Saturday 7 April 2018

நாட்டு மாட்டினங்கள் :

1. உள்நாட்டு மாட்டினங்கள்
2. உழவு மற்றும் இதரவேலைகளுக்குப் பயன்படும் உள்நாட்டின மாட்டினங்கள்
3. பால் உற்பத்தி மற்றும்வேலைக்குப் பயன்படும் உள்நாட்டின மாட்டினங்கள்

உள்நாட்டு மாட்டினங்கள் :

பால் உற்பத்திக்கு வளர்க்கப்படும் உள்நாட்டு மாட்டினங்கள்

கிர் :

* கிர் பசு மாட்டினம் தேசன், குஜராத்தி, கத்தியவாரி, சோர்தி மற்றும் சூரத்தி போன்ற பெயர்களிலும் அறியப்படுகிறது

* குஜராத்தின் தெற்கு கத்தியவார் பகுதியிலுள்ள கிர் காடுகளில் இருந்து இம்மாட்டினம் உருவானது

* இதன் தோல் வெள்ளை நிறத்துடன், அடர்ந்த சிவப்பு நிற அல்லது சாக்லேட் பழுப்பு நிற திட்டுக்களுடன் காணப்படும். சில சமயங்களில் கருப்பு அல்லது முழுவதும் சிவப்பு நிறமாகவும் காணப்படும்.

* கொம்புகள் வளைந்து, அரை வட்ட நிலா போன்று இருக்கும்.

* இவ்வின மாட்டினங்களின் பால் உற்பத்தி 1200-1800 கிலோவாகும்.

* முதல் முறை கன்று ஈனும் வயது சராசரியாக 45-54 மாதங்களாகவும், கன்றுகள் ஈனுவதற்கான இடைவெளி சராசரியாக 515-600 நாட்களாக இருக்கும்.

சிவப்பு சிந்தி :

* இவ்வினம் சிவப்பு கராச்சி மற்றும் சிந்தி என்றும் அறியப்படுகிறது.

* பாகிஸ்தானின் கராச்சி மற்றும் ஹைதராபாத் மாவட்டங்களில் இம்மாட்டினங்கள் அதிகம் காணப்படுகின்றன.

* இவை சிவப்பு நிறமாகக் காணப்படும். இவற்றின் உடல் அடர்ந்த சிவப்பு நிறம் முதல் வெளிறிய சிவப்பு நிறத்துடன் வெள்ளை நிறக் கோடுகளுடன் காணப்படும்.

* இவ்வின மாடுகளின் பால் உற்பத்தி சராசரியாக 1100-2600 கிலோ வரை இருக்கும்.

* சிந்தி மாட்டினங்கள் வெவ்வேறு இனங்களுடன் கலப்பினம் செய்வதற்கு பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படுகின்றன.

* முதல் முறை கன்று ஈனும் வயது சராசரியாக 39-50 மாதங்களாகவும், கன்று ஈனும் இடைவெளி சராசரியாக 425-540 நாட்களாக இருக்கும்.

சாஹிவால் :

* சாஹிவால் மாட்டினம் தற்பொழுது பாகிஸ்தானில் உள்ள மான்டிகோமெரி மாவட்டத்தில் இருந்து தோன்றியது.

* இந்த மாட்டினம் லோலா (தளர்ந்த தோல்), லம்பி பார், மான்டிகோமெரி, முல்தானி, டெலி என்றும் அறியப்படுகிறது.

* இவற்றின் தோல் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்துடன் அல்லது வெளிறிய சிவப்பு நிறத்துடன் சில சமயங்களில் வெள்ளைத் திட்டுகளுடன் காணப்படும்.

* இம்மாட்டினங்களின் சராசரி பால் உற்பத்தி 2725-3175 கிலோவாகவும், பால் கறவைக்காலம் 300 நாட்களாகவும் இருக்கும்.

Subscribe us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

உழவு மற்றும் இதரவேலைகளுக்குப் பயன்படும் உள்நாட்டின மாட்டினங்கள் :

ஹலிக்கார் :

* தற்பொழுது கர்நாடக மாநிலத்தின் ஒரு பகுதியாக உள்ள விஜய நகரம் எனும் பகுதியிலிருந்து இவ்வினம் தோன்றியது.

* இம்மாட்டினத்தில் நிறம் சாம்பல் நிறமாக இருக்கும்.

* சரியான வடிவத்துடன், நன்கு அமைந்த தசைப்பிடிப்புகளுடன் நடுத்தர அளவில் இருக்கும்.

* இம்மாட்டினங்கள் இவற்றின் வேலை செய்யும் திறனுக்கு, குறிப்பாக இவற்றின் வண்டி இழுக்கும் திறனுக்கு பெயர் பெற்றவை.

அம்ரிட்மஹால் :

* இம்மாட்டினங்கள், கர்நாடகாவிலுள்ள ஹாசன், சிக்மகளூர் மற்றும் சித்ரதுர்கா மாவட்டங்களிலிருந்து தோன்றியவை.

* அம்ரிட்மஹால் மாடுகள் சாம்பல் நிறத்துடன் காணப்பட்டாலும், பெரும்பாலும் இவற்றின் தோல் நிறம் வெள்ளை நிறத்திலிருந்து கருப்பு நிறம் வரை பல்வேறு நிறங்களில் காணப்படும்.

* இவற்றின் கொம்புகள் நீண்டு, கூரான கருப்பு நிற முனைகளைக் கொண்டிருக்கும்.

கிலாரி :

* இம்மாட்டினங்கள் மகாராஷ்டிராவிலுள்ள சோலாப்பூர் மற்றும் சிதாபூர் மாவட்டங்களிலிருந்து தோன்றியவை.

* சாம்பல் கலந்த வெள்ளை நிறத்துடன் காணப்படும்.

* இவற்றின் நடை வேகமாக இருக்கும்.

Subscribe us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

காங்கேயம் :

* இம்மாட்டினங்கள் தமிழ்நாட்டின் ஈரோடு, கோயம்பத்தூர் மாவட்டங்களிலுள்ள காங்கேயம், தாராபுரம், பெருந்துறை, ஈரோடு, பவானி மற்றும் கோபிச்செட்டிபாளையம் வட்டங்களின் ஒரு பகுதியிலிருந்து தோன்றியவை.

* திரு.நல்லதம்பி சர்க்கார் மன்றாடியார் மற்றும் பாளையகோட்டையின் திரு.பட்டோகர், போன்றோரின் முயற்சியால் இம்மாட்டினங்கள் தனித்துவம் பெற்றவை.

* பிறக்கும்போது இம்மாட்டினங்களின் தோல் சிவப்பு நிறமாக இருந்து பின் ஆறு மாத வயதில் சாம்பல் நிறமாக மாறிவிடும்.

* காளை மாடுகள் சாம்பல் நிறத்துடன் கூடிய முதுகுப்பகுதியையும், முன், பின் கால்களையும் கொண்டவை.

* வண்டியிலுக்கும் காளைகள் சாம்பல் நிறத்துடன் காணப்படும்.

* பசு மாடுகள் சாம்பல் மற்றும் வெள்ளை நிறத்துடன் காணப்படும். ஆனால் இவ்வினத்தினைச் சேர்ந்த சில மாடுகள் சிவப்பு, கருப்பு, பழுப்பு மற்றும் பல நிறங்கள் கலந்த கலவையுடன் கூடிய தோலைக் கொண்டிருக்கும்.

* இவற்றின் கண்கள் அடர்த்தியான நிறத்துடன், அவற்றை சுற்றி கருவளையங்கள் காணப்படும்.

உம்பலாச்சேரி :

* இம்மாட்டினங்கள் ஜாதி மாடு, மொட்டை மாடு, மோலை மாடு மற்றும் தெற்கத்தி மாடு என்றும் அழைக்கப்படுகின்றன.

* இவை தமிழ்நாட்டின் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் காணப்படுகின்றன.

* உம்பாலச்சேரி இனத்தினைச் சேர்ந்த கன்றுகள் பிறக்கும் போது பொதுவாக சிவப்பு அல்லது பழுப்பு நிறத்துடன் இருப்பதுடன் அவற்றின் முகம், வால் மற்றும் கால்களில் வெள்ளை நிறத்திட்டுகள் காணப்படும்.

* வண்டி மாடுகளுக்கு கொம்பு தீய்ப்பது பொதுவாக உம்பலாச்சேரி இன மாடுகளில் பின்பற்றப்படுகிறது.

புலிக்குளம் :

* இம்மாட்டினங்கள் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மற்றும் சேலம் மாவட்டங்களிலும், கர்நாடகா மாநிலத்தின் பெங்களூர் மாவட்டத்திலும் காணப்படுகின்றன.

* புலிக்குளம்/ஆலம்பாடி காளைகள் அடர்ந்த சாம்பல் நிறத்துடன், கருப்பு நிறமாக காணப்படுகின்றன. பசு மாடுகள் சாம்பல் நிறத்துடனோ அல்லது வெள்ளை நிறத்துடனோ காணப்படும்.

* மைசூர் பகுதி மாடுகளைப் போன்றே இம்மாடுகளும் பின்புறம் வளைந்த கொம்புகளைக் கொண்டிருக்கும்.

* இம்மாட்டினங்கள் நன்கு சுறுசுறுப்பாக இருப்பதால் வேலைக்கு பயன்படுகின்றன. ஆனால் வண்டிகளை வேகமாக இழுக்காது.

Subscribe us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

பால் உற்பத்தி மற்றும்வேலைக்குப் பயன்படும் உள்நாட்டின மாட்டினங்கள் :

தார்பார்க்கர் :

* தென்கிழக்கு பாகிஸ்தானிலுள்ள தார்பார்க்கர் மாவட்டத்தில் இம்மாட்டினங்கள் தோன்றியவை
இவை வெள்ளை சிந்தி, சாம்பல் சிந்தி, தாரி என்றும் அறியப்படுகின்றன.

* இம்மாட்டினங்களின் தோல் வெள்ளை மற்றும் வெளிறிய சாம்பல் நிறத்துடன் காணப்படும்.

* இம்மாட்டினங்களின் காளைகள் வண்டி இழுப்பதற்கும், உழுவதற்கும் பயன்படுகின்றன. பசு மாட்டினங்கள் அதிக பால் உற்பத்திக்கு பெயர் பெற்றவை (1800-2600 கிலோ).

* முதல் கன்று ஈனும் வயது 38-42 மாதங்களாகவும், கன்று ஈனும் இடைவெளி 430-460 நாட்களாக இருக்கும்.

ஹரியானா :

* ஹரியானா மாநிலத்தின் ரோடக், ஹிசார், ஜின்த் மற்றும் குவார்கன் மாவட்டங்களிலிருந்து இம்மாட்டினம் தோன்றியது.

* இவற்றின் கொம்புகள் சிறியதாக இருக்கும்.

* காளை மாடுகள் வேலை செய்யும் திறனுக்கு பெயர் பெற்றவை.

* இவ்வினத்தினைச் சேர்ந்த பசு மாடுகளின் பால் கொடுக்கும் திறன் அதிகம். நாள் ஒன்றுக்கு ஒரு மாடு சராசரியாக 1.5 கிலோ பால் உற்பத்தி செய்யும். கறவை காலம் 300 நாட்கள்.

* ஒரு கறவை காலத்தில் 600-800 கிலோ பால் உற்பத்தி செய்யக்கூடியவை. முதல் கன்று ஈனும் வயது சராசரியாக 40-60 மாதங்கள்

காங்ரெஜ் :

* இவ்வின மாடுகள் வாட்தாத் அல்லது வேஜ்ட் அல்லது வாட்தியார் என்ற பெயர்களாலும் அறியப்படுகின்றன.

* குஜராத் மாநிலத்தின் வடகிழக்கு கட்ச் வளைகுடா பகுதியிலும் அதன் அருகிலுள்ள ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர் மற்றும் ஜோட்பூர் மாவட்டங்களிலிருந்தும் இம்மாட்டினங்கள் தோன்றின

* இம்மாட்டினங்கள் வெள்ளை கலந்த சாம்பல் நிறம் அல்லது அடர்ந்த கருப்பு நிறத்துடன் காணப்படும்.

* காங்ரெஜ் மாட்டினங்கள் வேகமான, அதிக திறனுடைய வேலைகளுக்கு பெயர் பெற்றவை. உழவிற்கும் வண்டி இழுப்பதற்கும் பயன்படுகின்றன.

* இம்மாட்டினத்தினைச் சேர்ந்த பசுக்களின் பால் உற்பத்தி 1360 கிலோக்களாகும்.

ஓங்கோல் :

* இம்மாட்டினங்கள் நெல்லூர் என்றும் அறியப்படுகின்றன.

* இவற்றின் தாயகம் ஆந்திரபிரதேசத்தின் ஓங்கோல் வட்டம் மற்றும் குண்டூர் மாவட்டமாகும்.

* இவற்றின் சராசரி பால் உற்பத்தி 1000 கிலோக்கள். முதல் கன்று ஈனும் வயது 38-45 மாதங்கள். கன்று ஈனும் இடைவெளி 470 நாட்களாகும்.

கிருஷ்ணா பள்ளத்தாக்கு :

* கர்நாடக மாநிலத்தின் கிருஷ்ணா ஆற்றின் வடிகால் பகுதியிலுள்ள கரிசல் மண் பகுதிகளிலிருந்து இவ்வினம் தோன்றியது.

* இம்மாடுகள் பெரிய உடலமைப்புடன், நன்கு அமைந்த தசைப்பிடிப்புகளுடன் இருக்கும்.

* இவ்வினத்தினைச் சேர்ந்த மாடுகளின் வால் தரையினை தொடும் அளவு வளர்ந்திருக்கும்.

* பொதுவாக இவ்வின மாடுகள் சாம்பல் நிறத்தில் காணப்படுவதோடு, இவற்றின் முன்னங்கால்கள் மற்றும் பின்னங்கால் பகுதிகளில் அடர்ந்த சாம்பல் நிறம் காணப்படும். வளர்ந்த பசு மாடுகள் வெள்ளை நிறத்துடன் காணப்படும்.

* இம்மாட்டினங்களின் காளை மாடுகள் நல்ல வேலைத்திறன் மிக்கவையாதலால் உழவிற்கும், இதர விவசாய வேலைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

* இவ்வினத்தினைச் சேர்ந்த பசுக்களின் பால் உற்பத்தி சுமாராக இருக்கும். இவற்றின் சராசரி பால் கொடுக்கும் அளவு 916 கிலோக்களாகும்.

டியோனி :

* இந்த மாட்டினங்கள் டோங்கார்பட்டி, டோங்காரி, வான்னெரா, வாக்ட், பலன்க்யா, சிவேரா என்ற பல பெயர்களால் அறியப்படுகின்றன.

* இம்மாட்டினம் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள மாரத்வாடா பகுதியிலிருந்தும், அருகிலுள்ள கர்நாடகா மற்றும் மேற்கு ஆந்திரப்பிரதேச மாநிலத்திலிருந்தும் தோன்றியது.

* இவற்றின் தோல் புள்ளிகளுடன் கூடிய கருப்பு அல்லது வெள்ளை நிறத்துடன் காணப்படும்.

* முதல் கன்று ஈனும் வயது 894-1540 நாட்களாகவும் சராசரியாக 940 நாட்களாக இருக்கும்.

* இம்மாட்டினங்களின் பால் உற்பத்தி 636-1230 கிலோவாகவும், சராசரியாக 940 கிலோவாக இருக்கும்.

* கன்று ஈனும் இடைவெளி 447 நாட்களாக இருக்கும்.

ஆதாரம் : தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை.

Subscribe us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment