Sunday 16 April 2017

அருமையான லாபம் கொடுக்கும் ஆட்டுக்கிடா வளர்ப்பு..!!!


"டிரெயின்லகூட போகாத என்னை, ஏரோபிளேன்ல போக வெச்சது இந்த ஆடுகள்தான்” 

‘மாடு மறுவருஷம்… ஆடு அவ்வருஷம்’ என்று கிராமங்களில் சொலவடை சொல்வார்கள். அதாவது, மாடு வாங்கினால், அடுத்த வருஷத்தில் இருந்துதான் பலன் கிடைக்கும். ஆடு வாங்கினால், அந்த வருஷத்திலேயே பலன் கிடைக்கும் என்பதைக் குறிப்பிட்டுத்தான் இதைச் சொல்லி வைத்திருக்கிறார்கள். இதேபோல, மாட்டுச் சாணத்தை மட்க வைத்துதான் மண்ணில் இட வேண்டும். ஆட்டு எருவை அப்படியே மண்ணில் இடலாம். அதனால் மாட்டுச் சாணம் மூலம் அடுத்த ஆண்டில்தான் மகசூல் கிடைக்கும். ஆட்டு எரு மூலம் அந்த ஆண்டிலேயே மகசூல் கிடைக்கும் என்றும் விளக்கம் சொல்வார்கள். ஆக, ஆடு வளர்ப்பாக இருந்தாலும் சரி… ஆடு கொடுக்கும் இயற்கை உரமாக இருந்தாலும் சரி, உடனடி பலன் என்பது உண்மை.

இந்த உண்மையை உணர்ந்திருப்பதால்தான், பணம் கொட்டும் தொழில்களில் ஒன்றாக இருந்து வருகிறது, ஆடு வளர்ப்பு. சரியான முறையில் பராமரித்து, ஆடு வளர்ப்பில் பலரும் நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள். இவர்களில் ஒருவர்தான், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த பரமசிவம். ஒரு காலைப் பொழுதில் பண்ணை தேடிச் சென்றபோது, ஆடுகளுக்கு அகத்திக் கீரையைக் கொடுத்துக் கொண்டிருந்தார், பரமசிவம். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும், உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.

வழிகாட்டிய கருத்தரங்கம்!

”விவசாயம்தான், பரம்பரைத்தொழில். பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கினதுகூட இல்லை. மானாவாரி நிலம்கிறதால, கிடைக்கிற மழையை வெச்சு, மக்காச்சோளம், பருத்தி, உளுந்துனு சாகுபடி பண்றேன். எப்பவுமே அடியுரமா ஆட்டு, மாட்டு எருவைத்தான் போடுவேன். ஆரம்பத்துல இயற்கை விவசாயம் பத்தியெல்லாம் தெரியாததால, ரசாயன உரத்தைத்தான் போட்டுக்கிட்டிருந்தேன். இப்போ, ஏழு வருசமா ‘பசுமை விகடன்’ மூலமா இயற்கை விவசாயத்தைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டு ரசாயன உரத்தை விட்டுட்டேன்.

அருப்புக்கோட்டைக்குப் பக்கத்துல இருக்குற கோவிலான்குளம் மண்டல ஆராய்ச்சி நிலையத்துல ஒரு பயிற்சி நடந்துச்சு. அதுல, மண்புழு உரம், அமுதக்கரைசல், பஞ்சகவ்யா தயாரிக்கற முறைகளைத் தெரிஞ்சுக்கிட்டேன். அதேமையத்துல ஆடு வளர்ப்புப் பத்தி நடந்த கருத்தரங்குலயும் கலந்துக்கிட்டேன். அங்கதான் எனக்கு ஆடு வளர்ப்பு அறிமுகமாச்சு. தொடர்ந்து, பசுமை விகடன்ல வந்த செய்திகளையும் படிச்சு, ஆடு வளர்ப்பைப் பத்தி முழுமையா தெரிஞ்சுக்கிட்டு அஞ்சு வருஷமா ஆடு வளர்த்துக்கிட்டிருக்கேன்” என்று முன்னுரை கொடுத்த பரமசிவம், தொடர்ந்தார்.

செவலை, கருப்பு ஆடுகளுக்கு கிராக்கி!

”ஆரம்பத்துல 20 ஆடுகளை வாங்கிட்டு வந்தேன். பசுந்தீவனம், உலர்தீவனம்னு கொடுத்தும் எடை வரவே இல்ல. ஆடுகளை விக்கிறப்பவும் வியாபாரிகள்கிட்ட நிறைய ஏமாந்தேன். அதுக்கப்பறம் நானே சந்தைக்குப் போக ஆரம்பிச்சேன். அப்பதான், ஆடுகளை வாங்குறது, விக்கிறதுல இருக்குற நடைமுறை விஷயங்களைக் கத்துக்கிட்டேன். எப்படி ஆடுகளைத் தேர்வு செய்றது, எந்த சமயத்துல ஆடுகளுக்கு அதிக விலை கிடைக்குங்கிறது மாதிரியான விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டு, ஆடுகளை வளர்க்க ஆரம்பிச்சேன்.

இரண்டு முறைகள்ல ஆடு வளர்க்கலாம். தாய் ஆடுகளை வாங்கிட்டு வந்து இனப்பெருக்கம் செஞ்சு குட்டிகளை விக்கிறது ஒரு முறை. கிடாக்களை வாங்கிட்டு வந்து வளர்த்து விக்கிறது, இன்னொரு முறை. நான் கிடாக்களை வாங்கி வளர்த்து வித்துட்டு இருக்கேன். இதுல கொஞ்சம் அலைச்சல் அதிகம். ஆனா, குறைவான பராமரிப்புல நல்ல வருமானம் பாக்கலாம். ஒவ்வொரு முறையும் சந்தையில 50 கிடாக்களை வாங்கிட்டு வந்து, மூணு மாசம் வளர்த்து வித்துட்டிருக்கேன். 25 சென்ட்ல சூபாபுல்,

20 சென்ட்ல வேலிமசால் பயிர் பண்ணியிருக்கேன். இதைத்தான் பசுந்தீவனமா கொடுத்துட்டு இருக்கேன். தென் மாவட்டங்கள்ல ஆடுகளை பலி கொடுக்குற கோவில்கள் அதிகமா இருக்கறதால, பெட்டை ஆடுகளைவிட கிடாக்களுக்குத்தான் அதிக கிராக்கி. பலி போடுறதுக்கு கருப்பு, சுத்த செவலை நிற ஆடுகளைத்தான் அதிகமா வாங்குவாங்க. அதனால அந்த மாதிரி ஆடுகளாத்தான் வளர்க்குறேன்’ என்ற பரமசிவம் ஆடு வளர்ப்பு முறை அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டார்.

கொட்டகையே போதும்!

”கிடாக்களை வளர்க்க பரண் முறை தேவையில்லை. வேலையாட்களும் அதிகமாகத் தேவையில்லை. சாதாரண கொட்டகையில அடைத்து, நேரத்துக்கு தீவனம், தண்ணீர் கொடுத்து, மூன்று மாதங்கள் பராமரித்தால் போதும். கொட்டகைக்கும் அதிக செல வில்லாமல், தென்னை மட்டை, தகரம் ஆகியவை மூலமாக அமைத்தாலே போதுமானது.

புதிய ஆடுகள் கவனம்!

புதிதாக வாங்கி வரும் ஆடுகளை, ஏற்கெனவே பண்ணையில் இருக்கும் ஆடுகளோடு சேர்த்து அடைக்கக்கூடாது. அவற்றுக்கு ஏதேனும் நோய் இருந்தால் பண்ணையில் உள்ள ஆடுகளுக்கும் தொற்ற வாய்ப்புண்டு. புது ஆடுகளை நன்றாகக் குளிப்பாட்டி, பருத்தித் துணியால் மூக்குகளை சுத்தப்படுத்த வேண்டும். தேவையான தடுப்பூசி, மருந்து களைக் கொடுத்து ஒரு வாரம் வரை தனிக் கொட்டகையில் வைத்திக்க வேண்டும். பிறகு தான் பண்ணை ஆடுகளுடன்விட வேண்டும்.

கொட்டகை சுத்தம் அவசியம்!

கொட்டகை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். கால்நடைத்துறை மூலம் வழங்கப்படும் தாது உப்புக் கட்டிகளை கொட்டகையில தொங்கவிட வேண்டும். தேவைப்படும் ஆடுகள் இதை நக்கிக்கொள்ளும். கோடைக் காலத்தில் ஒரு ஆட்டுக்கு சராசரியாக

5 லிட்டர் தண்ணீரும், குளிர்காலத்தில் அரை லிட்டர் தண்ணீரும் தேவை. பசுந்தீவனங்களை தரையில் போடாமல், கட்டித் தொங்க விட்டால் வீணாகாது. மக்காச்சோளம், கம்பு, கோதுமை கலந்த அடர்தீவனத்தையும் தண்ணீரில் பிசைந்து, தினமும் கொடுக்க வேண்டும். இப்படி மூன்று மாதங்கள் வரை வளர்த்து, எடை வந்த பிறகு, உடனே விற்பனை செய்யலாம்

சுழற்சி முறையில் நல்ல லாபம்!

நிறைவாக வருமானம் பற்றிப் பேசிய பரமசிவம், ”30 கிலோ எடை இருக்குற கிடாக்களை, உயிர் எடையா கிலோ 250 ரூபாய் விலைக்கு வாங்கிட்டு வருவேன். ஒரு ஆடு, 7 ஆயிரத்து 500 ரூபாய் விலை ஆகும். நல்ல தீவனம் கொடுத்து மூணு மாசம் வளர்த்தா, 45 கிலோ வரை எடை வரும். ‘கொழுகொழு’னு வந்ததும், உயிர் எடைக்கு கிலோ 250 ரூபாய்ல இருந்து 300 ரூபாய் வரைக்கும் வித்துடுவேன். சந்தைக்குக் கொண்டு போனா விலை குறைவாத்தான் போகும். ஆனா, பண்ணைக்குத் தேடி வர்றவங்ககிட்ட நல்ல விலை கிடைக்கும். குறைஞ்ச விலையா கிலோவுக்கு 250 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலும், 45 கிலோ ஆட்டுக்கு 11 ஆயிரத்து 250 ரூபாய் கிடைக்கும். இதுல, மூணு மாசத்துக்கு ஒரு ஆட்டுக்கு தீவனம், மருந்துக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். கொள்முதல் விலை, செலவு எல்லாம் சேர்த்து ஆயிரத்து 500 ரூபாய் போனாலும் ஒரு ஆடு மூலமா மூணு மாசத்துல, 1,750 ரூபாய் லாபம் கிடைக்கும். ஒரு தடவைக்கு 50 ஆடுகள்னு வாங்கி வளக்குறப்போ, கணிசமான அளவுல லாபம் பாக்கலாம். தொடர்ந்து சுழற்சி முறையில வளர்த்தா, கூடுதல் லாபம் கிடைக்கும்” என்ற பரமசிவத்துக்கு 2013-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் ‘சிறந்த ஆடு வளர்ப்பு விவசாயி’ விருது கிடைத்திருக்கிறது.

”ஆடு வளர்ப்பு விருது வாங்க டெல்லி போய், மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் கையால வாங்கினேன். டிரெயின்லகூட போகாத என்னை, ஏரோபிளேன்ல போக வெச்சது இந்த ஆடுகள்தான்” என்று பெருமையோடு சொன்னார்.

தொடர்புக்கு :
பரமசிவம்,
செல்போன்: 97879-82183.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment