Monday 13 February 2017


முயல் வளர்ப்பு பாகம் : 7


குட்டி ஈனுதல் :

பொதுவாக முயல்கள் இரவில் தான் குட்டி ஈனுகின்றன. அவை குட்டி ஈனும் போது எந்த ஒரு தொந்தரவையும் விரும்புவதில்லை. 7 – 30 நிமிடத்திற்குள் குட்டி ஈனுதல் நடைபெற்று முடிந்து விடும். சில சமயம் எல்லாக் குட்டிகளும் தொடர்ந்து வெளி வராமல், சில குட்டிகள் பல மணி நேரம் கழித்தும் வெளிவரலாம். அச்சமயத்தில் ஆக்ஸிடோசின் ஊசி போடப்பட்டு குட்டிகள் வெளிக்கொணரப்படும். குட்டி போட்டவுடன் தாய் முயல் குட்டிகளை நக்கி சினைக்கொடியை உண்டு விடும். பிறந்த குட்டிகள் தாயிடம் பாலூட்ட முயலும். அவ்வாறு பாலூட்ட இயலாத குட்டிகள் உடல் நலம் குன்றி குட்டியிலேயே இறந்து விடும். தாய் முயலானது வேண்டுமளவு அதன் விருப்பத்திற்கு உணவு எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படவேண்டும். அப்போது தான் குட்டிகளுக்குத் தேவையான அளவு பால் கிடைக்கும். தாய் முயல் இரவில் தான் குட்டிகள் பால் குடிக்க அனுமதிக்கும். ஒரு ஈற்றில் 6-12 குட்டிகள் வரை ஈனலாம்.

தாயிடமிருந்து பிரித்தல் :

குட்டிகள் பிறந்த சில நாட்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே முக்கிய உணவு. 3வது வாரத்தில் சிறிதளவு உரோமம் வளர்ந்த குட்டிகள் கண் திறந்து, தீவனங்களைக் கொறிக்க ஆரம்பிக்கும். 4 – 6வது வாரத்தில் குட்டிகளைத் தாயிடமிருந்து பிரித்து விடலாம். முதல் 21 நாட்களுக்கு மட்டுமே தாய்ப்பால் அவசியம். அதன் பின் பாலைக் குறைத்து பிற தீவனங்களைக் கொறிக்கப் பழக்குதல் வேண்டும்.

இனம் பிரித்தல் :

குட்டிகளைப் பிரிக்கும் போதே இனங்களைக் கண்டறிந்து ஆண், பெண் முயல்களைத் தனித்தனியாகப் பிரித்து விடவேண்டும். குட்டிகளின் இனப்பெருக்க உறுப்பை கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் மூலம் அழுத்தும் போது ஆண்குறி காணப்பட்டால் ஆண் முயல் என்றும் அல்லது சற்று துவாரம் போல் காணப்பட்டால் அதைப் பெண் எனவும் கண்டறியலாம்.

முயலின் பல்வேறு வளர்ச்சி நிலைகளின் அடடவணை :

1. இனக்கலப்பிற்குத் தேவையான ஆண் முயல்கள் :

10 பெண் முயல்களுக்கு 1 ஆண் முயல்

2. முதல் கலப்பிற்கான வயது :

சிறிய இனங்கள் – 4 மாதம்
அதிக எடையுள்ள இனங்கள் 5-6 மாதங்கள்

3. இனப்பெருக்கத்திற்கான பண்புகள் :

முயல்கள் பல இனச்சேர்க்கைப் பருவம் கொண்டவை. பெண் முயல்களுக்கு பருவ சுழற்சி இல்லையெனினும் மாதத்தில் 12 நாட்கள் சூட்டில் இருக்கும்.

4. சினைத்தருண அறிகுறிகள் :

அமைதியின்மை, வாயைத் தரையில் அல்லது கூண்டில் அடிக்கடி தேய்த்தல், ஒரு புறமாக சாய்ந்து படுத்தல், வாலைத்தூக்குதல், தடித்த, கருஞ்சிவப்பான, ஈரமான பெண் உறுப்பு.

5. இனச்சேர்க்கை :

சினை அறிகுறியுள்ள பெண் முயலை ஆண் முயலின் கூண்டிற்கு எடுத்துச் சென்று இனச்சேர்க்கைக்கு விடவேண்டும். சரியான பருவத்தில் உள்ள பெண் முயல் வாலைத்தூக்கி சேர்க்கையை ஏற்றுக் கொள்ளும். ஓரிரு நிமிடத்தில் இந்நிகழ்ச்சி நடந்த உடன், ஆண் முயல் கிரீச் என்ற சப்தத்துடன் ஒரு புறமாகவோ அல்லது பின்புறமாகவோ விழும்.

6. கருமுட்டை வெளிவருதல் :

இனச்சேர்க்கை நடந்த 10-13 மணி நேரங்களில் கருமுட்டை வெளிவரும். தன்னியல்பாக தூண்டப்படும் கருமுட்டை வெளிவரும்.

7. போலிச்சினை / பொய்ச்சினை :

பெண் முயல்கள் தங்களுக்குள்ளே மலட்டு இனப்புணர்ச்சி செய்து கொள்வதால் 16-17 நாட்கள் இவை சினைதரித்தது போல் காணப்படும். இச்சமயத்தில இவை குட்டிகளுக்குப் படுக்கை தயார் செய்ய தனது முடியை பிய்த்துக் கொள்ளும். பெண் இனப்பெருக்க உறுப்பும் சிறிது வீங்கிக் காணப்படும்.

8. சினைக்காலம் :

28-34 நாட்கள் (சராசரியாக 31 நாட்கள்)

9. சினையை உறுதிப்படுத்தும் சோதனைகள் :

முயலின் சினையை உறுதிப்படுத்த கலப்பு சோதனை, எடை கூடும் முறை மற்றும் அழுத்தச் சோதனை முறை போன்றவற்றின் மூலம் அறியலாம். நன்கு அறிந்த நபரால் செய்யப்படும் அழுத்தச் சோதனை முறையே எல்லாவற்றிலும் சிறந்தது.

10. குட்டிகளின் எண்ணிக்கை :

6-8 குட்டிகள்

11. தாயிடமிருந்து குட்டிகளைப் பிரித்தல் :

4-6 வாரங்கள்

12. அடுத்தடுத்த ஈற்றுகளுக்கு (குட்டி ஈனும்) உள்ள இடைவெளி :

2 மாதங்கள் (ஒரு ஈற்று முடிந்து குட்டியிணை பிரித்தவுடன் இனச்சேர்க்கைக்கு விட்டால் இந்த இடைவெளி ஒரு மாதமாகக் குறையலாம்).

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment