Saturday 18 March 2017

மொந்தன் வாழை சாகுபடியில்...


இயற்கை வாழ்வியல் குறித்த விழிப்பு உணர்வு பெருகி வருவதால், முதல் தலைமுறை விவசாயிகள், இளம் விவசாயிகளில் பலர், விவசாயத்தை ஆரம்பிக்கும்போதே இயற்கை முறையில் ஆரம்பித்து விடுகிறார்கள். இவர்களன்றி பெரும்பாலான இயற்கை விவசாயிகள், ரசாயன முறையில் செலவைக் கட்டுப்படுத்த முடியாமல் இயற்கைக்கு மாறியவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், ரசாயனத்தின் பாதிப்புகளை உணர்ந்து இயற்கைக்கு மாறியவர்களும் சிலர் உண்டு. அத்தகையோரில் ஒருவர்தான், விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன். இவர் இயற்கை முறையில் மொந்தன் வாழையைச் சாகுபடி செய்து வருகிறார்.

ஒரு காலைப்பொழுதில் கள்ளக்குறிச்சியில் உள்ள வாழைத்தோட்டத்தில் வாழை இலைகளைப் பறித்துக்கொண்டிருந்த பாலசுப்பிரமணியனைச் சந்தித்தோம். “தாத்தா, அப்பா காலங்கள்ல இருந்து விவசாயம்தான் எங்க தொழில். ஆரம்பத்துல ரசாயன விவசாயம்தான் செஞ்சுட்டு இருந்தாங்க. அப்பாவுக்கு ரசாயன உரங்களால வர்ற பாதிப்பெல்லாம் தெரியாது. உரம் போட்டா விளைச்சல் கிடைக்கும்ங்குற ஆசையிலதான் செய்துகிட்டிருந்தார். நான் பத்தாவது வரைக்கும் படிச்சுட்டு விவசாயத்துக்கு வந்துட்டேன். ஆரம்பத்துல நானும் ரசாயன உரங்களைத்தான் போட்டேன். ஒருமுறை பூச்சிக்கொல்லி அடிக்கிறப்போ, அது எனக்கு பாதிப்பை உண்டு பண்ணிடுச்சு. அதனாலதான் இயற்கைக்கு மாறணும்னு முடிவு பண்ணினேன். பத்து வருஷமா முழு இயற்கை விவசாயம்தான் செஞ்சுட்டிருக்கேன்” என்று, தான் இயற்கைக்கு வந்த கதையைச் சொன்ன பாலசுப்ரமணியன் தொடர்ந்தார்.

களைகளைக் கட்டுப்படுத்தும் சாம்பல்!

“மொத்தம் ரெண்டே முக்கால் ஏக்கர் நிலம் இருக்கு. கரிசல் மண் நிலம். பாசனத்துக்குக் கிணறு இருக்கு. ஆரம்பத்துல நெல், எண்ணெய்ப்பனை எல்லாம் இயற்கை முறையில சாகுபடி செஞ்சேன். ஆனா, அதுல கிடைச்ச வருமானம் போதுமானதா இல்ல. அப்போ, சில விவசாயிகள்ட்ட பேசுனப்போ, ‘மொந்தன் வாழை சாகுபடி செஞ்சா, தார், இலைகள் மூலம் நல்ல லாபம் எடுக்கலாம்’னு சொன்னாங்க. உடனே, 1 ஏக்கர் 60 சென்ட் நிலத்துல மொந்தன் வாழை சாகுபடியை ஆரம்பிச்சுட்டேன். நட்டதும் முதல்ல களைப் பிரச்னை வந்தது. ரைஸ் மில்கள்ல கிடைக்கிற சாம்பலைத் தோப்பு முழுவதும் அரையடி உயரத்துக்குப் பரப்பிவிட்டதும், களைப் பிரச்னை குறைஞ்சுடுச்சு. ஸ்ப்ரிங்க்ளர் மூலமாத்தான் தண்ணி பாய்ச்சுறேன். அதனால, வாரம் ஒருமுறை தண்ணீர் கொடுத்தாலே போதுமானதா இருக்கு. இப்போ வாழை நட்டு ஏழு மாசம் ஆச்சு” என்ற பாலசுப்பரமணியன் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

இலை 3 ரூபாய்!

“1 ஏக்கர் 60 சென்ட் நிலத்தில 1,900 வாழைக்கிழங்குகளை நடவு செஞ்சேன். இதுல 400 கன்னுங்க சரியா வளரலை. மீதிக் கன்னுங்க அருமையா வளர்ந்திருச்சு. இந்த வாழை மரங்கள்ல மூணு மாசத்துல இருந்தே இலைகளை அறுவடை செஞ்சுட்டிருக்கேன். மாசத்துக்கு ரெண்டுமுறை அறுவடை செய்றேன். சின்ன இலைக்கு 2 ரூபாயும், பெரிய இலைக்கு 3 ரூபாயும் விலை கிடைக்கும். ஒவ்வொரு முறை இலைகளை அறுத்து விற்பனைக்கு அனுப்புற போதும், சராசரியா 5 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. அந்த வகையில 1,500 மரங்கள்ல இருந்து மாசம் 10 ஆயிரம் ரூபாய் கிடைச்சுட்டிருக்கு. இப்போ நாலு மாசத்துல இலை மூலமா 40 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சுருச்சு. நடவுல இருந்து இதுவரை 40 ஆயிரம் ரூபாய் செலவு பண்ணியிருக்கேன். அந்தப் பணத்தை இலை விற்பனை மூலமாவே எடுத்துட்டேன். தொடர்ந்து பக்கக் கன்னுகள்லயும் இலைகள் கிடைச்சுட்டே இருக்கும்” என்றவர் வாழைத்தார் மூலம் கிடைக்கும் வருமானத்தைப் பற்றியும் சொன்னார்.

தார் மூலம் 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்!

“இன்னும் நாலு மாசத்துல கிட்டத்தட்ட 1,500 தார்கள் அறுவடைக்கு வந்துடும். ஒரு தாருக்கு 250 ரூபாய் விலை கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். அந்த வகையில 1,500 தார்கள்ல இருந்து 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். மொத்தமா வருஷத்துக்குனு கணக்குப் பார்த்தா 1 ஏக்கர் 60 சென்ட் நிலத்துல இருந்து, எப்படிப் பார்த்தாலும் 4 லட்ச ரூபாய்க்குக் குறையாம வருமானம் எடுத்துடுவேன். அறுவடை, போக்குவரத்துனு எல்லாச் செலவும் சேர்த்து ஒரு லட்ச ரூபாய் ஆனாலும், வருஷத்துக்கு 3 லட்ச ரூபாய் நிகர லாபமா கையில நிக்கும்” என்றார், சந்தோஷமாக.

தொடர்புக்கு :
பாலசுப்பிரமணியன்,
செல்போன்: 94869 19011.

6 அடி இடைவெளியில் நடவு!

ஒரு ஏக்கர் நிலத்தில் மொந்தன் வாழை சாகுபடி குறித்து பாலசுப்பிரமணியன் சொன்ன தகவல்கள் இங்கே...

வாழைக்கு வடிகால் வசதியுள்ள நிலம் அவசியம். அனைத்து வகை மண்ணிலும் வாழை வளரும். தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் தக்கைப்பூண்டு விதைத்து, அவை பூ எடுக்கும் சமயத்தில் மடக்கி உழ வேண்டும். தொடர்ந்து 5 டன் தொழுவுரத்தைக் கொட்டிப் பரப்பி ஒரு சால் உழவு செய்ய வேண்டும். பிறகு, 6 அடி இடைவெளியில் ஓர் அடி ஆழத்துக்குக் குழி எடுத்து 2 நாட்கள் காயவிட வேண்டும். ஸ்பிரிங்க்ளர் மூலம் பாசன வசதியை அமைத்துக்கொண்டு ஒவ்வொரு குழியிலும் இரண்டு கைப்பிடி ஆட்டு எருவைக் கொட்டி, விதைக்கிழங்குகளை நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து மாதம் ஒருமுறை பாசன நீருடன், ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்துவிட வேண்டும். வேறு எந்தப் பராமரிப்பும் தேவையில்லை. பெரும்பாலும் பூச்சி, நோய்கள் வருவதில்லை. பூச்சிகள் தாக்கினால், வேப்பெண்ணெய்க் கரைசலைத் தெளிக்கலாம்.
தரமான விதைக்கிழங்கு அவசியம்.

ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தாத நிலத்தில் இருந்து, இரண்டு மாத வயதுள்ள கன்றுகளை விதைக் கிழங்குக்குத் தேர்வு செய்ய வேண்டும்.தேர்ந்தெடுக்கப்படும் விதைக்கிழங்கு நல்ல எடையில் இருக்க வேண்டும். அனைத்து விதைக்கிழங்குகளும் ஏறத்தாழ ஒரே அளவில் இருக்கவேண்டும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

No comments:

Post a Comment