Wednesday 15 November 2017

கன்று ஈனும் போது மாடுகள் மற்றும் கன்றுகள் பராமரிப்பு பாகம் - 2 :

1. சீம்பால் மற்றும் பாலில் உள்ள சத்துகள்
2. சீம்பாலிலுள்ள சத்துகள்
3. கன்றுகளுக்கான தீவன மேலாண்மை

சீம்பால் மற்றும் பாலில் உள்ள சத்துகள் :

* சீம்பாலில் சாதாரண பாலை விட 7 மடங்கு புரதச்சத்து அதிகமாகவும், மொத்த திட சத்துகள் இரண்டு மடங்கு அதிகமாகவும் உள்ளது. எனவே சீம்பால் கன்றின் தொடக்க கால வயதில் புரதச்சத்து மற்றும் இதர சத்துகளையும் அளிக்கிறது.

* நோய் எதிர்ப்பு சக்தியினை உருவாக்கும் முக்கிய காரணிகளான தாது உப்புகளும், வைட்டமின் ‘ஏ’ சத்தும் சீம்பாலில் அதிக அளவு உள்ளது. இவற்றை சீம்பால் மூலமாக கன்று உட்கொள்ளும் போது கன்றின் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கிறது.

* சீம்பால் ஒரு மலமிளக்கியாகச் செயல்பட்டு கன்றுகளின் முதல் மலத்தினை வெளியேற்றுவதற்கு உதவி புரிகிறது.

* மாடுகளைப் பொதுவாகத் தாக்கும் தொற்று நோய்கள் மற்றும் நுண்ணுயிரி நோய்களுக்கு எதிராக மாடுகளுக்கு தடுப்பூசி அளிப்பதால் அவற்றுக்கு எதிராக மாடுகளின் உடலில் நோய் எதிர்ப்புப் புரதங்கள் உருவாக்கப்பட்டு அது சீம்பால் மூலம் கன்றுகளுக்கு கிடைப்பதற்கு வழி வகை செய்யலாம்.

* வயது முதிர்ந்த மாடுகள் நிறைய நோய் உண்டாக்கும் கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதால் சீம்பாலில் அதிகமான காமா குளோபுலின்கள் இருக்கும்.

* காமா குளோபுலின்கள் எனும் நோய் எதிர்ப்புப் புரதங்கள் உடையாமல் கன்றுகளின் குடல் வழியாக அவற்றின் உடலில் உறிஞ்சப்படவேண்டும்.

* ஆனால் இந்த காமா குளோபுலின்கள் இதர புரதங்களாக உடைக்கப்பட்டு விட்டால் அவை மற்ற சாதாரணப் புரதங்களைப் போலத்தான் செயல்படும்.

* புதிதாகப் பிறந்த கன்றுகளின் குடல் இந்த காமா குளோபுலின்களை முழுவதும் உறிஞ்சுவதற்கு சிறிது நேரம் மட்டுமே அனுமதிக்கும். இவ்வாறு அவற்றின் குடல் காமா குளோபுலின்களை உறிஞ்சும் திறன் அவை பிறந்து 1-2 மணி நேரத்தில் மிகவும் அதிகமாக இருக்கும்.

* இதைக் கருத்தில் கொண்டு கன்று பிறந்த 15-30 நிமிடங்களில் முதல் தவணையான சீம்பாலையும், இரண்டாம் தவணை சீம்பாலை கன்று பிறந்த 10-12 மணி நேரத்திலும் அளிக்கவேண்டும்.

* கன்றுகள் பிறக்கும் போது அவற்றின் சிறு குடலிலுள்ள சத்துகளை உறிஞ்சும் செல்கள் முதிர்ச்சி அடையாமல் இருக்கும். எனவே இந்நிலையில் அவை பெரிய அளவுள்ள காமா குளோபுலின்களை எளிதில் உறிஞ்சிக்கொள்ளும்.

* கன்றின் வயது மணிக்கணக்கில் அதிகரிக்க அதிகரிக்க அவற்றின் சிறு குடலிலுள்ள உறிஞ்சும் செல்கள் முதிர்ச்சியடையாத நிலையிலிருந்து முதிர்ச்சி அடையத் தொடங்கும். இதன் பிறகு பெரிய அளவிலான புரத மூலக்கூறுகளை அது உறிஞ்சாது.

* இவ்வாறு கன்றுகளின் சிறு குடலிலுள்ள செல்கள் முதிர்ச்சி அடைய அடைய அவற்றின் உறிஞ்சும் திறன் குறைந்துகொண்டே வந்து முழுவதுமாக நின்று விடும்.

* இதற்கு குடல் மூடுதல் என்று பெயர். இவ்வாறு குடல் மூடும் சமயத்தில் கன்றுகளின் இரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்புப் புரதங்களின் அளவும் கன்றின் நோய் எதிர்ப்புத் திறனும் நேர்மாறாக இருக்கும்.

* குடல் மூடும் போது கன்றுகளின் குடலில் சிறிதளவு காமா குளோபுலின்களை மட்டுமே உறிஞ்சப்பட்டிருந்தால் அவற்றின் நோய் எதிர்ப்புத்திறன் குறைவாக இருக்கும்.

* இதனால் கன்றுகளின் இறப்பு விகிதம் அதிகரிப்பதுடன் அவற்றின் நோயினால் பாதிக்கப்படும் விகிதமும் அதிகரிக்கும்.

* கன்றுகளின் உடல் எடைக்கேற்ப சீம்பாலை அவற்றின் உடல் எடையில் 1 பங்கு அளித்தல்.

* கன்று பிறந்த முதல் 15-30 நிமிடங்கள் – கன்றின் உடல் எடையில் 5-8%

* முதல் 10-12 மணி நேரங்கள் - கன்றின் உடல் எடையில் 5-8%

* இரண்டாம் நாள் - கன்றின் உடல் எடையில் 10 %

* மூன்றாம் நாள் - கன்றின் உடல் எடையில் 10 %

* கன்று ஈன்ற மாடுகளில் சுரக்கும் அதிகப்படியான சீம்பாலை கறந்து விட வேண்டும். இல்லையேல் அதிகப்படியான சீம்பாலை கன்றுகள் குடித்துவிட்டால் கன்றுகளில் கழிச்சல் ஏற்படும்.

8 மாடுகளிலிருந்து சுரக்கும் அதிகப்படியான சீம்பாலை குளிர்பதனப் பெட்டியில் சேமித்து தாயற்ற மற்ற கன்றுகளுக்குக் கொடுக்கலாம்.

* சீம்பாலை உறைய வைத்து நீண்ட நாட்களுக்கும் சேமிக்கலாம். இயற்கையாக சீம்பாலை நொதிக்க வைத்தும் 5-7 நாட்களுக்கு சேமித்தும் பயன்படுத்தலாம்.

சீம்பாலிலுள்ள சத்துகள் :

(i) உட்பொருட்கள் - மொத்த திடச்சத்துகள்

பசு மாடுகளின் சீம்பால் - 28.30

எருமை மாடுகளின் சீம்பால் - 31.0

பால் - 12.86

(ii) உட்பொருட்கள் - சாம்பல்

பசு மாடுகளின் சீம்பால் - 1.58

எருமை மாடுகளின் சீம்பால் - 0.9

பால் - 0.72

(iii) உட்பொருட்கள் - கொழுப்புச்சத்து

பசு மாடுகளின் சீம்பால் - 0.15-1.2

எருமை மாடுகளின் சீம்பால் - 4.0

பால் - 4.0

(iv) உட்பொருட்கள் - லேக்டோஸ்

பசு மாடுகளின் சீம்பால் - 2.5

எருமை மாடுகளின் சீம்பால் - 2.2

பால் - 4.8

(v) உட்பொருட்கள் - கேசின்

பசு மாடுகளின் சீம்பால் - 4.76

எருமை மாடுகளின் சீம்பால் - 7.7

பால் - 2.8

(vi) உட்பொருட்கள் - ஆல்புமின்

பசு மாடுகளின் சீம்பால் - 1.5

எருமை மாடுகளின் சீம்பால் - 3.6

பால் - 0.54

(vii) உட்பொருட்கள் - குளோபுலின்

பசு மாடுகளின் சீம்பால் - 15.06

எருமை மாடுகளின் சீம்பால் - 12.5

பால் - -

(viii) உட்பொருட்கள் - மொத்த புரதம்

பசு மாடுகளின் சீம்பால் - 21.32

எருமை மாடுகளின் சீம்பால் - 23.8

பால் - 3.34

கன்றுகளைத் தாயிடமிருந்து பிரித்தல் :

* கன்றுகளைத் தாயிடமிருந்து பிரித்து கன்றுகளைத் தனியாக வளர்ப்பது கன்றுகளை தாயிடமிருந்து பிரித்து வளர்த்தலாகும்.

* இந்த மேலாண்மை முறையில் கன்றுகள் சீம்பாலை குடித்தவுடன், மீண்டும் தாயிடம் பால் குடிக்க அனுமதிக்கப்படுவதில்லை.

* ஆனால் மாட்டிடமிருந்து பாலை முழுவதும் கறந்து, போதுமான அளவு பால் கன்றுகளுக்கு தனியாக அளிக்கப்படுகிறது.

தீமைகள் :

* அதிகமான தாய்மைப் பண்பு உள்ள உள்நாட்டின மாட்டினங்களிலும் எருமை மாடுகளிலும் கன்றுகளைத் தாயிடமிருந்து பிரிப்பது கடினமாகும்.

* சில மாடுகளில் கன்று ஈன்ற அன்றே கன்றுகளைத் தாயிடமிருந்து பிரிப்பதால் பால் உற்பத்திக் குறைவு ஏற்படுவதுடன், அவற்றில் சீக்கிரம் பால் வற்றி விடுகிறது.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

இளங் கன்றுகள் வளர்ப்பதிலும், கன்றுகளுக்கு பாலை அளிப்பதிலும் பின்பற்றப்பட வேண்டிய முக்கிய செயல் முறைகள் :

* தீவிர முறையில் கன்றுகளை வளர்க்கும்போது கன்று ஈன்ற நாளிலேயே கன்றுகளைத் தாயிடமிருந்து பிரிக்கும்போது கீழ்க்கண்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

* ஒவ்வொரு கன்றினையும் தனியாகப் பராமரிக்கவேண்டும். கன்றுகளின் உடல் எடையினை வாரம் ஒரு முறை சரி பார்த்து அதற்கேற்றவாறு கன்றுகளுக்குத் தீவனம் அளிக்கவேண்டும்.

* நிறைய கன்றுகளுக்கு ஒரே இடத்தில் தீவனமிடக்கூடாது. இவ்வாறு தீவனமிடுவதால் கன்றுகளுக்கு அதிகப்படியான தீவனமோ அல்லது தேவைக்கு குறைவான தீவனமோ கிடைக்கும்.

* கன்றுகளுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறையோ அல்லது அதற்கு மேலோ தீவனமளிக்கவேண்டும். ஒரு முறை மட்டுமே தீவனமளித்தால் அவற்றுக்கு செரிமானக் கோளாறுகளோ அல்லது கழிச்சலோ ஏற்பட்டு அவற்றின் உடலில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும்.

* கறவை மாட்டுப் பண்ணையில் உபயோகப்படுத்தப்படும் பால் கறக்கப் பயன்படும் பாத்திரங்கள், பாலை சேமிக்கப் பயன்படும் பாத்திரங்கள் மற்றும் இதர உபகரணங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

* கன்றுகளுக்கு பாலை அளிப்பதற்கு முன்பாக பாலை காய்ச்சி ஆற வைத்து அளிக்கவேண்டும்.

* கன்றின் முதல் வார வயதில் ஒரு நாளைக்கு 3-4 முறைகளும், அவற்றின் 90 வார வயது வரை அவற்றுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறைகளும் பாலை அளிக்கவேண்டும்.

* கன்றுகளின் உடல் எடைக்கேற்றவாறு அவற்றுக்கு பாலை அளிக்கவேண்டும். முதல் மாத வயதில் அதிகப்படியாக பாலை கன்றுகளுக்கு அளிப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

* கன்றுகள் பாலைக் குடிக்கவில்லை எனில், அடுத்த தவணைப் பாலைக் கொடுக்கக்கூடாது. அடுத்த தவணைப் பாலுடன் 30-50 மிலி விளக்கெண்ணெய் கலந்து கன்றுகளின் வாயில் ஊற்றவேண்டும்.

* பால் அல்லது பாலுக்கு பதிலாக உபயோகப்படுத்தப்படும் பொருட்களில் அதிகப்படியாக நுரை இருப்பின் அதனை சுத்தமான துணியால் வடி கட்டிப் பிறகு கன்றுகளுக்கு கொடுக்கவேண்டும்.

* பாலில் உள்ள அதிகப்படியான நுரையின் காரணமாக கன்றுகளில் வயிறு உப்புசம் ஏற்பட வாய்ப்புண்டு.

* கன்றுகளுக்கு சுத்தமான குடிநீர் எப்போதும் கிடைக்குமாறு செய்யவேண்டும். கன்றுக் கொட்டகையின் தரை போதுமான அளவு சரிவாக இருக்குமாறு அமைக்கப்படுவதன் மூலம் கன்றுக்கொட்டகை எப்போதும் சுத்தமாக வைத்திருக்கலாம்.

* கன்றுகளின் அசையூண் வயிறு சீக்கிரம் செயல்படத் தொடங்க தரமான பயறு வகைகளின் வைக்கோலை கன்றுகளுக்கு அவற்றின் முதல் வார வயதிலிருந்து அளிப்பதுடன், தீவனத்தொட்டியில் எப்போதும் வைக்கோல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.

* கன்றுகளின் முதல் வார வயதில் அஸ்காரிஸ் புழுக்களின் தாக்குதலைக் கட்டுப்படுத்த அவற்றிற்கு குடற்புழு நீக்க மருந்தினைக் கொடுக்கவேண்டும்.

* கன்றுகளின் வளர்ச்சியை அதிகரிக்க எதிர் உயிரி மருந்துகளையும், வளர்ச்சி ஊக்கிகளையும் பாலுடனோ அல்லது அடர் தீவனத்துடனோ கலந்து அளிக்கவேண்டும்.

* கன்றுகளை பாத்திரத்திலிருந்து பால் குடிக்கப் பழக்குதல் தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட கன்றுகளை பாத்திரத்தில் பால் அருந்தப் பழக்குவதால் அவற்றின் தீவன மேலாண்மை மிகவும் எளிதாகிறது.

* பொதுவாக கலப்பினக் கன்றுகள் பாத்திரங்களிலிருந்தோ அல்லது ரப்பர் வழியாகவோ பாலைக் குடிக்கக் கற்றுக்கொள்ளும். ஆனால் எருமைக் கன்றுகளை இதற்கு பழக்குவது கடினம்.

* எருமைக் கன்றுகள் சோம்பேறிகளாக இருப்பதுடன் பாத்திரத்திலிருந்து பாலை அருந்த மிகவும் மெதுவாகவே பழகும்.

* கன்றுகளின் உடல் எடைக்கேற்ப பாலை எடுத்து அதைக் காய்ச்சி, ஆற வைத்துப் பிறகு பாத்திரத்திலோ அல்லது வாளியிலோ ஊற்றி கன்றுகளுக்கு அருகில் வைக்கவேண்டும்.

* கன்றுகளைப் பயமுறுத்துவதைத் தவிர்க்கவேண்டும்.

* கன்றுகளின் தலையை வாளிக்குள் அமுத்தி பாலைக் குடிக்கவைக்கக்கூடாது.

* பயந்த கன்றுகள் பால் இருக்கும் பாத்திரத்திற்கு அருகில் வரவே பயப்படும்.

* பண்ணையிலுள்ள பணியாளர் முதலில் தன்னுடைய இரண்டு விரல்களை பால் இருக்கும் பாத்திரத்திற்குள் வைத்து மடிக்காம்பு போல செய்து பிறகு கன்றின் வாய்க்கு அருகில் பால் பாத்தித்தைக் கொண்டு செல்லவேண்டும்.

* இப்போது கன்றானது பால் இருப்பதைக் கண்டுபிடிக்கும்.

* பிறகு மெதுவாக விரல்களைக் கீழே இறக்கி பாலில் மூழ்குமாறு செய்துவிட வேண்டும்.

* கன்று பால் குடிக்க ஆரம்பித்தவுடன் விரல்களை எடுத்துவிட வேண்டும்.

* கன்று எப்போதெல்லாம் பாலைக் குடிக்காமல் தலையை எடுக்கிறதோ அப்போது மேற்கூறிய செயல் முறையினைத் திரும்பச் செய்யவேண்டும்.

* எருமைக் கன்றினை இவ்வாறு பாலைக் குடிக்க பழக்குவதற்கு பொறுமையும், முயற்சியும் தேவை.

கன்றுகளுக்கான தீவன மேலாண்மை :

* கன்றுகளின் அசையூண் வயிறு செயல்படாமல் இருக்கும் என்பதால் கன்றுகளுக்கு தீவனமளிக்கும் போது அவைகளை அசை போடாத பிராணிகளாக கருதவேண்டும். அசையூண் வயிறு செயல்படாததால் செல்லுலோஸை அவை செரிக்கமுடியாது.

* அதிகப்படியான செல்லுலோஸ் இருக்கும் பசுந்தீவனம் மற்றும் வரத் தீவனங்களை கன்றுகள் செரிக்க இயலாது.

* தரமான பயறு வகைத் தீவனங்களின் வைக்கோலை கன்றுகளுக்கு அளிக்கும்போது அவற்றின் அசையூண் வயிறுகளின் செயல்பாடு தூண்டப்படும்.

* கன்றுகளின் அசையூண் வயிறு செயல்படாமல் இருப்பதால் அவற்றிற்கு நல்ல தரமான புரதம் கிடைப்பதில்லை. எனவே கன்றுகளால் புரதம் அல்லாத நைட்ரஜன் சத்துகளை உபயோகிக்க முடியாது. எனவே யூரியாவை கன்றுகளின் தீவனத்தில் சேர்க்கக்கூடாது.

* அசையூண் வயிறு செயல்படாத காரணத்தால் கன்றுகளுக்கு பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களையும் தீவனத்தில் வைட்டமின் ஏ மற்றும் டி யுடன் சேர்க்கவேண்டும்.

* கன்றுகளில் இயற்கையாகவே இருக்கும் உணவுக்குழாயுடன் இணைக்கப்பட்ட ஒரு குழாய் போன்ற அமைப்பின் காரணமாக கன்றுகளின் இளம் வயதில் அவை குடிக்கும் பால் அது செரிக்கும் அபொமேசம் எனும் மூன்றாம் வயதை நேரடியாக அடையும்.

* இந்தக் குழாய் கன்றுகளுக்கு பசுந்தீவனங்கள் அளித்தாலும் பால் அளிக்கும் வரை வேலை செய்யும்.

செவிலித் தாய் மாட்டின் மூலம் கன்றுகளை வளர்த்தல் :

* வண்டி இழுக்கும் மற்றும் உழவுக்குப் பயன்படுத்தப்படும் மாட்டினங்களில் அவைகளில் உற்பத்தியாகும் பால் அவற்றின் கன்றுகளுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். எனவே அவற்றின் கன்றுகளை தாய் மாடுகளிடமே பாலூட்ட அனுமதிக்கவேண்டும்.

* கலப்பின மாடுகளில் அவற்றின் கன்றுகளுக்கு தேவைப்படும் அளவினை விட பால் உற்பத்தி அதிகமாக இருப்பதால், அவற்றின் பால் உற்பத்தியினை நெறிப்படுத்தவும், அவற்றுக்கு அதிகமாகத் தீவனமளிப்பதைத் தடுக்கவும், கன்றுகளுக்கு ஒன்று அல்லது இரண்டு காம்புகளை மட்டும் விட்டு விட்டு இதர காம்புகளில் பாலைக் கறந்துவிட வேண்டும்.

* இம்முறையில் ஒரு மாட்டில் 3 அல்லது நான்கு கன்றுகளை பாலூட்ட அனுமதிக்கலாம்.

* எல்லாக் கன்றுகளையும் மாடுகள் பாலூட்டுவதை ஊக்குவிக்க, கன்று ஈனும் போது புதிதாக ஈன்ற கன்றின் மேலிருக்கும் கோழையினை இதர கன்றுகளின் மீதும் தடவி விட வேண்டும்.

* இதனால் மாடுகள் கன்றுகளை பாலூட்டுவதற்கு அனுமதிக்காமல் இருப்பது தடுக்கப்படும். செவிலித் தாய் மாட்டின் பால் உற்பத்திக்கேற்ப அதன் மூலம் எத்தனை கன்றுகளை வளர்க்கலாம் என்பது முடிவு செய்யப்படும்.

* செவிலித் தாய் மூலம் கன்றுகளை வளர்ப்பது ஒரு எளிதான, குறைவான மேலாண்மை செயல்பாடுகள் தேவைப்படும் முறையாகும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

1 comment:

  1. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238

    ReplyDelete