Sunday 13 May 2018

சவுக்கு மூங்கில் பதிமுகம் மலைவேம்பு :

80 ஏக்கர்...5 ஆண்டுகள்...1 கோடியே 19 லட்சம் ரூபாய்...

மலைக்க வைக்கும் மரம் வளர்ப்பு !

ஐந்தாம் ஆண்டிலிருந்து பலன்.
அதிகப் பராமரிப்பு இல்லை.

கரும்பு, மஞ்சள், தென்னை, வாழை... என்ற பணப்பயிர்கள் பட்டியலில் தற்போது மரப்பயிர்களும் இணைந்து விட்டன. 'விவசாயத்தையே விட்டு விலகலாம்’ என்று நினைப்பவர்களுக்கு மரப்பயிர்கள்தான் வரப்பிரசாதமாக உள்ளன. அதனால்தான் விவரமறிந்த விவசாயிகள், மரப்பயிர் சாகுபடிக்கு மாறி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 'கொங்கு’ குழந்தைசாமி, அவர்களில் ஒருவர். தமிழ்நாட்டில் அதிகளவில் மரப்பயிர் சாகுபடியில் ஈடுபட்டிருப்பவர்களில் ஒருவரும்கூட!

ஈரோடு பகுதியில் ஜவுளித் தொழில் செய்து வரும் குழந்தைசாமி, தனது பங்குதாரர்களுடன் சேர்ந்து வாங்கிய தரிசு நிலத்தைப் பண்படுத்தி... பல வகை மரங்கள், கரும்பு, தென்னை... என சாகுபடி செய்து பொன் விளையும் பூமியாக மாற்றியுள்ளார்.

கொடிவேறி அணைக்கு அருகில் இருக்கிறது இவர்களுடைய 'ஸ்ரீ முருகவேல் பண்ணை’. திரும்பிய திசையெல்லாம் சிறியதும், பெரியதுமாக பலவகையான மரங்கள் பசுமை காட்டிச் சிரித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு புறம் கரும்பு, இன்னொரு புறம் தென்னை என செழிப்பாகக் காட்சி அளிக்கிறது, அப்பண்ணை.

சவுக்கு மர அறுவடைப் பணியைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த குழந்தைசாமியை சந்தித்தபோது, ''பாரம்பரியமான விவசாயக் குடும்பம் எங்களோடது. ஆனா, விவசாயம் கட்டுப்படியாகாததால, நான் ஜவுளி ஏற்றுமதித் தொழில்ல இறங்கிட்டேன். இருந்தாலும், 'பெரிய அளவுல லாபகரமா விவசாயம் செய்யணும்’கிற எண்ணம் எனக்குள்ள ஓடிட்டே இருக்கும். அதுக்கேத்த மாதிரியான இடத்தைத் தேடிக்கிட்டிருந்தப்போதான் இந்த இடம் அமைஞ்சுது. மொத்தம் 230 ஏக்கர். நாங்க வாங்கும்போது கரடுமுரடா, ஆடு, மாடு மேய்க்கக்கூட லாயக்கில்லாம தரிசா கிடந்துச்சு. கொஞ்சம், கொஞ்சமா திருத்தி, விவசாயம் பண்ண ஆரம்பிச்சோம்.

ஏழு கிலோ மீட்டரிலிருந்து தண்ணீர் !

230 ஏக்கருக்கும் சேர்த்து அஞ்சு போர்வெல்லும், ஒரு கிணறும் இருந்துச்சு. அதை வெச்சு, முழு நிலத்துலயும் விவசாயம் பண்ண முடியலை. அதனால, ஆரம்பத்துல, 70 ஏக்கர்ல கரும்பும், 40 ஏக்கர்ல தென்னையும் போட்டோம். அதுக்கே தண்ணி பத்தலை.

பண்ணைக்கு ஏழு கிலோ மீட்டர் தூரத்துல கொடிவேறி அணை இருக்குது. அதுல இருந்து பிரியுற அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்ல இருந்து, 'கசிவு நீர்ப் பாசனத் திட்டம்’ மூலமா குழாய் வழியா தண்ணி எடுத்து வந்தோம். அதை சேமிச்சு வைக்கறதுக்காக 60 லட்சம் லிட்டர் பிடிக்கிற அளவுக்கு குளம் வெட்டியிருக்கோம்.

தண்ணி கிடைச்சதும், அடுத்தக் கட்டமா யோசிச்சப்பதான் 'கோயம்புத்தூர் மரம் வளர்ப்போர் சங்கம்’ மூலமா மரம் வளர்க்கறதுக்கான ஆலோசனை கிடைச்சுது. 2006-ம் வருஷத்துல இருந்து, பழனி மலை பாதுகாப்பு சங்கத்துலயும் மேட்டுப்பாளையம் வனவியல் கல்லூரியிலும் கன்னுகளை வாங்கி, கொஞ்சம் கொஞ்சமா நடவு பண்ண ஆரம்பிச்சோம்.

80 ஏக்கர் நிலத்தில் 35 ஆயிரம் மரங்கள் !

13 ஏக்கர்ல 22 ஆயிரத்து 672 சவுக்கு; ஏழரை ஏக்கர்ல 1,044 தைல மரங்கள்; 17 ஏக்கர்ல ஆயிரம் பதிமுகம்; 15 ஏக்கர்ல 6 ஆயிரத்து 900 மலைவேம்பு;12 ஏக்கர்ல 3 ஆயிரத்து 120 முள்ளில்லா மூங்கில்; 5 ஏக்கர்ல 1,280 நாட்டுவாகை; 6 ஏக்கர்ல 1,500 மகோகனி; 2 ஏக்கர்ல 200 செஞ்சந்தனம்; 1 ஏக்கர்ல 200 குமிழ்; ஒன்றரை எக்கர்ல 200 பென்சில் மரம்னு நடவு செஞ்சுருக்கோம். இதுபோக ஊடுபயிரா மரங்களுக்குள்ளாறவும், வரப்பு, வாய்க்காலுனு மிச்சம் இருக்குற இடங்கள்ல எல்லாம் சேர்த்து 50 சிசு, 100 ஈட்டி, 200 குமிழ், 50 பாப்புலர் (பிளைவுட் தயாரிக்க பயன்படும்), 10 சந்தனம், 5 ஒளிவேறி மரம்னு 15 வகையான மரங்கள் நட்டிருக்கோம். மொத்தத்துல 80 ஏக்கர்ல 38 ஆயிரம் மரங்களுக்கு மேல இருக்கு. எல்லாத்துக்கும் சொட்டுநீர்ப் பாசனம்தான்'' என்ற குழந்தைசாமி, மரங்களின் பராமரிப்பு பற்றிச் சொன்னார்.

தண்ணீர் கண்டிப்பாகத் தேவை !

''மரம் சாகுபடிக்கு தண்ணி தேவையில்லைனுதான் நிறைய பேர் நினைக்கறாங்க. ஆனா, அது தப்பு. தண்ணி இல்லாம மரம் வளர்க்கவே முடியாது. எந்த மரமா இருந்தாலும், கண்டிப்பா அஞ்சு வருஷம் வரைக்கும் தண்ணி கொடுக்கணும். 'மழையை மட்டும் நம்பி வளக்கலாம்’னு நினைச்சா, எதிர்பாக்குற மகசூல் எடுக்க முடியாது. கேரளாவுல வருஷத்துக்கு ஒன்பது மாசம் மழை பெய்யும். அதனால அங்க வேணா தண்ணி பாய்ச்சாம மரம் வளக்க முடியும். தமிழ்நாட்டுல முடியவே முடியாது.

சொட்டு நீர்ப் பாசனம் நல்லது !

நாங்க, ஆறு மாசத்துக்கு ஒரு தடவை, அதாவது பருவ மழை ஆரம்பிக்கறதுக்கு முன்ன, ஒவ்வொரு மரத்துக்கும் மூணு கிலோ ஆட்டு எரு அல்லது ஒரு கிலோ கோழி எரு கொடுத்துடுவோம். அதோட மரத்துல இருந்து உதிர்ற இலைகளும் மட்கி உரமாயிடும். வருஷத்துக்கு ஒரு தடவை மரங்களைக் கவாத்து பண்ணிடுவோம். ஓரளவுக்கு மரம் வளந்ததுக்கு அப்பறம் கவாத்து பண்றதை நிறுத்திடுவோம். வாய்க்கால் பாசனத்தைவிட சொட்டுநீர் முறையில மரங்கள் நல்லா வளருது'' என்ற குழந்தைசாமியிடம், வருமானம் பற்றிக் கேட்டதும், அதைப் பற்றி விவரித்தார்.

650 டன் சவுக்கு, 300 டன் தைல மரம் !

''இப்போ, சவுக்கு, தைல மரங்களை அறுவடை பண்ணிக்கிட்டிருக்கோம். சவுக்கு மரம் டன் 2 ஆயிரத்து 500 ரூபாய்னு விலை பேசி 50 டன் வரை வித்திருக்கோம். ஏக்கருக்கு சராசரியா 50 டன் மகசூல் கிடைக்குது. மொத்தம் 13 ஏக்கர்லயும் சேர்த்து 650 டன் மரம் கிடைக்கும். அதை விக்கிறப்போ, 16 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.

தைல மரத்துல ஏக்கருக்கு சராசரியா 40 டன் கிடைக்குது. ஏழரை ஏக்கர்ல 300 டன் மரத்துக்கு மேல கிடைக்கும். இப்போ ஒரு டன் 2 ஆயிரத்து 50 ரூபாய்னு பேப்பர் மில்காரங்க எடுக்கறாங்க. இது மூலமா 300 டன் மரத்துக்கு 6 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.

மலைவேம்பில் 50 லட்சம் !

மூங்கிலும், மலைவேம்பும் அறுவடைக்குத் தயாரா இருக்கு. மூங்கில்ல ஏக்கருக்கு சராசரியா 12 டன் கணக்குல 12 ஏக்கருக்கும் சேத்து 144 டன் மரம் கிடைக்கும். 1 டன் குறைஞ்சது 3 ஆயிரம் ரூபாய்க்கு விக்கும். அந்தக் கணக்குல, 4 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் கிடைச்சுடும். மலைவேம்புல, ஏக்கருக்கு சராசரியா 1,600 கன அடி மரம் கிடைக்கும். 13 ஏக்கர்ல இருந்து குறைஞ்சது 20 ஆயிரம் கன அடி மரம் கிடைக்கும். ஒரு கன அடி 250 ரூபாய்னு வெச்சுகிட்டாலே, மொத்தம் 50 லட்ச ரூபாய் கிடைச்சுடும்.

உத்தேசக் கணக்கல்ல... உண்மைக் கணக்கு !

அடுத்த வருஷம் பதிமுகத்தை அறுவடை செய்யலாம். எப்படியும் ஏக்கருக்கு 5 டன்னுக்குக் குறையாம கிடைக்கும். 17 ஏக்கர்ல இருந்து 85 டன் வரைக்கும் மரம் கிடைக்கும். ஒரு டன் 50 ஆயிரம் ரூபாய்னு வெச்சுக்கிட்டாலே, 42 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.

மத்த மரங்கள்லாம் அறுவடைக்கு வர இன்னும் நாள் ஆகும். அதனால அந்தக் கணக்கையெல்லாம் இப்போ பாக்க வேணாம். கண்ணு முன்னால விளைஞ்சு, விற்பனையாகிட்டு இருக்கறதை மட்டும் வெச்சு கணக்குப் போட்டாலே... மொத்தம் 80 ஏக்கர்ல இருந்து, ஒரு கோடியே 19 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.

ஆரம்பத்துல சொட்டு நீர் அமைப்பு போடுறதுக்காக 20 லட்ச ரூபாய் செலவாச்சு. அதுக்கப்பறம், உரம் வைக்கிறது, கவாத்து பண்றது, பராமரிப்பு...னு இந்த அஞ்சு வருஷத்துல மொத்தம் 36 லட்ச ரூபாய் செலவாகியிருக்கு. இதைக் கழிச்சா, 83 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் நிகர லாபம். நான் உத்தேசமா பேப்பர்ல கணக்குப் போட்டுச் சொல்லலை.

இப்போ, நேரடியா பாக்க முடியும். இனிமே மத்த மரங்களுக்கு உரம் வைக்கிறது, பராமரிப்பு மட்டும்தான் செலவு. கவாத்து பண்ண வேண்டியிருக்காது. அதனால அதையெல்லாம் அறுவடை பண்ணுறப்போ இன்னும் அதிக லாபம் கிடைக்கும்.

'அதிக விலை கிடைக்குதே'னு நிலத்தை விக்க ஆசைப்படாம, மரங்களை வெச்சு விட்டா... அந்த நிலத்தோட மதிப்பைவிட அதிகமான வருமானத்தை மரம் கொடுத்துடும். மரம் என்னிக்கும் விவசாயிகளை ஏமாத்தவே ஏமாத்தாது'' என்று நெகிழ்ச்சியாகச் சொன்ன குழந்தைசாமி...

இனம் காக்கும் வனம் !

''நாங்க வியாபார நோக்கத்துலதான் மர சாகுபடியை ஆரம்பிச்சோம். ஆனா, அதுக்கப்பறம் 'பசுமை விகடன்’ மூலமாவும், மரங்கள் பத்தின கருத்தரங்குகள் மூலமாவும் நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டோம். அதுல எங்களுக்கு விழிப்பு உணர்வு கிடைச்சிருக்கு.

வருமானம் கிடைக்கறது இல்லாம, புவி வெப்பம் குறைத்தல், மழை ஈர்ப்பு, பல்லுயிர் பெருக்கம்னு மனிதகுலத்தை வாழ வைக்கறதுக்கு நாங்களும் கொஞ்சம் பங்களிக்கிறோம்கிறது எங்களுக்குப் பெருமையான விஷயம்.

அதனால, கடம்பு, தேக்கு, வேங்கை, பூவரசன் மாதிரியான நாட்டுமரங்களை நடவு செஞ்சு 'அழியா வனம்’ உருவாக்குறத் திட்டமும் வெச்சுருக்கோம்'' என்றபடி விடை கொடுத்தார்.

சிலுசிலுக்கும் பசுமையை நுகர்ந்தபடியே புறப்பட்டோம்!

தொடர்புக்கு,
'கொங்கு’ குழந்தைசாமி,
செல்போன்: 98427-43535.

எப்போதும் கிராக்கி இருக்கிறது!

குழந்தைசாமியிடம் சவுக்கு மரங்களைக் கொள்முதல் செய்து வரும் அந்தியூர் பகுதியைச் சேர்ந்த மர வியாபாரி குருசாமியிடம் பேசினோம். ''ஊட்டியில் இருக்கிற டீ பேக்டரி பாய்லர்களுக்கு சவுக்கு மரம் தேவைப்படுது. அங்க கொண்டு போய்தான் விக்கிறேன். டன் 2,500 ரூபாய்க்கு நான் எடுத்துக்கிட்டிருக்கேன். இதுபோக, செங்கல் சூளைக்கும் வாங்குவாங்க. அதனால குறுகிய காலத்துல வர்ற சவுக்கு, மூங்கில், தைல மரங்களுக்கு எப்பவும் கிராக்கி இருந்துக்கிட்டே இருக்கும். இந்த மாதிரியான மரங்களை தைரியமாக விவசாயிகள் வளர்க்கலாம். குறைஞ்ச செலவுலேயே நல்ல லாபம் பாக்க முடியும்'' என்று சொன்னார் குருசாமி.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment