Monday 19 March 2018

வளர்சிதை மாற்றக்கோளாறுகளால் ஏற்படும் நோய்கள் :

1. பால் காய்ச்சல் நோயின் தன்மை
2. நோய்க்கான காரணம்
3. அறிகுறிகள்
4. மேலாண்மை முறைகள்
5. நோய்த் தடுப்பு முறைகள்
6. நோயினைக் கட்டுப்படுத்துதல்

பால் காய்ச்சல் நோயின் தன்மை :

1. பால் காய்ச்சல் என்பது மாடுகளின் உடலில் வளர்சிதை மாற்றக் கோளாறால் கன்று ஈன்ற 72 மணி நேரத்தில் ஏற்படும் நோயாகும்.

2. அதிக பால் உற்பத்தி செய்யும் மாடுகளான ஜெர்சி இன மாடுகள் இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

3. வயது முதிர்ந்த மாடுகள், பொதுவாக அவற்றின் 5-10 வருட வயதில் இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

4. அதிக பால் உற்பத்தி செய்யும் மாடுகள் 3, 4, 5 ஆம் முறையாக கன்று ஈனும் போது இந்நோயினால் பாதிக்கப்படுகின்றன.

5. பால் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளில் எழ முடியாமை, தசைகளில் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படும். ஆனால் இம் மாடுகளுக்கு கால்சியம் போரோ குளுக்கோனேட் மருந்தினை ஊசி வழியாக செலுத்தும் போது இந்த நோய் அறிகுறிகள் மறைந்து விடும்.

நோய்க்கான காரணம் :

* மாடுகளின் உடலிலுள்ள திசு திரவத்தில் கால்சியம் குறைவாகக் காணப்படுதல்.

* கன்று ஈன்றவுடன் பாலில் அதிகப்படியாக வெளியேறும் கால்சியம்.

* மாடுகளின் உணவிலிருந்து அவற்றின் குடலால் உறிஞ்சப்படும் மற்றும் உடலின் மற்ற பாகங்களிலிருந்து இரத்தத்திற்கு பெறப்படும் கால்சியத்தின் அளவினை விட பாலில் அதிக அளவு கால்சியம் வெளியேற்றப்படுதல்.

* மாடுகள் கன்று ஈன்றவுடன் அவற்றின் குடலிலிருந்து கால்சியம் சத்து உறிஞ்சப்படுவது பாதிக்கப்படுதல்

* வைட்டமின் டி குறைபாடு மற்றும் மாடுகளின் குடலில் ஏற்படும் அதிகப்படியான அமிலத்தன்மை.

* மாடுகளின் எலும்புகளில் சேகரிக்கப்பட்டுள்ள கால்சியம் சத்து, அவற்றின் ஊநீரில் முறையாக கால்சியத்தின் அளவினைப் பராமரிக்க போதுமானதாக இல்லாததால்.

* மேலும் சில நேரங்களில் மாடுகளின் உடலில் ஏற்படும் பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியச் சத்து குறைபாடு போன்றவற்றாலும் பால் காய்ச்சல் ஏற்படுகிறது.

* மாடுகளுக்கு அளிக்கப்படும் அதிகப்படியான உடற்பயிற்சிகள், நீண்ட தூரம் அவற்றை கொண்டு செல்லுதல், திடீரென தீவனம் அளிக்காமல் இருத்தல், ஆக்சலேட் அதிகம் இருக்கும் செடிகளை மாடுகள் மேய்தல், அல்லது பசுந்தானிய தட்டுகளை மேய்தல் போன்ற அயற்சி நிலைகளும் மாடுகளுக்கு பால் காய்ச்சல் நோய் ஏற்படக் காரணமாகின்றன.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

அறிகுறிகள் :

மருத்துவ அறிகுறிகள் :

* மாடுகளுக்கு ஏற்படும் தசை அயற்சி மற்றும் தசைகள் தொளதொளவென்று மாறுதல்.

* கண்கள் மற்றும் மூக்கின் கீழுள்ள பகுதியில் ஏற்படும் வலிப்பு.

* மாடுகள் அவற்றின் அடிவயிற்றில் உட்கார்ந்திருத்தல்.

* மாடுகள் சுய நினைவினை இழந்து மயக்கமாக காணப்படுதல்.

* மாடுகள் கழுத்தை வளைத்துக் கொண்டு இருத்தல்.

* மாடுகளின் கால்கள் மற்றும் தோல் குளிர்ச்சியாகக் காணப்படுதல். அவற்றின் உடல் வெப்பநிலை எப்போதும் இருப்பதை விட குறைந்து காணப்படுதல்.

* மாடுகளின் மூக்கின் கீழ்ப்பகுதி வறண்டு காணப்படுதல்.

* மாடுகளின் கண்களின் உட்சவ்வுப் பகுதி வறண்டு, கண்மணி விரிந்து காணப்படுதல்.

* கண்களை இமைக்க முடியாதிருத்தல்.

* மலத்துவாரம் திறந்திருத்தல்.

* மாடுகளின் தமனி அழுத்தம் குறைவாக இருப்பதால், கழுத்திலுள்ள ஜூகுலர் தமனியினை கண்டுபிடிக்க முடியாமை.

* மாடுகளின் அசையூன் வயிறு செயல்படாமல் ஏற்படும் மலச்சிக்கல்.

* மாடுகள் தங்களின் பக்கவாட்டு உடல் பகுதியில் படுத்திருத்தல்.

* மாடுகள் படுத்தே இருப்பதால் ஏற்படும் வயிறு உப்புசம்.

* மாடுகளின் சிறுநீர் கழிக்காமல் இருத்தல் அல்லது குறைந்த அளவே சிறுநீர் கழித்தல்.

மேலாண்மை முறைகள் :

பரிந்துரைக்கப்பட்ட முதலுதவி :

* மாடுகள் எழ முடியாமல் படுப்பதற்கு முன்பாகவே சிகிச்சையினை ஆரம்பித்து விட வேண்டும்.

* சிகிச்சையின்போது மாடுகள் தங்கள் அடி வயிற்றில் அமர்ந்திருக்குமாறு செய்யவேண்டும்.

* வழுக்கும் தரையில் படுத்திருக்கும் மாடுகளை வழுக்காத தரை உள்ள கொட்டகைக்கு மாற்றவேண்டும்.

* மாடுகள் திறந்த வெளியில் படுத்திருந்தால் அவற்றுக்கு ஒரு தற்காலிக கொட்டகை அந்த இடத்திலேயே அமைத்து சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்கவேண்டும்.

* மாடுகளில் பால் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டவுடன், தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவரைக் கொண்டு கால்சியம் சத்து பற்றாக்குறைக்கு சிகிச்சை அளிக்கவேண்டும்.

நோய்த் தடுப்பு முறைகள் :

* மாடுகள் கன்று ஈனும் உத்தேச நாளுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பிலிருந்து கன்று ஈனும் வரை அவற்றுக்கு தினசரி 20 கிராம் அளவிற்கு குறைவாக கால்சியம் சத்து அளிக்கவேண்டும்.

* மாடுகளின் சினைக்காலத்தில் தீவனத்தில் அதிகப்படியான கால்சியம் இருக்கக்கூடாது.

*மாடுகள் சினையாக இருக்கும்போது தினமும் அவற்றுக்கு 80-100 கிராம் கால்சியம் தீவனத்தில் அளித்தால் பால் காய்ச்சல் நோய் வருவதைத் தடுக்கலாம்.

* அதிக அளவு பாஸ்பரஸ் மற்றும் குறைந்த அளவு கால்சியம் சத்துகளை மாடுகளின் சினைப்பருவத்தின் கடைசி மாதத்தில் தீவனத்தல் அளிப்பதால் பால் காய்ச்சல் நோய் வராமல் தடுக்கலாம் (Ca: P= 1:3.3).

* தீவனத்தில் சோடியம் மற்றும் பொட்டாசியம் சத்துகளின் அளவினை விட அதிக அளவு குளோரைடு மற்றும் சல்பர் சத்துகள் அதிகமாக இருந்தால் பால் காய்ச்சல் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. அதிகப்படியான குளோரைடு மற்றும் சல்பர் சத்துகள் தீவனத்தில் இருப்பதால் கால்சியம் தீவனத்திலிருந்து மாடுகளின் குடலில் உறிஞ்சப்படுவது ஊக்கப்படுத்தப்படுகிறது.

* உத்தேசித்த கன்று ஈனும் தேதிக்கு மூன்று வாரங்கள் முன்பாக மாடுகளுக்கு அமோனியம் குளோரைடு அளித்தால் பால் காய்ச்சல் நோய் வராமல் தடுக்கலாம்.

* வைட்டமின் டி 3 மற்றும் அதன் இதர வகைகளை மாடுகளுக்கு தீவனத்தின் மூலம் அளிப்பதால் பால் காய்ச்சல் நோய் வருவது தடுக்கப்படுகிறது. 10 மில்லியன் அளவு வைட்டமின் டி 3 ஐ ஊசி மூலம் மாடுகளுக்கு கன்று ஈனுவதற்கு 3-8 நாட்களுக்கு முன்னால் செலுத்தலாம். மாடுகளின் 45 கிலோ உடல் எடைக்கு 1 மில்லியன் வைட்டமின் டி3 என்ற விகிதத்தில் வைட்டமின் டி 3 மருந்தை அளிக்கவேண்டும்.

* மாடுகள் கன்று ஈனுவதற்கு முன்பும், கன்று ஈனும் போதும், கன்று ஈன்ற 12 மணி நேரம் கழித்தும், 24 மணி நேரம் கழித்தும் வாய் வழியாக கால்சியம் ஜெல் (50% கால்சியம் குளோரைடு) அளிப்பதால் பால் காய்ச்சல் நோய் வருவது தவிர்க்கப்படுகிறது.

* கன்று ஈனுவதற்கு முன்பாக மாடுகளுக்கு அளிக்கப்படும் தண்ணீரில் சுண்ணாம்புத் தண்ணீர் கலப்பதாலும் பால் காய்ச்சல் நோய் வருவதைத் தடுக்கலாம்.

* சினைக்காலத்தில் மாடுகளுக்கு அதிகப்படியான தீவனம் அளிப்பதைத் தவிர்த்து உடல் எடை அளவிற்கு அதிகமாக அதிகரிப்பதைத் தடுக்கவேண்டும்.

* மாடுகள் கன்று ஈனும் போது அவற்றிற்கு அயற்சி ஏற்படுவதைத் தவிர்க்கவேண்டும்.

* கன்று ஈனும் கொட்டகையில் மாடுகள் படுப்பதற்கு வசதியாக வைக்கோல் அல்லது இதர மென்மையான பொருட்களால் ஆன படுக்கையினை அமைக்கவேண்டும்.

* கன்று ஈன்று 48 மணி நேரம் வரை மாடுகள் பால் காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றனவா என்பதைக் கண்காணித்து, நோய் அறிகுறிகள் காணப்பட்டால் தகுந்த சிகிச்சை அளிக்கவேண்டும்.

நோயினைக் கட்டுப்படுத்துதல் :

* 25% கால்சியம் போரோ குளுக்கோனேட் கரைசல் 500 மிலி ஐ நிமிடத்திற்கு 10 முதல் 20 சொட்டுகள் என்ற அளவில் இரத்தத்தில் செலுத்தவேண்டும்.

* கால்சியம் மெக்னீசியம் போரோ குளுக்கோனேட் கரைசலை 200 -350 மிலிஐ தோலுக்கு அடியிலும் மீதமுள்ள கரைசலை இரத்தச்சிரைகளிலும் செலுத்தவேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு கால்நடைபராமரிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

No comments:

Post a Comment