Tuesday 6 March 2018

நாட்டுக் கோழி வளர்ப்பு முறை :

1. நாட்டுக் கோழி வளர்ப்பு
2. வளர்க்கும் முறைகள்
3. பராமரிப்பு முறைகள்
4. வளர்ப்பது எப்படி?
5. நாட்டுக் கோழிகளின் வகைகள்
6. இனப் பெருக்கம்
7. முட்டையிடுதல்
8. அடை கட்டுதல்
9. தீவனம்
10. நோய்த் தடுப்பு
11. முதலீடு

நாட்டுக் கோழி வளர்ப்பு :

வீடுகளில் இருந்தபடியே நாட்டுக் கோழியை நல்ல முறையில் வளர்த்துப் பராமரித்து அதிகப் பயன் பெறலாம்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வரையில் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் நாட்டுக் கோழிகள் வளர்க்கப்பட்டு வந்தன. இதன் மூலம் தங்களது வீடுகளுக்கு தேவையான கோழி முட்டை, இறைச்சி ஆகியவை கிடைத்து வந்தன.

மேலும், தனது தேவைக்கு மேல் உள்ள கோழிகளை விற்றும் பணம் சம்பாதித்து வந்தனர். ஆனால், நாளடைவில் கிராமப்புறங்களில் கோழி வளர்ப்பு மறைந்து வருகிறது.

குறைந்த முதலீட்டிலும், குறைந்த பராமரிப்பிலும் அதிக பலன் தரும் தொழிலாக நாட்டுக் கோழி வளர்ப்பு உள்ளது. எனவே இந்தத் தொழிலை மேற்கொண்டால் விவசாயிகளும், வீட்டில் உள்ள பெண்களும் பயன்பெற முடியும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

வளர்க்கும் முறைகள் :

* நாட்டுக்கோழிகளின் முட்டை, இறைச்சிக்கு மக்களிடம் மவுசு உள்ளது. ஆனால் தேவைக்கேற்ற உற்பத்திதான் இல்லை. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய இத்தொழிலை முறையாக மேற்கொண்டால் நிரந்தர வருமானம் பெற முடியும்.

* பொதுவாக கிராமங்களில் வீடுகளில் நாட்டுக்கோழி வளர்ப்பது வழக்கம். விற்பதற்காக வளர்க்காமல், தங்கள் தேவைக்கு பயன்படுத்துவார்கள். இதையே தொழிலாக செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம். கிராமப்புற விவசாயிகள் விவசாய நிலம் மற்றும் வீட்டை ஒட்டியே ஷெட் அமைத்து பண்ணை முறையில் நாட்டுக்கோழி வளர்க்கலாம். தினசரி காலை 2 மணி நேரம், மாலை 3 மணி நேரம் பராமரிப்புக்கு செலவிட்டால் போதும். நாட்டுக்கோழி குஞ்சுகளை பொரிப்பகங்களில் இருந்து வாங்கி வந்து வளர்க்கலாம்.

* முட்டையாக வாங்கி, கருவிகள் மூலம் நாமே பொரிக்க செய்து குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம். முட்டைகளை அடைகாக்க இன்குபேட்டர் மெஷின் தேவைப்படும். புதிதாக தொழில் துவங்குபவர்கள் குறைந்த முதலீட்டில் குஞ்சுகளாகவே வாங்கி வளர்ப்பது எளிதானது.

பராமரிப்பு முறைகள் :

* பண்ணை வைக்கும் இடத்தில் வெளியிலிருந்து வரும் மற்ற பறவைகளை அண்ட விடக்கூடாது. அந்நிய பறவைகள் மூலம்தான் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் தாக்கும் அபாயம் உள்ளது. பண்ணைகளுக்கு அருகில் அதிக சத்தம் வரும் வெடிகளை வெடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* முதல் 48 நாட்களுக்கு புரோட்டீன் அதிகமுள்ள தீவனங்களை மட்டுமே குஞ்சுகளுக்கு தர வேண்டும்.

* 48 நாட்களுக்கு பிறகு தீவனத்துடன் கீரை மற்றும் கரையான்களை கலந்து கொடுக்கலாம். எடை அதிகரிக்க குஞ்சுகளின் வளர்ச்சிக்கு ஏற்றபடி பனங்கருப்பட்டியை தண்ணீரில் கலந்து கொடுக்கலாம். கேரட், பெரியவெங்காயம் போன்றவற்றை பொடியாக நறுக்கி தீவனத்துடன் கொடுக்கலாம். 45 நாட்களுக்கு மேல் கடைசி வரை ஏதாவது ஒரு கீரை வகையை பொடியாக நறுக்கி மதியத்துக்கு மேல் கோழிகளுக்கு கொடுக்கலாம். இதனால் தீவனச்செலவு குறையும். கறியின் ருசியும் அதிகரிக்கும்.

வளர்ப்பது எப்படி?

* அதிகம் காற்று புகாத நான்கு பக்க சுவர் உள்ள அறையில், 30 அடி நீளம், 2 அடி உயரம் உள்ள கெட்டியான தகடால் வட்ட வடிவில் வளையம் அமைக்க வேண்டும். குஞ்சுகள் இரவு நேரங்களில் குளிரை தாங்குவதற்காக, வளையத்துக்குள் ஒரு அடி உயரத்தில் 100 வாட் பல்புகள் 4 பொருத்த வேண்டும். வெயில் காலங்களில் 300 குஞ்சுகளுக்கு 100 வாட் பல்பு மூன்றும், குளிர்காலத்தில் நான்கும் பொருத்தினால் தேவையான அளவு வெப்பம் இருக்கும். வட்டத்துக்குள் 2 இஞ்ச் உயரத்துக்கு நிலக்கடலைதோல் போட்டு சீராக பரப்பி, அதன்மேல் பேப்பர் விரிக்க வேண்டும். அதனுள் தீவனத்தொட்டி மற்றும் தண்ணீர் தொட்டி வைக்க வேண்டும். அதற்குள் 300 குஞ்சுகளை வளர்க்கலாம். தினசரி பேப்பரை மாற்ற வேண்டியது அவசியம்.

* அறையில் 20 நாட்கள் வளர்த்த பின்னர், நல்ல காற்றோட்டம் உள்ள பண்ணைக்கு மாற்ற வேண்டும். அங்கு தரையில் நிலக்கடலைதோல் அல்லது தேங்காய் நார்க்கழிவு அல்லது மரத்தூள் சுமார் ஒன்றரை முதல் 2 இஞ்ச் அளவுக்கு பரப்பி கொள்ள வேண்டும். இவை கெட்டியாகிவிடாமல் இருக்க அடிக்கடி கிளறி விட வேண்டும். கோழிகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொத்துவதை தவிர்ப்பதற்காக, 20 முதல் 30 நாட்களுக்குள்ளாக குஞ்சுகளின் மூக்கு நுனியை வெட்ட வேண்டும். இங்கு 60 நாட்கள் வளர்க்க வேண்டும். மொத்தமாக 80 நாட்கள் பூர்த்தியானதும், சேவல்களை உடனடியாக விற்பனைக்கு அனுப்பலாம். கோழிகளை கூடுதலாக 10 முதல் 20 நாட்கள் வரை வளர்த்த பின்னர் விற்பனைக்கு அனுப்ப வேண்டும். அதற்கு மேல் வளர்த்தால் தீவனச் செலவு அதிகமாகும்.

நாட்டுக் கோழிகளின் வகைகள் :

கொண்டைக் கோழி, கழுகுக் கோழி, சண்டைக் கோழி, குருவுக் கோழி, கருங்கால் கோழி ஆகிய கோழி வகைகளை தனித்தனியே அடையாளம் காண முடியாது போனாலும் அதன் வண்ணங்களை வைத்தே அடையாளம் காண முடியும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

இனப் பெருக்கம் :

நன்கு வளர்ந்த கோழிகள் 25 முதல் 30 வார வயதில் முட்டையிட தொடங்கும். நல்ல தீவனம் கிடைத்தால் 20 வாரத்திலேயே முட்டையிடும். ஆண் சேவல் 20 வாரங்களுக்கு மேல் நன்கு வளர்ந்த கொண்டையுடன் இருக்கும். அதிகாலையில் கொக்கரக்கோ என கூவுவதை வைத்து இனவிருத்திக்கு தயாரானது என அறிந்து கொள்ளலாம்.

முட்டையிடுதல் :

* முதலில் முதிராத ஓட்டுடன் சிறிய அளவில் முட்டையிடும். அந்த முட்டை தோல் முட்டை எனப்படும். அதைத் தொடர்ந்து சரியான அளவில் தொடர்ந்து முட்டையிடும். கோழிகள் முட்டையிடும்போது ஒரு வித சத்தத்தை எழுப்பும். அதை கேவுதல் என கூறுவர்.

* கோழிகளிடம் இருந்து முட்டைகளைப் பிரித்து குளிர்ச்சியான இடத்தில் வைக்க வேண்டும். துளையிடப்பட்ட மண் பானை அல்லது மரப்பெட்டியில் உமி அல்லது மரத்தூள் பரப்பி அதன்மேல் முட்டைகளைப் பாதுகாப்பாக வைக்கலாம்.

* ஒரு கோழி சராசரியாக 10 முதல் 20 நாள்களில் முட்டையிடும். பின்னர் அதை அடைகாத்து குஞ்சு பொரிக்கும். ஒரு ஆண்டுக்கு 60 முதல் 120 முட்டைகள் வரை இடும்.

அடை கட்டுதல் :

* நாட்டுக் கோழிகளை முட்டைகளின் மேல் அமர வைத்து அடை காக்க வைக்க வேண்டும். ஓர் நல்ல கூடையில் பாதியளவு உலர்ந்த தவிடு, மரத்தூள், வைக்கோல், கூளம் இவற்றில் ஏதாவது ஒன்றை நிரப்பி நடுவில் சிறிதளவு குழி போல் செய்து கொள்ள வேண்டும். அதன்மேல் சேகரித்த முட்டைகளை வைக்க வேண்டும்.

* அதிகபட்சமாக 15 முட்டைகள் வரை வைக்கலாம். இந்த கூடைக்குள் கோழி அமர்ந்து அடைகாக்கும். அந்த நேரத்தில் நாம் அதை நெருங்கினால் எச்சரிக்கை சப்தம் செய்யும்.

* கோழி குஞ்சு பொரிக்கும் காலம் 21 நாள்கள் ஆகும்.

* அடையில் உள்ள தாய் கோழி 2 அல்லது 3 நாள்கள் வரையில் அடையில் அமர்ந்திருக்கும். பின்னர் எழுந்து சென்று எச்சம் இட்டு, உணவு, தண்ணீர் அருந்தி விட்டு மீண்டும் வந்து அமரும். எனவே அந்தக் கூடை அருகிலேயே உணவு, தண்ணீரை வைத்திருக்க வேண்டும். தினமும் தாய்க் கோழியைப் பார்த்துக் கொள்ள வேண்டும். தாய்க் கோழியுடன் நன்கு பழகியவர்கள் தாய்க் கோழியை அகற்றிவிட்டு முட்டையை ஆய்வு செய்யலாம். அடைகாக்கத் தொடங்கிய 21 நாள்களில் குஞ்சு பொரிக்கும்.

* நாட்டுக் கோழிகள் தங்களது குஞ்சுகளுக்குத் தேவையான வெப்பத்தை இறகுகளுக்கு இடையில் வைத்துக் கொள்ளும். ஆரம்ப காலத்தில் பருந்து, காகம், கழுகு ஆகியவை குஞ்சுகளை கொத்திச் செல்லப் பார்க்கும். எனவே தாய்க் கோழி குஞ்சுகளுடன் இருப்பது அவசியம். கோழிகளையும், குஞ்சுகளையும் இரவு நேரத்தில் அடைத்து வைப்பது சிறந்தது.

தீவனம் :

ஆரம்ப காலத்தில் உடைந்த அரிசி, கம்பு, சோளம், கேழ்வரகு, மக்காச் சோளம் ஆகியவற்றை தீவனமாகக் கொடுக்கலாம். அதைத் தொடர்ந்து நாட்டுக் கோழிகள் தனக்கும், தனது குஞ்சுகளுக்கும் தாங்களே தீவனங்களைத் தேடிக் கொள்ளும். உதாரணமாக புழு, சிறு பூச்சிகள், கரையான்கள் போன்றவற்றை உண்டு தங்களது பசியைப் போக்கிக் கொள்ளும்.

முதலீடு :

ஆயிரம் கோழி குஞ்சுகள் ரூ.28 ஆயிரம், 3.5 டன் தீவனம் ரூ.66,500, பராமரிப்பு கூலி ரூ.15 ஆயிரம், மின்கட்டணம் ரூ.12 ஆயிரம் என 3 மாதத்துக்கு ஒரு முறை மொத்த செலவாக ரூ.1.22 லட்சம் ஆகிறது. கோழிப்பண்ணை அமைக்க வங்கிகளில் கடனுதவி பெறலாம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠
வருமானம் :

ஆயிரம் கோழிகள் வளர்த்தால் 30 கோழிகள் வரை இறக்க வாய்ப்பு உள்ளது. 970 கோழிகள் நல்ல முறையில் வளரும். 80 நாள் வளர்த்தபின் விற்பனைக்கு தயாராகும். அப்போது ஒரு கோழியின் சராசரி எடை 1 கிலோ 400 கிராம் வீதம் 1358 கிலோ எடையுள்ள கோழிகளை விற்கலாம். ஒரு கிலோ சராசரியாக ரூ.125க்கு குறையாமல் விற்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.1.7 லட்சம் வருமானம் கிடைக்கும். இதில் லாபம் ரூ.48 ஆயிரம். சராசரியாக மாத லாபம் ரூ.16 ஆயிரம்.

சந்தை வாய்ப்பு :

இறைச்சி விற்பனையாளர்கள் நேரடியாகவே பண்ணைக்கு வந்து வாங்கி செல்வார்கள். அக்கம்பக்கத்தினர் வீட்டுத்தேவைக்கும், விழாக்கள், விசேஷங்களுக்கு மொத்தமாகவும் வாங்குவார்கள். ஓட்டல்கள், உணவு விடுதிகளுக்கும் நேரடியாக ஆர்டர் எடுத்து சப்ளை செய்யலாம்.

ஆதாரம் : திரூர் வேளாண்மை அறிவியல் நிலையம், திருவள்ளூர் மாவட்டம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

No comments:

Post a Comment