சிக்கல் உண்டா?


கோயம்புத்தூர் வேளாண் காடுகள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் நாராயணசாமி, பதில் சொல்கிறார்.

“செம்மரம் வளர்ப்புக்கும் விற்பனைக்கும் சில கட்டுப்பாடுகள் இருப்பது உண்மைதான். உங்கள் நிலத்தில் செம்மரம் நடவு செய்தவுடன், கிராம நிர்வாக அலுவலரிடம், கிராமப் பதிவேட்டில் அதைப் பதிவு செய்யும்படி சொல்ல வேண்டும். பொதுவாக வெட்டப்பட்ட மரங்களைத் தடி மரங்கள் என்கிறோம். விவசாயி தனது பட்டா நிலத்திலுள்ள செம்மரங்களை வெட்டுவதற்கு வன அலுவலரிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும். வெட்டிய மரங்கள் இருப்பு வைக்க ‘சொத்துடைமைக் குறி’ (Property Mark) தடி மரங்கள் மீது குறியீடாக (வெட்டிய 15 நாட்களுக்குள்) அடையாளப்படுத்த வேண்டும்.

சொத்துடைமைக் குறி பதிக்கப்பெற்ற தடி மரங்களை வாகனங்களில் எடுத்துச் செல்வதற்கு முன் அனுமதி பெற வேண்டும். இதற்காக 1968-ம் ஆண்டு தமிழ்நாடு தடி மரங்கள் (Timber Transit Rules, 1965) எடுத்துச் செல்லும் விதிகளின்படி ஃபார்ம் II மூலம் வன அலுவலருக்கு உரிய கட்டணத்துடன் விண்ணப்பம் செய்து முன் அனுமதி பெற வேண்டும். வன அலுவலரிடம் எழுத்து மூலமாக அனுமதி பெற்ற பிறகே, தடி மரங்கள் எடுத்துச்செல்ல முடியும்.

செம்மரத்திற்கு வனத் துறையின் தலைவரிடமிருந்து சர்ட்டிஃபிகேட் ஆஃப் ஆர்ஜின் (Certificate Of Orgin) அதாவது செம்மரம் உற்பத்திச் சான்றிதழ், தமிழகத்தின் பூர்விக மரம் செம்மரம்தான் என்கிற சான்றிதழ் பெறப்பட வேண்டும்.

இதிலுள்ள சிக்கல் என்னவென்றால் ஆந்திர அரசு, செம்மரம் எங்கள் மாநிலத்தில் இயற்கையாக வளர்ந்த பூர்விக மரமாகும். தனிமரமாக, செம்மரம் வளர்க்க முடியாது எனவும் மற்ற மாநிலங்கள், தமிழகம் உட்பட யாருக்கும் மேற்படி சான்றிதழ் அளிக்க உரிமை என உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. உண்மையில், ஒரு காலத்தில் ஒருங்கிணைந்த சென்னை மாகாணமாக இருந்த ஆந்திர வனப்பகுதியில்தான் செம்மரங்கள் அதிகளவு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், ஆந்திர மாநிலம் தங்கள் பகுதியில் மட்டுமே செம்மரம் உள்ளது என்று சொல்லி வருகிறது.

ஆகவே, இயற்கையில் வளர்ந்த செம்மரம் என்கிற பூர்விகச் சான்றிதழ், தமிழகத்தில் வளர்ந்துள்ள செம்மரங்களுக்குக் கிடைப்பதில்லை. நமது விவசாயிகள் தமிழக அரசின் மூலம் ஆந்திர அரசு பூர்விக மரம் எனச் சொந்தம் கொண்டாடும் செம்மரம் உரிமையை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, தமிழகத்திலும் செம்மரங்கள் இயற்கையில் வளரும் என்றும் பூர்விகச் சான்றிதழ் தமிழக வனத்துறை வழங்கவும் அனுமதி பெற வேண்டும்.

மேலும் செம்மரங்கள் அரிய வகைத் தாவரமாக ஐயூசிஎன் (IUCN) என்கிற அமைப்பு சர்வதேச அளவில் குறியீடு செய்துள்ளது. செம்மரங்களைப் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் விவசாயிகளுக்குச் செம்மரம் வெட்டுவதற்கு அனுமதி அளிக்கக்கூடாது எனவும் உலகளாவிய மரப்பாதுகாப்பு அமைப்புகள் கோரியுள்ளன. இதனை இந்திய அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது.

ஆகவே செம்மரங்களை, தடி மரங்களாக வெட்டி ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்திய அளவில் உள்நாட்டில் விற்பனை செய்ய முடியும். ஒரு டன் மரம் ரூ. 1 கோடிக்கு விற்பனையாகிறது என்பது கவனிக்கத்தக்கது”.

தொடர்புக்கு, செல்போன் : 94433 84746, 99432 84746

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Wednesday 29 March 2017


மனதிற்கு இதம் தரும் வாத்து வளர்ப்பு :


இந்தியாவில் பரவலாக நாட்டு வகை வாத்துகள் வளர்க்கப்படுகின்றன. பல்வேறு வீடுகளில் அழகுக்காகவும் வாத்துக்களை வளர்க்கின்றனர். குறைந்த அளவு தீவனம் இருந்தால் கூட வாத்து வளர்க்க இயலும். நீரில் நீந்தும் வாத்துக்களை பார்க்கும் போதே மனதில் உற்சாகம் ஊற்றெடுக்கும். பிற பறவையினங்களைப் போல வாத்துகளை தாக்கும் நோய்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. வாத்து வளர்க்க தேவையான தொடர்செலவுகள் மற்றும் பராமரிப்பு செலவுகள் கோழியினங்களை ஒப்பிடும் போது மிகவும் குறைவு. முறையாக வாத்து வளர்ப்பை அறிந்து, அதை கடைபிடிப்பது அவசியம்.

பங்களா வாத்து

கூஸ் வாத்து என்பது வாத்து வகையை சார்ந்தது. கூஸ் வாத்து ஒரு சில இடங்களில் மடை வாத்து என்றும் பங்களா வாத்து என்றும் அழைக்கப்படுகின்றன. கூஸ் வாத்துக்கள் வேகமாகவும், மேய்ச்சலில் உள்ள புல் அதிகமாகவும், நோய் எதிர்ப்புத் தன்மை அதிகம் கொண்டவையாகவும் உள்ளது.இவற்றை பராமரிப்பதற்கு குறைந்த அளவு இடவசதி இருந்தாலே போதுமானது ஆகும்.

வளர்ப்பும் பராமரிப்பும் :

இந்த கூஸ் வகை வாத்துக்கள் இறைச்சிக்காவும், அழகுக்காகவும் வளர்க்கப்பட்டு வருகின்றன. மேலும் இவை காவல்காப்பதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கோழியை போல பண்ணை வீடோ, அதிக பராமரிப்பு செலவோ தேவையில்லை. கூஸ் வாத்தும், வாத்துக்களை போன்றே நீர் நிலைகளிலும், அறுவடை செய்த விளைநிலங்களில் உள்ள தானியங்களையும் உண்டு வாழக்கூடியது.4 முதல் 20 கூஸ் வாத்துக்களை வீட்டின் புறக்கடையில் வளர்க்கலாம். அவ்வாறு வளர்க்கும் பொழுது சமையல் கழிவுகளை தீவனமாக பயன்படுத்தலாம்.

தண்ணீர் :

சுத்தமான தண்ணீர் அவசியம் அப்பொழுதுதான் நோய் தாக்குதல் ஏற்படாது. அவ்வப்போது தண்ணீரை சோதனை செய்து வெளியேற்றிவிட்டு சுத்தமான தண்ணீரை நிரப்பவேண்டும். தண்ணீர் தொட்டியில் சில நேரம் அவை உணவுகளை தேடினாலும், புல் தரையில் இறங்கியும் அவை மேய்கின்றன. எனவே வாத்துக்களுக்கு தேவையான வைட்டமின், தாதுப்பொருட்கள் நிறைந்த உணவினை அளிக்கவேண்டும்.

இளைப்பாற நிழல் :

வாத்துக்கள் எப்பொழுதுமே தண்ணீரில் இருப்பதில்லை. எனவே தண்ணீரின் அருகில் நிழல் தரும் மரங்கள், புல்வெளிகளில் சிறு குடில்போல அமைத்து அவை இளைப்பாற வசதி ஏற்படுத்தலாம்.

நோய் தாக்குதல் :

வாத்து காலரா, வாத்து பிளேக் போன்ற நோய்கள் வாத்துக்களை தாக்குகின்றன. இந்த நோய்களிலிருந்து வாத்துகளை பாதுகாப்பதற்கு தடுப்பூசி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். வாத்து காலராவிற்கு 3 முதல் 4 வாரத்திற்கும், வாத்து பிளேக்கிற்கு 8 முதல் 12 வாரத்திற்குள்ளும் தடுப்பூசி போடப்பட வேண்டும். நாய், பூனைகள் போன்றவைகளிடம் இருந்தும் வாத்துக்களை பாதுகாக்கவேண்டும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm
கனஜீவாமிர்தம்:

தேவையான பொருட்கள் :
நாட்டு பசும் சாணம்-100 கிலோ,
நாட்டு மாட்டு கோமியம் -15 லிட்டர்,
வெல்லம்-2 கிலோ,
ஏதேனும் பயறு வகை மாவு   – 2 கிலோ
தயாரிப்பு முறை :
ஒரு பத்திரத்தில் நட்டு பசும் கோமியம் , பயறுவகை மாவு , வெள்ளம் ஆகியவற்றை நன்றாகக் கரைத்து கொள்ளவும் . 100 கிலோ பசும் சாணத்தை மர நிழலில் பரப்பி கரைத்து வைத்துள்ள கரைசலை அதன் மேல் சமமாக தெளிக்கவும். கன ஜீவமிர்த்த படுக்கையை சுற்றி ½  அடி விட்டு சமையலுக்கு பயன் படும் மிளகாய் பொடியை சிறிது துவி விடவும் .( எறும்புகளிடம் இருந்து பாதுகாத்து வைக்க .)  லேசாக உலர்ந்தவுடன் உருண்டையாக்கி சேமிக்கவும் .
இந்த சேமிப்பு கலவையை பயன் படுத்தும் போது இலேசாக  மாட்டுச் கோமியம்  அதன் மீது தெளித்து, புட்டு மாவு பதத்தில் பயன்படுத்தலாம்.
பயன்கள் :
நீர் குறைவான இடங்களில் ஜிவாமிர்தம் பதிலாக கனஜீவாமிர்தம் பயன்படுத்தலாம் . ஜிவாமிர்தம் கிடக்கும் அனைத்து பயன்களும் இதிலும் கிடைக்கும் .
Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm
கருங்குறுவை சாகுபடி..!


நாற்பது சென்ட் நிலத்தில் கருங்குறுவை நெல் சாகுபடி..

கருங்குறுவை ரகத்தின் வயது 110 நாட்கள். இது, மோட்டா ரகம். நாற்பது சென்ட் நிலத்தில் சாகுபடி செய்ய 5 சென்ட் நிலத்தில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். நாற்றங்காலுக்கான நிலத்தில் 2 சால் சேற்றுழவு செய்து எருக்கன், ஆடாதொடை, புங்கன், வேம்பு நொச்சி இலைகள் ஆகியவற்றைக் கலந்து 50 கிலோ அளவில் போட்டு காலால் மிதிக்க வேண்டும். ஒரு வாரம் கழித்து, 50 கிலோ கனஜீவாமிர்தத்தைத் தூவி நிலத்தைச் சமப்படுத்த வேண்டும்.

மறுநாள், 5 கிலோ விதிநெல்லை மூன்றாம் கொம்பு விதையாக விதைக்க வேண்டும். காய்ச்சலும் பாய்ச்சலுமாகத் தண்ணீர்ப் பாய்ச்சி வர வேண்டும். விதைத்த 10-ம் நாள் 10 கிலோ கனஜீவாமிர்தத்தைத் தூவ வேண்டும். பதின்மூன்றாம் நாள் 100 மில்லி பஞ்சகவ்யாவை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். பதினெட்டாம் நாளில் முக்கால் அடி உயரத்துக்கு நாற்றுகள் வளர்ந்து நடவுக்குத் தயாராகிவிடும்.

சாகுபடி வயலில் 2 சால் சேற்றுழவு செய்து நிலத்தைச் சமப்படுத்தி, வரிசைக்கு வரிசை 40 சென்டிமீட்டர் இடைவெளியும், பயிருக்கு பயிர் 25 சென்டிமீட்டர் இடைவெளியும் இருக்குமாறு குத்துக்கு 2 நாற்றுகள் என நடவு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் அவ்வப்போது களைகளை அகற்ற வேண்டும். நடவு செய்த 3, 15, 30 மற்றும் 45-ம் நாட்களில், 50 கிலோ கனஜீவாமிர்தத்தைத் தூவிவிட வேண்டும்.

நடவு செய்த 5,17,32 மற்றும் 47-ம் நாட்களில், ஒன்றரை லிட்டர் பஞ்சகவ்யாவை 50 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து வர வேண்டும். இலைக்கருகல் நோயைத் தடுக்க, 60-ம் நாளன்று 10 கிலோ சாணம் கலந்த கரைசலில் 50 மில்லி சூடோமோனஸ் கலந்து தெளிக்க வேண்டும். தண்டு உருளும் பருவத்தில் 5 லிட்டர் தேமோர் கரைசலை 50 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். நடவிலிருந்து 92-ம் நாளுக்கு மேல் பயிர் அறுவடைக்குத் தயாராகிவிடும்.

மண்ணும் பட்டமும்

கருங்குறுவை ரகம் எல்லா வகையான மண்ணிலும் விளையும். குறுவை, சம்பா இரண்டு பட்டங்களுக்கும் ஏற்றது. இதன் பூர்வீகம் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் எனச் சொல்லப்படுகிறது. சோறு மற்றும் கஞ்சிக்கு சிறப்பாக இருக்கும். அரிசி, வெளிர் சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த அரிசியில், இரும்புச்சத்து நிறைந்துள்ளது,

ரத்தசோகை, குஷ்டம் ஆகிய நோய்களைக் குணப்படுத்தக்கூடியது என்று சித்த மருத்துவம் சொல்கிறது. இதுதவிரப் போக சக்தியை அதிகரிக்கும். நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் இந்த அரிசியில் கஞ்சி வைத்து குடித்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Tuesday 28 March 2017

சீமை வாத்து இனங்கள் :


கூஸ்வாத்து, பங்களாவாத்து என்றழைக்கப்படும் சீமைவாத்து ஒன்பது மாத வயதில் ஏழு முதல் ஒன்பதுகிலோ உடல் எடை அடையும் தன்மை பெற்றுள்ளது. கோழி மற்றும் வாத்துகளில் உள்ளது போல் அல்லாமல் சீமைவாத்துகளில் ஒருசில இனங்கள் மட்டுமே இன்று காணமுடிகின்றது. சீமைவாத்துக்களின் நிறத்தைக் கொண்டும், உடல் எடையைக் கொண்டும் அவை பல இரகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவைகளில் ஒரு சில கிழே விவரிக்கப்பட்டுள்ளன. பலவகையான நிறங்கள் கொண்ட வாத்துகள் எம்டென் மற்றும் ட்வ்லுஸ் என்ற இனங்களின் கலப்பினமாக கருதப்படுகின்றன. இந்த வ்கை சீமைவாத்துகள் முட்டையிடும் பருவகாலத்தில் 30-40 முட்டைகளும், ஒரு ஆண்டு காலத்தில் 80-120 முட்டைகள் இடும் திறன் பெற்று உள்ளதாக அறிகிறோம். சீமைவாத்து தன் முட்டைகளைத் தானே அடைகாத்து குஞ்சு பொரிக்கும் திறன் பெற்றுள்ளன.

சீமைவாத்துகளின் முக்கிய இனங்கள் :

எம்டென் :

பத்தொன்பதாவது நூற்றாண்டில் எம்டென் வகை சீமைவாத்து ஜெர்மனி நாட்டிலிருந்து பல நாடுகளூக்கு எடுத்து சென்றூ வளர்க்கப்பட்டு வருகிறது.இந்த இரக சீமைவாத்து வெண்மை நிறமாக இருக்கும். வளர்ந்த ஆண் வாத்து 13.6 முதல் 15.4 கிலோ எடையும், பெண் வாத்து 9.1 -10 கிலோ எடையும் பெறுவதாக 1929ஆம் ஆண்டிலேயே கணக்கெடுத்திருக்கிறார்கள். முட்டையிடும் திறன் குறைவாகவே காணப்படுகிறது.

டெளலெளஸ் :

டெளலெளஸ் சீமைவாத்துக்கள் தாயகம் தெற்கு பிரான்ஸ் ஆகும். நிறம் பழுப்பு. ஆண்வாத்தின் எடை 12.7-13.6 கிலோ எடையும், பெண்வாத்தின் எடை 9.1-10 கிலோ கொண்டதக இருக்கும். முட்டை இடும் திறன் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.

பில்கிரிம் :

இந்த இன வாத்துக்களின் தாயகம் பிட்டன் ஆகும். இவைகளைக் கிருத்துவ மத பாதிரிகள் பிரிட்டன் நாட்டிலிருந்து அமெரிக்க நாட்டிற்கு எடுத்து வந்ததாக அறியப்படுகின்றது. இவ்வகை வாத்துக்களுக்கு பில்கிரிம் என அமெரிக்க பெயரிட்டதாகவும் தெரிகிறது. ஆண்வாத்தின் ந்றம் வெண்மையாகவும் ஒருசில இறகுகள் பழுப்பு நிறத்துடன் காணப்படும். பெண்வாத்தின் கழுத்து மற்றும் வயிறு வெண்மையாகவும், இறக்கை பழுப்பு நிறத்துடனும் காணப்படுகிறது. ஆண்வாத்தின் கண் ஊதா நிறமாகவும், பெவாத்தின் கண் சிவப்பு டன் பிரெளன் நிறம் கலந்தவாறு இருக்கும். வளர்ந்த ஆண்வாத்தின் எடை 6.4 கிலோவாகவும், பெண்வாத்தின் எடை 5.9 கிலோவாகவும் இருக்கும். குஞ்சு பொரித்தவுடன் ஆண்வாத்துக்கள் வெண்மை நிறத்துடனும், பெண்வாத்துக்கள் பழுப்பு நிறத்துடனும் இருப்பதால் பால் இனத்தை பிரிப்பது இவ்வகையில் மிகவும் எளிதாக உள்ளது. ஆராய்ச்சியில் தீவிரம் காட்டாததாலும், இனவிருத்தி முறைகளை அதிகமாக கடைபிடிக்காததாலும் இவ்வகை வாத்துக்கள் தற்சமயம் அதிகமாக எந்த நாட்டிலும் வளர்ப்பதாக தெரியவில்லை. எனினும் இதன் கலப்பினங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன.

பஃப் :

இவ்வகை வாத்துக்கள் மிதமான எடை கொண்டவை. ஆண் வாத்தின் எடை 8.6கிலோவும், பெண்வாத்தின் எடை 7.2 கிலோவும் இருக்கும்.

சைனீஸ் :

சைனீஸ் வாத்தின் தாயகம் சைனா, சைபீரியா, மற்றும் வட இந்தியா ஆகும். இந்த ரக வாத்துக்களை நாப், ஸ்பானிஷ், பாலிஷ், மங்கோலி, சைபீரியன், கினி, மற்றும் ஸ்வான் கூஸ் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இவ்வகைவாத்துக்கள் ஒரு ஆண்டில் 140 முட்டைகள் இடும் திறன் உள்ளது. உடல் வெளிர் சிவப்பு நிறத்துடன் இறக்கைகளின் ஓரம் வெள்ளை னிறத்துடன் இருக்கும்.தலை, கழுத்து மற்றும் முதுகு அடர்பிரெளன் நிறத்துடன் காணப்படுகிறது. கால்கள், அலகு மற்றும் தலைக்குமிழ் ஆரஞ்சு நிறத்துடன் இருக்கும். ஆறு முதல் எட்டு வார வயதில் ஆண்வாத்து குஞ்சுகளின் தலைக்குமிழ் அளவில் பெரிதாக வளர்ந்து விடுவதைக் கொண்டு பாலினத்தைப் பிரித்து விடலாம்.ஆண் வாத்து 4.5கிலோ எடையும் பெண்வாத்து 3.5 கிலோஎடையும் கொண்டிருக்கும். இவ்வகை வாத்துக்கள் அதிக முட்டை இடும் திறன் படைத்தவை.

ரோமன் :

இவ்வகை வாத்துக்கள் பெரும்பாலும் வெண்மை நிறம் கொண்டவை. ஆண்வாத்தின் எடை 4.5-6.4 கிலோயும், பெண்வாத்தின் எடை 3.6-4.5 கிலோ எடையும் இருக்கும். இவ்வகை வாத்து அதிக முட்டையிடும் திறன் கொண்டவை.

ஆப்ரிகன் :

ஆப்ரிகன் இனம் டெளலெளஸ் மற்றும் சைனீஸ் கலப்பினமாகக் கருதப்படுகிறது. ஆன்வாத்தி எடை 9.1 கிலோயும் பெண்வாத்தின் எடை 8.2 கிலோ எடையும் கொண்டிருக்கும். பலவகை நிறங்களின் அமைப்பைக் கொண்டது. இந்த இரகம் அதிகமாக அமெரிக்காவில் காணப்படுகிறது.

தற்சமயம் நம் நாட்டில் காணப்படும் சீமை வாத்து ஒரே இனத்தை சார்ந்ததாக இல்லை. மேலே குறிப்பிட்ட பலதரப்பட்ட இனங்களின் கலப்பினங்களே பரவலாக வளர்க்கப்படுகிறது.இறைச்சிக்காக வளர்ப்பதைக்காட்டிலும், அழகுக்காகவே நம் நாட்டில் வளர்க்கப்படுக்ன்றன. இவைகிராமத்தில் தோட்டத்து காவலனாகவும் நகரங்களில் பங்களாவை அலங்கரிப்பதற்காகவும் வளர்க்கப்படுகின்றன.ந நாட்டில் இதைப் பற்றி யாரும் ஆய்வு மேற்கொண்டதாக தெரியவில்லை.பெரியளவில் வர்த்தக ரீதியாக யாரும் வளர்த்தாகவும் தெரியவில்லை.

சீமை(கூஸ்) வாத்து வளர்ப்பு :

சீமை வாத்துக்கள் கறிக்காகவும், அழகுக்காகவும், புல் தரைகளை சமமாகப் பராமரிக்கவும், குறிப்பாக தோட்டங்களில் வளரும் களைகளை அழிக்கவும், காவலுக்காகவும் வளர்க்கப்படுகின்றன. இதன் இரைப்பை பசுந்தீவனத்தை நன்கு ஜீரணித்து உட்கிரகிக்கும் திறன் படைத்தவை. சீமை வாத்துக்கள் வளர்ப்பிற்கு போதுமான அளவு நீர்நிலைகளுடன் கூடிய மேய்ச்சல் நிலம் இருப்பது அவசியம். ஒரு ஏக்கர் நிலத்தில் 25ஜோடி வாத்துக்கள்வளர்க்கலாம்.கூரைகள் அல்லது ஓடுகள் மேய்யப்பட்ட கொட்டகைஅமைக்கப்படவேண்டும்.

தீவனப் பராமரிப்பு :

சீமைவாத்துக்களின் முக்கிய உணவு புரதச்சத்து நிறைந்த பசுந் தீவனமாகும். ஒரு சீமைவாத்திற்கு நாள் ஒன்றுக்கு தேவைப்படும் தீவனத்தின் அளவு புல்வகை பசுந்தீவனம் 300கிராம், அடர்தீவனம்100கிராம், கிளிஞ்சல் 5கிராம், தீவனத்துடன் தாது உப்பு கலவை மற்றும் வைட்டமின் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.சாதாரணமாக நாள் ஒன்றுக்கு ஒரு கிலோ நெல் தவிடு அத்துடன் 100கிராம் அடர் தீவனம் கொடுத்தால் போதுமானது. தவிட்டையும், அடர் தீவனத்தையும் தண்ணீரில் கலந்துக்கொடுக்க வேண்டும்.அல்லது மேய்ச்சலுடன் 100கிராம் அடர் தீவனத்தை நீரில் கலந்துக் கொடுக்க வேண்டும்.அடர் தீவனத்தை எப்போதும் தண்ணீரி பிசைந்து கொடுக்கவேண்டும். அடை காக்கும் காலங்களில் பெண் சீமை வாத்து மேய்ச்சலுக்கு செல்லாது.தினமும் அடையை விட்டு இறக்கி பசுந்தீவனமும், அடர் தீவனமும் கொடுக்கவேண்டும்.

நோய் பராமரிப்பு :

சீமைவாத்துக்களை பாதிக்கும் முக்கிய நோய் ராணிக்கெட் இந்நோய் கண்ட வாத்து பச்சை, மற்றும் வெள்ளை நிற கழிச்சல் கண்டு சில நாட்களில் இறந்து விடும்.இந் நோய் கண்ட பெண் வாத்துக்களின் முட்டை இடும் திறன் குறைந்து விடும். இந்நோய்யினை தடுக்க 7, 21ம் நாட்களில் லசோர்ட்ட தடுப்பு ஊசி போட வேண்டும்.வைட்டமின் மற்றும் தாது உப்புக்களின் பற்றாக்குறையால் சீமைவாத்துக் குஞ்சிகளில் நோய் தாக்கம் அதிகமாக காணப்படும். அகையால் வாத்துக்குஞ்சிகளுக்கு செறிவூட்டப்பட்ட தீவனத்துடன் வைட்டமின் மற்றும் தாது உப்பு கலவை கலந்து கொடுக்க வேண்டும்.

இனப்பெருக்கம் :

சீமைவாத்தின் இன சேர்க்கை பெருபாலும் நீருக்குள் நடைபெற விரும்பும். ஆகையால் பண்ணைச் சுற்றி குளம் குட்டை இருப்பது அவசியம்.ஒரு தடவைக்கு 12 முட்டைவரை இடும்.வருடத்திற்கு 70 முட்டை வரை இடும்(பெரும்பாலும் அப்படி இடுவதில்லை). வைக்கோல் படப்புக்குள் சென்று முட்டை இடும் முட்டைகளை பெண் வாத்து மட்டும் அடைக்கும். ஆண் வாத்து படப்புக்கு வெளியே நின்று காவல் காக்கும்.30 நாட்கள் கழித்து குஞ்சி முட்டையிலிருந்து வெளிவரும்.முதல் மூன்று நாட்களுக்கு தீனி எதுவும் எடுத்துக் கொள்ளாது. பின்பு தானாக தீனி எடுத்துக்கொள்ளும்.தாய் வாத்து தன் குஞ்சை தன் முதுகில் ஏற்றிக் கொண்டு குளத்தில் நீந்து செல்லும் காட்சி கண் கொள்ளகாட்சியாகும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Monday 27 March 2017

ஒரு ஏக்கர் நிலத்தில் காய்கறிகள் சாகுபடி..!


இயற்கை வேளாண்மையில் அனைத்துக் காய்களுக்குமே பராமரிப்பு ஒன்றுதான். ஒரு ஏக்கர் நிலத்தை நன்கு உழுது 8 டன் தொழுவுரத்தைக் கொட்டி இறைக்க வேண்டும். பிறகு, ஒரு உழவு செய்து நிலத்தின் அமைப்புக்குத் தகுந்த அளவில் பாத்திகள் எடுத்துக்கொள்ள வேண்டும். சொட்டுநீர்க் குழாய்களை அமைத்துத் தேவைப்படும் விதையை ஊன்ற வேண்டும். பொதுவாக காய்கறிப்பயிர்களுக்கு இரண்டு அடி இடைவெளி இருக்குமாறு விதைக்க வேண்டும்.

விதைத்த அன்று நீர்ப் பாய்ச்சி, மூன்றாம் நாள் அடுத்தப் பாசனம் செய்ய வேண்டும். 20 மற்றும் 30-ம் நாள்களில் களை எடுக்க வேண்டும். 25 ம் நாள் தழை, மணி, சாம்பல் சத்து அடங்கிய பயோ உரத்தை பரிந்துரைக்கப்படும் அளவு, சொட்டு நீரில் கலந்து விட வேண்டும். 15 மற்றும் 35-ம் நாள்களில் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா எனக் கலந்து தெளிக்க வேண்டும். வேறு பராமரிப்புகள் தேவைப்படாது. பூச்சிகள் தென்பட்டால் பரிந்துரைக்கப்பட்ட பயோ பூச்சி விரட்டிகளைத் தெளிக்க வேண்டும். இயற்கை முறை வேளாண்மையில் பெரும்பாலும் பூச்சிகள் தாக்குவதில்லை. வளர் பருவத்தில் தெளிக்கப்படும் பஞ்சகவ்யா பூச்சிவிரட்டியாகவும் செயல்படுகிறது.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm
நோய் பராமரிப்பு :


பிற பறவைகளைவிட வாத்துகள் பொதுவாக கடின உடலமைப்பைப் பெற்றவை. வாத்துகளைத் தாக்கும் நோய்களில் முக்கியமானவை வாத்து பிளேக், பூசண நச்சு நோய் மற்றும் பாஸ்சுரெல்லா நுண்டி நோய் போன்றவை. இவைகளைத் தடுக்க முக்கியமான வழி பூஞ்சான் (பிடித்த) தாக்கிய தீவனங்களை வாத்துகளுக்கு அளிக்காமல் இருப்பதே வாத்து பிளேக்கிற்கு தற்போது தடுப்பூசிகள் உள்ளன. இது 8-12 வார வயதில் இத்தடுப்பூசிகள் அளிக்கப்பட வேண்டும். வாத்துக்குஞ்சுகளில் வைரஸினால் கல்லீரல் அழற்சி ஏற்பட்டால் இறப்பு வீதம் அதிகரிக்கும்.

வாத்து கொள்ளை (பிளேக்) நோய் :

இவ்வைரஸ் நோய் பெரும்பாலும் முதிர்ந்த வாத்துகளையே தாக்குகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட வாத்துக்களில் இரத்த நாளங்கள் உடைந்து இரத்தம் உடலுக்குள் பரவுகிறது. குடல்பகுதியிலும் இரைப்பைக்குள்ளும் இரத்தம் பரவுகிறது. பாதிக்கப்பட்ட பிறகு எவ்வித சிகிச்சையும் பலன்தராது. ஆகையால் வாத்து பிளேக் தடுப்பூசிகளை 8-12 வார வயதில் கொடுத்தல் சிறந்த பயன் அளிக்கும். முடிந்தவரை நோய் பரவாமல் தடுப்பதே சிறந்தது.

வாத்து நச்சுயிரி கல்லீரல் அழற்சி :

2-3 வார வயதுடைய வாத்துக்குஞ்சுகளையே இந்நோய் அதிகம் பாதிக்கிறது. இந்நோய்க்கும் பாதிக்கப்பட்ட பிறகு சிகிச்சை கிடையாது. இனச்சேர்க்கைக்கு ஈடுபடும் வாத்துகளுக்கு வீரியம் குறைக்கப்பட்ட வைரஸ் தடுப்பூசிகள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுதல் நலம் பயக்கும். இதனை முட்டை உற்பத்தியைத் தொடங்கும் முன்பு செய்தல் வேண்டும். ஒரு நாள் வயதான வாத்துக்குஞ்சுகளுக்கு இந்த வீரியம் குறைக்கப்பட்ட தடுப்பூசிகள் அளிப்பதால் மிகுந்த பலன் பெறலாம்.

வாத்து காலரா கழிச்சல்நோய் :

பாஸ்சுரெல்லா மல்டிகோடா எனும் பாக்டிரிய உயிரியால் 4 வார வயதுடைய வாத்துகளில் இந்நோய் அதிகம் பரவுகிறது. பசியின்மை, உடல் வெப்பம் கூடுதல், தாகம், வயிற்றுப்போக்கு மற்றும் திடீர் இறப்பு போன்றவை இந்நோயின் அறிகுறிகள். மூட்டு வீக்கம், தோலுக்கடியில் இரத்த ஒழுக்கு, இதய உறை அழற்சி, இரத்தப் புள்ளிகள் போன்றவை இந்நோயின் உள்நோயின் உள் அறிகுறிகள். கல்லீரல், மண்ணீரல், போன்றவை விரிவடையும். சல்பா மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் மூலம் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம். வாத்து வளர்ச்சியின் 4வது வாரத்திலும், 18 வது வாரத்திலும் காலரா (கழிச்சல்) தடுப்பூசி அளித்தல் அவசியம். என்ரோசின் சிகிச்சை அல்லது 30 மி.லி. சல்ஃபா மெஸ்த்தின் (33.1%) 5 லிட்டர் நீரில் கலந்தும் அல்லது 30-60 மி.லி.சல்ஃபா குயினாக்ஸலனைன் 5லி நீரில் கலந்தும் இம்மருந்தை குடிநீரில் கலந்து 7 நாட்களுக்கு வாத்துகளுக்கு அளிக்கலாம். எரித்ரோமைசின், ராபட்ரன் துகள்கள், நியோடாக்ஸ் - போர்ட், மார்ட்டின் வெட், வொர்க்ரின் கயஸோல் போன்ற மருந்துகளையும் கால்நடை மருத்துவர் ஆலோசனைப்படி நீரில் கலந்து கொடுக்கலாம்.

பொட்டுலிசம் நச்சுத்தன்மை :

வாத்துகளில் உணவு நச்சு ஒரு முக்கிய பிரச்சனை ஆகும். கெட்டுப்போன உணவுகள் (பயிர்களில்) வளர்ந்துள்ள பாக்டீரியாக்கள் உயிர்க்கொல்லும் நோயைத் தோற்றுவிக்கும். முடிந்தவரை அழுகிய, கெட்டுப்போன உணவுகளை வாத்துகள் உட்கொள்ளா வண்ணம் பாதுகாத்தல் வேண்டும். எப்சோம் உப்பை குடிநீரில் கலந்தும் கொடுக்கலாம்.

ஒட்டுண்ணிகள் :

பொதுவாக வாத்துகள் உட்புற ஒட்டுண்ணிகளுக்கு எதிர்ப்புச் சக்தி பெற்றவை. தேங்கி நிற்கும் குட்டைகள், சிறு கலங்கிய ஓடைகளில் அதிகமாக உலவும் வாத்துகளுக்கு இவ்வகை உட்புற ஒட்டுண்ணித் தாக்குதல் இருக்கலாம். தட்டைப்புழு, உருளைப்புழு, நாடாப்புழு, போன்ற புழுக்கள் இதில் அடங்கும். இப்புழுக்கள் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிக் கொள்வதால் உடலில் உண்டாகும் நச்சுப்பொருட்கள் சிவப்பு இரத்தச் செல்களை அழித்துவிடுவதால் இரத்த சோகை நோய் ஏற்படுகிறது.

வாத்துகளில் புற ஒட்டுண்ணிகள் நோய் உண்டாக்கவில்லை எனினும் வளர்ச்சியைத் தடைப்படுத்தும் முக்கியக் காரணிகள் தெள்ளுப்பூச்சி, உண்ணி, சிற்றுண்ணிகள் போன்றவை முக்கிய புற ஒட்டுண்ணிகள் ஆகும். இவை ஏற்படுத்தும் தொந்தரவு மற்றும் எரிச்சலால் முட்டை உற்பத்தி பாதிக்கப்படுகிறது. மேலும் இவை சில நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகளையும் பரப்புகின்றன. எனினும் கோழிகள் அளவிற்கு வாத்துகளில் பாதிப்பு அதிகம் இருக்காது.

பூசண நச்சு நோய் :

வேர்கடலை, மக்காச்சோளம், பாலிஸ் செய்யப்பட்ட அரிசி போன்ற உணவுகளில் பூஞ்சானம் வளர்ந்துவிடும். இவ்வாறு பூஞ்சான் தாக்கிய உணவுப்பொருட்களை வாத்துகளுக்கு அளிப்பதால் இந்நோய் ஏற்படுகிறது. அதிக ஈரப்பதம் மிக்க சூழ்நிலையிலும், சரியாக பயிறுகளை உலர்த்தாமல் விடுவதாலும் இந்நோய் எளிதில் வாத்துகளை பாதிக்கக் கூடியது. பி, பி 2, ஜி, ஜி 2 எனும் நான்கு வகை நச்சுகளில் பி, வகை அதிக நச்சுத் தன்மை வாய்ந்தது. ஒரு கிலோ தீவனத்தில் 0.03 பிபிஎம் அல்லது 0.03 பி.கி அளவு மட்டுமே நச்சுத்தன்மை இருக்கலாம்.
இப்பூசன நச்சுக்கள் கல்லீரலில் புண்களை ஏற்படுத்துவதால் நச்சுத்தன்மை அதிகமாகும்போது வாத்துகளில் இறப்பு ஏற்படும். குறைந்த நச்சுத்தன்மையின் போது வாத்துகள் சுறுசுறுப்பின்மை, கல்லீரல் அழற்சி போன்ற பாதிப்புகளுடன் உயிரிழப்பும் ஏற்படுவதுண்டு. பூசன நச்சு நோய்க்கு சிகிச்சையளிக்கும் மருந்துகள் ஏதும் இல்லை. தீவனங்களின் பூசனத்தை நீக்கி நன்கு உலர்த்திக் கொடுப்பதே இந்நோயிலிருந்து காக்க சிறந்த வழி ஆகும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

கோடை உழவு..!


பொதுவாக சிறுதானியங்களுக்கு ஆடிப்பட்டம் ஏற்றது. நிலத்தை சித்திரை மாதத்தில் கோடை உழவு செய்து, காய விட வேண்டும். இதனால் மண்ணின் இறுக்கம் குறைந்து பொலபொலப்பாகும். அதோடு, மண்ணில் இருக்கும் பூச்சிகள், முட்டைகள், களைகள் ஆகியவையும் அழிந்துவிடும். ஆனி மாதம் ஒரு ஏக்கர் நிலத்துக்கு ஐந்து நாட்கள் வீதம் செம்மறியாடுகளைக் கிடை அடைக்க வேண்டும். பிறகு, ஒருமுறை உழுது வைக்க வேண்டும். ஆடி மாதம் மழை கிடைத்தவுடன், உடனடியாக ஓர் உழவு ஓட்டி விதைக்க வேண்டும்.

ஒரு ஏக்கர் நிலத்தில் விதைக்க மூன்று கிலோ சிறுதானிய விதை (தினை, குதிரைவாலி, வரகு போன்றவற்றில்) தேவைப்படும். ஊடுபயிராக விருப்பப்பட்ட பயிர்களை விதைக்கலாம். சிறுதானிய விதைகளைச் சம அளவு எடையுள்ள மணலுடன் கலந்து தூவ வேண்டும். இதனால், விதைகள் ஒரே இடத்தில் விழாமல் பரவலாக விதைக்கப்படும். விதைத்த பிறகு, மழை பெய்தால் பத்து நாட்களுக்குள் விதைகள் முளைத்து வரும்.

விதைத்த 20-ம் நாளில், 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் அமுதக்கரைசல் என்ற விகிதத்தில் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். 35-ம் நாள் களைகளை அகற்ற வேண்டும். 40 மற்றும் 50-ம் நாள்களில் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி அளவு பஞ்சகவ்யா என்ற விகிதத்தில் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். வேறு பராமரிப்புகள் எதுவும் தேவையில்லை. கிடைக்கும் மழையின் அளவைப் பொறுத்து மகசூல் இருக்கும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm