Monday 27 February 2017

ஆட்டு பண்ணைகளில் பொலி கிடாக்களின் முக்கியத்துவம் :


விவசாயிகள் நல்ல தரமான ஆட்டு பண்ணையை உருவாக்க பண்ணையில் சிறந்த பொலிகிடாக்களை பராமரிப்பது அவசியமானது.

தரமான ஆடுகள் :

ஆட்டு பண்ணைகளின் லாபம் என்பது அங்கு வளர்க்கப்படும் தரமான, ஆரோக்கியமுள்ள ஆடுகளை சார்ந்து இருக்கின்றது. தரமுள்ள ஆடுகளை உருவாக்க பெரிதும் துணை புரிவது அந்த பண்ணையில் உள்ள ஆரோக்கியமான பொலி கிடாக்களும், பெட்டை ஆடுகளுமே ஆகும். நல்ல தரமான ஆட்டு குட்டிகள் தொடர்ந்து கிடைப்பதற்கு நல்ல பெட்டை ஆடுகளும், தரமான பொலி கிடாக்களும் மிகவும் அவசியம் ஆகும். குறிப்பாக, நல்ல பொலிகிடாக்கள் நல்ல குட்டிகள் உருவாவதில் 80 முதல் 90 சதவிகிதம் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, நல்ல பொலி கிடாக்களை தேர்வு செய்வதும் பராமரிப்பதும் மிகவும் அவசியம்.

பொலி கிடாக்கள் தேர்வு :

விவசாயிகள் புதிய பண்ணை தொடங்கும் போது கிடாக்களை வேறு பண்ணைகளில் இருந்தோ அல்லது சந்தையில் இருந்தோ வாங்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் குட்டிகள் நோயினால் பாதிக்கப்பட்டிருக்க கூடாது. அதே போல் தேர்ந்தெடுக்கும் கிடாக்கள் காய்ச்சல், நுரையீரல் நோய்கள், வயிற்று உப்புசம், கண்வலி, வாய்ப்புண், கால்புண் மற்றும் இனப்பெருக்க உறுப்பு போன்ற நோய் அறிகுறிகள் இல்லாமல் இருத்தல் வேண்டும். ஆண் தன்மை, பிரகாசமான கண்கள் மற்றும் ஆரோக்கிமான தோல் உடைய ஆடுகளை வாங்க வேண்டும். பொலி கிடாக்களை வாங்கும் பொழுது தரமான இனப்பெருக்க உறுப்புகள் உள்ளவற்றை வாங்க வேண்டும்.
பொதுவாக, கிடாக்களில் நன்றாக வளர்ச்சியடைந்த இரண்டு விரைகளும் ஒரே அளவில் இருக்கும்படியான ஆடுகளை தேர்வு செய்ய வேண்டும். இரண்டு விரைகளும் விரைப்பையில் இறங்காத ஆடுகளை தவிர்க்க வேண்டும். ஆடுகளில் விதைப்பையின் சுற்றளவு 25 முதல் 35 செ.மீ இருக்க வேண்டும். கால்கள் மற்றும் பாதங்கள் உறுதியானதாக இருக்க வேண்டும். விவசாயிகள் சொந்த பண்ணையில் உள்ள ஆடுகளின் இனத்திற்கு ஏற்ப ஒரே இனத்தை சேர்ந்த வயது வந்த கிடாக்களையே தேர்வு செய்ய வேண்டும். பொதுவாக, 8 முதல் 10 வயதுடைய கிடாக்கள் சினைக்கு விடத் தகுதியானவை. ஆனால், ஒரு ஆண்டு வயதுடைய ஆடுகளை சினைக்கு அனுமதிக்கலாம். ஆடுகளை சினைக்கு 6 வயது வரை பயன்படுத்தலாம். இனப்பெருக்கத்திற்கு தேவையான கிடாக்களை அவை குட்டிகளாக இருக்கும் பொழுது தேர்வு செய்வதுடன், தாயிடம் இருந்து பிரித்த பிறகு 3 மாத எடையின் படி அதிக எடை உடைய குட்டிகளை தேர்வு செய்யலாம்.

இனப்பெருக்க கிடாக்கள் பராமரிப்பு :

தேர்ந்தெடுக்கப்பட்ட கிடாக்குட்டிகளுக்கு மேய்ச்சலுடன் தனியாக 100 கிராம் அளவு அடர்தீவனம் மற்றும் சுத்தமான தண்ணீர் தர வேண்டும். இனப்பெருக்கத்திற்கு விடும் முன்னால் கிடாக்களின் இனப்பெருக்க உறுப்பை சுற்றி உள்ள உரோமத்தை வெட்டி சுத்தம் செய்ய வேண்டும். காலின் குளம்பை சீராக வெட்டி விட வேண்டும். கிடாக்களை தனியாக கட்டி போடாமல் சுதந்திரமாக அதன் கொட்டகையில் உலாவ விட வேண்டும். கிடாக்களுக்கு மற்ற ஆடுகளுக்கு போடுகின்ற தடுப்பூசிகளையும், குறிப்பாக துள்ளுமாரி, கோமாரி நோய்களுக்கான தடுப்பூசிகளையும், குடற்புழு நீக்கமும் கால்நடை மருத்துவரின் உதவியுடன் செய்ய வேண்டும். இனச்சேர்க்கைக்கு விடும் பெட்டை ஆட்டின் இனப்பெருக்க உறுப்பின் பகுதிகள் சாணம் ஏதும் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். இனச்சேர்க்கைக்கு ஒரு கிடாவையும், ஒரு பெட்டை ஆட்டையும் விட்டு மூன்று முறை இனச்சேர்க்கை நடந்த பின் கிடாவையும், பெட்டை ஆட்டையும் பிரித்து விட வேண்டும். காலையில் வெயில் வரும் முன்பு இனச்சேர்க்கை செய்ய வேண்டும். இனச்சேர்க்கைக்கு பிறகு கிடாக்களை உடனே மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது.

பொதுவாக, பொலி கிடாக்களை ஒன்று முதல் 6 வயது வரை இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தலாம். ஆனால், தொடர்ந்து ஒரே கிடாவை பயன்படுத்தினால் சில மரபியல் தொடர்பான நோய்கள் வரக்கூடும். எனவே, ஒரு கிடாவை ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் பயன்படுத்தி விட்டு அவற்றை பண்ணையில் இருந்து நீக்கி விடலாம். தரமுள்ள பொலி கிடாக்களும், பெட்டைகளும் உள்ள பண்ணைகளில் மிகச்சிறந்த ஆட்டு குட்டிகளை விவசாயிகள் தொடர்ந்து பெற முடியும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment