Saturday 3 February 2018

அரை ஏக்கர்... 18 மாதங்கள்... 2 லட்சம் :

பூரிக்கவைக்கும் பூனைத்தலைக் கத்திரி!

நம்நாட்டில் நெல்லுக்கு அடுத்தபடியாக, அதிக ரகங்கள் இருக்கும் ஒரு பயிர் என்றால்... அது கத்திரியாகத்தான் இருக்கும். புளியம்பூ கத்திரி, பவானிக் கத்திரி, கோவை வரிக்கத்திரி, வெள்ளை வரிக்கத்திரி, பச்சை வரிக்கத்திரி... என இப்போதும் கூட பல வகையான நாட்டுக் கத்திரி ரகங்கள் நம்மிடையே புழக்கத்தில் உள்ளன. மணமும் சுவையும் மருத்துவ குணமும் கொண்ட நாட்டுக் கத்திரிகள் ஒவ்வொரு பகுதியிலும் அந்த மண்ணுக்கேற்றப் பயிராக விளைந்தன. ஆனால், ஒரு கட்டத்தில் வீரிய ரகங்களின் அதிரடி வருகையால், காலகாலமாக அருமையான விளைச்சலையும், அடுத்த போகத்துக்கான விதைகளையும் கொடுத்துக் கொண்டிருந்த நாட்டு ரகங்களில் பெரும்பாலானவை, படிப்படியாக அழிந்துவிட்டன. இன்று, விதைகளுக்காக கம்பெனிகளிடம் கையேந்தி நிற்கிறார்கள், விவசாயிகள்.

இத்தகைய கொடுஞ்சூழலிலும்... நாட்டு ரகங்களை விடாமல் காப்பாற்றி சாகுபடி செய்துவரும் சில விவசாயிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவராக, 'பூனைத்தலைக் கத்திரி’ என்று அழைக்கப்படுகிற 'வெள்ளைவரி உருண்டைக் கத்திரி’ என்கிற நாட்டு ரகத்தைப் பயிர் செய்வதுடன், பிற விவசாயிகளுக்கு விதைகளையும் கொடுத்து வருகிறார், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகேயுள்ள சின்ன பாப்பனூத்து கிராமத்தைச் சேர்ந்த இளம்விவசாயி வி.எம். ராமநாதன்.

உடுமலைப்பேட்டை-ஆனைமலை சாலையில் பயணித்தால், பன்னிரண்டாவது கிலோ மீட்டரில் இடது பக்கம் இருக்கிறது, சின்ன பாப்பனூத்துப் பிரிவு. தென்மேற்குப் பருவமழை, காற்றுடன் கலந்து பன்னீர் தெளித்து, சிலுசிலுத்த மழைப்பொழுதில் கத்திரி வயலில் ராமநாதனைச் சந்தித்தோம்.

நாடி வந்த நாட்டு ரகம்!

''எனக்கு இதுதான் சொந்த ஊர். டிப்ளோமா படிச்சுட்டு, வேலை தேடி அலையாம அப்பாவுக்குத் துணையா விவசாயத்துல இறங்கிட்டேன். 30 ஏக்கர்ல வெவசாயம் பண்றோம். அதுல 15 ஏக்கர்ல தென்னை இருக்கு. மீதி 15 ஏக்கர்ல சின்ன வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, மிளகாய், கத்திரினு காய்கறிகளை மாத்தி மாத்தி சாகுபடி செய்றோம். போட்ட விதை பொல்லாப்பில்லாம விளையுற வளமான செம்மண் பூமி. ஆரம்பத்துல நாட்டு ரக காய்கறிகளைத்தான் விளைய வெச்சோம்.

காலப்போக்குல எல்லோரையும் போல வீரிய விதைக்கு நாங்களும் மாறிட்டோம். கத்திரியிலும் கோ-1, கோ-2 ரகங்களைத்தான் நடவு செஞ்சோம். ஆனா, நாட்டு ரக கத்திரி என்னைத் தேடி வந்தது.

'லட்சுமி பாட்டி’னு ஒருத்தங்க வீட்டுக்கு விருந்துக்குப் போயிருந்தோம். அதுல எங்களுக்கு பரிமாறுன எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு அபாரமான சுவையா இருந்துச்சு. சாப்பிட்டு முடிச்சு பாட்டியம்மாகிட்ட 'அந்தக் கத்திரிக்காயை எங்க வாங்கினீங்க?’னு கேட்டோம். 'இங்கதான் வாங்கினேன்’னு சிரிச்சுக்கிட்டே அவங்க வீட்டுக் கொல்லைப்புறத்துக்குக் கூட்டிப் போயி, அங்க இருந்த செடிகளைக் காட்டினாங்க. பூனைத்தலை வடிவத்துல கிரிக்கெட் பந்து அளவுக்கு ஊதா நிறத்துல வெள்ளைவரிகள் ஓடின காய்கள் தொங்கிட்டு இருந்துச்சு. செடிகளைப் பார்த்து அசந்துட்டேன். 'இது பாரம்பரிய ரகம். ரொம்ப வருஷமா எங்க வீட்டுத் தோட்டத்துல இருக்கு. நாலு பழம் தாரேன். விதை எடுத்து வீட்டுல நட்டு நீங்களும் சாப்பிடுங்க’னு சொல்லி கத்திரிப் பழங்களைக் கொடுத்தாங்க'' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே மழை வலுக்க, நனையாத இடத்துக்கு நம்மை அழைத்துச் சென்ற ராமநாதன் தொடர்ந்தார்.

நேரடிப் பராமரிப்பு அவசியம்!

''அந்தப் பழங்கள்ல எடுத்த விதைகள்ல நாத்து எடுத்ததுல அஞ்சு பாத்திக்குத் தேவையான அளவுக்கு நாத்து கிடைச்சுது. அதுல இருந்து, விதை எடுத்து இப்போ அரை ஏக்கர்ல பூனைத்தலைக் கத்திரியைச் சாகுபடி செஞ்சிருக்கோம். 18 மாசத்துல 20 டன் மகசூல் கிடைச்சிருக்கு. சராசரியா கிலோவுக்கு 10 ரூபாய்ங்கிற விலையில 2 லட்ச ரூபாய் வருமானம் கிடைச்சிருக்கு. அதுல 70 ஆயிரம் ரூபாய் செலவு போக, ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லாபம். பருவ நிலை, தண்ணீர், விற்பனை வாய்ப்பு மூணும் நல்லா இருந்ததால எதிர்பார்த்ததைவிட அதிகமாவே லாபம் கிடைச்சிருக்கு. எவ்வளவு வேலையாட்கள் இருந்தாலும், கண்கொத்திப் பாம்பா நாமளும் வயலைப் பாத்துக்கிட்டே இருந்தாத்தான் விவசாயத்துல ஜெயிக்க முடியும்'' என்ற ராமநாதன்,

''விளைஞ்ச காய்கள்ல ஊக்கமான காய் களாகப் பார்த்து செடிகள்ல பழுக்க விட்டிருக்கோம். இதுல இருந்தே விதை எடுத்து ஆர்வமுள்ள விவசாயிகளுக்குக் கொடுக்கலாம்னு இருக்கோம். இப்போ நான், 'இயற்கைப் பாதி...செயற்கைப் பாதி’னு விவசாயம் செய்றேன். இதை முழுசா இயற்கை முறையிலயும் சாகுபடி செய்யலாம். அடுத்த போகத்துல இருந்து, இந்த நாட்டு ரகத்தை மட்டுமாவது முழு இயற்கை முறையில சாகுபடி செய்யலாம்னு நினைச்சிருக்கேன். காணாம போன இந்த ரகம் திரும்பவும் பரவணுங்கிறதுதான் எங்க கனவு'' என்று சொல்லி விடை கொடுத்தார்.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

பூனைத்தலைக் கத்திரி சாகுபடி பற்றி ராமநாதன் சொன்ன விஷயங்கள் இங்கே...

ஆண்டு முழுவதும் நடவு செய்யலாம். மொத்த சாகுபடி காலம் 18 மாதங்கள். இதில் 16 மாதங்கள் மகசூல் இருக்கும். பொதுவாக கத்திரிக்கு நாற்று நடவுதான் சிறந்தது. அரை ஏக்கரில் சாகுபடி செய்ய, 10 அடி நீளம், 3 அடி அகலத்தில் மேட்டுப்பாத்தியில் நாற்றங்கால் அமைத்துக் கொள்ளவேண்டும். மண்கட்டிகள், பொடிக்கற்களை அப்புறப்படுத்தி, 10 கிலோ சலித்த தொழுவுரத்தைக் கொட்டி இறைத்து, அதன் மீது 15 கிலோ செம்மண்ணைக் கொட்டி இரண்டையும் கலக்கி சமன்படுத்த வேண்டும். பிறகு, பாத்திக்குள் விதைகளைத் தூவி, மண்மூடும் அளவுக்குக் கீறிவிட்டு, தொடர்ந்து தண்ணீர் தெளித்து வரவேண்டும். 15-ம் நாளில் களைகளை அகற்றி, ஒரு கிலோ வேப்பம் பிண்ணாக்குக் கரைசலை பாசனநீரில் கலந்துவிட வேண்டும். இது, வேர்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்தும். பூச்சிகள் தாக்கினால், பரிந்துரைக்கப்படும் பூச்சிகொல்லியைத் தெளிக்கலாம். 25 நாட்கள் முதல் 30 நாட்களுக்குள் நாற்றுகள் தயாராகிவிடும்.

புழுதியாக உழவு செய்த அரை ஏக்கர் நிலத்தில் 5 டன் தொழுவுரத்தைக் கொட்டி உழவு செய்யவேண்டும். இரண்டடி அகலம் முக்கால் அடி உயரத்தில் வரிசையாக மேட்டுப்பாத்திகள் அமைத்து, சொட்டு நீர்ப்பாசன வசதி செய்து கொள்ளவேண்டும். ஒவ்வொரு பாத்திக்கும் இரண்டு அடி இடைவெளி இருக்கவேண்டும். பாத்திகளை ஈரமாக்கி, தயாராக உள்ள நாற்றுகளை, பாத்திகளின் இரண்டு ஓரங்களிலும் செடிக்குச் செடி 3 அடி இடைவெளி இருப்பது போல் நடவு செய்ய வேண்டும். தொடர்ந்து மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து பாசனம் செய்தால், போதுமானது.

25-ம் நாள் களை எடுத்து, பரிந்துரைக்கப்படும் ரசாயன உரத்தை இடவேண்டும். தொடர்ந்து, 25 நாட்களுக்கு ஒரு முறை பரிந்துரைக்கப்படும் அளவுக்கு கலப்பு உரங்கள், நுண்ணூட்ட உரங்களை மாற்றி மாற்றி, கொடுத்து வர வேண்டும். எக்காரணம் கொண்டும் தழைச்சத்து மிகுந்த உரங்களை அதிகம் கொடுக்கக் கூடாது. அதனால், ஏற்படும் செடிகளின் தேவையற்ற வளர்ச்சி, காய்ப்புழுக்களைக் கைதட்டி அழைக்கும். இதில் அதிகம் பூச்சிகள், நோய்கள் தாக்கும். தேவைப்படும் சமயத்தில் பரிந்துரைக்கப்படும் பூச்சிக்கொல்லிகள், மருந்துகளைத் தெளித்து பூச்சிகள், நோய்களைக் கட்டுப்படுத்தலாம். 60-ம் நாள் முதல் மகசூல் எடுக்கலாம். ஒரு செடியில் இருந்து, மொத்தமாக 6 கிலோ காய் கிடைக்கும். அரை ஏக்கரில் 20 டன் அளவுக்கு மகசூல் கிடைக்கும்.

நாற்றங்கால் மானியம் 4 ஆயிரம் ரூபாய்!

இந்த ரக கத்தரி குறித்துப் பேசிய உடுமலைப்பேட்டை வேளாண்மைத் தோட்டக்கலை உதவி இயக்குநர் இளங்கோவன், ''விதைகள் எளிதில் கிடைக்காத இந்த ரக கத்திரி, வீரிய ரகங்களுக்கு இணையாக மகசூல் தரக்கூடியது. இதுபோன்ற நாட்டுரகங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் போய்ச் சேர வேண்டும் என்ற நோக்கில் முன்னோடி விவசாயிகளை அழைத்து செயல் விளக்கப் பண்ணை, பயிற்சிகள் அளித்து வருகிறோம். நாட்டு ரக விதைகளைச் சேகரித்து விவசாயிகளுக்குக் கொடுத்தும் வருகிறோம்.

நாற்றங்கால் அமைத்து மற்றவர்களுக்கு நாற்று கொடுக்க விரும்பும் விவசாயிகளுக்கு, 4 ஆயிரம் ரூபாய் நாற்றங்கால் மானியமும் வழங்கி வருகிறோம். முன்னோடி விவசாயி ராமநாதன், ஆத்மா திட்டத்தின் கீழ் மானியம் பெற்று நாற்றங்கால் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பப் பயிற்சியும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது'' என்றார்.

தொடர்புக்கு :
வி.எம். ராமநாதன்,
செல்போன்: 94431-67078.

இளங்கோவன்,
செல்போன்: 98420-07125. Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

1 comment:

  1. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238

    ReplyDelete