Saturday 14 April 2018

கறவை மாடுகளை சீராக கவனிக்கும் முறைகள் :

1. கன்றின் கவனிப்பு
2. பிற பராமரிப்புகள்
3. காளை மாடுகளின் பராமரிப்பு

இன்றைய காலகட்டத்தில் வேளாண் தொழில்களில் கால்நடை வளர்ப்பும் ஒன்றாகிவிட்டது. கறவை மாடுகள் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்தினால், நிரந்தரமான வருவாயை ஈட்டலாம்.

கால்நடை வளர்ப்பில் முக்கியமானது, அவற்றை நல்ல தரமான கன்றுகளைப் ஈன்ற வைப்பதேயாகும். அதற்கு சத்தான தீவனமும், முறையான கவனிப்பும் அவசியம். கன்றுகளை ஈனுவதற்கு முன்பிருந்தே மாட்டை நன்கு கவனித்தல் வேண்டும். இல்லையெனில், அந்த மாடுகள் ஈனும் கன்றும் மெலிந்து பலவீனமாக இருக்க நேரிடும். எனவே, கன்று ஈனுவதற்கு 6 முதல் 8 வாரங்களுக்கு முன்பிருந்தே சினை மாட்டுக்கு சிறந்த கவனிப்பு அவசியம்.

கன்றின் கவனிப்பு :

* கன்றை ஈன்ற உடனே அதன் வாயிலும், மூக்கிலும் போர்த்தியுள்ள கண்ணாடி போன்ற ஆடையை சுத்தம் செய்ய வேண்டும். தாய் மாடானது அதன் நாக்கினால் கன்றின் உடல் முழுவதும் சுத்தம் செய்யும். அவ்வாறு செய்யாவிடில், ஈரமற்ற துணி அல்லது சணல் பை கொண்டு கன்றினை சுத்தம் செய்து கன்றுக்கு சீரான சுவாசம் கிடைக்கச் செய்ய வேண்டும்.

* அதன் வயிற்றிலும், நெஞ்சிலும் கையினால் அழுத்திவிட்டால் கன்று எளிதாக சுவாசிக்க இயலும். தொப்புள்கொடியை வயிற்றிலிருந்து 2 முதல் 5 செ.மீ. நீளம் விட்டு அறுத்து விட்டு டிஞ்சர் தடவி முடிந்துவிட வேண்டும்.

* குட்டி தானாக எழுந்து சென்று தாய்ப்பால் அருந்த முடியவில்லை எனில், அதை தூக்கி விட்டு உதவி செய்யலாம். முடிந்தவரை 30-லிருந்து 45 நிமிடங்களுக்குள் எழுந்து சென்று தாய்ப்பால் குடிக்கச் செய்ய வேண்டும். ஆறு மணி நேரத்துக்குள் சீம்பால் குடிக்கச் செய்ய வேண்டும். ஈன்ற உடன் கன்றின் எடையை அளவிட வேண்டும். மாட்டின் காம்பினை நன்கு நீரினால் கழுவிச் சுத்தம் செய்ய வேண்டும். கன்றுக்குத் தேவையான படுக்கை வசதி அமைத்துத் தர வேண்டும்.

* பிறந்த முதல் மூன்று நாள்களுக்கு கன்றுக்குத் தவறாமல் சீம்பால் அளிக்க வேண்டும். ஒரு மாதம் கழித்து கன்றுக்கு நல்ல தரமுள்ள பசுந்தீவனமும், 4 மாதத்துக்குப் பிறகு உலர்தீவனமும் அளிக்கலாம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

பிற பராமரிப்புகள் :

* கன்றுகளை அடையாளம் காண நிரந்தர அல்லது தாற்காலிக அடையாளக் குறிகளைப் பயன்படுத்தலாம். காதின் அடிப்பகுதியில் எண்களையும், எழுத்துகளையும் பச்சை குத்தலாம் அல்லது உலோகக் காதணிகளை அணிவிக்கலாம்.

* கன்றுகளை 3 மாதங்கள் வரை தனித்தனி கொட்டிலில் பராமரிக்க வேண்டும். மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் வரை குழுவாக வளர்க்கலாம். 6 மாதங்களுக்குப் பிறகு கன்றுகள், கிடாரிகளைத் தனித்தனியாகப் பிரித்து வளர்க்க வேண்டும். கன்றுகளின் வளர்ச்சி வீதத்தை அறிய 6 மாதங்கள் வரை வாரம் ஒருமுறையும் அதன்பின்பு மாதம் ஒருமுறையும் எடை பார்த்தல் நலம்.

* கன்றுகள் ஈன்றப்பட்ட முதல் மாதத்தில் வயிற்றுப்போக்கு, குடற்புழு, காய்ச்சல் போன்றவற்றால் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கும்.
எனவே, அவற்றை நல்ல வெதுவெதுப்பான சுகாதாரமான இடத்தில் வளர்த்தல் இறப்பைக் குறைக்கும். கிடாரிக் கன்றில் 4-க்கும் மேற்பட்ட காம்புகள் இருப்பின் அதை பிறந்த முதல் இரு மாதங்களுக்குள் நீக்கி விடுதல் வேண்டும். காளைக் கன்றுகள் 8 அல்லது 9 மாதங்களில் ஆண்மை நீக்கம் செய்யப்பட வேண்டும். கன்றுகளை தாய்ப் பசுவிடமிருந்து பிரித்து தனியே வளரப் பழக்க வேண்டும்.

* பசுவின் வளர்ச்சி அது சாப்பிடும் பசுந்தீவனத்தைப் பொறுத்தே அமையும். அதேசமயம், தேவையான அளவு உலர்தீவனம் கொடுத்தல் அவசியம். அதன் முந்தைய பேறுகாலங்களில் கொழுப்பை விட புரோட்டீன் அதிகம் தேவைப்படுகிறது. திறந்த வெளிக் கொட்டில் அமைப்பே கிடாரிக்கு மிகவும் ஏற்றது.

* முதல் நான்கு பருவங்களில் பால் உற்பத்தி அதிகமாக இருக்கும். எனினும் எந்த அளவு அதிக சதைப் பற்றுடனும், எடையுடனும் இருக்கிறதோ அந்த அளவுக்கு பால் அதிகமாக உற்பத்தி செய்ய முடியும். மாட்டுக்கு அது தின்னும் அளவுக்கு பசுந்தீவனமும் வாரத்துக்கு 2-3 கிலோ அடர் தீவனமும் அளித்தல் அவசியம்.

* கறவை மாடுகளின் பராமரிப்பு: கறவை மாடுகளுக்குத் தீவனம் மிக முக்கியம். அதற்கு நிறைய பசுந்தீவனம், உலர் தீவனம் அல்லது வைக்கோல் அளிக்கலாம். தீவனம் குறைந்தால் உடனே பால் அளவு குறையும். எனவே, 2.5 லிட்டருக்கு மேல் கறக்கும் மாடுகளுக்கு ஒவ்வொரு 2 லிட்டருக்கும் ஒரு கிலோ கலப்புத் தீவனம் கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும். கறவை மாடுகளை மென்னையாகக் கையாளுதல் வேண்டும். அவை பயந்தால் பால் உற்பத்தி குறையும்.

* பால் உற்பத்தி அளவை ஒவ்வொரு முறையும் பதிவேடுகளில் பதிவு செய்தால் அதன் உற்பத்தி திறனை அறிந்து கொள்ள உதவும். ஒவ்வொரு கறவை மாட்டுக்கும் தனித்தனிப் பதிவேடுகள் அவசியம்.
கலப்புத் தீவனத்தை பால் கறக்கும் முன்பும், அடர் தீவனத்தை பால் கறந்த பின்பும் அளித்தல் சிறந்தது. ஒரு சீரான இடைவெளியுடன் தண்ணீர் வழங்க வேண்டும். வைக்கோல் போன்ற உலர் தீவனங்கள் பால் உற்பத்தியை அதிகரிக்கும்.

* தினசரி பால் கறப்பது அவசியமாகும். ஒரு நாளைக்கு 3 முறை கறப்பது, பால் உற்பத்தியை அதிகரிக்கும். கறக்காமல் மடியிலேயே விடப்படும் பால், அதிகமாக பால் சுரப்பதைக் குறைக்கிறது. முடிந்தவரை முழு கையையும் பயன்படுத்திப் பால் கறக்க வேண்டும்.

* எருமை மாடுகளை பால் கறக்குமுன் நன்கு கழுவினால் சுத்தமான பால் கிடைக்கும். தினசரி மாடுகளை குளிப்பாட்டுதல் உதிர்ந்த முடியை நீக்க உதவும். ஒவ்வொரு கறவைப் பருவத்துக்கும் இடையே 60-90 நாள்கள் இடைவெளி வேண்டும். அவ்வாறு இல்லையெனில் பால் தரும் நாள்கள் குறையும். சரியான நேரத்தில் தடுப்பூசிகள் போடப்பட வேண்டும்.

* சினை மாடுகளுக்கு 1.25 முதல் 1.75 கிலோ கலப்புத் தீவனம் அதிகமாகக் கொடுக்க வேண்டும். சினை மாட்டுத் தொழுவத்தின் தரை வழுக்குமாறு இருக்கக் கூடாது.

காளை மாடுகளின் பராமரிப்பு ;

* வெற்றிகரமான இனவிருத்திக்கு காளைகளைச் சரியாகப் பராமரித்துத் தகுந்த ஊட்டமளிக்க வேண்டும். காளைகளை இனவிருத்திக்காகப் பராமரிக்கும்போது பால் உற்பத்தி, மூதாதையரின் உற்பத்தித் திறன், உடலியல், உடற்கூறு தோற்றம் முதலியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு வயதிலேயே காளைக் கன்றுகளை மற்ற கன்றுகளிலிருந்து பிரித்து, அவற்றுக்கு நல்ல புரோட்டீன் தாதுக்கள், வைட்டமின்கள் கொண்ட தீவனங்களை சரியான அளவில் அளிக்க வேண்டும்.

* இனவிருத்திக் காளைகள் மிகவும் அதிக எடையுடன் இருந்தால், அவை சிறந்த விந்துகளை உற்பத்தி செய்யாது. பெரிய தலையுடன் திடகாத்திரமான உடம்புடன் பரந்த மார்பு இருக்க வேண்டும். மாடுகளில், காளைகள் 16 முதல் 18 வயதில் பருவம் அடையும்.

ஆதாரம் : கால்நடை மற்றும் ஆராய்ச்சி மையம், திண்டுக்கல்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment