Saturday 15 April 2017

அரை ஏக்கர்... 5 மாதங்கள்... 30 ஆயிரம் ரூபாய் லாபம்!


மனநிறைவான மகசூல் கொடுக்கும் மாப்பிள்ளைச் சம்பா!

*மேட்டுப்பாத்தியில் சாகுபடி

*குறைவான தண்ணீர் போதும்

*பொங்கல் சமைக்க ஏற்றது

*மதிப்புக் கூட்டினால் லாபம் அதிகம்

*அனைத்து வகை மண்ணும் ஏற்றது

மழை கிடைக்கும் பருவம், விளைபொருளுக்கான சந்தை வாய்ப்பு, பயிர்களின் சாகுபடிக்காலம்... எனப்பல்வேறு காரணிகளைக் கொண்டுதான் முற்காலத்தில் ஒவ்வொரு பயிருக்குமான பட்டம் நிர்ணயிக்கப்பட்டது. அந்த வகையில் அனைத்துப் பயிர்களுக்குமே பொதுவான பட்டம் ஆடிப்பட்டம். பாரம்பர்ய ரக பயிர்கள் பலவும் பெரும்பாலும் இப்பட்டத்திலேயே சாகுபடி செய்யப்படுகின்றன. குறிப்பாக மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற பட்டம் இது. ஆடி மாதத்துக்குப் பிறகு பருவமழை பெய்வது வழக்கம் என்பதால், இப்பட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கின்றனர், நம் முன்னோர். இறவைப் பாசன வசதியுடையவர்களும் இப்பட்டத்தில் பயிர் செய்யும்போது, தண்ணீர் செலவு குறையும். அந்த வகையில், விவசாயத்தில் ஆடிப்பட்டம் முக்கியமான பட்டமாக உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், உச்சிமாஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகன். ஆடிப்பட்டத்தில் காய்கறிகள் மற்றும் மாப்பிள்ளைச் சம்பா ரக நெல் ஆகியவற்றின் விதைப்புக்காக நிலத்தைத் தயார் செய்து கொண்டிருந்த வேளையில் அவரைச் சந்தித்தோம் நாம். உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார், முருகன். இவர், 25.11.13-ம் தேதியிட்ட ‘பசுமை விகடன்’ இதழில் ‘சின்னச் சின்ன நுட்பங்கள்... பெரிய பெரிய பலன்கள்!’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரை மூலம் ஏற்கெனவே அறிமுகமானவர்தான்.

கைக்குத்தல் அரிசிப் பொங்கல்!

“புதுக்கோட்டை மாவட்டம் ,கந்தர்வக்கோட்டை பக்கத்துல உள்ள பல்லவராயன்பட்டிதான் எனக்கு பூர்விகம். 30 வருஷத்துக்கு முன்னாடி கந்தர்வக்கோட்டை பகுதியில பங்குனி, ஆனி மாசங்கள்ல தொழுவுரத்தைப் போட்டு புழுதி உழவு ஓட்டி வெச்சுடுவாங்க. அப்பறம் ஆடிப்பட்டத்துல மானாவாரியில மாப்பிள்ளைச் சம்பா ரக நெல்லை விதைச்சு விடுவாங்க. அந்த பகுதியில இதுக்கு ‘மட்டநெல்’னு பேரு. அடுத்துக் கிடைக்கிற மழையில பயிர் நல்லா வளர்ந்து வந்து மார்கழி 15 தேதி வாக்குல அறுவடைக்கு வந்துடும். அந்த நெல்லை அரைச்சு கைக்குத்தல் அரிசியாக்கி அதுலதான் தை மாசம் பொங்கல் வைப்பாங்க. பொங்கல் சுவையா இருக்கும். இப்போ, அதெல்லாம் மாறிப்போச்சு.

போர்வெல் வந்த பிறகு, பட்டம் எல்லாம் பார்க்கிறதில்லை. வீரிய ரக நெல்லைத்தான் பெரும்பாலான விவசாயிகள் சாகுபடி செய்றாங்க. நானும் அப்படி மாறினவன்தான். ஆனாலும், பாரம்பர்ய வழக்கத்தைக் கைவிடக்கூடாதுங்கிறதால நாலு வருஷமா ஆடிப்பட்டத்துல மாப்பிள்ளைச் சம்பா விதைச்சு, அந்த அரிசியில்தான் பொங்கல் கொண்டாடிக்கிட்டு இருக்கேன். பொங்கல் சமயத்துல இந்த அரிசியை விற்பனையும் செஞ்சுட்டு இருக்கேன்” என்று முன்னுரை கொடுத்த முருகன் தொடர்ந்தார்.

ஆடிப்பட்டத்தில் அரை ஏக்கர் நெல்... அரை ஏக்கர் காய்கறி!

“இது குத்தகை நிலம்தான். எட்டு வருஷமா இங்கதான் விவசாயம் செஞ்சுட்டு இருக்கேன். மொத்தம் மூணு ஏக்கர். செம்மண்ணும் மணலும் கலந்த இருமண் பாடு. போர்வெல் மூலம்தான் பாசனம். நாலு வருஷமா இயற்கை விவசாயம்தான் செஞ்சுட்டு இருக்கேன். ஆடிப்பட்டத்துல அரை ஏக்கர்ல மாப்பிள்ளைச் சம்பாவையும், அரை ஏக்கர்ல கொடிவகை காய்கறிகளையும் சாகுபடி செய்றது வழக்கம். மீதி நிலத்துல வாழை, உளுந்து, கடலை, கீரை, வெண்டை, கத்திரி...னு மாத்தி மாத்தி சாகுபடி செய்வேன். என்கிட்ட மாடுகள் இல்லாததால, பக்கத்து விவசாயிகள்கிட்டதான் ஜீவாமிர்தம் தயாரிக்கத் தேவையான சாணம், மாட்டுச்சிறுநீரை இலவசமா வாங்குறேன்.

உழவே இல்லை!

இங்க உழவு ஓட்டுறதேயில்லை. மண்ணைக் கொத்தி புரட்டிப் போட்டு மேட்டுப்பாத்தி அமைச்சுதான் எல்லா பயிர்களையும் சாகுபடி செய்றேன். அதனால களைகளை சுலபமா கட்டுப்படுத்த முடியுது. மண்ணுல காற்றோட்டம் இருக்கும். வாய்க்கால்ல மட்டும்தான் தண்ணி பாய்ச்சுவேன். அதனால மேட்டுப்பாத்தியில் இருக்குற மண் இறுகாது. சணப்பு விதைச்சு மூடாக்கா போடுறதால, மேட்டுப்பாத்தியில இருக்குற மண் எப்பவும் பொலபொலப்பாவே இருக்கும்” என்ற முருகன், மாப்பிள்ளைச் சம்பா குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

ஆடியில் நடவு... மார்கழியில் அறுவடை!

“மாப்பிள்ளைச் சம்பாவுக்கு ஆடிப்பட்டம் பொருத்தமானது. ஆடி அமாவாசை அன்னிக்கு விதை விட்டுடுவேன். பதினஞ்சு நாள் கழிச்சு நாத்து எடுத்து நடவு செஞ்சுடுவேன். எப்படியும் தொடர்ந்து 10 நாளுக்கு ஒரு லேசான மழையாவது கிடைச்சுடும். அந்த ஈரப்பதம் பயிர் வளர்ச்சிக்கு உறுதுணையா இருக்கும். ஐப்பசியில அடைமழை பெய்றப்போ, பயிர் நல்ல உயரமா வளர்ந்திருக்கும். அதனால, மழைத்தண்ணி தேங்கினாலும் பிரச்னையில்லை. கார்த்திகை 15-ம் தேதிவாக்குல பூ பூத்து கதிர் பிடிக்கும். அப்ப மழை குறைஞ்சுடும். ‘கார்த்திகை பொறந்துட்டா கால் கோடை’னு பழமொழியே உண்டு. மார்கழி 15 வாக்குல அறுவடைக்கு வந்துடும்.

போன ஆடி மாசம் அரை ஏக்கர்ல விதைச்சிருந்தேன். ரொம்ப நல்லா விளைஞ்சிருந்துச்சு. 10 மூட்டை (60 கிலோ மூட்டை) மகசூல் கிடைச்சுது. ஒரு முறை ஆவணி மாசம் விதைச்சு பார்த்தேன். அந்த முறை 6 மூட்டைதான் மகசூல் கிடைச்சது. அதனால ஆடிப்பட்டம்தான் இந்த ரகத்துக்கு சரியா இருக்குது” என்ற முருகன், விற்பனை குறித்துச் சொன்னார்.

நெல், அரிசி, அவல், குருணை என விற்பனை!

“ஒரு மூட்டை நெல்லை, விதை நெல்லா கிலோ 60 ரூபாய்னு விற்பனை செஞ்சேன். அதுல 3 ஆயிரத்து 600 ரூபாய் கிடைச்சது. ஒரு மூட்டை நெல்லை, கைக்குத்தல் அரிசியாக்கினதுல 35 கிலோ அரிசி கிடைச்சது. அதை, கிலோ 100 ரூபாய்னு விற்பனை செஞ்சேன். அது மூலமா 3 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் கிடைச்சது. மூணு மூட்டை நெல்லை புழுங்கல் கைக்குத்தல் அரிசியாக்கினதுல 105 கிலோ அரிசி கிடைச்சது. அதுல 35 கிலோ அரிசியை கிலோ 100 ரூபாய்னு விற்பனை செஞ்சேன். அதுல 3 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் கிடைச்சது. மீதி 70 கிலோ புழுங்கல் அரிசியை மெஷின்ல கொடுத்து, குருணையாக்கி விற்பனை செஞ்சேன். உப்புமாவுக்கு, கஞ்சிக்கும் குருணை நல்லா இருக்கும். இது மோட்டா ரகம்கிறதால நிறைய பேர் அரிசியை விரும்பி வாங்கமாட்டாங்க. ஆனா, குருணை நல்லா விற்பனையாகும்.

70 கிலோ அரிசியை உடைச்சா 60 கிலோ குருணைதான் கிடைக்கும். கிலோ 100 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல 6 ஆயிரம் ரூபாய் கிடைச்சது. அதுல கிடைச்ச 10 கிலோ மாவை கிலோ 120 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல 1,200 ரூபாய் கிடைச்சது.

5 மூட்டை நெல்லை அவலாக்கினதுல 200 கிலோ அவல் கிடைச்சது. கிலோ 100 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல 20 ஆயிரம் ரூபாய் கிடைச்சது. ஆக மொத்தம் 10 மூட்டை நெல்லை மதிப்புக் கூட்டி விற்பனை செஞ்சதுல 37 ஆயிரத்து 800 ரூபாய் வருமானம் கிடைச்சது. அதுல மொத்த செலவு 7 ஆயிரத்து 840 ரூபாய் போக 29 ஆயிரத்து 960 ரூபாய் லாபமா கிடைச்சது” என்ற முருகன் நிறைவாக,

மன நிறைவான வருமானம்!

“அரை ஏக்கர்ல நெல் விவசாயம் மூலமா இந்த வருமானம் எடுக்குறது ஓரளவு நிறைவான வருமானம்தான். ,பாரம்பர்ய ரகத்தை சாகுபடி செய்றோம். நஞ்சில்லாத அரிசியில பொங்கல் செஞ்சு சாப்பிடுறோம்கிற மனதிருப்தி இருக்கு. மத்த பயிர்கள்ல நல்ல வருமானம் கிடைச்சுட்டு இருக்குறதால கொஞ்சம் மெனக்கெட்டாலும் பரவாயில்லைனு இதை விடாம சாகுபடி செஞ்சுட்டு இருக்கேன். இப்போ பாரம்பர்ய ரகங்கள் குறித்த விழிப்பு உணர்வு பெருகிட்டு இருக்குறதால வருங்காலங்கள்ல விற்பனை வாய்ப்பு ரொம்ப நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்” என்று நம்பிக்கையோடு சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு,
முருகன்,
செல்போன்: 94866-06351.

மேட்டுப்பாத்தியில் நெல்!

அரை ஏக்கர் நிலத்தில் மாப்பிள்ளை சம்பா சாகுபடி குறித்து முருகன் சொன்ன விஷயங்கள் இங்கே...

அரை ஏக்கர் சாகுபடிக்கு 2 சென்ட்டில் நாற்றங்கால்!

மாப்பிள்ளைச் சம்பா அனைத்து வகை மண்ணிலும் வரும். இது 150 நாள் பயிர். அரை ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்ய 2 சென்ட் அளவில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். இரண்டேகால் அடி அகலம் அரை அடி உயரம் என மேட்டுப்பாத்தி அமைக்கவேண்டும். பாத்திகளுக்கு இடையில் முக்கால் அடி அகலத்தில் வாய்க்கால்கள் அமைக்க வேண்டும். மேட்டுப்பாத்தியில் 20 கிலோ கனஜீவாமிர்தத்தைப் போட்டு, மண்ணைக் கொத்திவிட்டு... பஞ்சகவ்யாவில் விதைநேர்த்தி செய்யப்பட்ட 5 கிலோ மாப்பிள்ளைச் சம்பா விதைநெல்லை விதைக்க வேண்டும். விதை மறையும் அளவுக்கு மண்ணைத் தூவி, வைக்கோலால் மூடாக்கு போட்டு பூவாளி மூலம் தண்ணீர் தெளிக்க வேண்டும். 5 நாட்களுக்குத் தொடர்ந்து காலையிலும் மாலையிலும் தண்ணீர் தெளிக்க வேண்டும். 5-ம் நாள் முளைப்பு எடுக்கும். அப்போது, மூடாக்கை நீக்கிவிட்டு காய்ச்சலும் பாய்ச்சலுமாக வாய்க்காலில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 10-ம் நாள் 2 கிலோ கடலைப் பிண்ணாக்கை 10 லிட்டர் தண்ணீரில் ஒரு நாள் ஊற வைத்து, மேட்டுப்பாத்தியில் தெளிக்க வேண்டும். 15-ம் நாள் நாற்றுகள் நடவுக்குத் தயாராகிவிடும்.

மூன்று வரிசையில் நெல்!

மண்ணைக் கொத்தி, அரை ஏக்கருக்கு 100 கிலோ அளவில் கனஜீவாமிர்தம் போட்டு, நாற்றங்காலுக்கு அமைத்த அளவில் மேட்டுப்பாத்தி, வாய்க்கால்கள் அமைக்க வேண்டும்.மேட்டுப்பாத்திகளில் மட்டும் பரவலாக சணப்பு விதையைத் தெளித்து, களைக்கொத்தியால் மண்ணைக் கிளறி விட வேண்டும். வாய்க்கால்களில் முழுமையாக தண்ணீர் கட்டி, மேட்டுப்பாத்திகளில் ஈரம் உருவாக்க வேண்டும். பிறகு, மேட்டுப்பாத்தியின் இரு ஓரங்கள் மற்றும் நடுப்பகுதியில் முக்கால் அடி இடைவெளியில் வரிசையாக நெல் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். இப்படி நடவு செய்யும்போது ஒவ்வொரு பாத்தியிலும் மூன்று வரிசையாக நாற்றுகள் இருக்கும். வரிசைக்கு வரிசை ஓர் அடி இடைவெளி இருக்கும். இடைவெளி சீராக இருப்பதால், களை எடுப்பது சுலபமாகும். தொடர்ந்து காய்ச்சலும் பாய்ச்சலுமாக தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும்.

மூடாக்காக சணப்பு!

நடவு செய்த 10-ம் நாளில் இருந்து, 10 நாட்களுக்கு ஒரு முறை 100 லிட்டர் ஜீவாமிர்தத்தை பாசன நீரில் கலந்துவிடவேண்டும். 20-ம் நாள் வாய்க்கால்களில் உள்ள களைகளை கைகளால் அகற்றவேண்டும்.

30-ம் நாளில் இருந்து, 15 நாட்களுக்கு ஒரு முறை 50 லிட்டர் தண்ணீரில் 5 லிட்டர் ஜீவாமிர்தத்தைக் கலந்து, பயிர்களின் மீது தெளிக்கவேண்டும். 40-ம் நாள் சணப்பு 3 அடி உயரத்திலும் நெற்பயிர் இரண்டரை அடி உயரத்திலும் வளர்ந்திருக்கும். அந்த சமயத்தில் நெல் பயிருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சணப்பை மட்டும் வேரோடு பிடுங்கி, மேட்டுப்பாத்தியில் பரவலாக மூடாக்கு அமைக்கவேண்டும்.

பூச்சி விரட்ட எண்ணெய்க் கரைசல்!

45 மற்றும் 60-ம் நாட்களில் பூச்சிகளை விரட்டும் வகையில்... தலா 200 மில்லி புங்கன் எண்ணெய் மற்றும் வேப்பெண்ணெய் ஆகியவற்றை 50 லிட்டர் தண்ணீரில் கலந்து, 50 கிராம் காதி சோப்பைக் கரைத்துத் தெளிக்க வேண்டும். 90-ம் நாள், தலா 250 கிராம் இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் ஆகியவற்றை அரைத்து 5 லிட்டர் மாட்டுச் சிறுநீரில் ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டி... 50 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களின் மீது தெளிக்கவேண்டும். இது புகையான் தாக்குதலைத் தடுக்கும். 100மற்றும் 10-ம் நாட்களில் கதிர் பிடிக்கும் தருணத்தில் 50 லிட்டர் தண்ணீரில் 5 லிட்டர் தேமோர்க் கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். 135 முதல் 145 நாட்களுக்குள் கதிர்கள் முற்றி அறுவடைக்குத் தயாராகி விடும்.

படுக்கைப் பந்தலில் பாகல், பீர்க்கன், புடல்!

அரை ஏக்கர் பரப்பில் பந்தல் காய்கறி சாகுபடி குறித்து முருகன் சொன்ன தகவல்கள் இங்கே...

“தேர்வு செய்த அரை ஏக்கர் நிலத்தில், நெல்லுக்கு அமைத்தது போலவே காய்கறி சாகுபடிக்கும் மேட்டுப்பாத்தி அமைத்துக் கொள்ள வேண்டும். பாத்திகளின் ஓர் ஓரத்தில் மட்டும் 6 அடி இடைவெளியில் அரையடி ஆழத்துக்கு குழி எடுத்து 2 கிலோ எரு போட வேண்டும். பிறகு, ஒவ்வொரு குழியிலும் மூன்று மூன்று விதைகளாக ஊன்றி ஈரப்பதத்தைப் பொறுத்து பாசனம் செய்ய வேண்டும். நெல் சாகுபடியில் குறிப்பிட்டது போல சணப்பு விதைகளை விதைத்து மூடாக்காக இட வேண்டும். விதைத்த 10-ம் நாளிலிருந்து 10 நாட்களுக்கு ஒரு முறை பாசனநீரில் 100 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து விட வேண்டும். 15-20 நாட்களில் கொடிகள் ஓடி படரத் தொடங்கும்போது தரையில் இருந்து 7 அடி உயரத்தில் படுக்கை பந்தல் அமைத்து, கொடிகளை ஏற்றி விட வேண்டும். 30-ம் நாளில் இருந்து, 15 நாட்களுக்கு ஒரு முறை ஜீவாமிர்தக் கரைசலைத் தெளிக்க வேண்டும். 35-ம் நாள், புங்கன் எண்ணெய், வேப்பெண்ணெய் கரைசலில் காதி சோப்பைக் கரைத்துத் தெளிக்க வேண்டும். 45-ம் நாளில் இருந்து 15 நாட்களுக்கு ஒரு முறை, தேமோர் கரைசலைத் தெளிக்க வேண்டும். 60-ம் நாளில் இருந்து அறுவடை செய்யலாம். அடுத்த 4 மாதங்களுக்கு மகசூல் கிடைக்கும். ஜீவாமிர்தம் உள்ளிட்ட அனைத்து தெளிப்பு கரைசல்களையும் நெல்லுக்குச் சொன்ன அளவிலேயே தெளிக்க வேண்டும்”.



Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment